Pages

  • RSS

14 November, 2010

ஆரம்பிச்சிட்டாய்ங்கப்பா!!

அப்பாவோடு பேச வேண்டுமென்று நினைத்துக் கொண்டு கால் பண்ணினால் அப்பாவே ஹலோவினார்.
'ஆரம்பிச்சிட்டாய்ங்கப்பா' என்றேன்.
'என்ன மோனை (செல்லம், குட்டிம்மா, கண்ணு,தங்கம்னு அர்த்தம் இந்த மோனைக்கு) ஆர் என்ன ஆரம்பிச்சது??'
என்றவரிடம் தொடர்ந்து சொன்னதை டைப்புறேன் படிங்க. அம்மாச்சி ஆஃபீசுக்கு கால் பண்ணி சொன்னாங்க.
'அம்மா அப்பாவுக்கு டீ போட்டு குடுத்தேம்மா. நல்லா இருக்குன்னு சொன்னார். வீட்டுக்கு வந்ததும் உங்களுக்கும் போட்டுத் தரேன். சரியா?'
சொன்னது போல் வீட்டுக்குள் நுழைந்ததும் டீ தரப்பட்டது. பாவம் இந்த அப்பாக்கள். மகள் என்ன செய்து கொடுத்தாலும் அமிர்தம் ரேஞ்சுக்கு சுவைப்பாங்க. அம்முவின் மனம் நோகாம நானும் அமிர்தமே என்று சொல்லி விட்டு எந்த அளவில் பால், தண்ணீர், எத்தனை டீ பாக்கெட் சேர்த்து ஒரு கப் டீ செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தேன். அந்த சந்தோஷம்.. அப்பா வாயால் 'பாரு என் பொண்ணை.. என்ன டேஸ்ட்டா செஞ்சிருக்கான்னு' என்ற பாராட்டோடு, முதுகில் ஒரு வருடலும் கிடைக்கும் அந்த சந்தோஷம்.. அனுபவித்த பெண்களுக்குப் புரியும்.

அப்பா இங்கு வந்து நின்ற ஒன்பது மாதங்களில் அப்பா என்று நான் கூப்பிட்டால் என்னடி, என்ன மோனை என்று இரண்டு பதில் வரும். எங்கள் வழக்கத்தில் கணவனை இஞ்சருங்கோ என்பார்கள். அம்மா 'இஞ்சேங்கோ' என்பார். நானும் புதிதில் அப்படித்தான் சொன்னேன். அடுத்தவரிடம் சொல்லும்போது 'இவர்'. நண்பர்கள் கிண்டல் பண்ணுவாங்க. இவர் கிட்ட இதை குடுங்க என்றால் இவர்னா எவர்? இங்க நிறைய இவர் இருக்காங்களே அப்டிம்பாங்க. என் இவர் எவரோ அவர் கிட்ட குடுங்க என்று சொல்வேன். பிள்ளைகளிடம் சொல்வோம் இல்லையா அப்பாவை கூப்பிடுங்க, அப்பா கிட்ட இதை குடுங்க, அப்பா எங்க என்பதாய். அது அப்படியே டைரக்டாக நானே சொல்வதாயும் ஆகி விட்டது. ஒரு வகையில் என் கண்ணாளன் எனக்கு தந்தையுமானவனாய் இருப்பதை இது குறிப்பதாகிறது.


far k இந்த வயதிலும் ஓடி ஓடி உழைக்கும் அப்பா. இரண்டாவது தடவையும் ட்ரைவிங் லைசன்ஸ் ப்ராக்டிக்கல் டெஸ்டில் ஃபெயிலான போது சொன்னார். 'இது எனக்கு சரி வராது மோனை. இனிமே சும்மா காசை கரி ஆக்காம விடப்போறன். என்ன.. அம்மா சந்தோஷப்பட்டிருப்பா பாசாகி இருந்தா' தெரியும். அம்மாவுக்காகவே அப்பா இந்த முயற்சியில் இறங்கினார். மூன்றாவது தடவை எங்களுக்கும் சொல்லாமல் போய் 'மோனை நான் பாசாயிற்றன்' என்று ஆஃபீசுக்கு கால் பண்ணி சொன்னார். தீபாவளியன்று அம்மாவோடு போய் ஒரு வண்டி வாங்கி ஆயிற்று. ஊர் சுத்தி வந்தாச்சா வண்டிக்காரம்மா என்று நான் கேட்டபோது அம்மா முகத்தில் அத்தனை சந்தோஷமும், பெருமிதமும். முன்னெல்லாம் பஸ்ஸில் அலைவதற்குப் பயந்து வெளியே கிளம்பாதவர் இப்போது நினைத்த இடத்துக்கு அப்பாவோடு காரில் போய் வருகின்றார்.


