Pages

  • RSS

23 April, 2011

எப்படி மறந்தேன்??

’எல்லாம் எடுத்து வச்சிட்டியா?’

கிளம்பும்போதும் அக்காச்சி நினைவாகக் கேட்டாள்.

‘வச்சிட்டேன் அக்காச்சி. கொஞ்சம் இருட்டா இருக்கு தனியா போறது பயமில்லையா’

1998. இதே திகதி. அதிகாலையில் ப்ரசிடண்ட் ஹோட்டல் நோக்கிப் போய்க் கொண்டிருந்த காருக்குள் நான் கேட்ட கேள்விக்கு ஒரு சிரிப்பையே பதிலாய்த் தந்தாள். அங்கே ஹோட்டலில் எங்களுக்காக புக் செய்த அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அறை எண் நினைவில்லை. ஒரு காஃபி ஆர்டர் செய்து குடித்து முடிக்கவும் மேக் அப் உமன் வரவும் சரியாக இருந்தது. படபடவென்று அவர் மேக் அப்பை ஆரம்பிக்கப் பொழுதும் புலர்ந்தது.

இமை த்ரெட்டிங் செய்த போது பாதியிலேயே அழ ஆரம்பித்து அக்காச்சியிடம் கெஞ்சினேன். ’கொஞ்சம் பொறுத்துக்கடி’ என்றாள். முதல் நாள் மேக் அப் பற்றிப் பேச்சு வந்தபோது நடுவில் சேர்ந்திருக்கும் என் இமைகளை ஒரு கணம் பார்த்துவிட்டு ’அதை ஒண்ணும் பண்ணாதிங்க’ன்னு அவர் சொன்னதையும் சொல்லிப் பார்த்தேன்.’இப்டி பாதி இமையோட நீ இருக்க முடியாது’ என்று கண்ணாடியில் காட்டி சமாதானம் செய்தாள். இதைச் சொல்லி இப்போதும் சிரிக்கத் தவறுவதில்லை அவள். என் வாழ்க்கையில் நான் செய்த முதலும் கடைசியுமான த்ரெட்டிங் அதுதான்.

மீண்டும் காஃபி ஆர்டர் செய்தோம். புதியதான ஓர் உணர்வுப் பிசையல் வயிற்றுக்குள். பசித்தாலும் சாப்பிடப் பிடிக்கவில்லை. சாப்பிடச் சொல்லி அவளும் அடம்பிடிக்கவில்லை. இடைப்பட்ட நேரத்தில் தன் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தார் மேக் அப் உமன். நாள் போதாமல் இருந்ததால் எல்லா டிங்கரிங் வேலைகளும் அப்போதுதான் செய்தார். அவருக்கு ஒத்தாசையாக இருந்ததிலும், என் பதட்டத்தைக் குறைப்பதிலும் நேரம் போனதில் அக்காச்சி ரெடியாகவில்லை. எட்டு மணிக்குள் மணப்பெண் தயார்.  நல்ல நேரம் வந்ததும் அவர்கள் வந்து கூப்பிடும் வரை அறையிலேயே இருக்கச் சொல்லித்தான் காலையிலேயே அனுப்பி இருந்தார்கள். ஏன் இன்னும் யாரும் வரவில்லை என்ற பயமும் சேர்ந்து கொண்டது.

எட்டு மணி கடந்த சில நிமிடங்களில் தானும் ரெடி ஆகலாம் என்று அக்காச்சி சூட்கேஸைத் திறக்க கதவு தட்டப்பட்டது. மணப் பெண்ணை அழைத்துப் போகவென பெண்கள் வந்திருந்தனர். அவர்கள் மேக் அப் உமனின் திறமையை சரி பார்த்த நேரத்தில் நீ போ நான் இதோ வரேன் என்ற அக்காச்சி மீண்டும் சூட்கேஸ் பக்கம் திரும்பினாள். உடனேயே நான் எழுந்து இரண்டடி வைப்பதற்குள் ’அடியேய் எங்கடி என் ட்ரஸ்லாம்’ என்றவள் சூட்கேஸை கவிழ்த்துத் தேடியும் அதற்குள் அவளின் புடவை தவிர வேறெதுவும் இருக்கவில்லை. பரவிக் கிடந்த என் உடைகள் என்னைப் பார்த்துச் சிரிக்க, மலங்க விழித்த என்னை ’நீ போ நான் எப்டியாச்சும் வரேன்’ என்று விரட்டினாள்.

