Pages

  • RSS

27 November, 2012

வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே..

என்னவோ ஒரு எரிச்சல்.. கோவம்.. தேவை இல்லாத பதட்டம்.. அது பயமோன்னு கூட சமயத்தில டவுட்டா இருக்கும்.. இத்தனூண்டு விஷயத்துக்குக் கூட கத்தணும் போல.. எதுவுமே பேசாம இருந்தா தேவலை போல.. ஒருவித ஆற்றாமை அழுத்த..

இப்டியெல்லாம் எனக்கு மட்டும் தான் இருந்ததுன்னு நினைச்சேன்.. நேத்து அக்காச்சிட்ட பேசினப்ப அவளுக்கும் இதே போல இருந்ததா சொன்னா.. எல்லாத்துக்கும் விடை தலைவரின் பிறந்தநாளும் தொடர்ந்து வந்த மாவீரர் தினமும்னு புரிஞ்சது.. கடகடன்னு நடந்து முடிஞ்ச அத்தனையையும் மீட்டுப் பார்த்தோம்.. உலகம் போற்றியவர் இறப்பென்றது பலர் தூற்றும்படி ஆகி இருக்க வேணாமேன்னு இருந்திச்சு.. என்ன இருந்தாலும் எங்க தலைவர் போல இனி ஒருத்தர் எங்களுக்குக் கிடைக்கவேமாட்டார்னு உறுதியா சொல்லிக்கிட்டோம்.. அதுவரைக்கும் அலைஞ்சுட்டு இருந்த மனசு கொஞ்சம் அமைதியாச்சு.. ஆனாலும் சரியா தூங்கமுடியலை..

அப்படியே உறக்கமும் விழிப்புமா புரண்டு புரண்டு படுதிட்டிருந்தவ கடைசியா நேரம் பாத்தப்ப ரெண்டு பதினாலு.. திடீர்னு கேட்ட சத்தம் மாம்சோட மொபைல்னு அடையாளம் புரிஞ்சப்ப பதைப்போட முழு விழிப்பு வந்திடிச்சு.. நேரம் நாலேகால்.. அவருக்குத் தெரிஞ்சவங்க.. புகலிடம் தேடி வந்தவங்க.. இலங்கைக்குத் திருப்ப அனுப்பறதுக்காக போலீஸ் கூட்டிப் போயிருக்காம்.. அப்பறம் அவங்களுக்கு வேண்டியவங்களோட பேசி விஷயம் சொன்னார்.. அஞ்சு மணி போல தூங்க ட்ரை பண்ணா தூக்கத்துக்குப் பதில் கண் எரிச்சல்ல கண்ணீர்தான் வந்துது.. கொஞ்ச நேரம் அவங்களப் பத்திப் பேசிட்டு அப்பறம் மௌனமா அலாரம் வரைக்கும் காத்திருந்தோம்..

இன்றும் மாவீரர் அஞ்சலி நிகழ்வுல கலந்துக்கலை.. அவர போறீங்களான்னு கேட்டேன்.. 'இல்லை.. வீட்ல நீ மெழுகுவத்தி ஏத்துவல்ல அது போதும்.. நான் போலை'ன்னார்.. ஆறுமணிக்கு மெழுகுவத்தி ஏத்தி வச்சிட்டு ஈழத்துக்காக உயிர் இழந்த அத்தனை பேருக்குமாக வேண்டிக்கிட்டேன்.. கூடவே இனியாவது எம்மை நிம்மதியாக வாழ வை இறைவான்னு கேக்கவும் தவறலை..

ஈழம்னு இல்லை.. இலங்கைன்னு இல்லை.. எங்கல்லாம் போரும் அழிவும் இருந்ததோ.. இருக்குதோ.. அந்த மக்களுக்காக.. அவங்க நிம்மதிக்காக.. அவங்க வாழ்க்கைக்காக.. ஒரே ஒரு நிமிடம்.. மனதார அஞ்சலி செய்யுங்க.. நம்மால முடிஞ்சதா இருக்கட்டும்..

அப்படியே இந்தப் பாடலை எல்லாருக்குமா கேக்கணும்னு தோணிச்சு.. ஏஆர் ரகுமானின் இசையிலும் குரலிலும் அற்புதமான பாடல்.. 2002இல் வெளிவந்த கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில.. வைரமுத்துவின் வரிகள்ல.. கேட்டு முடிச்சதும் ஒரு ஏக்கப் பெருமூச்சு இல்லேன்னா ஒரு பெரிய மூச்சு வந்திச்சுன்னா.. நீங்க என் இனம்..
--

வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறுமுதல் சிரிப்பில்..

காற்றின் பேரிசையும் மழை பாடும் பாடல்களும்
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ
கோடிக் கீர்த்தனமும் கவி கோர்த்த வார்த்தைகளும்
துளிக் கண்ணீர் போல் அர்த்தம் தருமோ..

எங்கு சிறுகுழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாயோ வெள்ளைக் குயிலே..

இங்க இசைப்புயல் வரும் வீடியோ இருக்கு..

இங்க படத்தில் வரும் காட்சி இருக்கு..

இங்க முழுமையான பாடல் இருக்கு..








26 August, 2012

பழையன பகிர்தல்..

இப்பொழுதெல்லாம் பதிவு எழுதுவதற்கான பொறுமையும், மனமும் இல்லாமலே போய்விட்டது. எதுவாக இருந்தாலும் கூகிள் ப்ளஸ்ஸில் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வது மிக இலகுவாக இருக்கிறது. இல்லாத மூளையை உருட்டிப் பிரட்டி அதே விஷயத்தை 140 எழுத்துகளுக்குள் அடக்கி ட்விட்டரில் பகிர்ந்து கொள்வது மிகப் பிடித்திருக்கிறது. அப்படியே அங்கே பகிரப்படுபவற்றை படித்து கருத்துகளைச் சொல்வதில் நேரம் போய்விடுவதால் பதிவுகளை படிப்பதையும் குறைத்துவிட்டேன். முன் போல எப்படியாவது வாரம் இரண்டு இடுகைகளை எழுதி விட வேண்டுமென்று போன வாரம் முடிவு எடுத்தேன். அதை செயலாக்குவது முயற்கொம்பாகவே இருக்கிறது.

விருப்பமானவர்கள் என்னை @susiguna என்ற ஐடியில் ட்விட்டரில் தொடருங்கள். அதிகமாக அவ்வப்போது கேட்கும் பாடல்களின் வரிகளையே பகிர்ந்து கொள்வேன். அதனால் தைரியமாகத் தொடரலாம். நானும் தப்பித்துக்கொள்வேன். ட்விட்டரிலும் கூகிள் ப்ளஸ்ஸிலுமாய் அவ்வப்போது பகிர்ந்து கொள்வதில் பிடித்தவற்றில் சில இங்கேயும்.

--

சொன்ன சொல்லின் விலை.. கொடுக்கக் கொடுக்கத் தீரவில்லை.. தீர்வதாய் இல்லை..

--

பிறந்தநாள் வாழ்த்துகளின் போது சந்தோஷமாய் சிரிப்பவர்களை பார்த்தால் குட்டியாய் ஒரு வலி எட்டிப் பார்க்கிறது..

--

டைப்பும்போது கவனிப்பதில்லை
கவனிக்கும்போது எண்டர் தட்டியிருப்போம்
# எண்டர் தட்டிய சாட்

--

சொன்ன சொல்லையும் எண்டர் தட்டிய சாட்டையும் திருப்ப வாங்க முடியாது.. இரண்டிலும் பழிவாங்கப்படும்போது அழாம இருக்க கத்துக்கணும்..

--

காதலுக்குள் நட்பையும் உறவையும் சேர்த்து நரகமாக்குபவனும் நண்பன் தான்..

--

தானாய் அமைந்தது சொந்தம்.. நானாய் அமைத்தது நட்பு..

--

கையை ஆட்டியபடி பள்ளிக்குள் செல்லும் பிள்ளையின் சிரித்த முகத்தின் முன் ட்ராபிக்கும் பார்க்கிங் அலைச்சலும் ஒன்றுமே இல்லை.. 
--
படுத்தவுடன் தூங்கும் வரத்தை சிலருக்கு மட்டும் கொடுத்தது கடவுளின் மிகப் பெரிய ஓரவஞ்சனை..
--
வெயில், மழை, ஆலங்கட்டி மழை, பனியென மாறி மாறி வரும் காலநிலையும் என்னைப் போல இன்று ஒருநிலையில் இல்லைப் போல..

--

காலையில் நான் தலைவாரும்பொழுது சது ஸ்கூலுக்கு ரெடியாகிட்டு இருந்தார்.. நான் தலைவாரிய சத்தம் அவருக்கு ஆப்பிளை கடிச்சு சாப்டுறது போல இருந்திச்சாம்.. பிள்ளைகளுக்குத் தான் எப்டிலாம் யோசிக்க முடியுது..

22 August, 2012

மழையும் மழை சார்ந்த கவலையும்..

IMG_6967குடும்ப இஸ்திரி ட்ரைவிங் லைசன்ஸ் மட்டும் எடுக்கக்கூடாது என்ற எண்ணத்தோடு விடிந்தது கடந்த ஞாயிறு காலை. சதுவுக்கு ஃபுட்பால் மேச். திருவிழா போல கூட்டம் கூட்டமாய் இல்லாவிட்டாலும் குடும்பம் குடும்பமாய் நடந்து வந்த மக்களைக் கடந்து வந்து காவலுக்கு நின்றவர் கை காட்டிய இடத்தில் பார்க் செய்தேன். நாங்கள் காரிலிருந்து இறங்கி வரவும் கோச் எங்கள் காருக்குப் பக்கத்தில் பார்க் செய்யவும் 'பாத்திங்களா நாங்க முன்னாடி வந்துட்டோம்' என்பதன் மூலம் அவர் ரெடியாக லேட்டானதற்காக நான் கடிந்து கொண்டிருக்க வேண்டியதில்லை என்பது சதுவால் சுட்டிக்காட்டப்பட்டது. 'உங்களுக்கு சுலபமா பார்க்கிங்குக்கு பெரிய இடம் கிடைச்சுதும்மா' என்றவர் தொடர்ந்து இந்தக் குறுக்கு வழி ஏறி இறங்குவது எனக்கு முடியாத காரியமென்றால் சுற்றுப் பாதையில் போகலாம் என்றார். குறுக்கு வழியைப் படம் எடுக்க மறந்துவிட்டேன். ஒரு குட்ட்ட்டி மலையை ஏறி இறங்கினோம்.

