இன்று இங்கே அன்னையர் தினம். என் அம்மாவுக்கும், என் பிள்ளைகளின் அம்மாவுக்கும், உலகத்தில் உள்ள அத்தனை அம்மாக்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
அம்மாவுக்குப் பொன்னுக்குப் பதில் பொன் போன்றதையும், கூடவே ஒரு கேக்கையும் கொடுத்தோம்.
அப்பா திங்கள் காலை 6 மணிக்கு பயணம். நேற்று அப்பா முதலில் இங்கு வந்து நின்றபோது பழகிய நண்பர்களுக்குச் சின்னதாக ஒரு விருந்து. அம்மாவின் நளபாகம். நிம்மதியாக விருந்தினரை வரவேற்றது சந்தோஷமாக இருந்தது. அவர்கள் அதைவிட நிம்மதியாக வந்திருந்தார்கள் என்பது முகங்களில் தெரிந்தது.
நாங்கள் வாங்கிக் கொடுத்திருந்த கரும் நீலமும், வெள்ளையுமாய் கட்டம் போட்ட சட்டையைப் போட்டபடி குளித்துவிட்டு வந்த அப்பாவை அம்மா கண்நிறையப் பார்த்துக் கொண்டிருந்தார்.
’போதும் என் அப்பா மேல ரொம்ப கண்ணு வைக்காதிங்க’ன்னேன்.
`இல்லம்மா அப்பாவுக்கு சட்டை கொஞ்சம் சின்னதா இருக்கோன்னு தோணிச்சு அதான் பார்த்தேன்’ என்றார்.
‘அடப் போப்பா. நானும் என்னமோ ஆசையா பாக்கறேன்னு நினைச்சேன். இதோ போயி சட்டைய மாத்தறேன்’ என்ற அப்பாவைத் தொடர்ந்து
‘என்னம்மா.. நான் லவ்வில பாக்கறிங்கன்னு நினைச்சா இப்டி புஸ்னு போச்சே. பாவம் அப்பா டோட்டல் டேமெஜ்’ என்றபோதுதான் கவனித்தேன் கண்ணீரில் கண் நிறைந்திருந்தது.
இன்று ஒரு நாள். பின் வரும் இரண்டு மாதப் பிரிவின் தாக்கம் லைட்டாகத் தலைதூக்குகிறது.
’போச்சுடா.. ஊர்ல போய் அழுதது போலவே இங்கேயும் அழப் போறிங்களா’ என்றேன்.
சிரித்தபடி உண்மை சொன்னார். போன வருடம் அக்காச்சியோடு ஊருக்குப் போனார் அம்மா என்று முன்பே உங்களுக்குச் சொல்லி இருக்கிறேனே. நினைவிருக்கா? அங்கு போய் ஒரு வாரம் சென்றதும் இரவில் அழுதாராம். ஒரு மாதம் ஆனதும் அண்ணா, ரஜியின் கிண்டலுக்கு ஆளாகும் அளவுக்கு பகலிலும் அழுதாராம். எப்போடா அப்பாவை பார்ப்பேனென்று ஆகிவிட்டதாம். அதைவிட ஒன்று சொன்னார். இப்போதும் புல்லரித்துப்போகிறது. ஏர்போர்ட்டில் பார்த்த உடனேயே அண்ணாவும் ரஜியும் சாஷ்டாங்கமாக அம்மா காலில் விழுந்து வணங்கினார்களாம். அம்மா ஒரு குழந்தை. குழந்தையும் தெய்வமும் ஒன்றேதானாம்.
வந்தவர்கள் அப்பா இளமையாக இருப்பதாகவும், அம்மாவை அடிக்கடி ஃபோன் செய்து கண்காணிக்கும்படியும் கிண்டல் செய்தார்கள். அதில் மூவருக்கு அப்பாவின் முடி மேல் பொறாமை. ’அடுத்த தடவை வரும்போது பாதி முடி கொட்டி இருக்கும் பாருங்க’ன்னு ஒருத்தர் சாபமே கொடுத்தார். எனக்கென்னவோ அப்பாவும் அம்மாவும் இந்த ஆறு வருட இடைவெளியில் அதிக மாறுதலோடு இருப்பதாகத் தெரிகின்றது. உடலாலும் மனதாலும் அடுத்த கட்ட வாழ்க்கைப் படிக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த வயதில் புலம் பெயர்த்து நடப்பட்ட மரங்கள் வெள்ளை தேச மண்ணுக்குள் இலகுவாக வேர்விட முடியாமல் ஊர்ப் பிரச்சனையும், மன உளைச்சலும் அரித்துக் கொண்டிருக்கின்றன.
உட்கார்ந்தபடியே தூங்கிப்போகும் அப்பா. ஒவ்வொரு படிக்கும் இரண்டு கால்களும் சேர்த்து வைத்த பின் பத்திரமாய் அடுத்த படி இறங்கும் அம்மா. அருகிருந்து பார்த்திருந்தால் இத்தனை ஆச்சரியம் இருந்திருக்காதோ என்னவோ. அப்பா அம்மாவிடம் தெரியும் வயதின் சாயல் மலைக்க வைக்கிறது. மனதை வலிக்கவும் வைக்கிறது. நண்பர் ஒருவர் வந்ததும் ’முதல்ல பாத்ததுக்கு இப்போ எவளவோ தேவலை’ என்று சொன்னதும் என்னோடு அக்காச்சிக்கும் ஆறுதல். உழைப்பின் பின்னே ஓடிய அப்பா இரண்டு வருடத்தின் பின் ஒரு மாத முழு ஓய்வில். அப்பாவைப் பார்த்து மன நிறைவில் அம்மா. அவர்களைப் பார்த்துக் கண்கள் பனிக்க நான். என் பிள்ளையாருக்கு நன்றி.
அம்மாவுக்குப் பிடித்த பாடல் ஒன்று, எல்லா அம்மாக்களுக்காகவும்.. பாருங்கள்.