அக்காச்சி.. கல்யாண மேடை கண்ணில் படும்வரை எனக்கு நீ என்ன செய்யப் போகிறாயோ என்று அழுகையாய் வந்தது. பதிவுலகம் மேல் சத்தியமாகச் சொல்கிறேன்.. இது உண்மை. நான் ஒன்றும் உன்னை அடியோடு மறந்துவிட்டு அவரிடம் ஓடவில்லை. அதன் பின் சடங்குகளுக்கிடையே தலை உயர்த்தி உன்னைத் தேடியபோது, உன் வழக்கமான சிரிப்போடு என் கண்ணில் நீ பட்ட பின்னர்தான் எனக்கு முழுமையான சந்தோஷம் வந்தது. மேக் அப் லேடியும் லேட்டாகிவிட்டதால் அடுத்த வேலை என்று போய் விட கூறைப் புடவையை எனக்கு நீயே கட்டிவிட்டு, தலை அலங்காரம் எல்லாம் மாற்றிவிட்டாய். அதுவும் அவர்கள் கொடுத்த பத்தே நிமிடத்துக்குள். ’ஏண்டி என் பொட்டைக் கூடவா மறந்துட்டு வருவே’ என்றபடி காஜலால் பொட்டு வைத்துக் கொண்ட உன்னைப் பார்த்து மறுபடி அசடாகச் சிரித்தேன்.

கல்யாணம் என்று முடிவாகியும் கண்ஸ் நோர்வேயில் அகதியாகத் தஞ்சம் புகுந்து இருந்ததால் இலங்கை வர முடியவில்லை. இந்தச் சிக்கல் உள்ள எல்லோருக்கும் இருந்த ஒரே தீர்வு இந்தியா அல்லது சிங்கப்பூர் சென்று கல்யாணம் செய்வதுதான். எங்களுக்கு இந்தியா தேர்வானது. நாட்டிலிருந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக இலங்கையிலிருந்து வரவே மாட்ட்ட்டோம் என்று நினைத்துக் கடைசி நேரத்தில் எல்லாம் சரியாகி ஏப்ரல் 19ஆம் திகதி மாமியார், மச்சினர்கள் சகிதம் இந்தியா வந்து சென்னையில், பாலவாக்கத்தில்  ஒரு தூரத்து உறவினர் வீட்டில் தங்கி இருந்தோம். 21ஆம் திகதி கண்ஸ் நோர்வேயிலிருந்து வந்தார். நாள் பார்த்து, தாலிப் பொன்னுருக்குவது தொடங்கி, கல்யாணத்துக்கு வேண்டிய அத்தனை ஏற்பாடுகளும், ஷாப்பிங்கும் அன்று மாலையே ஆரம்பித்து 23ஆம் திகதி மாலைக்குள் முடித்தோம். மாலை ஐந்து மணிக்கு அக்காச்சி, அம்மா, அப்பா வந்து சேர்ந்தார்கள். அண்ணா, ரஜி வரவே முடியவில்லை. நாங்கள் கடைசிக் கட்ட ஷாப்பிங் முடித்து வர அவர்கள் வந்து பசியாறிக் காத்திருந்தார்கள்.