IMG_6969காலையிலே போட்டிகள் ஆரம்பித்து விட்டாலும் இவருக்கு முதல் மேச் 2 மணிக்கும் தொடர்ந்து 4:20, 5:10 என மூன்று மேச்கள். அம்மா முழு விருப்போடு வரவில்லை என்பதைப் புரிந்துகொண்டவர் போல வரவேற்பு பேனர், வந்திருந்த கூட்டம், மழை நின்ற வெதர், க்ரவுண்டின் அளவு எனப் பலதும்  பேசிக்கொண்டு வந்தார்.  விடுமுறையின் கடைசி வாரத்தில் ஃபுட்பால் ஸ்கூல் இருந்ததால் பயிற்சிவிட்டுப்போகவில்லை என்றாலும் முதல் மேச்சில் 6:2 இல் தோற்றார்கள். இந்த இரண்டு மாத காலத்துக்குள்ளேயே பிள்ளைகள் வளர்ந்திருந்தார்கள்.

IMG_6971இடைப்பட்ட நேரங்களில் அரட்டையோடு கூடவே தலைக்கு மேலே தாழப் பறந்து கொண்டிருந்த விமானங்களிடம் தவ்விய மனம் கனடாவுக்குப் பறந்து போக அதைத் தரை இறக்குவது பெரும்பாடாகிப் போனது. அன்று இங்கே ரமலான் தினம் ஆகையால் பாகிஸ்தானியர் ஒருவர் கொண்டாட்ட வேலைகள் இருப்பதால் கிளம்புவதாகவும் அவர் மகனை வீட்டில் விட முடியுமாவெனவும் கேட்டார். வாழ்த்தைச் சொல்லி நன்றியை வாங்கிக்கொண்டு பிரியாணி கிடைக்குமாவெனக் கேட்க நினைத்ததை மூட்டை கட்டி வைத்தேன். இரண்டாவது மேச் 7:2 இல் தோற்றார்கள். எதிரணி போங்காட்டம் ஆடியதில் 3 பேருக்கு அடிபட்டுவிட்டது. கூடவே தொடர் தோல்வியில் சோர்ந்துபோய்விட்டதால் கடைசி மேச்சில் எப்படி விளையாடுவார்களோ என்ற கவலைபிடித்துக்கொண்டது. நினைத்ததை விட இடைவேளை வரை நன்றாக விளையாடி 2 கோல் போட்டார்கள். பின்னர் எதிரணி 4 கோல்களைத்தாண்டியதும் தளர்ந்து போய் 7:2 இல் தோற்றார்கள்.

IMG_6981பரிசளிப்பை மிக வித்தியாசமாக ஒழுங்கு செய்திருந்தார்கள். எல்லோரையும் உட்கார வைத்து ஒரே சமயல் 6 அணிகளை அழைத்து அரங்கம் நிறைந்த கரகோஷமும், எழுந்து நின்று வரவேற்புமெனப் பிள்ளைகள் மிக மகிழ்ந்ததில் பெற்றவர் அகம் மகிழ்ந்தது. வழக்கம் போல ஒரு குட்டி ஷீல்டும், டீ ஷர்ட்டும், கிஃப்ட் வவுச்சரும் கிடைத்தது. மேலதிக பரிசாக அன்று மீதி நாள் முழுவதும் டீவி ரிமோட் பிள்ளையின் கையில் இருக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டதும் அத்தனை குஷி பிள்ளைகளுக்கு. அம்மாவை இலவச டாக்ஸியாக்கிய சதுவின் புண்ணியத்தால் கூட வந்தவர்களை வீடுகளில் விட்டுவிட்டு நாங்கள் வீடு வர எட்டு மணி ஆகிவிட்டது. வந்ததுமே அப்பாவிடமிருந்து ரிமோட் பறிமுதல் செய்யப்பட்டது.

--

சம்மர் வெகேஷன் முடிந்ததுமே விண்டரையும் ஸ்னோவையும் மனம் தானாக நினைக்கத் தொடங்கிவிடுகிறது. அதற்குத் தொடர் மழையும், இருட்டும், எப்போதாவது எட்டிப்பார்க்கும் சூர்யாவும் கூட காரணமாக இருக்கலாம். ”கிணறெல்லாம் வத்திப் போகுதம்மாச்சி.. எட்டிப் பாத்தா அடியில எப்பன் தண்ணி தெரியுது.. அனல் வெயில் தாங்கேலாதாம்.. தம்பி (என்னோட அண்ணன்) அண்ணேன்ர (என்னோட அப்பா) காணிக்குள்ள கிணறு வெட்டுறார்.. வெயில்ல பிள்ளை படுற கஸ்ரம் பாக்கக் கவலையாக்கிடக்கம்மா”ன்னு ரெண்டு நாள் முன்னாடி அத்தை சொன்னதிலிருந்து மழையைப் பார்க்க/கேட்க நேரும்போதெல்லாம் பெருமூச்சே மிஞ்சுகிறது. இதில் கொஞ்சமேனும் ஊரில் போய்ப் பொழியக்கூடாதா என ஏக்கம் எட்டிப் பார்க்கிறது.

--

பள்ளிகள்  மீண்டும் தொடங்கிவிட்டன. புதிய வகுப்பு, புதுப் புத்தகங்கள், புதிய ஆசிரியர்கள் என்று பிள்ளைகளின் பரபரப்பு எங்களையும் தொற்றிக்கொண்டது. புதுப்புத்தக வாசனையை மோந்து பார்த்த நாட்களும், போரினால் பழைய புத்தகங்களை ஏக்கத்தோடு பெற்றுக்கொண்ட நாட்களும், கொப்பி, பென்சில், பேனை வாங்கக் கூட முடியாமல் தவித்த நாட்களும் என மனம் அதன் போக்கில் கொசுவத்தி சுற்றிக்கொண்டிருக்கிறது. எனக்கு எப்போதும் அம்மாவே அட்டை போட்டு பெயர் எழுதித் தர வேண்டும். அம்மாவின் அழகான கையெழுத்து ஒரு காரணமென்றாலும் அது ஏனோ நான் அந்த வழக்கத்தைக் கடைசி வரை மாற்றவில்லை. இன்று அம்முவின் புத்தகப்பையைத் தூக்கிவிட்டுப் பயந்துவிட்டேன். எவளவு பெரிய்ய்ய்ய புத்தகங்கள். நல்லவேளை வீட்டுவேலை இல்லாத நாட்களில் பள்ளியிலேயே புத்தகங்களை வைக்க வேண்டும் என்ற நடைமுறை இங்கே இருக்கிறது.

அப்படியே தமிழ்ப்பள்ளியும் ஆரம்பித்துவிட்டது. நாங்கள் இதுவரை பாவித்து வந்த நோர்வேஜியப் பள்ளியில் திருத்த வேலைகள் தொடங்குவதால் புதிதாக வேறொரு பள்ளியில் இடம் தரப்பட்டது. அங்கே ஏகப்பட்ட கெடுபிடிகள். எங்கள் வீட்டைத் திடீரென ஒரு நாளைக்கு யாராவது பாவிக்கத் தொடங்கினால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு நிலையில் புதிய பள்ளியின் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். என்னதான் அவர்களின் நிலையை நாம் புரிந்துகொண்டாலும் ஏகப்பட்ட நிபந்தனைகளோடு அங்கே போய் வருவது எங்களுக்கும் சிரமமானதே. என் பிள்ளைகளின் ஆசிரியர்களைப் பார்த்ததுமே இந்த வருடம் வீட்டில் அதிக கவனம் எடுத்தே ஆகவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். என் வகுப்பில் பதினாறு பிள்ளைகள். முதல்நாளே இலகுவாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். என் முகராசி அப்படியென்றாலும் கூடவே நான் நினைத்தது போல இந்தப் பதினாறையும் பெற்றதில் எத்தனை பேர் நான் தான் ஆசிரியை என்றதும் கவனம் எடுக்க வேண்டுமென நினைத்தார்களோ என்றும் எண்ணத் தோன்றியது.

19 June, 2012

ரொம்ப நாள் ஆச்சு..

கன்னம் காது மீசை உதடு k l

இடம் பொருள் பாராது முத்தம் பதித்துவிட்டேன்

சாமி குற்றம் ஆகிடுமோ..

 

 

 

-----------------------------------------------------------------------------------------------------------------

134 உன் போக்கில் அலையும் மேகம் ஆகிவிட்டேன்

இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் காற்றே..

 

 

-----------------------------------------------------------------------------------------------------------------

அங்கும் இங்கும் பார்த்துவிட்டு i_kiss_you

என்னை நீ பார்க்கும் பார்வையில்

ஆயிரம் முத்தப் பூக்களை

என் உதடுகள் பூக்கின்றன..

 

-----------------------------------------------------------------------------------------------------------------

sommerfugler

 

உன் நினைவுகளையெல்லாம்

வெற்றுத் தாளில் எழுதிப் பார்த்தேன்

பட்டாம்பூச்சிகள் வந்து மொய்த்துக் கொண்டன..

 

 

-----------------------------------------------------------------------------------------------------------------

உனக்கான முத்தங்களையெல்லாம் ps

இரக்கமில்லாமல் பறித்துச் செல்கிறது

காற்று..

03 June, 2012

தீர்ந்தது சோதனை!!

பசங்களுக்கு நேற்று தமிழ்ப் பரீட்சை முடிந்தது.. இது ஐரோப்பிய ரீதியில் நடக்கும் ஆண்டிறுதிப் பொதுத் தமிழ்ப் பரீட்சை.. இனிமேல் அடுத்த அரையாண்டு பரீட்சை மார்கழியில் வரும் வரை.. அதிலும் பரீட்சைக்கு 2 நாட்கள் முன்னது வரை தமிழ் புத்தகத்துக்கு ஓய்வு.. என் ஷவுண்டும் வீட்டில் கம்மியா இருக்கும்..

