Pages

  • RSS

28 February, 2010

என் அண்ணாவுக்கு..

m   a

அண்ணா.. எங்க வீட்ல அப்பாவுக்கு அடுத்த இடத்தில நான் மரியாதையும் பயமும் வைத்திருக்கும் பாசத்துக்குரியவர் நீங்க. இத்தனைக்கும் என்ன நீங்க திட்னதில்ல, அடிச்சதில்ல. ஒரே ஒரு தடவை காதை திருகி இருக்கீங்க. உங்க காஸட் ஒண்ண நான் நாசவேலை பண்ணி அழிச்சு வச்சிட்டதால. ஒரு வார்த்தை திருப்பி பேச மாட்டேன். சொல்றத செய்துடுவேன். உங்க கூட சண்டை போடணும்னு நினைச்சது கூட இல்லை. நீங்க எங்கள விட்டு முதல்ல படிப்புக்கும் அப்புறம் வேலைக்கும்னு அதிக நாட்கள் பிரிஞ்சு இருந்ததுதான் காரணமான்னா அதுவும் கிடையாது.

சின்ன வயசில குருட்டு எலிக்கு யாராவது சாப்பாடு குடுங்கப்பா.. பாவம் கண்ணு தெரியாதுனு சொல்லி நீங்க எங்க பங்கையும் கபளீகரம் பண்றப்போ முதல்ல தெரியாமலும், பின்னாடி தெரிஞ்சும் ஏமாந்து போறது நாந்தான். யாரும் உங்களுக்கு சொந்தமான எதையும் எடுத்திட முடியாது. உங்கள யாரும் எதுவும் சொல்லவும் கூடாது. ஒரு தடவை அழுக்குத் தேச்சு குளிக்கலேன்னு உங்களுக்கு அம்மா சாத்துப்படி வச்சுக்கிட்டே குளிக்க வைச்சப்போ, கைல கல்லு எடுத்து அண்ணாவ இப்போ விடலேன்னா அடிச்சிடுவேன்னு நான் மிரட்டினது வரலாற்று நிகழ்வாச்சே. உங்க டீச்சர் க்ளாஸ் கட் அடிச்சிட்டு நீங்க கேணியில குளிக்கப் போனத்துக்கு பிரம்பால கால்ல வரி வச்சிட்டார்னு இன்னை வரைக்கும் அவர் கிட்ட பேசிறதில்ல நான்.

உங்களுக்கு ஒவொரு தடவையும் விபத்துக்கள் நடந்தப்போ எனக்கு அது வந்திருக்க கூடாதானு அழுதிருக்கேன். வலிய வெளிய காமிக்க மாட்டீங்கன்னாலும் நீங்க அனுபவிச்சது கொஞ்சம் இல்லைண்ணா. உயிர் தப்பி வருவீங்களானு கூட எத்தனை தடவை தவிக்க விட்டிருக்கீங்க. நீங்க விடுமுறைல வந்தா வீடே களை கட்டும். நீங்க திரும்ப போற நாள் நெருங்க மனசு அடிச்சிக்கும். கண்ல இருந்து உங்க பைக் மறையிற வரைக்கும் பாத்துட்டு இருப்போம். மறுபடி வீடு சகஜ நிலைக்கு வர கொஞ்சம் நாளாகும்.

கல்யாணம்.. எல்லாரையும் விட்டு வர முடியாம அலைஞ்சுட்டு இருந்துது மனசு. எத்தனையோ குழப்பங்கள். என்னய விட அவர் நல்லவர்டி. அண்ணா சொல்றத நம்பு. உன்ன நல்லபடியா அவர் பாத்துப்பார்னு நீங்க சொன்னதுக்கு அப்புறம்தான் எனக்கு கல்யாணப் பொண்ணு நாந்தாங்கிற உணர்வே வந்துது. உனக்கும் அவருக்குமான நட்பு.. கல்யாணத்துக்கு அப்புறம் அத்தான்னு சொல்லி மரியாதைப் பன்மையில நீ பேச ஆரம்பிச்சப்போ என்னடா இது புதுசானு என்னவர் கேட்டத்துக்கு நட்பு வேறங்க, இது உறவு, அதுக்கான மரியாதைய நான் குடுக்கிறதுதான் நல்லதுனு சொன்னே.

எப்பவும் அப்பாவுக்கு உன் ஆலோசனை தேவைப்படும். இத தான் நீங்க செய்யணும்னு சொல்ல மாட்டே. இப்டி செஞ்சா நல்லதுனு தோணுது. நீங்க பாத்து செய்ங்கனு சொல்வே. அவ்ளோதான். அது சரியாதான் இருக்கும். அண்ணியோடான உன் காதல். கல்யாணம். அவங்களுக்கு எல்லாமே நீயாய். போன வாரம்தான் ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க ஃபோட்டோ வந்துது. அண்ணி முகத்தில இருக்கிற சந்தோஷம்.. உங்க மடியில உரிமையோட இருக்கிற சின்னண்ணனோட சின்னக்குட்டி.. எங்க பசங்களுக்கு அந்த கொடுப்பினை கிடைக்கலையேன்னு என்னையும் அக்காவையும் ஏங்க வைச்சது.. வழக்கம் போல.

எல்லாம் நீ சொன்னா மாதிரி சரியா ஆய்டும்ணா. பிள்ளையார் துணையிருப்பார். நானும் அக்காவும் உங்க எல்லாரையும் வந்து பாப்போம். திட்டாத.. அதுவரைக்கும் எங்க தவிப்பு அடங்காதுண்ணா.. நாங்க முத தடவை ஊருக்கு வந்திட்டுப் போனப்போ நீ அக்கா கிட்ட சொன்னியே.. அவளே ஒரு குழந்தை. அவளுக்கு ரெண்டு குழந்தைனு.. இப்பவும் என் அண்ணாவுக்கு நான் குழந்தைதான். ஃபோன்ல நான் அண்ணா பேசறேன்னு உங்க குரல் கேட்டதும் அண்ணா.. சொல்லுண்ணா.. எப்டி இருக்கேன்னு சந்தோஷமா கண்ணீரை மறைச்சுக் கிட்டே பேசத் தெரிஞ்ச குழந்தை. இனிமே அப்டி எல்லாம் இருக்கக் கூடாது. எல்லோரும் எப்போதும் சந்தோஷமா இருப்போம்.

