Pages

  • RSS
Showing posts with label நான் தின்ற மண். Show all posts
Showing posts with label நான் தின்ற மண். Show all posts

27 November, 2012

வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே..

என்னவோ ஒரு எரிச்சல்.. கோவம்.. தேவை இல்லாத பதட்டம்.. அது பயமோன்னு கூட சமயத்தில டவுட்டா இருக்கும்.. இத்தனூண்டு விஷயத்துக்குக் கூட கத்தணும் போல.. எதுவுமே பேசாம இருந்தா தேவலை போல.. ஒருவித ஆற்றாமை அழுத்த..

இப்டியெல்லாம் எனக்கு மட்டும் தான் இருந்ததுன்னு நினைச்சேன்.. நேத்து அக்காச்சிட்ட பேசினப்ப அவளுக்கும் இதே போல இருந்ததா சொன்னா.. எல்லாத்துக்கும் விடை தலைவரின் பிறந்தநாளும் தொடர்ந்து வந்த மாவீரர் தினமும்னு புரிஞ்சது.. கடகடன்னு நடந்து முடிஞ்ச அத்தனையையும் மீட்டுப் பார்த்தோம்.. உலகம் போற்றியவர் இறப்பென்றது பலர் தூற்றும்படி ஆகி இருக்க வேணாமேன்னு இருந்திச்சு.. என்ன இருந்தாலும் எங்க தலைவர் போல இனி ஒருத்தர் எங்களுக்குக் கிடைக்கவேமாட்டார்னு உறுதியா சொல்லிக்கிட்டோம்.. அதுவரைக்கும் அலைஞ்சுட்டு இருந்த மனசு கொஞ்சம் அமைதியாச்சு.. ஆனாலும் சரியா தூங்கமுடியலை..

அப்படியே உறக்கமும் விழிப்புமா புரண்டு புரண்டு படுதிட்டிருந்தவ கடைசியா நேரம் பாத்தப்ப ரெண்டு பதினாலு.. திடீர்னு கேட்ட சத்தம் மாம்சோட மொபைல்னு அடையாளம் புரிஞ்சப்ப பதைப்போட முழு விழிப்பு வந்திடிச்சு.. நேரம் நாலேகால்.. அவருக்குத் தெரிஞ்சவங்க.. புகலிடம் தேடி வந்தவங்க.. இலங்கைக்குத் திருப்ப அனுப்பறதுக்காக போலீஸ் கூட்டிப் போயிருக்காம்.. அப்பறம் அவங்களுக்கு வேண்டியவங்களோட பேசி விஷயம் சொன்னார்.. அஞ்சு மணி போல தூங்க ட்ரை பண்ணா தூக்கத்துக்குப் பதில் கண் எரிச்சல்ல கண்ணீர்தான் வந்துது.. கொஞ்ச நேரம் அவங்களப் பத்திப் பேசிட்டு அப்பறம் மௌனமா அலாரம் வரைக்கும் காத்திருந்தோம்..

இன்றும் மாவீரர் அஞ்சலி நிகழ்வுல கலந்துக்கலை.. அவர போறீங்களான்னு கேட்டேன்.. 'இல்லை.. வீட்ல நீ மெழுகுவத்தி ஏத்துவல்ல அது போதும்.. நான் போலை'ன்னார்.. ஆறுமணிக்கு மெழுகுவத்தி ஏத்தி வச்சிட்டு ஈழத்துக்காக உயிர் இழந்த அத்தனை பேருக்குமாக வேண்டிக்கிட்டேன்.. கூடவே இனியாவது எம்மை நிம்மதியாக வாழ வை இறைவான்னு கேக்கவும் தவறலை..

ஈழம்னு இல்லை.. இலங்கைன்னு இல்லை.. எங்கல்லாம் போரும் அழிவும் இருந்ததோ.. இருக்குதோ.. அந்த மக்களுக்காக.. அவங்க நிம்மதிக்காக.. அவங்க வாழ்க்கைக்காக.. ஒரே ஒரு நிமிடம்.. மனதார அஞ்சலி செய்யுங்க.. நம்மால முடிஞ்சதா இருக்கட்டும்..

அப்படியே இந்தப் பாடலை எல்லாருக்குமா கேக்கணும்னு தோணிச்சு.. ஏஆர் ரகுமானின் இசையிலும் குரலிலும் அற்புதமான பாடல்.. 2002இல் வெளிவந்த கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில.. வைரமுத்துவின் வரிகள்ல.. கேட்டு முடிச்சதும் ஒரு ஏக்கப் பெருமூச்சு இல்லேன்னா ஒரு பெரிய மூச்சு வந்திச்சுன்னா.. நீங்க என் இனம்..
--

வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறுமுதல் சிரிப்பில்..