என் வகுப்புக்கு பேப்பர் இலகுவா இருந்துது.. பசங்க படிச்சிட்டு வர்லை.. அங்க வந்து ங்ஙேஏஏஏஏ.. அம்மு நான் எதிர்பார்த்தத விட செஞ்சிருக்கா.. கட்டுரை தலைப்புகள் நல்லதாக இருக்கலை.. அதில எப்டியும் அவளுக்கு 10 புள்ளி புஸ்ஸ்ஸ்..

சதுவ அப்பப்ப நோட்டம் விட்டதில அவர் டீச்சருக்கு தொல்லை குடுக்காம ஷமத்தா எழுதிட்டே இருந்தார்.. போன வருஷம் டீச்சர்ட்ட ஹெல்ப் கேக்க கூடாதுன்னு சொன்னத தப்பா புரிஞ்சிட்டு.. அதாகப்பட்டது கேள்விய வாசிச்சு விட மட்டும் தான் ஹெல்ப் கேக்கணும்.. தவிர அதுக்கு அர்த்தம் கேக்க கூடாதுன்னு சொன்னத கேக்கவே கூடாதுன்னு புரிஞ்சிட்டு 3 பெரிய்ய கேள்விய செய்யாமலே வந்திட்டார்.. இந்த வருஷம் எல்லாம் புரிஞ்சதாம்.. எல்லாம் செஞ்சாராம்.. கட்டுரை 60 சொல் கேட்டதுக்கு 40 எழுதினாராம்.. நான் அத கேட்டு அப்டியே ஷாக் ஆஆஆஆஆஆஆகிட்டேன்.. அதிகபட்சம் ஒரு பத்து சொல் எழுதுவார்னு நினைச்சேன்.. அவரோட பேப்பரும் நான் கடைசி 2 நாள் சொல்லிக்குடுத்த அவ்ளோ விஷயத்தையும் உள்ளடக்கி வந்திருந்துது..

057சது பேப்பர்ல 6வது கேள்விய நான் கதிரவன் காதலித்தான்.. இதில் காதலித்தல் என்பது.. அப்டின்னு படிச்சிட்டு மிரண்டுட்டேன்.. மறுக்கா படிச்சு பாத்திட்டு மத்த டீச்சர்சுக்கும் விஷயத்தை சொன்னேன்.. அதுக்கு ஒருத்தங்க அவங்க ‘அப்படித்தான்’றத அத்தான்னு படிச்சிட்டதா சொன்னாங்க.. அப்டியே சில மோட்டுத்தனமான கேள்விகள் எதுக்கு செட் பண்ணாங்க.. இத நான் சொல்லிக்குடுக்கலை.. கேள்வி போட்டுட்டான்.. இந்த கேள்வி சிலபஸ்லயே இல்லை.. சூர்யா ரெண்டு வாரமா ஆன்லைன்ல செமயா இருக்கார்ல.. என்பதாய் பல பொது அறிவு விடயங்களையும் அலசி ஆராய்தலும் சிரிப்புமா அப்பப்ப டீச்சருங்களே இப்டி கதைச்சான்னு தமிழ் பொறுப்பாசிரியர்ட்ட திட்டும் வாங்கி சந்தோஷமாய் கழிந்தது நாள்..

மூன்றிலிருந்து பத்தாம் வகுப்பு வரையான பிள்ளைகளுக்கே சோதினை.. எங்கூர்ல பரீட்சைய இப்டித்தான் சொல்வோம்.. பொருத்தமாருக்குல்ல?? பேப்பர்ல சில சின்ன தவறுகள் இருந்ததாலயும் இட ஒழுங்கமைப்புக்கு நேரம் ஆனதாலயும் அரை மணி பிந்தியே சோதினை ஆரம்பிச்சது.. அந்த காப்ல படிங்களேன்னு சொன்னா பலர் புக்கை விட்டிட்டு வந்திருந்தாங்க.. சிலர் அப்பதான் பரபரன்னு படிச்சிட்டு இருந்தாங்க.. சிலர் ஃபங்ஷனுக்கு வந்தது போல ஜாலியா பேசிட்டு இருந்தாங்க.. சிலர் எதுவுமேஏஏஏ பேசாம தலையசைச்சா கூட படிச்சது மறந்திடும் போல அசையாம இருந்தாங்க.. சிலர் கடவுளை வேண்டிட்டு இருந்தாங்க.. சிலர் டீச்சர் படிச்சது வருமா பயமாருக்குன்னு சொல்லிட்டு இருந்தாங்க.. என்னட்ட முன்னாடி படிச்ச வேற வகுப்பு பசங்க அவங்களுக்கு டவுட் வந்தா நான் ஹெல்ப் பண்ணும்னு சொல்லி வச்சாங்க..

எல்லாம் தயாராகி பார்சல் ஓபன் பண்ணி பேப்பர்ஸ் வெளிய எடுத்ததும் எக்ஸாம் ஹால் கப்சிப்னு ஆகிப் போச்சு.. ஒவொரு பிள்ளையும் அப்டி ஒரு எதிர்பார்ப்பும் பதட்டமுமா கையில பேப்பர வாங்கினாங்க.. பேப்பர் வாங்கின நேரம் தொடக்கம் நிலமை மாறிப் போச்சு.. தலையே நிமிர்த்தாம எழுதிட்ட்ட்டே இருந்தவங்க.. எக்ஸ்ட்ரா பேப்பர் கட்டுரைக்கு கேட்டவங்க.. பேப்பரையே வெறிச்ச்ச்ச்சு பாத்திட்டு இருந்தவங்க.. அதான் நான் படிக்கலையே வந்ததுக்கு இருந்திட்டு போவம்னு இருந்தவங்க.. சைகையில ஹெல்ப் கேட்டுக்கிட்டவங்க.. இது படிச்சேன் டீச்சர் ஆனா இப்ப நினைவே வர்லன்னவங்க.. கடகடன்னு ஷமத்தா எழுதிட்டு கைய தூக்கினவங்க.. சரியான விடையின் கீழ் கோட்ட போட்டுட்டு எனக்கு இவ்ளோதான் தெரியும் டீச்சர் பேப்பர வாங்குங்கன்னவங்க.. இந்த ரெண்டுல எது டீச்சர் விடைன்னவங்க.. இப்டி இன்னும் பல ங்கவ பாக்க முடிஞ்சது..

சோதினை ஒரு வழியா முடிஞ்சாச்சு.. என்னால முடிஞ்சத பசங்களுக்கு சொல்லி குடுத்திட்டேன்.. படிச்சிட்டு வந்ததும் வராததும் அவங்க பொறுப்பு.. பாவம் பசங்க.. நோர்வேஜியன் பள்ளிகள்லயும் இப்பதான் பரீட்சை சமயம்.. இதில தமிழுக்கும் நேரம் ஒதுக்கி அவங்க படிக்கறது கொஞ்சம் கஷ்டம் இல்லையா..  இடையில ஆண்டுவிழாவுக்கான ஆயத்தம் செய்ததில சில வகுப்புகள் படிக்க முடியாம போனதால பயிற்சிகளை வகுப்பில பாக்க முடியல.. ஆனா எல்லாம் பக்காவா ஜெராக்ஸ் எடுத்து வீட்ல படிக்கும்படியா குடுத்துவிட்டேன்.. சிலர் கால் பண்ணி டவுட் கேட்டாங்க.. அம்மு இந்த தடவை ஷமத்தா சொல்லி குடுத்தப்ப படிச்சாங்க.. பாஸ்பேப்பர்ஸ்லாம் நான் ஆஃபீஸ்லருந்து வர செஞ்சு ரெடியா வச்சிருந்தாங்க.. சது சூர்யா ஆன்லைன்ல இருக்கும்போதுதானே வெளிய போய் விளையாட முடியும்ன்ற காரணம் காட்டி கொஞ்சம் அடம்பிடிச்சாலும் வெள்ளி இரவும் சனி காலையும் அவராவே ’ஏற்றுமதின்னா ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு பொருட்களை அனுப்புவது.. இது சரியாம்மா’ன்னு சொல்லியும் என்னை கேள்விகளை கேட்கச் சொல்லி அவர் பதிலியும் என ஷமத்தாக மாறினார்..

பார்க்கலாம்.. முடிவுகள் எப்டி வருதுன்னு.. ஆனா என்னவோ பெரியதொரு பாரம் குறைஞ்சது போல ஒரு உணர்வு.. எனக்கே இப்டின்னா அவங்களுக்கு எப்டி இருக்கும்.. பிள்ளையாரே..

24 April, 2012

God decides something!!

“யார் கையில் வந்து யார் சேர்ந்திருப்போம்

யார் சொல்வதிதை காட் டிசைட்ஸ் சம்திங்..”

காலேல ஒரு பாடல் பகிர்ந்து கொள்ளலாம்னு சம்திங் சம்திங் படப் பாடலை தேர்வு செஞ்சப்ப பிடித்த வரிகளா அமைஞ்ச வரிகள் இவை. எனக்கு கடவுள் நம்பிக்கை நிறையவே இருக்கறதால எங்கள் இருவருக்கும் பெற்றோர்கள் நிச்சயித்த திருமண பந்தத்துக்கு முதல் முடிவு எடுத்தது கடவுள்தான்னு பல சமயங்கள்ல இந்தப் பதின்மூன்று வருடங்கள்ல நினைச்சிருக்கேன். இதற்காகத்தான் என்னையும் இவரையும் இந்தப் பந்தம் இணைச்சதுன்னு உணர்ந்திருக்கேன். மனப்பூர்வமா உணர்ந்தேன்னு சொல்லணும்.