ஹாப்பி பர்த்டே அண்ணா..

இது நீங்க 25.12.2009 ல எங்களுக்கு எழுதினது. என் வாழ்நாள்ல நான் மறக்கணும்னு நினைக்கிற மறக்க முடியாத வரிகள்..

j 013

என் எல்லாம்

சிதைந்து அழிந்த பின்

நானும் என் .....ம்.

21 February, 2010

என் செல்ல அம்மாவுக்கு..

mother_child_79

அம்மா..

என் செல்ல அம்மா..

சமயத்தில்

அம்மா நானா

இல்லை நீங்களா

சந்தேகத்தில்

உங்கள் செல்ல மகள்.

------------x------------

ஆமாம் அம்மா.. எனக்கு அப்பப்போ இந்த சந்தேகம் வரும். நீங்க என் அம்மாவா? இல்ல நான் உங்க அம்மாவா? சிரிப்புதான் வரும் நினைச்சா. என்னைப் பொறுத்த வரைக்கும் நீங்க இன்னமும் குழந்தைதாம்மா.. உங்க செயல், பேச்சு எல்லாத்திலேம் நான் பாக்கிறது ஒரு குட்டிப் பொண்ணதான்.

எப்பவும் உங்க கூடவே ஒட்டிட்டு இருப்பேன். எனக்கு நினைவு தெரிய முன்னமிருந்தே நான் அப்டிதான்னு சொல்வீங்க. நீங்க வந்து பக்கத்தில படுக்காம என்னைக்கும் நான் தூங்கினதில்ல. ஜில்லுன்னு இருக்கும் உங்க கை.. அதுவே பனிக்கு இதமா சூடாவும் இருந்தது எப்டீன்னு எனக்கு இன்னமும் புரியல. என்ன அணைச்சு கிட்டு கதை சொல்லும்போது என் முதுகில உங்க குரலோட அதிர்வ என் முதுகில மெதுவா உணர்ந்துப்பேன். அப்டியே தூங்கியும் போவேன். நான் ஏன்மா வளர்ந்தேன்??

எப்பவும் உங்க கூட இருந்ததால உங்களோட அத்தனை பேச்சுக்களையும் கவனிப்பேன். சந்தோஷம், கவலை, கோபம், ஆற்றாமை, எரிச்சல்னு எல்லாமே இருக்கும். அப்போ அது மத்தவங்க கிட்ட நீங்க சொல்றதா இருந்துது. இப்போ என் கிட்டவே. இப்போ சந்தோஷப்படறேன். நான் வளர்ந்த்ததுக்காக.

யார் செல்லம்டா நீ குட்டிம்மான்னு கேட்கப்பட்டப்போல்லாம் உடனவே சொல்வேன் அப்பா செல்லம்னு. சிரிப்பீங்க. என்னிக்கு உங்க கண்ல கொஞ்சூண்டு வருத்தமும் தெரிஞ்சுதோ அன்னிலேருந்து நான் அப்பா செல்லமும் அம்மா செல்லமும் ஆயிட்டேன். எல்லார் கிட்டவும் பாத்தீங்களா அப்டியே அவ அப்பா ஜாடைன்னு பெருமை பேசுவீங்க. அதுவே என் மனசிலேம் எனக்கு பொண்ணு பிறந்தா என் கணவர் ஜாடையில இருக்கணும்கிற விருப்பமா இருந்து நிறைவேறிடிச்சு.

அக்காவுக்கும் உங்களுக்கும் என்னிக்குமே ஒத்துக்காது. ஏங்க இவ இப்டி இருக்கான்னு நீங்க சொல்லும்போது விடுப்பா.. இவ என்ன இன்னைக்கா இப்டி இருக்கான்னு அப்பா சமாதானம் சொன்னாலும் உங்க மனசு ஆறலேன்னு எனக்கு தெரியும். அவ செய்யாததையும் சேத்து நான் செய்வேன். உங்கள திருப்திப்படுத்த. இன்னை வரைக்கும் உனக்காக இத வாங்கினேன், உனக்குன்னு இதை செஞ்சேன்னுதான் நீங்க சொல்லி இருக்கீங்களே தவிர உனக்கு இதை வாங்கட்டுமா, இதை செய்யட்டுமான்னு கேட்டதே இல்ல. என்ன இப்டி ஒரு ட்ரஸ் போட்டிருக்கே.. நல்லாவே இல்லனு ஃப்ரெண்ட்ஸ் சொன்னாலும் பாத்தியா அவள நான் குடுத்தது ஒரு வார்த்தை பேசாம போட்டுட்டு போறானு நீங்க சொல்றதுதான் எனக்கு பிடிக்கும். இதனால சமத்தில அனியாயத்துக்கு அக்கா என் மேல கொலைவெறில இருந்தாங்கிறது வேற விஷயம்.

நான் பேசறத விட நீங்க பேசறத நான் கேக்கறதுதான் உங்களுக்கு பிடிக்கும். அண்ணன்கள், அப்பா, அக்கா பத்தி பேசும் போது நான் எப்டி அவங்கள கூப்டுவேனோ அப்டியே சொல்லி பேசுவீங்க. ரஜி இருக்கானே இன்னைக்கு என்ன கோச்சுக்கிட்டாம்மா. நான் இப்டி சொன்னது தப்பா, அக்கா கூட போய் வாங்கி வந்து நட்ட ஆரஞ்சு ரோஸ் பூத்திடுச்சும்மா, இன்னைக்கு அண்ணா பேசினார், அப்பா கிட்ட சொல்லும்மா சரியா சாப்ட சொல்லி இப்டியே போகும். எப்பவாவது நான் கொஞ்சம் பிஸியா இருந்து கவனிக்காம இருக்கேன்னா வருமே உங்களுக்கு ஒரு செல்ல கோபம். சரிம்மா உன் வேலைய நான் கெடுக்கல, உனக்கு நேரம் இருக்கும்போது பேசு பரவால்ல பேசுங்கம்மானு இங்க நான் சொல்றத்துக்குள்ள அங்க டொக்னு ஃபோன வச்சிடுவீங்க. அம்மா அக்கா சொல்ரத கேளுங்கம்மா, கொஞ்சம் கவனமா சமையல் பண்ணுங்க. ரஜி பாத்துப்பான்மா அவன் கிட்ட அண்ணிய கவனமா பாத்துக்க சொல்லி அவன் பேசும்போதெல்லாம் சொல்லாதீங்கனு லைட்டா ஒரு அட்வைஸ் சொன்னா போதும். நீயும் ஆரம்பிச்சிட்டியா. என்ன நினைச்சுட்டு இருக்கீங்க எல்லாரும் என்ன பத்தி. எனக்கு யாரும் சொல்ல வேண்டியதில்ல. எனக்கு அட்வைஸ் பண்ரவங்கள பிடிக்காதுனு சொல்லிட்டு ஒண்ணு லைன் கட் ஆவும், இல்லன்னா அப்பா இல்ல அக்கா கைல ஃபோன் திணிக்கப்படும். அப்புறம் உங்கள சமாதானம் பண்ண நான் படற பாடிருக்கே.. குழந்தை..