அம்மாவுக்கு அவர் இப்படி செய்தது தவறு என்று எங்களால் சில விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டதால் வந்த அக்கறை இல்லை இது. அப்பா எப்போதும் இப்படித்தான். அக்காச்சி குட்டீசோடு கம்பியூட்டருக்கு சிக்கலாகி விடுகிறதென்று அம்மா ஊருக்கு போய் வந்த போது லாப் டாப் ஒன்று பரிசாகக் கொடுத்தார். செக்கியூரிட்டி கார்டாக வேலை. இரவு பகலென்று ஓட்டம். முதலில் அவருக்கு கிடைத்த யூனிஃபார்ம் கனேடிய போலீஸ் உடை மாதிரியாக இருந்ததால் கருண் என் அப்புச்சி ஒரு போலீசாக்கும் என்று வகுப்பில் தம்பட்டம் அடிப்பார். இப்போது Private Security and Investigative Services பரீட்சையில் பாஸாகி, லைசன்ஸ் உள்ள செக்கியூரிட்டி கார்ட் ஆகி விட்டார். அதற்கு புதிதாக ஒரு யூனிஃபார்ம் கிடைத்திருக்கிறதென்று ஸ்கைப்பில் காட்டினார். இப்படியான தருணங்களில் அப்பாவும் குழந்தைதான்.


ஸ்கைப்பில் பேசிக்கொண்டிருக்கும்போது 'சரியப்பா.. இனி நான் கட் பண்றன். சமைக்க வேணும், படுக்கப் போறன் நல்லா நேரம் போச்சு' என்று உரிய காரணம் சொல்வேன். 'இரு மோனை அம்மா கதைக்க வேணுமெண்டவ.. இந்தா உடன கூப்பிடுறன்' என்றுவிட்டு 'இஞ்சரப்பா.. எங்க நிக்கிறாய்.. சின்னது ஸ்கைப்பில.. கதைக்கோணுமெண்டாய்.. ஓடியா.. அவள் படுக்கப் போறாளாம்.. பன்ரெண்டு மணி ஆகுது அங்கை.. கெதியா வா' என்றபடி லாப் டாப்போடு ஓடுவார் அம்மா இருக்கும் இடத்துக்கு.

இது தான் என் அப்பா. அப்பாவுக்கு கத்திப் பேசத் தெரியாது. அப்பா சண்டை போட்டு நான் இது வரை பார்த்ததில்லை. இது வரை அம்மாவை ’டீ’ என்று சொல்லி நான் கேட்டதில்லை. அம்மாவோடு பேசும்போது எப்போதும் 'ப்பா' சேர்த்துக் கொள்வார். 'மோனை.. என்ன பிள்ளை நீ' என்பாரே தவிர கோவத்தில் ஒரு தடவை கூட வாடா இங்க, வாடி இங்கன்னு எங்களை சொன்னதில்லை. அப்பாவுக்கும் கோவம் வரும். இமை சுருக்கிய பார்வையோடான ஒரு தலையசைப்பில் ஓரிரு நிமிடங்களுக்குள் அது அடக்கி ஆளப்படும். இல்லையென்றால் அப்படி சொல்லப் போறேன், இப்படி செய்யப் போறேன்னு எங்களிடம் சொல்லுவார். அடுத்த நாள் 'இல்லை மோனை.. இரவிரவா யோசிச்சன். இப்படி சொல்லி செய்து என்ன வரப்போது இப்ப.. பேசாம விடுவம்.. என்ன சொல்லுறாய் நீ..' என்று சிரிக்கும் அப்பாவா நேற்று அத்தனை சொன்னார் என்றிருக்கும். என் அப்பாவுக்கு பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுக்காத கடவுள் பொறுமையை போதும் போதுமென்று கொடுத்திருக்கிறார்.

far அப்பா.. லவ்யூ அப்பா..