போன மாதம் மாம்ஸ்க்கு ஒரு வகையான இருமல் பிடிச்சது. பகல்ல எல்லாம் அளவாக இருக்கும். இரவானால் அளவே இல்லாமல் இருமும். அனைத்து நாடுகளின் பாட்டி வைத்தியங்கள் பார்த்தும் அடங்கவில்லை. சாதாரண இருமலுக்கு டாக்டரான்னு அவரிடம் என் பேச்சு எடுபடவில்லை. என்ன ஆனாலும் அடுத்த கணமே மறுபடி தூங்கிப் போய்டுறது அவர் வழக்கம். எனக்கு?? தொடர் சிவராத்திரிகளும், குறைத் தூக்கமுமா போக வண்டி ஓட்டும்போது தலைசுற்ற ஆரம்பிச்சிடிச்சு. ஒரு நாள் இரவு முடியாமல் போக எழுந்து கெஸ்ட் ரூமில் போய் படுத்துவிட்டேன். அது கூட நாலரை மணிக்குத்தான். ஆஃபீஸ்க்கு வழக்கம் போல் ஃபோன் பண்ணியவர் கேட்ட முதல் கேள்வி

‘என்னடி இப்டி பண்ணிட்டே??’

’நீங்க டாக்டர்ட்டவும் போக மாட்றிங்க என்னால தூங்காம ஆஃபீஸ் வர முடியல. அதான் எந்திரிச்சு போய்ட்டேன்`னேன்.

’டாக்டர்ட்ட அப்பாயின்மெண்ட் எடுத்திட்டேன். மவளே அவர் நான் சொன்னது போல வெறும் வைரஸ் இருமல்னு சொல்லட்டும் இருக்கு உனக்கு’ன்னார்.

என்னதான் ஆண் தான் உறுதியானவன்னு காட்டிக் கொண்டாலும் சில சின்ன விஷயங்கள்ல அப்படிக் காட்டிக்கொண்டு மட்டும்தான் இருக்கிறான். இருமல் சரியாகற வரைக்கும் நீ அம்மு ரூம்ல தூங்குன்னு சொன்னார். தனியாகத் தூங்க அவ்ளோ பயப்படற நான் திடீர்னு எழுந்து போனது அவருக்கு ஏதோ ஒரு வகையில் அதிர்ச்சி என்பது நல்லாவே புரிஞ்சது.

நான் அவர்ட்ட அவளவா கேள்வி கேக்கமாட்டேன். எங்க போறிங்க.. வரிங்க.. ஏன் லேட்.. அது ஏன் செஞ்சிங்க.. இத ஏன் செய்லைன்றது போல சின்ன விஷயங்கள் தொடங்கி பெரிய விஷயங்களிலும் மூக்கு நுழைக்கமாட்டேன். எல்லாம் அவர் பார்த்துப்பார்ன்ற நம்பிக்கை. அவரும் எதா இருந்தாலும் இன்ன முடிவு எடுத்தேன்/எடுக்கலாமான்னு கலந்துகொள்வார். போன வாரம் என்னவோ மூட் சரியா இல்லை. அவர் வீட்டுக்கு வந்து ஆசுவாசப்படுத்தினதும் ‘காலேல போனவர் இப்பதான் வரிங்க’ன்னு ஒரு வரிதான் சொன்னேன். கேள்வியாகக் கூட. அன்று தூங்கும்வரை பலமுறையும் தொடர்ந்து சில நாட்களும் அதற்கான விளக்கத்தை சொல்லிக்கொண்டிருந்தார். இந்த சின்ன விஷயத்துக்கு போயான்னு தோணினாலும் அவருக்குள் அதன் தாக்கம் பெரிதாக இருந்திருக்கும்போலன்னு தோணிச்சு.

எங்கேயோ கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த வாழ்க்கையின் சில தத்துவங்கள் மெதுவா மிக மெதுவா புரிபட ஆரம்பிக்கிறது. அதற்கு வயதும், பிள்ளைகளின் வளர்ச்சியும், காலமும் கூடவே உலகமும் காரணமாக இருக்கலாம். ஒரு நாள் காரில் போய்க்கொண்டிருந்தபோது ஊர் சுற்றிய பேச்சு கடைசியில் இப்படி ஒரு குடும்பம் அமைய நான் என்ன தவம் செய்தேன்னு நினைக்கும்படியா வந்து முடிஞ்சது. காருக்குள் வந்த திடீர் அமைதி எனக்கும் அவருக்கும் இதை நல்லாவே உணர்த்திச்சு. பிள்ளைகளால அத மொழிப்படுத்த முடியலைன்னாலும் உணர முடிஞ்சதென்பது அவங்க முகத்திலும் ‘பாவம்ல அவங்கல்லாம்’ன்னு சொன்ன விதத்திலும் தெரிஞ்சது.

பிள்ளையாரப்பா.. உன்னட்ட எப்போதும் கேக்கறததான் இப்பவும் கேக்கறேன். நீ எல்லாரையும் நல்லா பாத்துக்கோ. அப்போ தான் நான் நல்லா இருப்பேன்.

ஃபீலிங்க்ஸ் ஆஃப் நோர்வே போதும்னு நினைக்கறேன்.. இதோ.. அடுத்த ஒரு புது வருஷத்துக்குள்ள போருக்கு கிளம்பிட்டோம்.. வந்து எங்கள் திருமணநாளுக்கு வாழ்த்திட்டு ஆசி வாங்கிட்டு போங்க மக்கள்ஸ்..

j 039

23 April, 2012

எல்லாம் நலம்!!

அக்காச்சி வீட்டில் நண்பன் தினமும் பல காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கிறதாம். கூடவே அதில் வரும் காரக்டர்களின் பெயர் ஒவொருவருக்கும் வைக்கப்பட்டு அந்தப் பெயரிலேயே அழைக்கும்படியும் கட்டளை இடப்பட்டிருக்கிறார்களாம். ‘அப்ப சித்திக்கு என்ன பேர்டா’ன்னு அக்காச்சி கேட்க கடைக்குட்டி சேரன் ’ஷித்திதான் ரியா’ன்னு சொல்லிட்டார். ஒரே நிமிஷம் இருங்க. இங்கே அவ்வியே ஆகணும் நான். அவ்வ்வ்வ்வ்..

இரண்டாவது பையன் கருண் திடீரென்று சீரியசாக ‘எனக்கு ஃப்யூச்சர்ல என் வைஃப் கூட ட்ரபிள் வரும்னு நினைக்கறேன்மா’ என்றாராம். ஏனென்று கேட்டதற்கு ‘பேபி கிடைக்கறப்ப எனக்கும் எப்டி ஹேண்டில் பண்ணும்னு தெரியாதேம்மா. ஸ்வேதா போல கோவப்படுவாங்கன்னு நினைக்கறேன்மா’ன்னாராம். அது ஆரது ஸ்வேதான்னேன். அடியேய் நண்பன்ல வர ஸ்வேதாடி.. இலியானா அக்கான்னா. இங்க இன்னுமொரு அவ்வ்வ்வ்..

TWO SISTERS இப்போது ஒரு டிப்ளமா கோர்ஸ் படித்துக் கொண்டிருக்கிறாள் அக்காச்சி. அவள் என்னைப் போல இல்லை. தைரியம், அறிவு, விவேகம், அழகு என அத்தனையிலும் என்னைவிடப் பல படிகள் மேலானவள். அவளிடம் நான் கற்றுக் கொள்ள எப்போதும் எதுவாவது இருந்துகொண்டே இருக்கும். நானும் அவளும் ஒரே சாயலில் இல்லாததால் யாராவது பார்த்தால் சகோதரிகள் என்று சொல்லமாட்டார்கள். பேச்சும் அப்படியே இருக்கும். இன்று வரை அம்மாவை விட எனக்கு அக்காச்சி மீதுதான் பயம் அதிகம். முன்னெல்லாம் அக்கா என்ற அதிகாரம் இருக்கும். இதுக்கு அக்காச்சி என்ன சொன்னா என்று என்னவர் கேட்கும் அளவுக்கு அவள் எனக்கு இப்போது எல்லாமுமாய் ஆகி அன்பால் கட்டிப்போடுகிறாள்.

நான் பதிவுலகம் வந்ததை இரண்டு மாதங்களின் பின் சொன்னபோது அவளவு கோவப்பட்டாள். உன் மனத் திருப்திக்கு எழுது ஆனால் நட்புகள் எதுவும் வேண்டாம் என்று சொன்னாள். லிங்க் கொடுத்தேன். ஆனால் படித்தாளா இல்லையாவென்று ஒரு வார்த்தை சொல்லவில்லை. போன வருஷம் என் பிறந்தநாளுக்கு அவளிடமிருந்து வந்த மெயில் இது.

ithu thaan en pirantha naal parisu

scrolllllllllllllllllllllllldown (இங்கே எக்கச்சக்க இடைவெளி விட்டிருந்தாள்)

"nallaaave eluthuredi!!"

எனக்கு கிடைச்ச மிகப்பெரிய பரிசு இது. கூடவே என் ஃப்ரெண்ட் படமும் அனுப்பி இருந்தாள்.

இப்பொழுது பதிவில் நான் அதிகம் எழுதாததால் அவ்வப்போது மிரட்டல் மெயில் அனுப்புவாள். படிப்பின் இடையில் அவள் இளைப்பாறுவது என் பதிவில்தானாம்.

‘summaave irunthirukkalaam. intha blog vaasikkira peeelingu irukke atha ennaaatha solla’ என்று தொடங்கி தொடர்ந்து எழுதச் சொல்லித் திட்டி முடித்திருப்பாள். நேர வேறுபாட்டால் சமயத்தில் பேச முடியாமல் போய்விடும். உடனேயே மெயில் வரும்.

enna pulla seiyirai
phonukal ennaththukku irukku
ஏன் புள்ள சைலெண்டா இருக்கிறாய்
piraku parai. naalaikku thanks giving day leave. veeddai nippan. time irunthaaa edu.
happy thanks giving day, I am thankful to god b'se of u!