ஒரு பத்து வயசு வரைக்கும் உங்க கிட்ட அப்பப்போ அடி வாங்கி இருக்கேன். கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா தலை வலிக்குது எனக்குனு திட்டு வாங்கி இருக்கேன். அப்போல்லாம் அம்மா ஏன் இப்டி இருக்காங்கன்னு புரியாம இருந்தது, நான் அம்மாவா ஆனதும் புரிஞ்சுது. ஆனா நான் முன்ன உன்ன அடிச்சத்துக்காகதான் கடவுள் என்ன உன் கிட்ட இருந்து தூரத்தில வச்சிருக்கார்னு நீங்க சொல்லும்போது எனக்கு ரொம்ப வலிக்குதும்மா. பொறுத்துக்கோங்க. நீங்க இங்க வந்து நான் எப்டி குப்பை கொட்றேன்னு கண்டிப்பா ஒரு நாள் பாக்கத்தான் போறீங்க. என் கையால உங்களுக்கு சமைச்சு போட்டு தண்டனை குடுக்கத்தான் போறேன்.

என்னதான் நான் சாதாரணமா பேசினாலும் சமயத்தில என் மனசு சரியா இல்லைங்கிறது எப்டித்தான் உங்களுக்கு புரியுதோ எனக்கு தெரிலம்மா. அப்போ மட்டும் எனக்கு அம்மாவா பேசுவீங்க.  தலைவலிக்குதும்மா, ஆஃபீஸ்ல வேலை ஜாஸ்தினு சொல்லி மழுப்புவேன். சூடா ஒரு டீ சாப்டுனு சொல்வீங்க. நானே போட்டு சாப்டுறத்துக்கு இஷ்டம் இல்லமானு சொல்வேன். என் செல்லம்ல.. அம்மாவுக்காக எந்திரிச்சு போய் செய்னு கெஞ்சலா சொல்வீங்க.  பேசிக்கிட்டே செஞ்சு குடிப்பேன். என்னைக்கும் என் மனசில இருக்கிற ஒரே ஆசை என் அம்மா எப்பவும் சிரிச்சுக்கிட்டு இதே குழந்தையா இருக்கணும். நான் உங்க அம்மாவா இருக்கணும். உங்கள சிரிக்க வைக்கிறத்துக்காக, இல்ல என் வேதனைய மறைக்கிறத்துக்காகவும்னும் சொல்லலாம், என் பேச்சு சமயத்தில கலர்ஃபுல்லா போய்டும். ச்சீய்.. இந்த பொண்ணு வெளிநாட்டுக்கு போயி ரொம்ப கெட்டுப் போச்சு, மருமகன் காதில விழுந்தா என்ன நினைப்பாரும்பீங்க. சமத்துன்னு நினைப்பாரு ஏன்னா கத்துக் குடுத்ததே அவர்தானேம்பேன். வெக்கத்தோட சிரிப்பீங்க.

மருமகன்கள், மகள்கள் எல்லாம் உங்களுக்கு மறுமக்கள்தான். நானும் அக்காவும் சொல்லிக்குவோம் அண்ணிங்க குடுத்து வச்சவங்கன்னு. என் கல்யாணம் முடிஞ்சு மாமியார் ஊருக்கு திரும்பின அன்னிக்கு நீங்க ரெண்டு பேரும் கட்டிக்கிட்டு அழுதப்போ ரெண்டு மாசத்தில மறுபடி பாக்க போறீங்க. அவதான் நார்வே போறா. நீங்க இல்லனு நாங்க கிண்டல் பண்ணாலும் நீங்க வெறும் சம்பந்திங்க இல்லைன்னு எல்லாருமே புரிஞ்சுக்கிட்டோம்.

உங்களுக்கு இப்போ என்ன பாட்டும்மா பிடிக்கும்னு நேத்து கேட்டப்போ முதல்ல ராதையின் நெஞ்சமேன்னீங்க. அப்புறம் நான் தேடும் செவ்வந்தி பூவிது.. இல்ல இல்ல மார்கழிப் பூவே.. இல்லம்மா சினேகாவோட ஒரு பாட்டு.. நீங்க யோசிச்ச காப்ல பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் அதுவான்னேன். அதில்லம்மா.. ஆங்.. ஒவ்வொரு பூக்களுமே.. அதான் அதான் எனக்கு பிடிக்கும் இப்போ. அடுத்த வாரம் ஒரு பர்த்டே பார்ட்டில நீங்க அத பாடறத்துக்கு லிரிக்ஸ் அனுப்பறதா நான் சொன்னதோட பேச்சு முடிஞ்சது. இனிமேதான் உங்களுக்கு விஷ் பண்ண போறேன். அதுக்கு முன்னம் இங்க சொல்லிக்கிறேன்.

ஹாப்பி பர்த்டேம்மா.. உம்ம்ம்ம்மா..