கல்யாணப் பொண்ணு பர்த்டேப் பொண்ணுக்கு என்ன பரிசு வாங்கி வந்தீங்க என்று யாரோ கேட்டதும்தான் எனக்கு அன்று அவளின் பிறந்த நாள் என்பதே நினைவு வந்தது. ‘அட.. ஏன் நீங்கள் சொல்லேல்ல’ என்ற கண்ஸை அசட்டுச் சிரிப்போடு பார்த்தேன். உடனேயே எனக்கென வாங்கிய புடவைகளில் ஒன்றை அவளுக்குக் கொடுக்கச் சொன்னார். சாம்பல் நிறத்தில் வானவில் வண்ணங்களோடு இருந்த பனாரஸைக் கொடுத்தேன். அதையே கல்யாணத்துக்கும் கட்டலாம் என்று வீட்டுக்கார அக்காவோடு உடனே போய் ரெடிமேட் பிளவுஸ் வாங்கி வந்தாள். என் சூட்கேஸில் அவளதையும் வைக்கச் சொல்லிக் கொடுத்தாள். எப்படி மீதியெல்லாம் மறந்து, புடவையை மட்டும் மறக்காமல் வைத்தேனென்று இன்று வரை எனக்குத் தெரியவில்லை.

என்னை மணவறைக்கு அனுப்பிவிட்டு, அவள் யாரையோ கடைக்கு அனுப்பி, ஒருவழியாக ரெடியாகித் தானும் வந்து கலந்துகொண்டாள். இன்று வரை அவளின் பிறந்தநாளோடு ஆரம்பிக்கும் கிண்டல் எங்கள் திருமண நாள் வாழ்த்தில் முடியும்.

’அண்ணா இவள் என் பர்த்டேவ மறந்தா கூட பரவால்லை. பொண்ணு வாங்கன்னு சொன்னதும் என்னையும் மறந்துட்டு எடுத்தா பாருங்க ஒரு ஓட்டம்’

’அதில்லைங்க.. அவளுக்கு பயம். எங்க கடைசி நேரத்திலை பொண்ண மாத்திடுவாங்களோன்னு. அதான் வேணும்னே மறந்திருக்கா’

‘அது மட்டுமில்லைண்ணா. அவ ரொம்ப ஆசப்பட்டு வாங்கின புடவையாம் அது. அத எனக்கு குடுக்க வேண்டியதாச்சேன்னு வேணும்னே செய்த சதி இது’

இப்படியாக வருஷா வருஷம் அலுக்காமல் அந்த நினைவுகளை மீட்டெடுப்போம். 1998 இல் இதே நாட்களில் நாம் இந்தியாவில் இருந்தது. குடும்ப நண்பர்களாய் இருந்தவர்கள் கல்யாண பந்தத்தாலும் இணைக்கப்பட்டது. இன்று நினைத்தாலும் என்றுமே திரும்பக் கிடைக்க முடியாத நாட்கள் அவை. கிண்டலும் கேலியுமாய்ப் பறந்தோடிய பொன்னான நாட்கள்.

꽃배경04 உனக்காக வந்த ஸ்பெஷல் வாழ்த்து.

பாசக்கார உறவுக்கு நன்றிகள்.

 

 

 

 

என் ச்செல்ல அக்காச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். என்றும் நாங்கள் உன்னோடு. உன் வீட்டில் நீ ராணியானாலும் நம் வீட்டின் இளவரசி இன்றும் நீதான். குட்டிப் பெண்ணாய் உன்னை அண்ணாந்து பார்த்து அன்று மலைத்தது போலவே இன்றும் இருக்கிறேன். உன் வழிநடத்தல் என் பலம். எனக்கு எது நல்லது என்று என்னைவிட உனக்குத் தெரியும். எதுவாக இருந்தாலும் உன்னிடம் பகிர்ந்த பின் தான் அது முழுமை பெறும். எதையும் இலகுவாகப் பார்க்கப் பழகும்படி எனக்கு எப்போதும் நீ சொல்வாய். இந்தப் பாடல் கேட்டிருக்கியா?

..உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்,
பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம் கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்..

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்..

இனியாவது ஊரில் வசந்தம் வரட்டும். எல்லார் வாழ்வும் செழிக்கட்டும். லவ் யூ அக்காச்சி.