காற்றின் பேரிசையும் மழை பாடும் பாடல்களும்
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ
கோடிக் கீர்த்தனமும் கவி கோர்த்த வார்த்தைகளும்
துளிக் கண்ணீர் போல் அர்த்தம் தருமோ..

எங்கு சிறுகுழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாயோ வெள்ளைக் குயிலே..

இங்க இசைப்புயல் வரும் வீடியோ இருக்கு..

இங்க படத்தில் வரும் காட்சி இருக்கு..

இங்க முழுமையான பாடல் இருக்கு..








29 November, 2011

நினைவில் நிறைந்தவர்க்கு!!

முதலில் மீண்டும் ஒரு முறை இலங்கையில் ஈழப்போரில் உயிர் நீத்த அத்தனை மாவீரர்களுக்கும், மக்களுக்கும் அஞ்சலிகளும், வணக்கங்களும்.

இம்முறையும் அஞ்சலிக்கும், அதன் பின்னான நிகழ்வுகளுக்கும் போக மனம் வரவில்லை. கேளிக்கைகள் பிடிக்கவில்லை. இவர்களின் தேவையில்லாத கொள்கைகள் பிடிக்கவில்லை. போயிருந்து மனம் வெதும்பி வருவதைவிட மனதார வீட்டிலேயே வணங்கினோம்.

 

புலம்பெயர் தமிழர்களைப் பொறுத்தவரை நவம்பர் 27 மாலை 6 மணிக்கு எல்லோரும் ஒன்றுகூடி அஞ்சலி செய்வோம். பின்னர் மண்டபம் கிடைப்பதைப் பொறுத்து ஒரு சனிக்கிழமை கலை நிகழ்வுகள் நடைபெறும். இப்போது??இவர்களுக்குள்ளேயே கொள்கை வேறுபாடுகள், குழுப் பிரிவுகள். நாடுகடந்த அரசமைப்போம் என்று ஆளுக்கொரு தலைமையின் கீழ் நாட்டுக்கு நாடு அரசு அமைக்க முயல்கிறார்கள். பிடிக்கவில்லை. ஒதுங்கிவிட்டோம்.

சிங்களவர் எல்லோரும் கெட்டவர் இல்லை. தமிழர் எல்லோரும் நல்லவர் இல்லை. அதனால் தான் இலங்கையில் ஈழப்போரில் உயிர் நீத்த என்று சொன்னேன். அப்பாவித் தமிழரோடு உயிரிழந்த அப்பாவிகளையும் சேர்த்து. எத்தனையோ தமிழர் உயிரைக் காப்பாற்றிய சிங்களவர் இருக்கிறார்கள். தமிழரையே காட்டிக்கொடுத்துக் கொலைக்குக் காரணமான தமிழர் இருக்கிறார்கள். இங்கே நான் இராணுவம், போராளி என்று பிரித்துச் சொல்லவில்லை.

சிறுவயதில் பார்த்த அப்பாவின் நண்பன் ரட்ணவீரா மாமாவின் கறுத்த நெடிய உருவமும், வெள்ளைப் பல் சிரிப்பும் இப்போதும் நினைவிருக்கிறது. பாதிக் காதை மூடியதாகப் படிய வாரிய முடியோடு வீரா மாமா கல்யாணம் செய்து கூட்டி வந்த ஆண்ட்டியும் நினைவில் இருக்கிறார். கந்தளாயில் அப்பாவோடு வேலை செய்தவர்களின் கதைகள் மட்டும் நினைவில்.

83 கலவரம். அப்போது சித்தியும் சித்தப்பாவும் பண்டாரவளையில் ஆசிரியப் பணியில் இருந்தார்கள். தமிழர் என்று தெரிந்த நொடி உயிரோடு கொழுத்தப்பட்ட காலம். இராணுவ வீரன் வீட்டிலேயே வாடகைக்கு இருந்தார்கள். இரவில் வீட்டின் மீது கல்வீசப்படும். காலையில் வீட்டம்மா அவர்கள் வீட்டு பஷன் ஃப்ரூட் பழம் வீழ்ந்ததாய் சொல்லி நிலமையை இலகுவாக்குவார். முதலில் என்னைக் கொன்றே உங்களை நெருங்க முடியும் தைரியமாய் இருங்கள் என்று சொல்லி இருவரையும் ஊருக்கு உயிரோடு அனுப்பி வைத்த அதே இராணுவ வீரன். அக்காச்சி ஊருக்குப் போனபோது சந்தித்த இராணுவ வீரர்கள். அண்ணாவிடம் வைத்தியம் பார்க்கும் போலீஸ். எல்லோரும் நல்ல சிங்களவர்கள்.

