நேற்று வீட்டுக்கு அவருடைய இரண்டு நண்பர்கள் வெவ்வேறு நேரத்தில் வந்தாங்க. வந்தவங்களுக்கு வீடெல்லாம் சுற்றிக் காட்டினார். இதிலென்ன அதிசயம் என்று நினைப்பவர்கள் (நினைக்காதவர்கள் அடுத்த பத்திக்கு எஸ்ஸாகாமல்) தொடர்ந்து படிக்கவும். இந்த வீடு ஒதுங்க வைப்பதென்பது எனக்கு மட்டும்.. ம்ஹூம்.. முடியவில்லை. ’ஒரு ஃப்ரெண்டு வந்தா கூட வாசலோட அனுப்ப வேண்டியது இருக்கு’ ‘நான் மட்டும் அசையாம இருந்தேன்னா என் தலை மேலவும் எதையாவது வச்சிட்டு போயிடுவேடி நீ’ இப்படியான வசனங்கள் அடிக்கடி கேட்கும் எங்கள் வீட்டில். பொறுத்துப் பார்த்துப் பொங்கி விட்டார் கண்ணாளன். திடீரென்று வீடு பெரியதாகிவிட்டது போன்ற உணர்வு. நடக்கும் போது எதுவும் காலை இடறவைல்லை. இருக்கும்போது இல்லை.. இருக்க இடம் தேட வேண்டியதில்லை சோஃபாவில். தேவையில்லாததென்று தான் கருதிய அத்தனை பொருட்களையும், (கவனிக்க.. பொருட்கள்) கடாசிவிட்டார். ஒவொரு நாளும் நான் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போதும் வீடு எம்ப்ட்டியாகும் வேகத்தை கண்டு திகைத்துப்போவேன். எடுத்தது எடுத்த இடத்தில் வைக்கப்பட வேண்டும் என்பதில் தொடங்கி ஏகப்பட்ட ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ். ’இப்போ பாத்தியா வீட்டை’ பெருமையோடு சொன்னவரிடம் ‘இதெல்லாம் முன்னாடி நான் செஞ்சப்போ கவலையே இல்லாம கிளறி வச்ச ஆள், இப்போ தான் அடுக்கி வைக்க ஆரம்பிச்சதும் அலப்பரைய பாரு’ என்றேன். ஒத்துக் கொள்வதற்கும் கொள்ளாததற்கும் இடைப்பட்டதாய் ஒரு ரீயாக்ஷன் கணவனால் மட்டுமே முகத்தில் காட்ட முடியும் போல.
ஒரு பர்த்டே பார்ட்டிக்குப் போயிருந்தோம். கை தவறி டீயைக் கொட்டி விட்டேன். சாரி (இது அந்த சாரி இல்லைங்க) ரொம்ப பிடிச்ச சாரி. ஆவ்வ்வ்வ்.. பாழாகிய கவலையில் அருகில் இருந்தவர்களின் ஆடைகளையும் அது நனைத்து வைத்ததை கவனிக்கவில்லை. அவர்கள் பலகாரங்கள் (உங்க ஊர்ல பட்ஷணமானா ஸ்வீட் காரம்னா சொல்விங்க?) எடுக்க போய்விட்டதால் தர்ம அடியிலிருந்து தப்பிவிட்டேன். விடுவாரா என்னவர். சாரிக்கு முதலுதவி செய்துவிட்டு சோகத்தோடு வந்தவளைக் கை காட்டி ‘பாலன்.. இதோ வரா உங்க லெதர் ஜாக்கெட்ட நாசம் பண்ணவ’ என்று போட்டுக்கொடுத்துவிட்டு ஜூன் போனால் ஜூலை காற்றே என்று பாடிக் கொண்டிருந்தவரை ரசிக்க ஆரம்பித்தார். அதாவது அவர் பாடிய பாடலை.
ஒரு தடவை தங்கா அக்கா வீட்டில் பேசிக் கொண்டிருந்த பொழுது விஜய் அண்ணா சொன்னார்.
’நான் எப்போதும் தங்கா கிட்ட சொல்லி ஆச்சரியப்படுவேன். குணா கிட்ட எத கேட்டாலும் இருங்கண்ணா.. அவ கிட்ட கேட்டுட்டு சொல்றேன்னுதான் சொல்வார். நான் தங்கா கிட்ட கேட்டு சொல்றேன்னு சொன்னதில்லை’
’எப்டி என்கிட்ட சொல்விங்க. சொன்னாலும் நான் ஒத்துக்கணுமே. சுசி அப்டி இல்லை. அவர் என்ன சொன்னாலும் சரிம்பா. அந்த நம்பிக்கைல அவர் கேக்கறார்’
என்று தங்கா அக்கா பதில் சொன்னபோது மறுபடியும் முதல் பத்தியில் நான் சொன்ன ரீயாக்ஷன் அவர் முகத்தில். எதுவாக இருந்தாலும் என்னிடம் கேட்பார். இதை செய்யலாமா, இங்கே போகலாமா, அதை வாங்கலாமா என்று அவர் கேட்கும்போதே எனக்கு புரிந்துவிடும். அவருக்கு அதில் எவளவு விருப்பம் இருக்கிறதென்று. அதற்கேற்ப பதில் சொல்வேன். பிடிக்காவிட்டால் இன்ன காரணம் என்று சொல்லி அதன் பின் உங்கள் இஷ்டம் என்று முடித்துவிடுவேன். நான் மறுத்த, தடுத்த சந்தர்ப்பங்களை எண்ணித்தான் பார்க்க வேண்டும்.