என்றும் எப்போதும்

உங்கள் மனநிம்மதி வேண்டி

வேண்டுகிறேன் என் அப்பனை

பிள்ளையாரப்பா

அப்பாவோடு இரு!!

எதுக்கு இப்போ திடீரென்று அப்பா புகழ் என்று கேட்காதீர்கள். இந்த பத்தி அதற்குத்தான். நார்வேயில், நவம்பர் மாதத்தின் இரண்டாவது ஞாயிறு, தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து இந்த வழக்கம் இங்கு கொண்டு வரப்பட்டதாம். இன்றைய நாளில் கட்டிலுக்கே ப்ரேக்ஃபாஸ்டை கொண்டுபோய் கொடுத்தல், பரிசு, வாழ்த்து என அப்பாவை சந்தோஷப்படுத்தலாமாம். என் பிள்ளைகளின் அப்பாவான என் அன்புக் கண்ணாளனுக்கு நாங்கள் மூன்றாவது சந்தோஷத்தையே கொடுக்கவுள்ளோம்.

உலகத்தில் உள்ள எல்லா அப்பாக்களுக்கும் என் வாழ்த்துக்கள்!!

வர்ட்டா..

29 நல்லவங்க படிச்சாங்களாம்:

எல் கே said...

உங்கள் கண்ணாளனுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் சுசி

R. Gopi said...

ஊருக்குக் கிளம்பும் அவசரம். ஊருக்குப் போய்ப் பின்னூட்ட்டம் போடுகிறேன்.

Anonymous said...

இனியதொரு நிகழ்வை பகிர்வாக்கி அப்பாவின் அன்பை நினைவு கூர்ந்தது நெகிழ்ச்சி சுசி..அப்பாக்களுக்கு நாம் வாழ்த்து சொல்ல முடியாது அதனால் எனக்கு தந்தையாகும் வயதில் இருக்கும் அனைத்து தந்தையர்களுக்கும் அன்பார்ந்த வணக்கம்

கவி அழகன் said...

அருமையாக உள்ளது

vinu said...

2000-01-01 saturday afternoon 2.30, i lost my father in an accident, after that i almost forgot to cry; i hate cry; i won't ccry; i hate people who makes me cry; including my dad; recently a film which i hated the most was "Naan magan alla";[now you might understand why after such a long period i post a review about that movie] with this post i include yourself too in the list of people whom i hates[simple reason behind this is jelous] the most; @ last you made me cry now; so i hate you!


Dissky: please don't post this unless you really want?

Anonymous said...

ரொம்ப நெகிழ்வா இருக்கு சுசி!
அப்பாக்கள் தின வாழ்த்துக்களும்.. :)

'பரிவை' சே.குமார் said...

உங்கள் அன்புத் தந்தைக்கு எனது வாழ்த்துக்கள் அக்கா.

r.v.saravanan said...

என் வாழ்த்துக்கள்!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

எல்லா அப்பாக்களுக்கும் என் வாழ்த்துக்கள்!!

கோபிநாத் said...

கலக்கல் பதிவு...;)

அனைத்து அப்பாஸ்க்கும் அப்பாகள் தின்ன வாழ்த்துக்கள் ;)

Madumitha said...

அனைவருக்கும் தந்தையர் தின
வாழ்த்துக்கள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அப்பாக்களுக்கு வாழ்த்துக்கள்!


ஆர்.ஆர்.ஆர்.

கார்க்கிபவா said...

சூப்பர்..

வினு, சியர்ஸ் சகா..

சீமான்கனி said...

[ma]அப்பா.... யப்பா...பப்பப்பா சூப்பர் பா அனைத்து அப்பாக்களுக்கும் அப்பாதின வாழ்த்துகள்...[/ma]

அருண் பிரசாத் said...