சொல்ல மறந்துட்டேன். இன்னமும் என் ஃப்ரெண்டு கிட்ட கேட்டு கத்துக்கலை.. அதனால பாடல் இணைக்க முடியல. சாரிம்மா.. ஆனா எங்க நாலு பேரையும் நீங்க அணைச்சு வச்சிட்டு எடுத்த ஒரு ஃபோட்டோ போடறேன் பாருங்க. அப்பா.. நீங்க ஆஃபீஸ் போன சமயத்தில ஃபோட்டோ எடுத்தது என் தப்பில்ல. ஓக்கேவா.. உங்கள ரொம்ம்ம்ப ஒட்டிக்கிட்டு இருக்கிறது நானு.. தள்ளிப் போயி பட்டும் படாமலும் நிக்கிறது ஹிஹிஹி.. நீதான்கா.

svane mor

14 February, 2010

குடை கொண்டு வாங்க..

காதல்.. எனக்கு எப்பவும் பிடித்த ஒரு வார்த்தை.. உயிருள்ளவை மட்டுமன்றி உயிரற்றவையும் காதல் செய்வதாக கற்பனை செய்து கொள்வேன். காதலிப்பவர்களை பார்த்து குதூகலிக்கும் என் மனம் தோற்றுப் போகும் காதலைப் பார்த்தால் துவண்டும் விடும். காதலை காதலித்துக் கொண்டிருந்ததாலோ என்னவோ மனதில் காதலனுக்கு மட்டும் இடம் கொடுக்க முடியவில்லை. அல்லது எனக்கான என் கண்ணனை நான் அப்போது அறிந்திருக்கவில்லை.

இதுக்கு நான் வளர்ந்த விதமும் ஒரு காரணமா இருந்திருக்கலாம். காதல் பொல்லாதது, தெய்வ குத்தம்னு யாரும் சொல்லல. எட்டாவது படிக்கும்போது “அக்கா.. ட்யூஷன்லவே புக்க விட்டு வந்திட்டேன். உன் க்ளாஸ்மேட் விமலன் கொண்டாந்து குடுத்தான். அவன பாக்கும்போது நம்ம சின்னண்ணன் மாதிரி இல்ல” னு சொல்லி முடிக்கிரத்துக்குள்ள, “அதுக்குள்ளவே பசங்கள பத்தி பேச்சா.. ஆளப் பாரு” னு சொன்ன அம்மா பத்தாவது வந்தப்போ இவன் சிரிப்பு நல்லால்ல, அவன் சூப்பரா பேசரான் பாத்தியானு எங்க கூட அரட்டை அடிப்பாங்க. அப்பா கூட யாரோட லவ் எந்த லெவெல்ல இருக்குன்னு டிஸ்கஸ் பண்ணிக்குவோம். அண்ணன்களோட அத்தனை ஃப்ரண்ட்சும் எங்க வீட்டுக்கு வந்து போவாங்க. சிலருக்கு எந்த வேளையும் வந்து போகக் கூடிய சிறப்பு அனுமதியும் உண்டு. இருந்தும் எனக்கான என் கண்ணனை நான் இப்போதும் அறிந்திருக்கவைல்லை.

குட்டிப் பொண்ணா இருக்கும்போது சித்தியோட காதல், அதுக்கு பெரிய மாமாவால வந்த எதிர்ப்பு, அம்மா அப்பா துணையோட நடந்த அவங்க கல்யாணம் எல்லாம் பிரமிப்பை குடுத்துது. அவங்க மேல இருந்த பாசம் காதல் மேல ஒரு ஈர்ப்பை எனக்குள்ள உருவாக்கிடுச்சு. அதே சமயத்தில ரெண்டாவது மாமா காதல் கல்யாணத்தால தள்ளி வைக்கப்பட்டதும், மாமாவ தன் தம்பியே இல்லன்னு சொன்ன அம்மா தனியா உக்காந்து அழும்போது ஏன்னு தெரியாமலே நானும் அவங்கள கட்டிக்கிட்டு அழுதிருக்கேன். அது காதல் மேல ஒரு பயத்தையும் குடுத்தது. இருந்தும் எனக்கான என் கண்ணனை நான் இப்போதும் அறிந்திருக்கவைல்லை. (சிரிக்காதீங்க மக்கள்ஸ்.. அஞ்சு, ஆறு வயசிலேயே சிலருக்கு லவ்வு ஸ்டார்ட் ஆயிடுதாம்ல..)

அதே குட்டிப் பொண்ணா இருக்கும்போது ஒரு தடவை அப்பா கிராமத்துக்கு போயிருந்தப்போ ஒரு உறவுக்காரர் என்ன எப்ப பாத்தாலும் பிடிச்சு வச்சுக்கிட்டு “அக்கா இவள நான் கல்யாணம் பண்ணிக்கிறேன், உனக்கு கட்டிக் குடுக்க சம்மதம்தானே” ம்பார். இந்த அசட்டு அம்மாவும் (கோச்சுக்காதீங்க அம்மா.. அப்போ அப்டித்தான் தோணிச்சு) சிரிச்சுக்கிட்டே தலைய ஆட்டுவாங்க. அம்மா கிட்ட கேட்டதோட விட்டிருந்தா பரவால்ல. அவர் டைரக்டா என்கிட்டவே “குட்டிம்மா மாமாவ கட்டிக்கிரியா” னு கேட்டப்போ மிரண்டு போய்ட்டேன். அப்புறமென்ன.. அவ்..லாம் இல்ல.. டைரக்டா ஆவ்வ்வ்.. தான். அவர் மிரண்டு போய்ட்டார். அப்புறம் எல்லாரும் சேர்ந்து என்னன்னமோ சொல்லி சமாதானம் செஞ்சாங்க.

அதுக்கு அடுத்த வருஷம் பெரிய மாமா வீடு போயிருந்தப்போ மாமியோட கடைசி தம்பி அதே கேள்விய கொஞ்சம் மாத்திக் கேட்டார். “இவள நான் கல்யாணம் பண்ணிக்கிரதுன்னா உறவு முறை சரியா இருக்குமாக்கா.. கொஞ்சம் பாத்து சொல்லேன்” லைட்டா பயம் வந்தாலும் அம்மா முன்னாடி சொன்ன சமாதானத்துல இது மட்டும் கொஞ்சம் நம்பும்படியா இருந்ததால சொன்னேன், “குட்டிப் பொண்ணுங்கள பெரியவங்க கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க. உங்களுக்கு தெரியாதா மாமா” என்னதான் எல்லாரும் சிரிச்சிட்டாங்கன்னாலும் அதுக்கப்புறம் அவர் வடக்க வந்தா நான் தெற்க போய்டுவேன். பச்சப் புள்ளய என்னம்மா மிரட்டி வச்சிருக்காங்க பாருங்க. ரெண்டும் ஒரே மாட்டர்ங்கிரதால இதுக்கு முந்தைய பத்தியில இத சொல்லல. எனக்கான என் கண்ணனை நான் இப்போதும் அறிந்திருக்கவைல்லை.