இப்படியாக நக்கலோடு சேர்த்து நளினமாக தன் அன்பைச் சொல்வதில் அவளுக்கு நிகர் அவள்தான். இந்த வருடம் கோடை விடுமுறைக்கு அவளிடம் வரப் போவதாக என்னவர் சொன்ன நாளில் இருந்து எப்பொழுதும் அதே நினைவாகவே இருக்கிறாள். ’ஏன்ரியப்பா முதலே சொன்னனிங்கள். இஞ்ச மனுசரால நிம்மதியா இருக்கேலாதாம். ஒரே பரபரப்பா கிடக்கு’ என்று சிரிப்பாள். ஆனால் அது உண்மை என்பதை அவள் குரல் சொல்லும். மூன்று வயதில் அம்முவைப் பார்த்தவள் இப்பொழுது பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறாள். அவளின் குணங்களை அம்முவில் அவளே பார்த்து அறிந்து கொள்வது அவளுக்கு எவளவு ஆனந்தமாயிருக்கும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அக்காச்சி. எப்போதும் உன்னோடு நாங்கள் இருப்போம். எல்லாம் நலம்!!

05 April, 2012

5 நாட்கள்.

இந்த வாரம் புதன் அரை நாளோடு தொடங்கி செவ்வாய் வரை நீடிக்கும் ஈஸ்டர் கால விடுமுறை. பிள்ளைகளுக்கு திங்களில் இருந்து பள்ளி விடுமுறை விட்டதால் வழக்கம்போல் எதற்கு வளர்ந்து தொலைத்தோம் என்ற ஏக்கத்தோடு திங்கள் ஆஃபீசுக்கு கிளம்பினேன்.

இந்த விடுமுறை நாட்களில் ஆஃபீஸ் போகும் கொடுமையை குறைக்கும் முதல் விஷயம் my car, my petrol, my road தான். ஆளே இல்லாத வீதிகளில் எந்த டென்ஷனும் இல்லாமல் ட்ரைவ் பண்ணும் சுகம் இருக்கே.. அடடடடடடா..

004 என் மேஜையில் எனக்காகக் காத்திருந்த ஈஸ்டர் சாக்லெட் கொஞ்சம் சிரிப்பைக் கொடுத்தது. மேலிட தந்திரம்.

வெள்ளியோடு விடுப்பெடுத்து பாதி ஆஃபீஸ் திங்களன்று காலியாக இருக்கும். செவ்வாய் வந்ததும் கொஞ்சம் கடுப்பேறும். கலீக்ஸ் ஒவொருவராக விடைபெறுவார்கள். அதில் சிலர் அவர்கள் பயணம் பற்றிச் சொல்லும்போது. ம்ம்.. ஒருவழியாக புதன் கிழமை வந்தால் அன்று அரைநாள். ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றும் சுகம் இருக்கே?? அடடடடடா..

அநேகமானோர் இந்த ஈஸ்டர் விடுமுறைக்கு இந்த வருடத்தின் இறுதிப் பனியை அனுபவிக்கவென மலைப் பகுதிகளில் உள்ள அவர்களின் சொந்தமான/வாடகை காட்டேஜ்களுக்குப் போய்விடுவார்கள். எங்கள் அயலில் ஓரிண்டு வீடுகளில் தான் ஆட்கள் உண்டு. கிட்டத்தட்ட ஊரே காலியாக இருக்கும் காலம் இது. எங்கள் பழைய வீட்டில் நான் வந்த புதிதில் ஜன்னலில் நின்று வேடிக்கை பார்த்துக் கழித்த காலங்களில் ஒரு நாள் அது. வீதிக்கு எதிரே ஒரு வரிசை வீடு. அடுத்து ஒரு உள்வீதியோடு சில வீடுகள். அதில் ஒரு வீட்டில் யாரோ வண்டி வைத்து பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். பின்னர்தான் தெரிந்தது அது திருட்டென்று. போலவே காட்டேஜ்களில் தங்கி இருப்போருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் பிரபல திருடர்களும் ஒவொரு வருடமும் அவர்கள் கைவேலையை காட்டிக் கொண்டுதானிருக்கிறார்கள். போன வாரம் பக்கத்து ஊரில் ஒரு பெண் ஃபேஸ்புக்கில் ‘லீவு விட்டாச்சேய்ய்ய்ய்.. நான் காட்டேஜ் போறேனே’ என்று பொங்கிவிட அடுத்த நாளே வீட்டில் திருட்டு.

இதற்கிடையில் எங்கள் தமிழ்ப் பள்ளியின் பத்தாவது ஆண்டுவிழா வருகிறது. அதற்கென்று என் வகுப்புப் பிள்ளைகளுக்கு நாடகம் ஒன்று பழக்க ஆரம்பித்திருக்கிறேன். அற்புதமாகக் கழிகிறது நேரம். ஒவ்வொரு பிள்ளைக்குள்ளும் ஒழிந்திருக்கும் நடிகனையும் நடிகையையும் வெளிக்கொண்டு வருவதென்பது அபரிமிதமான ஒரு அனுபவம். ஓரளவுக்கு நன்றாக நடிப்பார்கள் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. அதனால் இந்த விடுமுறை நாட்களில் 2 நாட்கள் மட்டும் பயிற்சி எடுத்துக்கொள்ளவுள்ளோம்.

2012-04-04 11.09.52 மலைப்பிரதேசம் போகாதவர்களே அனுபவியுங்கள் என்பதாய் திங்கள் பனி கொட்டித் தள்ளியது. கண்ணாளன் வேறு சின்ன வண்டிக்கு சம்மர் டயரை மாற்றிவிட்டார். ஒரு வழியாக பெரிய வண்டியை உருட்டிக்கொண்டு போய்வந்தேன். புதன் கிழமை அவரே போக்குவரத்துப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். சதுவுக்கு ஆண்டுவிழா பயிற்சி இருந்ததால் அம்மு என்னோடு ஆஃபீஸ் வந்து அவ விருப்பப்படி இருவரும் லஞ்சுக்கு இலை தழைகளை உண்டோம்.

017 கிளம்பும் நேரம் திடீரென்று ஃபயர் அலாரம் அலறத் தொடங்கியதில் மொபைலை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு கட்டடத்தை விட்டு வெளியே வந்த என்னைப் பார்த்து அம்மு சிரித்தார். அவர் கையில் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தோடு வந்து தொடர்ந்து படித்ததைப் பார்த்து நான் சிரித்தேன். தீயணைப்புப் படையினர் வந்து அரைமணி நேர காத்திருத்தலின் பின் எங்கேயும் தீப்பிடிக்கவில்லை உள்ளே போகலாம் என்றார்கள். காரணம் என்னவென்று செவ்வாய் போனால்தான் தெரியும்.

இரண்டு நண்பர்கள் வீட்டில் விருந்துக்கு நாங்கள் போய், ஒரு நண்பர் குடும்பத்தை விருந்துக்கு அழைத்து தண்டனை கொடுப்பது, சதுவின் இரண்டு நண்பர்கள் இரண்டு நாட்கள் இங்கே டேரா, ஆண்டுவிழா நாடகப் பயிற்சி, சனிக்கிழமை ஊர் சுற்றல் என்ற அளவில் மட்டும் இப்போதைக்கு 5 நாள் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

img_7868_20100404_1741788986        அனைவருக்கும் இனிய ஈஸ்டர் வாழ்த்துகள்.

01 April, 2012

குழந்தை வளர்ப்பு.

Barn-og-familie நோர்வேயில் குழந்தை வளர்ப்புப் பற்றிய தகவல்களை திரு.சொக்கன் அவர்கள் கேட்டிருந்தார்கள். அது பற்றிய முழு விபரங்களையும் அவர் பதிவில் எழுதி இருப்பதால் நான் இங்கே மீண்டும் விபரமாக எழுதவில்லை. தகவல்களை வைத்துக்கொண்டு எழுதப்போவது அவரே என்பதால் கொஞ்சம் அதிகமாகவே எனக்குத் தெரிந்ததை/அறிந்ததை எழுதி அனுப்பி இருந்தேன். அதில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே வலை ஏற்றி இருந்தார். அதில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவு இல்லை. அதே நேரம் அந்தத் தகவல்கள் அவர் எழுத்தில் புது வடிவம் பெறாதது அதே அளவு ஏமாற்றம் என்பதும் உண்மையே.

இந்தியக் குடும்பத்திடமிருந்து குழந்தைகளைப் பிரித்த சம்பவம் நடந்தபோது நான் ஏதாவது எழுதலாம் என்று நினைத்தபோது ‘நீ எதுனா எழுதி வச்சு அது ஏடாகூடமாகி உன் மேல யாராச்சும் கேஸ் போட்டுட போறாங்க’ என்று என்னவர் விளையாட்டாக மிரட்டியதில் உண்மையாகவே மிரண்டு போய் அந்த எண்ணத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டேன். அதற்கு ஈடுகட்டுவதாய் என்னிடம் தகவல்கள் கேட்ட சொக்கன் அவர்களுக்கு மனதார்ந்த நன்றிகள்.

இங்கே திரு.சொக்கன் அவர்களின் பதிவில் நான் எழுதிய தகவல்களைப் படித்துப் பாருங்கள்.

04 March, 2012

நலமாய் வாழட்டும்!

என்னவரின் நண்பர் ஒருவர். என்னவர் இங்கு வந்ததில் இருந்து நட்பானவர். எங்கள் கல்யாணத்தின் பின் அவருக்கும் கல்யாணம் ஆகி நான் இங்கு வந்த இரண்டு மாதங்களின் பின் அவர் மனைவியும் வந்தார். அப்படியே நாங்களும் நட்பாகி, ஒரே வயதில் குழந்தைகளும் பிறந்து இப்போது குடும்ப நண்பர்கள் ஆகிவிட்டோம். அவருக்கு இடையிடையே முதுகுவலி இருந்தது. சில நாட்களாக தலைச்சுற்றலும் இருந்தது. மாம்ஸ் கூட ‘என்னடா விசேஷமா உனக்கு’ன்னு கேலி செய்வார். நேற்று வேலையில் மயக்கமாகிக் கிடந்தவரைக் கண்ட அவரின் கலீக்ஸ் உடனேயே ஆம்புலன்ஸ் மூலம் ஹாஸ்பிடல் கொண்டு சென்றிருக்கிறார்கள். எல்லா செக்கப்பும் முடித்து இப்பொழுது அவர் நலமே. எல்லாமே நார்மலாக இருப்பதாக ரிப்போர்ட் வந்தாலும் ஆறு மாதத்துக்கு ட்ரைவிங் தடை செய்திருக்கிறார்கள். இரண்டரை மணி நேரம் மயக்கத்தில் இருந்தாராம். ஓய்வின்மை, சரியான தூக்கமின்மை காரணமாம். மூளைக்குத் தேவையான ஓய்வு கொடுக்கவே இந்த முயற்சி. இன்னும் இரண்டு மாதங்களில் மீண்டும் ஒரு செக்கப் எடுத்த பின் கட்டுப்பாடு தளர்த்தப்படலாம். பார்த்ததும் குரல் தழுதழுக்க அவர் பேசியபோது.. பிள்ளையாரே.. நண்பர்களை கஷ்டத்தில் காணுவது என்பது எவளவு கொடுமை!!