ஹி ஹி ஹி... டீ போடுறது எப்படினு நம்ம கடைக்கு வந்து கத்துக்கோங்க சுசி...

அனைத்து தந்தையர்களுக்கும் (நான் உட்பட) தந்தையர்தின வாழ்த்துக்கள்....

லேட்டா சொன்னா என்ன? எல்லா நாளும் தந்தையர்தினம் தானே

மாணவன் said...

அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்

அனைத்து தந்தையர்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்

நன்றி
நட்புடன்
மாணவன்

R.பூபாலன் said...

பாதிப் பேர்க்கு அப்பாதான் ரோல்மாடலா இருப்பாங்க....
எனக்கு என்னோட அப்பாதான் ரோல்மாடல்...
தந்தையர் தினத்தில்,
அனைத்து தந்தையர்களையும் வாழ்த்தி வணங்குகிறேன்....

R. Gopi said...

நல்ல பதிவு சுசி.

தந்தையர் தின வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

நெகிழ்வான பதிவு.

//மூன்றாவது சந்தோஷத்தையே //

வாழ்த்தோடு சரியா:))?

சுசி said...

நன்றி கார்த்திக்.

--

சரிங்க கோபி.

--

தமிழ்.. //அன்பார்ந்த வணக்கம்// :))))

சுசி said...

நன்றி யாதவன்.

--

வினு.. சாரி.. தவிர வேற சொல்ல தெரியல.. சாரி..

--

நன்றி பாலாஜி.

சுசி said...

ரொம்ப நன்றி பாலாஜி.

--

நன்றி சரவணன்.

--

நன்றி வெறும்பய.

சுசி said...

நல்லதா ரெண்டு வார்த்தை கேக்க.. ரைட்டு கோப்ஸ்!!

--

நன்றி மதுமிதா.

--

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராமமூர்த்தி.

சுசி said...

நன்றி கார்க்கி. வினு.. கார்க்கி கிட்ட பேசுங்க.

--

நன்றி கனி :))

--

கரெக்டா சொன்னிங்க அருண். எல்லா நாளும் தந்தையர் தினமே..
ஹிஹிஹி.. கத்துக்கிட்டா போச்சு.

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி மாணவன்.

--

சரியா சொல்லி இருக்கிங்க பூபாலன்.

--

அய்.. கோபி ஊருக்கு போய்ட்டார்.. நன்றி கோபி.

சுசி said...

இல்லை அக்கா.. அம்மாச்சி அசத்திட்டாங்க.. அப்புறம் சொல்றேன்.

பித்தனின் வாக்கு said...

எங்க அப்பா மாதிரியே, நிறைய விஷயங்களில் நாம் சேம் பிளட்.

எப்படி உள்ளாய், குணாளன் மாமா, சதுவும் குழந்தைகளும் நலமா?. குளிர் காலம் கவனமாக பார்த்துக் கொள்ளவும்.

Unknown said...

தந்தையர் தின வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல வேளை என்ன எதுகைனு பேர் வைக்காம விட்டாங்க (நல்லா பேரு வைக்கிறாய்ங்கப்பா)

//ஒரு வகையில் என் கண்ணாளன் எனக்கு தந்தையுமானவனாய் இருப்பதை இது குறிப்பதாகிறது.//

அழகான ஜோடி நீங்க கண்டிப்பா சுத்தி போடுங்க சுசி ...

//மூன்றாவது தடவை எங்களுக்கும் சொல்லாமல் போய் 'மோனை நான் பாசாயிற்றன்' என்று ஆஃபீசுக்கு கால் பண்ணி சொன்னார்//

இப்படி சொல்றதுலதான் எவ்ளோ ஆனந்தம் இருக்கு கொடுப்பினை வேணும் ..

//என் பிள்ளைகளின் அப்பாவான என் அன்புக் கண்ணாளனுக்கு நாங்கள் மூன்றாவது சந்தோஷத்தையே கொடுக்கவுள்ளோம்.//

தந்தையுமானவனுக்கான அர்த்தம் விளங்கியது..