மாமியாரின் தென்னந்தோட்டத்தில் இளநீர் களவாகப் பிடுங்கும் இராணுவத்தினர் ’பசிக்குது அம்மா’ என்னும்போது இன்னும் இரண்டைப் பறித்துப் போடச்சொல்லிவிட்டு அடுத்த தடவை கேட்டுப் பிடுங்கவேண்டும் என்று சொல்வார்களாம். இருந்தாலும் அவ்வப்போது பசித்தவர்கள் பழங்கணக்கும் பார்க்கும்படியாக இருக்கிறது திருடர்களின் அட்டூழியம். விடுதலைப் புலிகள் இருந்தபோது அடங்கி இருந்த திருடனெல்லாம் இப்போது பகலிலேயே திருடும் தைரியத்தோடு இருக்கிறானாம். அவ்வப்போது ’அவங்கள் இருக்கேக்க’ என்று நம் மக்கள் அங்கலாய்க்கத்தான் செய்கிறார்கள்.

வீடுவீடாக வந்து மாவீரர் தினத்தன்று விளக்கேற்றக் கூடாதென்று சொல்லப்பட்டதாம். கோவிலில் கூட விளக்கு அணைக்கப்பட்டதாம். போகட்டும். எங்கள் உணர்வுகளால் அவர்கள் ஆத்ம சாந்திக்கு ஆயிரம் என்ன லட்சம் தீபங்கள் ஏற்றுவோம்.

என்னதான் இராணுவம் அன்பாய் இருந்தாலும் அடிமனதில் ஒரு பயம் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. எங்களுக்கும். அங்கே இருக்கும் அவர்களுக்கும். எத்தனை நாளைக்கு இந்த வாழ்வு?? இன்னொரு போரைத் தாங்கும் சக்தி அவர்களிடம் இல்லை. ஏனென்றால் அத்தனை இழந்திருக்கிறார்கள். உயிர்ப் பயம் இப்போதும் இருக்கிறது. குண்டுச் சத்தம் கேட்பதில்லை. அந்த அளவில் நிம்மதியாக ஒரு வாய் உண்டு, உறங்குகிறார்கள். ஏன் கெடுக்க வேண்டும்??

இழப்பை அநுபவித்தவர்க்குத் தெரியும் வலியின் அருமை. கடந்த மாதம் சானல் 4 இல் ஒளிபரப்பிய கடைசிக்கட்டப் போர் பற்றிய டாகுமெண்ட்ரியை இங்கே ஒரு சானலில் ஒளிபரப்பினார்கள். இன்னமும் வலிக்கிறது. பார்த்த எனக்கே இத்துணை வலியென்றால் அங்கே உயிரைக் கையில் பிடித்தபடி ஓடிய என் உறவுகளுக்கு எப்படி இருக்கும்?? இங்கிருந்து வீரம் பேசலாம். நாளை ஒன்றென்றால் நம்மில் எத்தனை பேர் நாட்டுக்குப் போவோம் உறவுகளின் உயிர் காக்க?? போயிருக்கிறார்கள். இல்லை என்கவில்லை. என் அண்ணன்களைக் காக்கவென்று நான் போவேனா?? சாத்தியம் இல்லாதபோது பேசக்கூடாது. அப்படியும் பேசுபவர் கேட்பது பிடிக்காவிட்டால் ஒதுங்கிப் போக வேண்டும். போய்விட்டோம்.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவையேனும் நல்லவையாக அமையட்டும்.

பிரார்த்திப்போம்!!

maaveerar

28 August, 2011

என்னம்மோ நடக்கு!!

’அது வேற ஒண்டும் இல்லை அப்பா. இப்ப என்னில யாருக்காச்சும் கோவம்னு வைங்க. இந்த சந்தர்ப்பத்த வச்சு உடனவே நைட் எங்க வீட்டுக்கு கிறீஸ் மனிதன் வருவான். அதுக்குன்னு கிறீஸ் மனிதன் இல்லேன்னு இல்லை. ஆனா நிஜமான கிறீஸ் மனிதர்களை விட போலிகள் ஜாஸ்தி ஆய்டிச்சு. பகல்ல கொல்லைல மூ*** கூட்டுக்கு போனாக்கூட அங்க கிறீஸ் மனிதன் நின்னா நம்ம ஊரு பொண்ணுங்க என்னதான் பண்ணுவாங்க. இந்த சந்தர்ப்பத்தை சாக்கா வச்சு அங்கங்க இப்டி தனியா இருக்கிறவங்களுக்கு தொல்லை பண்ணிட்டு இருக்காங்க. ஆனா நிஜ கிறீஸ் மனுசங்க எப்ப வருவாங்கன்னு யாருக்கும் தெரியல’

இது அப்பாவுக்கு ரஜி சொல்லியது. வெறுப்போடு இருக்கிறான். இப்போதுதான் திருடர் தொல்லை கொஞ்சம் ஓய்ந்துகொண்டு போகிறதென்றால் இது புதுத் தொல்லை. அண்ணாவின் வீடு நெருக்கமான இடத்தில் இருப்பதால் கத்தினால் உதவிக்கு யாராவது வருவார்கள். ரஜிக்கு அப்படி அல்ல. இருள ஆரம்பித்ததுமே அண்ணி அவனை எங்கும் போகவிடுவதில்லையாம்.