ஒரு இறுக்கமான மனநிலையோடு எல்லோரும் பேசிக்கொண்டிருந்தோம். நண்பரின் இரண்டு வயது கடைக்குட்டி எல்லோரையும் தன்வசமாக்கி மனங்களை இலகுவாக்கினார். என் செயினின் டாலரை பார்த்தவர் நான் எதுவும் சொல்லாமலே தானாக கடவுள் என்று புரிந்துகொண்டு அதில் இருந்த அம்மனைத் தொட்டு எல்லோருக்கும் ஆசீர்வாதம் வழங்கினார். இத்தனைக்கும் அவர்கள் கிறிஸ்தவர்கள். ஃபாதரைப்போல நெற்றியில் சிலுவைக் குறியிட்டு ஆசீர்வதிப்பதுபோல அவர் செய்யவும் எல்லோரையும் சந்தோஷம் தொற்றிக்கொண்டது. கலகலப்பாகக் கழிந்த மணித் துளிகளின் இடையே நிறையவே தைரியம் சொல்லிவிட்டு வந்தோம்.

 013 012 k

-----

ஃபுட்பால் விளையாடும்போது தலையில் அடிபட்ட இன்னொரு நண்பர் இன்னமும் சிகிச்சையுடனேயே ஹாஸ்பிடலில் இருக்கிறார். ஐந்து மாதங்கள் ஆகியும் இன்னமும் முழுமையாகக் குணமாகவில்லை. தலையில் நடந்த ஆபரேஷன் வெற்றியளித்தாலும் அவர் நினைவுகளை மீட்டெடுப்பதற்கான பயிற்சிகளைக் கொடுக்கமுடியவில்லையாம். விண்டர் என்பதால் சளித் தொல்லைகள் அடிக்கடி வந்து போய்க்கொண்டிருப்பதால் உடல் பலவீனமாக இருக்கிறதாம். அவரும் மேலே சொன்ன நண்பர் போலவே எங்கள் குடும்ப நண்பர். இரண்டுமுறைதான் ஹாஸ்பிடல் போய் அவரைப் பார்த்தேன். வாழ்க்கையில் மறக்க முடியாத வலியைத் தந்தது அவரை ஹாஸ்பிடலில் பார்த்த அந்த நாள்.

நாங்கள் போனபோது MR செக்கப் எடுக்கக் கூட்டிப் போயிருப்பதாக அவரின் மனைவி, என் நண்பி சொன்னார். காத்துக்கொண்டிருந்தோம். மணி நள்ளிரவு பனிரண்டை நெருங்க நெருங்க அங்கே இருந்த பெரிய கடிகாரத்தின் முட்கம்பிகள் என் நெஞ்சைக் குத்திக் கிழிப்பதுபோலிருந்தது. அவருக்கு அடிபட்டது அக்டோபர் 16 மாலை. அக்டோபர் 17 என் பிறந்தநாள். என்றுமே என் பிறந்தநாளை அவளவு ஆவலோடு வரவேற்கும் நான் அன்று அப்படி ஒரு நாளே இல்லாது போய்விடக் கூடாதா என்று நினைக்கும்படி ஆயிற்று. உறவென்று யாருமே இல்லாத இடத்தில் எதுவானாலும் முதலில் ஓடி வருவது இவர்தான். மாம்ஸ் வந்த புதிதில் ஃபுட்பால் விளையாடப் போனபோது பழக்கமாகி நட்பானவர்.  அவர்கள் கிறிஸ்தவர்கள். பொங்கல்,  தமிழ்ப் புதுவருடம், தீபாவளி தொடங்கி பிறந்தநாள், திருமணநாள் என அனைத்துக்கும் மறக்காமல் வாழ்த்துவார்.

மணி பனிரெண்டு பத்தைத் தாண்டியபோது குப்பறப் படுத்திருந்தவரை கட்டிலோடு தள்ளிக்கொண்டு வந்தார்கள். அனுமதியோடு அறைக்குள் போனபோது மூக்கிலிருந்து வழிந்த இரத்தம் காய்ந்து போய் இருக்க தூங்கிக் கொண்டிருந்தார். நண்பி நான் வந்திருப்பதைச் சொன்னபோது சட்டென்று எழுந்தவர் என்னைப் பார்த்தபடியே சுற்றுமுற்றும் தேடினார். கட்டிலில் இருந்து இறங்க முனைந்தார். ‘அண்ணா இங்க இருக்கேண்ணா. நீங்க படுங்க. ரொம்ப நேரம் தூங்காதிங்க’ என்று கண்ணீரை மறைத்தபடி சொன்னேன். அதிக நேரம் தூங்க விடாமல் விழிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். என் முகத்தைப் பார்த்தவர் என் கண்ணைப் பார்த்தபோதும் அங்கே என்னை அடையாளம் கண்டதற்கான அறிகுறி இருக்கவில்லை. மீண்டும் தூங்குவதும் விழித்து எங்களை மலங்க மலங்கப் பார்ப்பதுமாக இருந்தவரைப் பார்த்தபோது ஹோவென்று மனம் அழுதாலும் நண்பியின் தைரியம் போகக் கூடாதென்று வெளியேகாட்டாது இருந்தேன். மூளையில் தாக்கம் ஏற்பட்டதால் நினைவு திரும்ப நாளாகும் என்றார்கள். அதிக இரத்தப்போக்கு கூடவே மூளை வீங்க ஆரம்பித்ததால் தேவையில்லையென்று சொன்ன ஆபரேஷனை இரண்டு நாட்களின் பின் செய்தார்கள்.

இதுவரை காய்ச்சல், சளித்தொல்லை என்று ஒரு தடவை கூட ஹாஸ்பிடல் போகாதவர். நான் பார்த்த முதல் நாளில் இருந்து அடிபடும்வரை உருவத்தில் ஒரே மாதிரியே இருந்தார். என் மாமியார் மேல் அவளவு பாசம் அவருக்கு. ’என்ன தம்பி நீ.. கோடை எண்டு மெலிஞ்சதும் இல்ல.. மாரி எண்டு கொழுத்ததும் இல்லை.. எப்போதும் அப்பிடியே இருக்கிறாய்` என்று மாமியார் ஒவொரு முறை வரும்போதும் கிண்டல் செய்வார். இப்போது ஹாஸ்பிடலே வீடாக ஆகிவிட்டது. இரண்டாவது முறை பார்க்கப்போனபோது தூங்கிக்கொண்டிருந்தார். அதன் பின் இன்னமும் போய்ப் பார்க்கும் தைரியம் வரவில்லை. பார்த்துவிட்டு வரும் என்னவரிடம் கேட்பதோடு சரி.

மூளையில் பலத்த அடி, ஆபரேஷன் என்பதால் பயந்ததுபோல உடலில் எந்தத் தாக்கமும் ஏற்படவில்லை. நினைவும் கொஞ்சம் திரும்பியுள்ளது. எல்லோரையும் அடையாளம் காண்பதோடு சிறிது பேசவும் செய்கிறார். ஆனால் இன்னமும் அவருக்கு என்ன ஆயிற்று எங்கே இருக்கிறார் என்று எதையும் தெரிந்துகொள்ள முடியாது இருக்கிறார். கொஞ்சம் யோசனையோடு இருப்பது போல் இருந்தால் அன்று தூங்காமல் இருப்பாராம். அது மூளைக்கு நல்லதில்லையாம். அதனால் மெதுவாக நினைவுகளை மீட்டெடுக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். முழுமையான பயிற்சி கொடுக்க முடியாதபடி சளித்தொல்லை அடிக்கடி வருகிறது. சம்மர் வந்ததும் எல்லாம் சரியாகி நல்லபடி அவர் முழுநினைவு பெற வேண்டுமென்றே எல்லோரும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம்.

-----

என்னவரின் இன்னொரு நண்பர். எங்கள் திருமணம் நடந்த அதே வருடம் அவர்களுக்கும் திருமணமாகி இங்கே வந்த மனைவி என் நண்பியானார். சதுவில் அவளவு விருப்பம் அவருக்கு. எங்கே பார்த்தாலும் அவரின் கன்னத்தைக் கிள்ளாமல் விடமாட்டார். இரண்டு வருடங்களின் முன் இரட்டை ஆண்குழந்தைகளை ஆறு மாதக் கருவிலேயே இழந்தார்கள். அப்போது பார்க்கப்போனபோது என் தோள் நனைத்த நண்பியின் கண்ணீரை என்றும் மறக்க முடியாது. அவர்களின் வேண்டுதலுக்கு செவிசாய்த்த இறைவன் போன மாதம் ஒரு தேவதையைப் பரிசாகக் கொடுத்திருக்கிறான். தொலைபேசி வாழ்த்தியபோது ‘அண்ணாவின்(என்னவர்) நம்பர்ல பிறந்திருக்கா. உங்க நம்பர்தான் கூட்டெண்’ என்று சிரித்தார். தெய்விகா என்று செல்லமாக அவர் அழைக்கும் தேவதையைப் படத்தில் மட்டுமே பார்த்தேன். குழந்தைகளைப் பார்த்து வெகு காலம் ஆகிவிட்டதால் உடனேயே தூக்க வேண்டும்போல் இருந்தது. நண்பிக்கு காய்ச்சல், வெளிநாடுகளில் இருந்து வந்து குவிந்த அவர்களின் உறவுகள், இப்போது எங்களுக்கு இருக்கும் சளித் தொல்லைகள் என தடைகள் வந்துகொண்டே இருக்கிறது. அடுத்த வார இறுதியிலாவது போய்ப் பார்க்க வழி வர வேண்டும்.

