‘அம்மா மங்கா தா படமா பார்க்கறிங்க??’
என்ற சது என் சிரிப்பில் வழக்கம் போல் மிரண்டு போனார்.
‘ஓம்.. எப்பிடித் தெரியும் உங்களுக்கு??’ என்றேன்.
‘அப்பம்மா கூட தூங்கறப்போ டிவில மங்கா தா 50ன்னு வந்திச்சு’ என்றார்.
அவர் Mankatha வை அப்படி படித்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் வளர்ந்திருந்தால் மாங்கா தா என்று படித்திருப்பாரோ??
தமிழ் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தேன். கண்ணன் வந்தது என்றார். திணை என்று மிரட்டாமல் இலகுவாகப் புரியவைத்தேன். புரிந்ததை சரி பார்க்க சில உதாரணங்கள் கேட்டேன். இந்த உதாரணம் கேட்டல் சரி பார்த்தல் என்பது சமயங்களில் பல சிக்கல்களில்/சிரிப்புகளில் விட்டுவிடும் என்பது நீங்களும் அறிந்ததே. திருடன் என்றதும் வந்தது என்றார். ஏனென்று கேட்காமலே அவங்க தான் கெட்டவங்க ஆச்சே அவங்களுக்கு எதுக்கு மரியாதை. அதுவே போதும் என்றார். பிள்ளைக்குப் புரிவது திருடனுக்குப் புரிந்தால் எவளவு நன்றாக இருக்கும்.
ஒழுங்காக விளையாடிக்கொண்டு இருந்தார்கள். என் கண்ணே பட்டுவிட்டது போல. அம்மு திடீரென்று பஞ்சாயத்துக்கு கூப்பிட்டார். இருங்கம்மா நான் சொல்றேன் என்று சதுவே ஆரம்பித்தார். அதாகப்பட்டது ஞாயிறன்று டிவி பார்க்கும்போது கொறிக்க வாங்கலாம் என்று அவர் சொன்ன சிப்ஸ் ப(b)ஷ் (அதாங்க.. ஆய்) டேஸ்ட்டா இருக்கும் வேற வாங்கலாம்னு அம்மு சொன்னாங்களாம். அப்டினா அக்காச்சி பஷ் சாப்டிருக்காங்களா?? அப்டி இல்லைனா அவங்களுக்கு எப்டி அந்த டேஸ்ட் தெரிய வந்தது?? இதுக்கு என்ன தீர்ப்பு சொல்ல முடியும்??
அம்முக்கு ஸ்கூல் லேட்டாக முடியும் நாட்களில் வழக்கமாக தனியே வருவேன் அதான் வளந்துட்டோம்ல என்பவர் அன்று முடியாது என்றதால் அவரை ஆஃபீஸில் விட்டுப் போனார் மாம்ஸ். நான் வாங்கி வைத்திருந்த சான்விச், ஜோடா, கேண்டி என நொருக்கியவர் வீடு வரும் வழியில் அதிகம் பேசாது வந்தார். உண்ட களையோ என நானும் கையை வருடிவிட்டபடி பேசாமலே வண்டியை ஓட்டினேன்.
‘அம்மா.. உங்களுக்கு சிறீலங்கா போணும்னு ஆசை இல்லையாம்மா??’
திடீரென்று கேட்டதும் மலைத்து சுதாரித்து ‘ம்ம்.. இருக்குப்பா.. ஏன் கேக்கறிங்க’ என்றேன்.
‘இல்லை எனக்கென்னவோ உங்களுக்கு அங்க போய் எல்லாரையும் பாக்கணும்னு ஆசையா இருக்குமோன்னு தோணிச்சு.. அதான் கேட்டேன்’ என்றார். ஆசை இல்லை பேராஆஆஆசையே இருப்பதைச் சொன்னேன்.
‘அங்க சண்டை இல்லைனா இங்க நீங்க வந்திருக்கமாட்டிங்க இல்லை. நானும் அங்கவே பிறந்திருப்பேன். நான் அங்க பிறந்திருந்தா நீங்க என்ன தமிழ் பேசு, தமிழ் படின்னு சொல்லி இருக்கமாட்டிங்க இல்லை’ என்றார்.
வெயிட்ட்ட்ட்ட்.. நீங்கள் நினைத்ததையே நானும் நினைத்தேன். ஆனால் அவர் தொடர்ந்து சொன்னதை கேளுங்கள்.
‘அதுக்கு பதிலா இங்லிஷ் படி, இங்லிஷ் பேசுன்னு சொல்லி இருப்பிங்க’ என்றார். நான் வேறென்ன சொல்வேன்??அவ்வ்வ்வ் தான்.
முன்போல் ஹக், கிஸ் கேட்டதுமே/கேக்காமலே எல்லாம் இப்போது கிடைப்பதில்லை. தூங்கச் செல்லும்முன் குட்நைட் ஹக் வேணும்னா கீழ வாங்க என்கிறார். இல்லையென்றால் இதோ இப்போது போல குளிச்சிட்டு அப்படியே கீழ தூங்கிடுவேன். மறுபடி மேல வரமாட்டேன் அதான் இப்பவே ஹக் என்று கொடுக்கிறார். சரி அவர் போக்கிலேயே விட்டுவிடலாம் என்றால் கள்ளச்சிரிப்போடு உங்களுக்கு இப்போ என்னவோ வேணும் போல இருக்கே என்று இறுக்கி அணைத்து பெற்ற மனதை இன்னமும் பித்தாக்குகிறார்.
இதை சொல்ல மறந்துவிட்டேன். எப்போதும் இருவர் பெயரையும் முழுதாகவே நானும் மாம்சும் கூப்பிடுவோம். காரணம் அப்போதுதான் பெயரின் பலன் கிடைக்கும் என்பதாயும் இருக்கலாம். அவரை சது என்றோ இல்லை சத் என்றோ கூப்பிட வேண்டுமாம். அவருக்கு அதுதான் பிடிக்குமாம். எனக்கென்னவோ தம்பி, கண்ணா, ஐயா, ஐயாச்சி, ராசா, கண்டுக்குட்டி, செல்லக்குட்டி என்றுதான் வருகிறதே தவிர அந்த சது அல்லது சத் வரவே மாட்டேன் என்கிறது. பார்ப்போம்.
இந்தப் பிறந்தநாளை ஸ்விம்மிங் பூலில் ஃப்ரெண்டன்களோடு கொண்டாடப் போகிறார். அவரே வந்து தனக்குப் பிடித்த கேண்டீஸ் வாங்கி, தானே பேக் செய்தும் வைத்திருக்கிறார். இதுவரை இது என் வேலையாக இருந்தது. அவர் கேட்ட brownies செய்தாயிற்று. வீட்டில் பார்ட்டி ஒழுங்கு செய்த பின் எல்லாரையும் அழைக்கிறேன்.
என் கண்ணன் என்றும் நலமாய் வாழ என் அப்பன் துணை இருக்கட்டும்.
ஹாப்பி பர்த்டே சத். லவ் யூ கண்ணா.