முடிவு பண்ணிட்டேங்க. எனக்கு ரொம்ப பிடிச்ச காதலையே தொடர் பதிவா எழுதிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். ரொம்ப நாளா தொடர் பதிவு எழுதணும்னு நினைச்சிருந்தாலும் இதுதான் சரியான சந்தர்ப்பம்னும் தோணிச்சு. இது பத்தின உங்க கருத்தையும் சொல்லிட்டு போங்க. பிடிக்கலேன்னா இங்கவே முற்றும் போட்டிடலாம்.

இன்னைக்கு இங்க ரொம்ப ஸ்பெஷல். ஏன் தெரியுமா? காதலர் தினம் மட்டுமில்லாம அன்னையர் தினம் + Fastelaven னு சொல்லி கிறிஸ்தவ மக்கள் கொண்டாடுற ஒரு நாள்.அன்னையர் தினத்துக்கு எல்லா அம்மாக்களுக்குமான பரிசு இதோ..j 011

ஃபாஸ்தெலாவென்(Fastelaven) னு சொன்னா இன்னையில இருந்து 40 நாட்களுக்கு அதாவது ஈஸ்டர் வரைக்கும் விரதம் இருப்பாங்களாம். அதுக்காக உடலை தயார்படுத்துற சின்ன கொண்டாட்டம்தான் இது. இன்னைக்கு ஒரு ஸ்பெஷல் பன் செஞ்சு, நிறைய்ய்ய்ய்ய ஃப்ரெஷ் க்ரீம் + ஜாம் வச்சு சாப்டுவாங்க. விரதத்துக்கு தயாரா உடல்ல நிறைய கொழுப்பு சேத்துக்குவாங்களாம். அப்டீன்னு சொன்னாங்க. நாம சம்பிரதாயப்படி பன் சாப்பிடறதோட சரி. மேலதிக விபரங்கள் தெரியல. உங்களுக்கும் இதோ..

1.1854492!img1854474

அத்தோட ப்யொர்க் (Bjørg) னு ஒரு மரத்தோட தடியில குட்டி குட்டியா அரும்புகள் வந்திருக்கும். இந்த வருஷ ஓவர் குளிரால இன்னும் வரல. அதில சாயம் போட்ட இறகுகளால அலங்கரிப்பாங்க. குறிப்பா நர்ஸரி பசங்க வேலை இது. அதும் பேரு ஃபாஸ்தெலாவென்ஸ்றீஸ் (Fastelavensris). அதையும் பாருங்க.

Fastelavensris

அப்புறம் என்னங்க.. எல்லா அன்பு இதயங்களுக்கும் என்னோட காதலர் தின வாழ்த்துக்கள். சந்தோஷமா, என்னைக்கும் இதே அன்போட இருங்க. வரட்டுங்களா..

07 February, 2010

என் சின்னண்ணாவுக்கு..

நலமா நண்பர்களே? மன்னிச்சுக்கோங்க. இன்னைக்கும் பெரிய இடுகைதான். இன்னைக்கு என் சின்னண்ணன் பர்த் டே. அவனப் பத்தி உங்களுக்கு சொல்லணும்னு தோணிச்சு. முடிஞ்ச வரைக்கும் கொஞ்சமா சொல்ல ட்ரை பண்றேன். ஓகேவா?

----------------------*-----------------------------

me   r

என்னடா.. உன்ன சின்னண்ணான்னு கெத்தா தலைப்புல போட்டுட்டேன். நாந்தான் உன்ன எப்பவுமே பேர் சொல்லி கூப்டுவேனே.. மரியாதைய தலைப்போட விட்டுடறேன். அது என்னமோ அன்னியமா இருக்குடா.

நான் பிறந்தப்போவும் அப்புறமும் நீ ரெம்பவே அழுவியாம். அம்மா என் கூட இருந்தது உனக்கு பிடிக்கலையாம். அப்போ ஆரம்பிச்சது நமக்குள்ள பகை.. வீட்ல எல்லாரும் என்ன குட்டிப் பொண்ணுன்னு செல்லம் குடுத்தப்போ நீ மட்டும்தாண்டா என்ன விரோதியாவே பாத்தே. எப்பப் பாரு நாம டாம் & ஜெர்ரிதான். இப்போ சிரிப்பா இருக்கு. நீயாவது அடியோட விட்டுடுவே. நான் அவ்ளோ திட்டுவேனே. நாயி பேயி ஏழரைனு வரைட்டியா..

நம்மளோட கடைசி ஃபைட் நினைவிருக்கா? நீ கத்தி எடுத்துட்டு வந்து உன்ன ஒரே குத்துல கொன்னுடுவேண்டி.. அம்மாவுக்காக பார்க்கறேன்.. புஸ்ஸூ.. புஸ்ஸூ.. (இது கோவத்தில நீ விட்ட மூச்சு) முடிஞ்சா குத்துடா பார்ப்போம். நீ என் அண்ணனே இல்ல அப்புறம் எதுக்கு அம்மாவுக்காக பாக்கறே. குத்து.. புஸ்ஸ்ஸூ.. புஸ்ஸ்ஸூ (இது அத விட கோவத்தில கொஞ்சம் பயத்தோட நான் விட்ட மூச்சு) அப்போ கரெக்டா அட்டன்ஸ போட்டாய்ங்க நம்ம நாட்டாமை அக்கா. செம திட்டு ரெண்டு பேருக்கும். அன்னிக்கு நினைச்சேண்டா இனிமே உங்கூட ஒன்லி வாய்ச்சண்டைதான் போடறதுன்னு. அவ அத அம்மா அப்பா கிட்ட போட்டு குடுத்துடுவாளோன்ற பயத்தில எவ்ளோ எடுபிடி வேல செஞ்சேன் அவளுக்கு. உன்னய இவங்க திட்டுரத்துக்கு முன்னாடி என் பங்கு கொலை முயற்சியையும் சொல்லிடறேன். அடுத்த பத்தியில.