22 January, 2012

பழமொழி நண்பன்.

மாம்ஸ் முன் ஜென்மம் பாத்திட்டு இருந்தார். போன ஜென்மத்தில என்ன பாவம் பண்ணி இவள்ட்ட மாட்டிக்கிட்டம்னு தெரிஞ்சுக்க போறாரோன்னு நினைச்சன். நிகழ்ச்சி முடிய என்ன முடிவு எடுத்திருக்காருன்னு கேட்டேன். நான் இந்த ஜென்மம் போலவே போன ஜென்மமும் நல்லவனாத்தான் இருந்திருப்பேன். நீ வேணா போய் கேட்டுப்பாரு. போன ஜென்மத்தில பாம்பா பிறந்திருப்பாய்ன்னு சொன்னார். முறைச்சதும் உனக்கு தான் பூன்னா பிடிக்குமே தேனியா பிறந்திருப்பாய்னார். பாம்பு கொத்தும், தேனி கொட்டும். மாம்ஸ் பாவம்தான் இல்லை.

$$$$$

சஜோபன் யூ டியூபில் தங்க்லீஷ் லிரிக்சோடு பாடல்களை கேட்டு, அப்படியே அழகாகப் பாடுகிறார். மெலடி சாங்க்ஸ் அவருக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. நேற்று முன் அந்திச் சாரல் நீ பாடினார். பிள்ளைத் தமிழில் ச்செல்லமாகப் பாடும்போது கேட்க அவளவு இனிமை. உடனே கருண் தானும் பாடிக் காட்டுவதாகச் சொல்லிப் பாடினார்.

‘முன் அன்பு பாரமே.. உன் நெஞ்சம் சாதமே’ நானும் அக்காச்சியும் சிரித்த சிரிப்பில் அங்கே சேரனதும், இங்கே மாம்சினதும் தூக்கம் கலைந்துவிட்டது.

$$$$$

அப்பா ஊருக்குப் போயிருக்கிறார். கனடா வந்ததுக்கு இதுதான் முதல் முறையா தாய்மண்ணை மிதித்திருக்கிறார். ஸ்கைப்பில் வந்ததுமே நான் கையில் துவாயோடு இருந்தேன். சிரிக்க ஆரம்பிச்சிட்டார். ஏன்னு தெரியாதவங்க இங்க போய் பாருங்க. வயலோட வாழ்ந்த எனக்கு அண்ணாவோட வயல சுத்திப் பாக்கிறப்ப வெறுங்காலோட நடக்கும்போது வலிக்குது, அவ்ளோ வேர்த்து கொட்டுது மோனைன்னு சிரித்தார். ஜெயாண்ணா ரஜிக்கு சொன்னாராம். வழக்கம்போல வாடா, போடான்னெல்லாம் என்னைய சொல்ல கூடாது. அங்கிள் இருக்கும்போது வாங்கோ ஜெயாண்ணா இருங்கோ ஜெயாண்ணான்னு மரியாதை குடுத்து பேசணும்னு. ஸ்கைப்ல வரதா சொன்ன அண்ணா வரலை. அடுத்தநாள் கேட்டப்ப நேத்து அப்பா ஒரு பாட்டில் குடுத்தார்டி. தூக்கம் விசுக்கிடிச்சு. அதான் வர்லைன்னார். பாட்டில்ல என்னண்ணா எழுதி இருந்திச்சுன்னேன். அது என்னமோ விசுக்கின்னு இருந்திச்சுடின்னார். 3 கறுவல் கொண்டு வந்திருக்கிறன் மோனை என்று சிரித்த அப்பாவின் முகத்தில் அவளவு நிறைவு.

$$$$$

அக்காச்சி ஃப்ரெண்ட் என்னோட ஒரு ஃபோட்டோவ பத்தி சொன்னாங்களாம். நீ அதில அழகாத்தாண்டி இருந்தாய்ன்னு சொன்னா. எங்க.. எல்லாம் காமராவோட மகிமையா இருந்திருக்கும். நேர்ல மட்டும் பாத்தாங்க.. என் வண்டவாளம் தண்டவாளம் ஏறிடும்னேன். அப்ப்ப்ப்டி சிரிச்சா. அவங்க என்னய நேர்ல பாத்து மிரள்றது போல நினைச்சிருப்பா போல. தெளிஞ்சு தெளிஞ்சு  சிரிச்சா. அடிப்பாவி. அப்ப இத்தனை நாள் பொய்தான் சொன்னியா நீயின்னு கேட்டா இல்லடி சித்தி கூட இப்டித்தான் நான் என் வெயிட் எவ்ளோன்னு சொன்னதும் விழுந்து விழுந்து சத்த்தமா சிரிச்சாங்க. இதெல்லாம் கிண்டல்ச் சிரிப்பில்ல. மனதார்ந்த சிரிப்புன்னா. கண்ணு வச்சிடாதிங்க மக்கள்ஸ். அம்மா, சித்தி, அக்காச்சி, மாம்ஸ், நான்னு வயசு வேறுபாடு இல்லாம அல்ல்லாரும் ஒத்துமையா ஒரே நிறையில இருக்கிறோம்.

$$$$$

தமிழ் படிக்கோணும். எல்லாம் மறந்திட்டன். மறந்ததெல்லாம் திரும்ப படிக்கோணும். தடக்காம வாசிக்க பழகோணும். ஒவொரு நாளும் காலமேல 4 குறள் பாடமாக்கோணும்.

இதச் சொன்னது சாட்சாத் மாம்ஸேதான். சொன்னதோட நிக்காம நீயெல்லாம் நான் சொன்னா கேக்க மாட்டாய். பார் இதில என்ன சொல்லி இருக்கிறாங்களெண்டுன்னு உடனவே எடுத்துக்காட்டோட பேசறார். அது மட்டுமில்ல தினமும் என் மெயிலுக்கு வந்திட்டு இருக்கு.

தங்கள் நண்பரிடமிருந்து ஒரு பழமொழி

pazamozi

மாம்ஸில் தொடங்கி மாம்ஸில் முடிச்சிட்டேன். வர்ட்டா..

18 January, 2012

நதி மனிதர்.

vente காத்திருத்தலின் அவசியமின்மையை

உணர்த்திப் போகின்றன

ஒப்புக்காய் ஆகிவிட்ட சந்திப்புகள். 

 

--------------------------------------------------------------------------------------------------------------

Whats-love இயல்பை மாற்றிப் போடும் காதலே

ஒரு கட்டத்தில்

இயல்பை எதிர்பார்க்கிறது.

 

----------------------------------------------------------------------------------------------------------------

elv கரையை அரித்துச் செல்வது தெரிந்தும்

ஓடிக் கொண்டிருக்கிறது நதி

மனங்களை அறுத்து

கடந்து செல்கின்றனர் மனிதர்.

 

-------------------------------------------------------------------------------------------------------------

THE VAMPIRE DIARIES கதகதப்பான உன் அணைப்பில்

இன்னமும் சுடுகின்றது

நீயறியாத என் கண்ணீர்.

 

---------------------------------------------------------------------------------------------------------------

kjærlighet-1 அன்பே இல்லாத இதயம்

என்னுள் தன் இருப்பை

உறுதி செய்து கொள்கிறது

அவ்வப்போது.

16 January, 2012

’டை’பொங்கல்.

இந்த வருடமும் வழக்கம்போல சூரியன் ஆன்லைனில் வரவில்லை. பகலில் சிறிது வெளிச்சமாக இருந்தது. வழக்கமாக எடுக்கும் விடுப்பும் இல்லாமல் இம்முறை ஞாயிறில் ஞாயிறுக்கான விழா. விடுப்பில் இருந்து நான் காலையில் பொங்கினாலும் மாம்ஸ் வேலையாலும், பிள்ளைகள் பள்ளியாலும் வந்து மாலையில் படைக்கும் மாலைப் பொங்கலே இதுவரை இருந்திருக்கிறது. இம்முறை பகற்பொங்கல்.

வழக்கம்போல கடைசி நேரத்தில்தான் காய்ந்த திராட்சையும், தேங்காய் எண்ணெயும் இல்லையென்பதை கண்டுபிடித்தேன். மாம்சும் பொங்காமல் கடைக்குப் போய் வரவும் பால் பொங்கவும் சரியாக இருந்தது.

032 034 036 037

கூடவே வடையும், கொண்டைக்கடலையும் அவித்துப் படைத்து  பகற்பொங்கலை இனிதே முடித்தோம்.

043 046

நான் ஆறு மணிக்கே எழுந்துவிட்டேன். (ஞாயிற்றுக்கிழமையில் ஆறு மணி என்பது வரலாற்றில் குறிக்கப்பட வேண்டிய விஷயம் என்பதால் இங்கே பதிந்து வைத்துக்கொள்கிறேன்) மாம்ஸ் எழுந்து வந்து ‘உனக்கு நாளைக்கு தான் விஷ் பண்ணோணும். இருந்தாலும் அட்வான்ஸ் வாழ்த்துகள்’ என்றார். கிறிஸ்தியான் நேற்று இரவு இங்கே தங்கியதால் ஒன்பது மணிக்கு சது எழுந்து தயாராகிக் கீழிருந்து குரல் கொடுத்தார்.

‘அம்மா.. கிறிஸ்தியான் வீட்ட போட்டு வாறேன்’

’சாப்ட்டு போங்கோ தம்பி`

’இப்ப பசிக்கேல்ல. போட்டு வாறேன். என்னம்மா மணக்குது??’

‘இண்டைக்கு தைப்பொங்கல் எல்லே.. அதான் அம்மா புக்கை(பொங்கல்) செய்யிறன்’

‘அஷ்(உவ்வே)’ என்றுவிட்டுப் போனவரை படைக்கும் முன் கால் பண்ணி கூப்பிட்டுக் குளிக்க வைத்தேன்.