 

par j இப்போதும் அநேகமானவர்கள் நம்பாத ஒரே விஷயம் எங்கள் திருமணம் பெற்றவர்களால் முடிவு செய்யப்பட்டது என்பது. கண்ஸிடம் சொல்லி இருக்கிறேன். அடுத்த பிறவியில் எப்படியாச்சும் காதலிச்சுத்தான்பா நாங்க கல்யாணம் பண்ணிக்கணும். அண்ணன்கள் தடுக்க, மச்சினர் கொதிக்க, பெற்றவர்கள் திட்டித் தள்ள ஓர் அதிரடிக் கல்யாணம் பண்ணணும். ஒரு திருட்டு முத்தமாவது காதலர்களாய் நாம் கொடுக்க வேண்டும். ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமல் ஒரு நாளாவது அழ வேண்டும். கல்யாணத்தின் பின் காதல் என்பதைவிட கல்யாணத்தின் முன்னும் காதலித்துப் பார்க்க வேண்டும். அவர் ஒரு சிரிப்போடு அடுத்த பிறவியலும் எனக்குத் தண்டனையா என்றாலும் எனக்கு என்னவோ அந்த ஆசை இப்போதும் இருக்கிறது. இருக்கும்.

எங்கள் பத்தாவது திருமண நாளுக்கு நண்பர்களுக்குப் பெரிதாக விருந்து வைத்தோம். கேக் கட் செய்யும் முன்னர் எங்களை பார்ட்டி ஹாலில் இருந்த மாடிப்படி வழியாக இறங்கி வரச் சொல்லிக் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தார்கள். முன்னே அம்மு, அடுத்து அவர், நான், கடைசியில் சதுவென்று கை கோர்த்தபடி இறங்கி வந்தோம். கிட்டத்தட்டப் பதினைந்து படிகள் இறங்கி வரும்போது, நண்பர்களின் வாழ்த்துப் பாடல்களோடு பத்து வருட மண வாழ்க்கையைப் பட்டென்று திரும்பிப் பார்த்து வந்த உணர்வு, உறவென்று ஒருவரும் இல்லாத இடத்தில் அத்தனைக்கும் உடன் வரும் நண்பர்கள். அத்தனை பேருக்கும் கண்ஸ் மனதார நன்றி சொன்னபோது அதிகம் பேர் கண்கள் கலங்கிப்போய் இருந்தது.

வாழ்த்திய கையோடு என்ன விசேஷம் இன்னைக்கு என்று கேட்பவர்களுக்கு எதுவுமே இல்லை எல்லாம் வழக்கம் போல்தான் என்று பதில் சொன்னாலும் இந்த நாள் தரும் புத்துணர்வுக்கு இணையேதும் இல்லை. என் அன்புக் கண்ணாளா.. என் காதல் கணவா.. நீங்களில்லாது நான் வாழ்ந்திருப்பேன்.. ஆனால் இப்படி வாழ்ந்திருக்கமாட்டேன். லவ் யூ கண்ணா.

என் பிள்ளையாரப்பா.. எல்லோரையும் இன்பமாய் வாழ வை!!

19 நல்லவங்க படிச்சாங்களாம்:

ப்ரியமுடன் வசந்த் said...

அக்காச்சிக்கு என் வாழ்த்துகளும் சொல்லிடுங்க

காதல்வரம் அடுத்த சென்மத்தில் கண்டிப்பாய் கிடைக்கும் அதான் கவிதைதவம் இருக்கீங்களே!!!

திருமணநாள் வாழ்த்துகள்க்கா மச்சானும் நீங்களும் இதுபோல ஏழேழு ஜென்மத்துக்கும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துகள்!

என்ன நேத்து அம்புட்டு நேரம் பேசிட்டு இருந்திட்டு ஒருவார்த்தை என்கிட்ட சொல்லணும்னு தோணலை பாருங்க அதான்க்கா ரீலுக்கும் ரியலுக்கும் வித்யாசம்..! அக்காச்சிக்கு ஒரு உறவுன்னா இந்த அக்காவுக்கு நானும் ஒண்ணு கிரியேட் பண்ணி தந்திருப்பேன் ..!எல்லாம் கொடுப்பின வேணும்ல !!