உன்னய விட ரெண்டு வயசு சின்னவளா இருந்தாலும், உருவத்தில எட்டாவது வரைக்கும் நான் பெரியவளா இருந்தேன். பாட்டி வீட்டுக்கு போய்ட்டு வரும்போது வேலியோரம் என்ன விட்டுட்டு ரோட்டோரம் நீ வந்திட்டு இருந்தே. லைட்டா ஒரு இடி விட்டேன் பொத்துன்னு கரெக்டா வந்த கார் முன்னாடி நீ சுருண்டு விழுந்தே. ஸ்பீட் ப்ரேக்கர் இருக்கப் போயி கார் ஸ்லோவா வந்ததுனால தப்பிச்சே. அடுத்த முயற்சி இது மாதிரி சத்தியமா எனக்கு நினைவில்லடா. குளிக்க வச்ச தண்ணி பக்கட் உள்ள உன் தலைய அமுக்கி பிடிச்சேனாம். அம்மா மட்டும் பாக்கலேன்னா.. பிள்ளையாரே.. நான் கொலைகாரி ஆயிருப்பேன். நீ பத்தாவது வந்தப்போ வளர்ந்தே பாரு கிடுகிடுன்னு.. ஒட்டடைக்குச்சி. நாந்தான் அண்ணன் சொன்னா மாதிரி அதுக்கப்புறம் சைடாவே வளர்ந்துட்டு இருக்கேன்.

நான் வெளியூருக்கு வேலைக்குப் போனப்போதான் முத முதலா உனக்கு என் மேல இருந்த பாசத்தை லைட்டா புரிஞ்சுக்கிட்டேன். வெள்ளி சாயந்தரம் வந்திடுவே கூட்டிப் போக. அத விட எங்க ரெண்டு பேர் ஸ்கூலும் எதுக்காவது சந்திச்சா நான் ஒண்ணு உன் கூட, இல்ல உன் ஸ்கூல் வண்டீல வீட்டுக்கு வந்திடுவேன். ரெண்டு ப்ரின்ஸிங்களும் சிரிப்பாங்க. அதுவும் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகி வேலைக்கு முழுக்குப் போட்டு உன் முதுகில சாஞ்சு அழுதிட்டே பைக்ல வந்தப்போ எப்பவும் நான் பேசறத கேட்டுட்டு வர்ற நீ அன்னிக்கு நிறைய்ய பேசிட்டு வந்தே.

ஸ்வஸ்திகம் + திரிசூலம் ஒரு சைடும், மகாலக்‌ஷ்மி மறு சைடும் போட்ட டாலர் ஒண்ண குடுத்துட்டு நான் கூட இல்லேன்னாலும் உன் பாதுகாப்புக்கு என்னோட சின்ன கல்யாணப் பரிசுன்னு சொன்னே. இப்பவும் அது எனக்கு பாதுகாப்பாய். ஊர விட்டு நான் புறப்படும்போது உன் தோளக் கட்டிக்கிட்டு அழுதப்போ சரிடி.. சரிடி.. அழாத சந்தோஷமா போய் வான்னு சொல்லி என்ன சீட்ல உக்கார வச்சிட்டு ஜன்னல் வழியா அடிக்கடி நீ எட்டிப் பாத்தது வார்த்தைகள் சொல்லாத உன் வேதனைய சொல்லிச்சுது. கண்ணீர்க் கண்களுக்குள்ள மறைஞ்சு போன உன் உருவம்.. இப்பவும் என் மனசில இருக்கு. அப்போ புரிஞ்சுதுடா உன் முழுமையான பாசம். அதுக்கப்புறம் எதோ ஒண்ணு நமக்குள்ள விலகினா மாதிரி நீ என்கிட்டயும் மனசு விட்டு பேச ஆரம்பிச்சே. நண்பனா, அண்ணனா சமயத்துக்கு ஏற்ப. அது பிரிவு தந்த பாசம் கிடையாது. நமக்கு நம்மை புரிய வைக்க கிடைச்ச சந்தர்ப்பம்.

என் கல்யாணத்துக்கு நீயும், அக்கா கல்யாணத்துக்கு அண்ணனும் மாப்பிள்ளைத் தோழனா இருக்கணும்கிர எங்க ஆசை எனக்கு மட்டும் நிறைவேறலேன்னாலும் உன் கல்யாணத்துக்கு நான் தோழியா மட்டுமில்லாம ஒரு வகையில காரணமாயும். சிரிக்கிறியா.. அந்த கதைய ஒரு தனி இடுகையா போடறேன் பாரு.

என்னவர் மேல உனக்கு இருக்கிற மரியாதை. உங்களுக்குள்ள இருக்கிற நட்பும் உறவும் கலந்த ஒரு பாசம். எப்போ ஃபோன் பண்ணாலும் என்னடியப்பா.. என்ன செய்றே.. அத்தான் எப்டி இருக்கார்னுதான் உன் பேச்சு தொடங்கும். பசங்களயும் அத்தானையும் கவனமா பாத்துக்கோன்னு முடியும். நீங்கல்லாம் உயிர் பிழைச்சு வருவீங்களாங்கிற நிலமையில கூட உன் பேச்சு மாறல.

ரெண்டாவது தடவை நாங்க ஊருக்கு வந்தப்போ அண்ணி மேல எதுக்கோ உனக்கு கோவம். அங்கவே கத்தாம உள்ள கூட்டிப்போய் டோஸ் விட்டு அனுப்பினது நீ ஒரு நல்ல கணவன்னு சொல்லிச்சு. குட்டிப் பொண்ணுங்க ரெண்டும் பண்ற அப்பா ஜபம், அதிலேம் குட்டிப் பொண்ணு உன்ன விட்டு ஒரு நாள் கூட இருக்க மாட்டாங்கிரது நீ அன்பான அப்பான்னு சொல்லிச்சு.