கடையில் நின்று கொண்டு கால் பண்ணுவேன். ‘என்னப்பா கார்ட்ல காசே இல்லை’ என்று. இன்னொரு கார்ட் பேரை சொல்லி அதில இருக்கும் எடுத்துக்கோ என்பார். மறுபடி கால் பண்ணி அதோட கோட் சொல்லுங்க என்பேன். ’இவ கிட்ட கொஞ்சம் பொறுப்பா இருக்க சொல்லுங்களேன். செல்லப் பிள்ளை. குடுத்து வைச்சவ. மாசம் மாசம் பில்ஸ் செட்டில் பண்ண நான் படும்பாடு எதுவும் இவளுக்குத் தெரியாது. கடைல நின்னுட்டு கால் பண்றா. அவ கார்டோட கோட் கூட என் கிட்ட கேக்கறா’ தங்கா அக்காவிடமோ அக்காச்சியிடமோ குறைப்பட்டுக் கொள்வார். அவ்வப்போது எங்களின் நிதிப்பிரிவு பற்றி புரிய வைப்பார். கேட்டுவிட்டு மறந்துவிடுவேன். எப்படி அப்பாவின் பிள்ளையாய் வளர்ந்தேனோ அப்படி என்னவரின் முதல் பிள்ளையாய் வளர்ந்து கொண்டிருக்கிறேன். இப்படி இருப்பது தப்பென்று அதிலும் என்ன லோன், எங்கே, எவளவு போன்ற வீட்டின் நிதி நிலைமை கூடத் தெரியாத அளவுக்கு இருப்பது மிகவும் தப்பென்று தெரிந்தாலும் எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை பெரிதாக இருக்கிறது.
எங்கள் வீட்டிலிருந்து நாங்கள் செல்லும் அதிகபட்சமான தூரம் தங்கா அக்கா வீடு. அரைமணி நேர ட்ரைவிங். வரும்போது அவர் வண்டி ஓட்டும் நிலைமையில் இருந்தால் (!) இப்போதெல்லாம் தூங்கிப்போகிறேன். ’என்னடி அங்க இருந்து வரும்போது தூங்கிடறே பரவால்லை. தூரம். உனக்கும் வயசாயிடுச்சு. அதுக்குன்னு பத்தே நிமிஷத்தில இருக்கிற ரஞ்சன் வீட்டுக்கு போயிட்டு வரும்போது கூடவா தூங்குவே’ தட்டி எழுப்பிக் கேட்டார். முன்பெல்லாம் தூங்கும்போது நான் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பேன். ம் கொட்டியபடி தூங்கிப் போவார். இப்போதெல்லாம் அவர் பேச ம் கொட்டுவது நானாகிப் போயிற்று. கேக்கரியான்னு கொஞ்சம் சத்தமாய் கேட்கும்போதுதான் உறங்கிவிட்டேன் என்று தெரிகிறது.
‘என்னடி நீ. எனக்கு முன்னாடி தூங்கிப் போறே. எனக்கு தூக்கமே இல்லை நைட் பூரா தெரியுமா’
‘இல்லப்பா நீங்க பேசினத கேட்டுட்டு தானே இருந்தேன். தூங்கலை நானு’
அவர் பின் தான் தூங்கினேன் என்பதில் உறுதியாக இருந்தேன். பிறிதொரு நாள் தட்டி எழுப்பி ‘இதோ பாரு.. தலைய கோது, முதுகை வருடு.. எதுனா செய்து என்ன தூங்க வச்சிட்டு நீ தூங்கு. இப்டி நீ முன்னாடியே தூங்கிப் போனா எனக்கு தூக்கமே வர்லடி’ என்று குழந்தையாய் சிணுங்கிய போது இனிமேல் முதலில் தூங்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். இதனால்தான் முன்னோர்கள் முன் தூங்கி பின் எழச் சொன்னார்கள் போல. பாவம் என் கண்ணாளன்.
இன்று முதல் முதலாக அவர் என் அருகில் இல்லாத அவரின் பிறந்தநாள். லண்டனில் இருக்கும் மச்சினர் ஊருக்குப் போகப் போவதால் அவரை வழி அனுப்பப் போக வேண்டிய கட்டாயம். அதிகாலை ஃப்ளைட்டுக்குக் கிளம்புகையில், வாசலில் கிடைத்த அணைப்பில் ’தம்பிக்காகத்தான் போறேன் குஞ்சு (உங்க ஊர்ல செல்லம்) கவலைப்படாம இரு’ என்பதாய் அவர் மனம் தெரிந்தது. எனக்கு நேர் எதிர். உணர்வுகளை அதிகம் வெளிக்காட்ட மாட்டார்.
எல்லாரும் அவரை என்றும் இதுபோல் இன்பமாய் வாழ மனமார வாழ்த்துங்கள். அவருக்கு பிடிச்ச Manchester United சாங் ஒண்ணு பாத்திடலாம்.
அப்படியே இங்க போய் எனக்கு பிடிச்ச, இப்போ நான் கேட்டுட்டு இருக்கிற பாட்டையும் பாருங்க.
வர்ட்டா..