கோபிநாத் said...

முதல்ல

*அக்காச்சிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;))*

கடவுள் எப்போதும் துணை இருப்பார் ;)

கோபிநாத் said...

அக்கா மாம்ஸ் இருவருக்கும் மணநாள் வாழ்த்துக்கள் ;))

கோபிநாத் said...

கூட்டு தொகை 2 சரியில்லை அதனால 3 வது பின்னூட்டம் இது ;)

பதிவு ரொம்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ பிடிச்சிருக்கு அக்காஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ;)

கவி அழகன் said...

எனது பிறந்தநாள் வாழ்த்துக்களும்
--

vinu said...

vaalthukkallllllllllllllll [10]

ராமலக்ஷ்மி said...

இனிய மணநாள் வாழ்த்துக்கள்:)! உங்க அக்காச்சிக்கு எங்கள் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களும்:)!

r.v.saravanan said...

அக்காச்சிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இனிய மணநாள் வாழ்த்துக்கள்:

கார்க்கிபவா said...

வாழ்த்துகள் வாழ்த்துகள்

விஜி said...

சுசி மாம்ஸ்க்கும் உனக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.இப்படியே பல நூறு ஆண்டுகள் சந்தோசமா இருடி செல்லம் :))

Anonymous said...

அக்காச்சிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும், மனம் கனிந்த திருமண நாள் வாழ்த்துக்களும் சுசி! :)
"தவமின்றி கிடைத்த வரமே" அந்தப் பாட்டு உங்களுக்குகாக டெடிகேட் பண்றேன் இப்போ!
http://www.youtube.com/watch?v=a28lXOb2K2o

சுசி said...

சொல்லிடறேன் உபி.
ஹிஹிஹி..
ரொம்ப நன்றி.
அய்யோ.. ஏன் இப்டி?? அதான் இப்போ வாழ்த்திட்டிங்களே..

@@

சொல்லிடறேன் கோப்ஸ்.
ரொம்ப நன்றிப்பா.
பிடிச்சிருக்கா.. அதுக்கும் உங்களுக்கு நன்றி :)

@@

நன்றி யாதவன்.

சுசி said...

நன்றி வினு.

@@

ரொம்ப ரொம்ப நன்றி அக்கா.

@@

ரொம்ப நன்றி சரவணன்.

சுசி said...

நன்றி நன்றி கார்க்கி.

@@

ரொம்ப ரொம்ப நன்றிடா விஜ்ஜி.

@@

ரொம்ப நன்றி பாலாஜி. அழகான பாடல். மீண்டும் நன்றி.

நிரூபன் said...

என் வாழ்க்கையில் நான் செய்த முதலும் கடைசியுமான த்ரெட்டிங் அதுதான்//

ஏனோ தெரியவில்லை, நம்ம தமிழ்ப் பெண்களுக்கு இயற்கை அழகு தான் அதிகமாக பிடிக்கிறது. மேக்கப், செயற்கை அழகுகள் பிடிப்பதில்லை.
என்ன காரணம்?

நிரூபன் said...

அக்காச்சிக்குப் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நிரூபன் said...

ஒரு திருமண வைபவத்தையும் அதன் பின்னரான தித்திக்கும் மண வாழ்க்கையினையும் எழுதிய விதம் அருமை, வட்டார மொழி வழக்கு, கதை போன்று ஒரு சம்பவத்தை நகர்த்திச் செல்லும் விதம் அத்தனையும் அருமை.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

wow...super post paa... buzzla wish pannittu inga vittuten paarunga... nalla velai padichen... illeenaa oru super love story miss aagi irukkum... :))))

நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான்...... வாழணும்....:)))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அக்காச்சிக்கு என் வாழ்த்துகளும் சொல்லிடுங்க...:))