எல்லாத்துக்கும் மேல அண்ணா, அண்ணி, பசங்களுக்கு நீ செஞ்ச, செய்றத்துக்கெல்லாம் உன் காலத் தொட்டு கும்பிடணும்டா. எனக்கான அத்தனை ஜென்மத்துக்கும் உனக்கு நான் தங்கையா பிறக்கிற குடுப்பினைய குடுக்க சொல்லி என் பிள்ளையார தினமும் வேண்டிக்கிறேன்.

உனக்கு எதாவது ஒரு நல்லது நடக்கணும்னா ரொம்ப அலைய வச்சு, கடைசீல நடக்காதோன்னு நினைக்கும்போது தான் அது கை கூடும். இதில உனக்கு வருத்தம் இருந்தாலும் உன் முயற்சிய விடாம போராடறே பாரு.. எங்க எல்லாருக்கும் ரொம்ப பெருமையா இருக்கும்.

இன்னைக்கு எங்க எல்லார் மனசிலேம் இருக்கிற சந்தோஷம் என்னைக்கும் நிலைச்சிருக்கணும். நீ என்னைக்கும் தீர்க்காயுசோட சந்தோஷமா அண்ணி, பசங்க கூட வாழணும். ஹாப்பி பர்த்டேடா ரஜி..

பி.கு – சித்தி பொண்ணு உன்னய விஷால் மாதிரி இருக்கேன்னு சொன்னதா செய்தி வந்துதே.. சிக்கிட்டேடா சின்னண்ணா..

பி.கு 2 – உனக்கு என்ன பாட்டு பிடிக்கும்னு தெரீலடா. ஆனா இப்போ உன் காலர் ஐடி புலி உறுமுது போடலாம்னா அதிலேம் ஒரு சின்ன சிக்கல். வீடியோ க்ளிப்பிங் போட ஹெல்ப் பண்ண வேண்டிய ஃப்ரெண்டு கொஞ்சம் பிசியா இருக்கு.. அது வந்ததும் போடறேன். ஓக்கேவா.. கோச்சுக்காத..

02 February, 2010

சாலையில போறவங்கள காப்பாத்தலாம்.

சின்ன அம்மிணி ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு தொடர்பதிவுக்கு என்ன கூப்டிருந்தாங்க. அவங்க மறந்திருப்பாங்க. நானும் அப்டியே விட்டுடலாம்னு நினைச்சேன். ஆனா..

நாம எப்பவுமே விழிப்பா இருக்கணும். விழிப்புணர்வு வாரத்தில மட்டும் விழிப்பா இருந்திட்டு அப்புறமா தூங்கிட்டே ட்ரைவ் பண்ணக் கூடாதில்லையா. இப்டி ஒரு எண்ணம் எனக்குள்ள வந்ததோட விளைவுதான்.. அதே அதே.. புரிஞ்சுக்கிட்டீங்களே.. சமத்து.. அது மட்டுமில்லாம இங்க விண்டர்ல நாம விழிவிழிப்பா இருக்கணும்ங்க. வெளிநாடு வாழ் என் வாசகர்கள மனதில் கொண்டு நான் இந்த சாலைப் பாதுகாப்பு தொடர தொடர நினைச்சேன்னும் சொல்லலாம்.

நான் ட்ரைவிங் லைசன்ஸ் எடுத்த கதைய நானே தனிய்யா.. ஒரு தொடர் பதிவு போடக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கிறதால இந்த தொடர் பதிவில அது பத்தி சொல்லல. இப்போ என் கிட்ட லைசன்ஸ் இருக்குங்கிறத மனசில வச்சிக்கிட்டு வாங்க விழிப்புணர்வ வளத்துக்கலாம்.

இங்க இப்போ அத்தனை தொடர்பாடல் சாதனங்களும் கூவிக்கிட்டு இருக்கிறது..

*வளைவுகள்ள ஸ்பீடா போகாதீங்க.

*ஸிக்னல்ல நிக்கும்போதும், போம்போதும் நிதானமா போங்க.

*Round about ல சுத்தும்போது முடிஞ்ச அளவுக்கு ஸ்லோவா போங்க.

இதோட தினமும் என் அம்மாவும், அப்பப்போ என் கண்ணனும் வேற அட்வைசுறாங்க, பாத்துப் போ, கவனமாப் போன்னு. ஆனா ஒண்ணுங்க ஸ்னோல ஸ்லிப்பாச்சுன்னு வச்சுக்குங்க.. அப்புறம் எதுவுமே நம்ம கைல இல்ல. சர்ர்ர்னு போயி முட்டிக்க வேண்டியதுதான். நம்மளுக்கு டேமேஜ்னா பரவால்ல. நம்மளால யாருக்கும் இல்ல எதுக்கும் எதுவும் ஆயிடக் கூடாது. இது அனைத்து ஜீவராசிகளுக்கும், அனைத்து சக்கர வாகனங்களுக்குமான குளிர் காலப் பொது நியதி.

இதில இந்த சைக்கிள்காரங்க பண்ற அலப்பர இருக்கே.. சைக்கிள் பாதை தனியா இருந்தாலும் அவங்க பாட்டுக்கு ரோட்ல இறங்கிடுவாங்க. அப்புறமென்ன? அவங்களுக்கும் நாலு சக்கர வாகனத்துக்கு இருக்கிர அத்தனை ரைட்ஸும் இருக்கு. அவங்க எப்போ கொஞ்சம் சைடுக்கு போவாங்க நாம ஓவர் டேக் பண்ணலாம்னு பொறுமையா பின்னாடியே போணும்.

அடுத்து நடந்து போறவங்க. நேரா போய்ட்டேடேடே.. இருப்பாங்க.  நடைபாதைய இவங்க கடக்கப் போறதில்லன்னு நினைக்குறத்துக்குள்ள குபீர்னு குதிச்சு கடக்க ஆரம்பிச்சிடுவாங்க. சடனா ப்ரேக்க போட வேண்டியது நம்ம பாடு. ரோடே அவங்களுக்காக போடப்பட்டதாவும் நாங்க என்னமோ தெரியாத்தனமா வண்டிய ஓட்டிட்டுப் போறா மாதிரியும் தெனாவட்டா போய்ட்டே இருப்பாங்க. நாமதான் ஓரமா ஒதுங்கி போணும்.