041 அம்முவை குளிக்கச் சொன்னபோது கட்டாயம் இவளவு சீக்கிரம் குளிக்க வேண்டுமாவென்று சிணுங்கியபடியே போகிற போக்கில் வடை மாவில் இரண்டு வரி வைத்துவிட்டுப் போய்க் குளித்தார். அவருக்கு அரைத்த உளுந்து பிடிக்கும். வடை பிடிக்காது.

 

காரை கழுவிவிட்டு வந்த மாம்ஸ் படைக்கும்போது கையை கட்டியபடி பின்னாடியே நின்றார். முறைத்த எனக்கு ’கார் கழுவினா நான் குளிச்சது போல தானே.. படைக்கிற வேலைய பாப்பியா.. பசிக்குதில்ல’ என்றார். தேவாரம் சொல்லிய குறையில் சது செருப்போடு நிற்பது மாம்சால் கவனிக்கப்பட்டது. ’அம்மா ரூமுக்கு வெளியில கழற்றி இருந்தா. எனக்கு குளிர்ந்துது. அதுதான் போட்டனான்’ என்றார்.

இவ்வாறு படையல் முடித்து சாப்பிட வந்தால் அம்முவுக்கு நான் ஊட்டிவிட்ட ஒரு வாய் பொங்கல். சது ஒரு நான்கைந்து வாய் பொங்கல். வடை வேண்டுமென்றார். மிளகாயின் காரம் தாங்காமல் விட்டுவிட்டார். வந்த நண்பர்களும் மாம்சும் நன்றாக இருப்பதாகச் சொல்லி சான்றிதழ் வழங்கி வயிறார உண்டார்கள். மாம்சின் பழைய முதலாளிக்கும், ஒரு நண்பனுக்கும் பொட்டலம் அனுப்பிவிட்டு நானும் உண்டேன்.

பின்னர் ஜெயாண்ணா, மாமி, அண்ணா, அப்பா, ரஜியோடு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டோம். ஜெயாண்ணாவின் பிள்ளைகள் மாட்டுப் பொங்கலுக்கும் சேர்த்தே வாழ்த்தினார்கள். விதுர்ஜன் ஏன் மாட்டுப் பொங்கல் பொங்கவில்லை என்று கேட்டாராம். எங்களிடம் மாடில்லை என்றதும் ஒன்றை வாங்கி பொங்கல் முடிய விற்கலாமே என்றாராம்.

அண்ணா படங்களில் புதுச்சட்டை போட்டிருந்தார். நான் கேட்பதுக்குள்ளாகவே

‘இந்த வருஷம் எனக்கு ‘டை`பொங்கலடி’ என்றார். அக்காச்சியும் அம்மாவும் கொடுத்துவிட்ட இரண்டு சட்டைகளிலும் டை இருந்தது. இருவருக்கும் குறையில்லாமல் இரண்டு சட்டைகளையும், கூடவே அந்த டையோட ஃபோட்டோ இல்லையா என்று கேட்காமல் அதையும் சேர்த்தே போட்டிருந்தார்.

ரஜி வீட்டில் அனைவரும் தூங்கிப் போயிருக்க ரஜி மட்டும் தூக்கக் குரலில் பேசினான். அம்மா பொங்கல் செய்ய தயாரானபோது ஸ்கைப்பில் வந்தார். பொங்கல் பாதியில் அத்தை ஸ்கைப்பில் வந்தார். அக்காச்சியோடு இனிமேல்தான் பேசவேண்டும்.

ஸ்கைப்பில் ’இண்டைக்குத்தானடி நீ ஒரு நல்ல சட்டை(ஃப்ராக்) போட்டிருக்கிறாய்’ என்றார் அண்ணா. அது அம்மா 2004இல் ஊருக்குப் போனபோது தைத்துத் தந்தது. அன்றிலிருந்து பொங்கலுக்கு அதுதான். என்னவோ இன்னமும் பண்டிகைகளின்போது ஊர் பற்றிய ஏக்கம் விட்டுப் போவதாய் இல்லை. அதற்கு ஈடாக இந்த வழக்கம். ஒன்றை மறக்க இன்னொன்று. சரிதானே நான் சொல்வது??

எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!!

01 January, 2012

சிவப்பு ரோஜ்ஜ்ஜா.

முதலில் அனைவருக்கும் மனமார்ந்த புதுவருட வாழ்த்துகள். வருஷம் ஞாயிறில் பிறந்ததில் உங்களைப் போல எனக்கும் வருத்தமே. போகட்டும் விடுவோம். புத்துணர்வோடு புத்தாண்டை வரவேற்போம்.

இங்கு new year’s eve அன்றுதான் புத்தாண்டுக் கொண்டாட்டம் களைகட்டும். டின்னரை ஃபுல்கட்டு கட்டிவிட்டு, சரியாக இரவு 00:00 க்கு பட்டாசு சத்தத்தோடு புத்தாண்டு வரவேற்கப்படும். எங்களுக்கு மாம்ஸின் நண்பர் வீட்டில் விருந்து. சில வருடங்களாகத் தொடரும் வழக்கம் இது. இம் முறையும் சந்தோஷமாகக் கழிந்தது நேரம். miming game இல் படத்தின் பெயர் கண்டுபிடிக்க வேண்டிய முறை எனதானபோது தோழிகள் கையை விரித்துக் காட்டினார்கள். மலர் என்றேன். வேறு என்று காட்ட பூ என்றேன். உடனேயே என்னைக் காட்டினார்கள். சிவப்பு ரோஜா என்று நான் சொன்ன அடுத்த நொடி என் பின்னே இருந்த எதிரணி நண்பர் பெயரைச் சொல்லிப் புள்ளியை அள்ளினார். பூவைக் காட்டி என்னைக் காட்டியதும் சிவப்பு டிரஸ் போட்டிருந்ததால் சிவப்பு ரோஜா என்றேன். ஆனாலும் இனி எப்போதும் என்னை இதை வைத்துக் கலாய்க்கப்படும் என்பது உறுதி. படத்தின் பெயர் ‘பூவே உனக்காக’ அவ்வ்வ்வ்..

மே 17 சுதந்திர தினத்தன்று இரவு அரசாங்கமே வாண வேடிக்கை காட்டும். நாங்கள் வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியும். ஆனால் வருஷத்துக்கு முதல் நாளும், வருஷத்தன்றும் தான் இங்கு பட்டாசுக்கு அனுமதி உண்டு. வருடம் முழுவதற்கும் சேர்த்து வைத்துக் கொளுத்திப் போடலாம். இம்முறை ஸ்னோவும் இல்லாததால் விபத்துகள் அதிகமாகி விடுமோ என்று பயந்து கொண்டிருந்த வேளையில் வந்து சேர்ந்தது மழை. பொதுவான ஒரு இடத்தில் செய்யப்படும் அரசாங்க வாணவேடிக்கைகளைப் போய் பார்க்கும் ஆசையை மழையும், குளிரும் கொளுத்திப் போட்டன.

021 022 சரியாக 30ஆம் திகதி ஆரம்பமாகும் பட்டாசு வியாபாரம். குறிப்பிட்ட இடங்களில் குட்டியாக டெண்ட் போட்டு பக்கத்திலே இந்த பட்டாசு பலூனையும் வைத்திருப்பார்கள். காற்றில் அது படபடவென்று சத்தம் போடுவது பட்டாசு வெடிப்பது போலவே இருக்கும். நாங்கள் போகவும் தீயணைப்புப்படை ஆட்கள் வந்து பட்டாசுக் கடையின் பாதுகாப்பை ஆராய்ந்து போகவும் சரியாக இருந்தது. பட்டாசுகளின் அளவு கொஞ்சமாக இருந்தாலும் விலை.. உஸ்ஸ்ஸ்ஸ்..

010 அம்மு என்றும் வெடிச் சத்தத்துக்கு பயந்ததில்லை. சது மூன்றாவது வயதில் தான் வெளியே வந்து வேடிக்கை பார்க்கவே ஆரம்பித்தார். ஆனால் இப்போது இருவரும் போட்டிக்குச் சுட்டுப் போடுவார்கள். மாலை ஐந்து மணியிலிருந்து ஆங்காங்கே ஆரம்பிக்கும் வெடிச் சத்தம். அதிலிருந்து அவ்வப்போது வண்ணமாய் ஆகிக் கொண்டிருக்கும் ஆகாயம். பனிரெண்டு மணிக்கு ஒட்டு மொத்த ஊரும் ஒருசேர வெடிக்கும்போது சத்தம் காதைப் பிளக்கும். பொரி பொரியாய், பொட்டுப் பொட்டாய், பூப்பூவாய், நட்சத்திரங்களாய் வெடித்து விழும் வண்ணச் சிதறல்களின் அத்தனை அழகையும் கண்விரித்து, வாய் பிளந்து பார்த்துவிட்டு வந்து எல்லோருமாய் சாமிக்கு விளக்கேற்றி வணங்குவோம். அடுத்த சில நிமிடங்களில் அக்காச்சியிடம் இருந்து தொலைபேசி வழி வாழ்த்து வரும். இப்படியாகத் தொடங்கும் எங்கள் புதுவருஷம்.

என்னால் முடிந்த வரை மொபைலில் படங்கள் எடுத்தேன். மழையால் வெளியே போய் முழுவதையும் காமராவிற்குள் அடக்க முடியவில்லை. இங்கே ஒரு ம்க்கும் போடச் சொல்கிறது மனசாட்சி.

008  019 023 026 027 

 

013 என்னுடைய அதிகபட்ச தைரியம் stjerneskudd என்று சொல்லப்படும் நம்ம ஊர் மத்தாப்பூ தான். மீதி எல்லாம் முக்கால் குடும்பமும் சுட்டுப் போட பார்வையாளாய் மட்டுமே (பதுங்கி) இருந்து கொள்வேன்.

 

 

புதுவருடம் பகுதி இரண்டில் 2011 பற்றியும், 2012இல் நான் என்ன செய்யப் போகிறேன் என்பது பற்றியும் சொல்கிறேன்.

மலர்ந்த இந்தப் புதுவருடம் அனைவருக்கும் நல்வாழ்வையும், மனநிறைவையும் கொடுக்க என்னப்பனை வேண்டிக் கொள்கிறேன்.