தூக்கக் கலக்கத்தோட ட்ரைவிங் வேண்டாம். அதிலயும் லாங் ட்ரைவ் போறீங்கன்னா குட்டியா ஒரு தூக்கத்த போட்டுட்டு பயணத்த தொடருங்க.

ஓவர் டேக் பண்ணும்போது ரொம்ப கவனமா இருக்கணும். விண்டர்ல வேண்டவே வேண்டாம். ரோட்ல சேர்ந்திருக்கிர ஸ்னோ நீங்க லைன் சேஞ்ச் பண்ணும்போது நிச்சயம் வழுக்கும்.

வண்டி மேல சேர்ந்திருக்கிர ஸ்னோவ தட்டி க்ளீன் பண்ணாம ஓட்டக் கூடாது. ட்ரைவர் தன் முன்னாடி மட்டும் தட்டி விட்டுட்டு உத்து பாத்துக் கிட்டே போவாங்க. அவங்க வண்டி மேல இருக்கிர ஸ்னோ அப்டியே காத்தில பறந்து பின்னாடி போற வண்டி மேல கொட்டி.. இந்த ட்ரைவர் கண்ண மறைச்சு.. அப்புறமென்ன? அது மட்டுமில்லாம பார்க்கிங் ஏரியாவையே ஒரு மினி குளமா ஆக்கிடும் கரைஞ்சு போற ஸ்னோ.

இங்க அனாவசியமா ஹாரன் அடிக்க கூடாது. ஹெட் லைட் போட கூடாது. இவங்க சும்மா இருப்பாங்களா? எதிர்க்க போற வண்டிக்காரன் தெரிஞ்சவனா இருந்திட்டா ஹாய் சொல்றத்துக்கு உடனவே ஹாரன், இல்ல ஹெட்லைட். இதனால சமயத்தில என்னமோ நாமத்தான் தப்பா ஓட்டரோமோன்னு பயப்பட வேண்டியதிருக்கு. அதுக்கும் மேல ஹாரன் கேட்டதும் ஸிக்னல்ல வெயிட் பண்ரவங்க க்ரீன் விழுந்திடுச்சின்னுதான் இவங்க ஸிக்னல் குடுக்கிரதா நினைச்சு [ஏன்னா அது எங்காவது வாய் பாத்துட்டு இருக்கும், இல்ல ஃபோன்ல பேசிட்டு இருக்கும்] ரெட்லவே வண்டிய எடுத்து.. வேற என்ன?

கிவ் வேல யாராவது விட்டு குடுக்கிராங்கன்னா, கிடைச்சது வழின்னு உடன போய்டாதீங்க. ஒண்ணு அவங்க ஹெட் லைட் போட்டு காமிக்கணும், எடுலே உனக்காகத்தான் வெயிட் பண்றேன்னு கைய காமிக்கணும் இல்ல அவங்க ஸ்லோ பண்ணணும். சிலர் இதுக்கெல்லாம் கவலைப்பட மாட்டாங்க. அவங்க பாட்டுக்கு போய்ட்டே இருப்பாங்க. ப்ரேக்க உதைச்சு ஆக்ஸிடண்ட் ஆகாம பாத்துக்கிரது அடுத்தவங்க பாடு.

என் கண்ணாளன் எனக்கு எப்பவுமே சொல்ரத்த இப்போ நான் உங்களுக்கு சொல்ரேங்க. நீ இன்னைக்குத்தான் முத முதலா ட்ரைவ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன்னு நினைச்சுக்கிட்டு கார் கீய கைல எடுத்துக்கோ. அப்போதான் எப்பவும் கவனம் இருக்கும்பார். சரிதானே அவர் சொன்னது?

இவ்ளோ கஷ்டம் எதுக்குங்க.. முடியலையா? தைரியம் இல்லையா? பயமா இருக்கா? பஸ்ல போய்டுங்க. உங்கள மாதிரித்தான் என்ன ஒருத்தங்க கேட்டாங்க. அது மட்டும் ஸ்லிப்பாகாதான்னு. பேஷா ஆகும். அது பஸ் ட்ரைவரோட பிரச்சனை. நான் ஏன் கவலைப்படணும்? இதுவும் சரிதானே?

நீங்க இந்த ஊருக்கு வரும்போது கீழ இருக்கிரத கவனமா பாத்துட்டு வாங்க. கணிசமான விபத்துக்களுக்கு டூரிஸ்டும் ஒரு காரணம்.

அப்புறம் ஸீட் பெல்ட் போடுன்னா யாரும் கேக்கலைன்னுட்டு இப்டி அங்கங்க பானர் வச்சாங்க. வித்யாசமா இருந்துது. அத வெறும் பெல்ட்னு நினைக்காதப்பா.. உனக்கு வேண்டியவங்க அணைச்சுக்கிராங்கன்னு   நினைச்சுக்கோன்னு சொல்றா மாதிரி.

என்னதான் இதுக்கு ஃபைன் அதுக்கு ஃபைன்னு போட்டாலும் பணத்த கட்டிட்டு அடுத்த நிமிஷம் ஒன் வேல போறவங்கள என்ன பண்ணலாம்?? என் பதிவோட லிங்க் குடுத்திடலாமா??

இந்த தொடர் பதிவோட முக்கியத்துவம் கருதி இத்தோட விடாம இன்னும் ஐந்து பேர தொடர அழைக்கிறேன். உங்க பங்குக்கு  நீங்களும் கொஞ்சம் விழிப்புணர்வ வளர்த்திடுங்க நண்பர்களே..

1. குருவே வாங்க நீங்கதான் ஃபர்ஸ்ட்டு. சாளரம் கார்க்கி.

2. உ.பி பிரியமுடன்......வசந்த்

3. சிங்கப்பூர் அண்ணா பித்தனின் வாக்கு சுதாகர்.

4. டெல்லித் தங்கை விக்னேஷ்வரி

5. உங்கள இத தொடர சொல்ரது ரொம்ப பொருத்தமா இருக்கும்னு நினைக்கிறேன் புலவன் புலிகேசி – வழிப்போக்கன். உங்க சமூக சேவை பத்தி படிச்சிட்டு வரதால.

அப்டியே நீங்களும் எத்தனை பேர வேணா கூப்டுங்க. சின்ன அம்மிணி எந்த ரூல்சும் போடலை. வரட்டுங்களா..