யாரைப் பற்றி சொல்கிறேன் என்று தெரியாதவர்களுக்காக எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். இலங்கையில் தமிழர்/முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் கறுப்பு உடையோடு, உடலில் கிறீஸ் பூசியபடி மர்ம மனிதர்கள் அட்டகாசம் செய்கிறார்களாம். தனியாக இருக்கும் பெண்கள்தான் அவர்கள் குறி. ஆனால் எங்கேயும் திருட்டு நடைபெறவில்லை. முதலில் இரவில் ஆரம்பித்த தொல்லை இப்போது பகலிலும் நடக்கிறது. பிடிக்கப்போனால் இராணுவ முகாமுக்குள் தப்பி ஓடுகிறார்களாம். பொதுமக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்டவர்களும் விடுதலை செய்யப்பட்டோ அல்லது பொலிஸ் பாதுகாப்போடோ இருக்கிறார்களாம். இதனால் பொலிஸ்/இராணுவத்துக்கும் பொதுமக்களுக்குமிடையே பல முரண்பாடுகள் வந்து அடிதடியாகவும் போயிருக்கிறது. ஆனால் வெல்வது யார்?? உங்களுக்கே தெரியும்.

நேற்று ஸ்கைப்பில் பேசியபோது இளைய மச்சினர் வைஃப் கி.ம வுக்கு ஆணென்று காட்டிக்கொள்ளவென்று இரவில் சறமும் ஷர்ட்டும் போட்டுக்கொண்டு தூங்குவதாக மச்சினர் கிண்டல் பண்ணினாலும் எல்லோரும் இருட்ட ஆரம்பித்ததும் பயத்தோடுதான் இருக்கிறார்கள். மாமி தென்னந்தோப்பில் தனியாக பெரும் பொழுதைக் கழிப்பதால் சரியாகத் தூங்குவதில்லை என்றார். 20 வயதுக்குக் கீழேயும், 60 வயதுக்கு மேலேயும் உள்ளவர்களைக் கொன்று உடல் உறுப்புகளை திருடுகிறார்கள் என்றும் ஒரு கதை வந்ததாம். இப்போது மாமியின் உறவினர்கள் மாமி இங்கு வந்ததால் தனியாக இருக்கப் பயத்தோடு இருக்கிறார்கள்.

என் ஒன்றுவிட்ட அக்காவின் மாமியாருக்கு காதில் ஒரு துண்டை வெட்டியதோடு, புத்திசுவாதீனம் குறைந்த அவர்களின் உறவுப் பெண்ணுக்கும் வெட்டி இருக்கிறார்கள். அண்ணா ஹாஸ்பிடலில் போய் பார்த்திருக்கிறார். எங்கள் ஊர்ப் பெண்கள் இருவர் பகலில் சந்தைக்குப் போனபொழுது யாருமில்லாத வழியில் திடீரென வந்த கி.ம அவர்களை அடித்துவிட்டு ஓடி இருக்கிறான்.

ஒதுக்குப்புறமாகவும், தள்ளித் தள்ளியும் இருக்கும் வீடுகளுக்கு வருவதும் தப்பி ஓடுவதும் அவர்களுக்கு சுலபமாக இருக்கிறது. யாரும் பிடித்தாலும் நழுவ இலகுவாய் கிறீஸ் வேறு. திருவிழா சமயங்களில் ஊரில் கிறீஸ் பூசிய மரத்தில் ஏறி சாகசம் செய்யும் மாம்ஸின் ஃப்ரெண்ட் அது உடலில் பட்ட இடம்  அவ்வளவு எரிச்சலாக இருக்குமென்று சொல்வாராம். எப்படித்தான் அதை பூசிக்கொண்டு அலைகிறார்களோ தெரியவில்லை.

என்னதான் இருந்தாலும் ஒன்றுமட்டும் நன்றாகத் தெரிகிறது. நாங்கள் நிம்மதியாக இருப்பது யாருக்கோ பொறுக்கவில்லைப்போலும். அரசியலோ இல்லை வேறெதுவோ. காரணம் எதுவாயிருந்தாலும் இரவில் நிம்மதியாக உறங்க முடியாமல் பகலிலும் பயத்தோடு அலையும் அவலம் எம்மினத்துக்கு மறுபடி வந்திருக்கிறது. அண்ணா, ரஜி, மச்சினரோடு பேசும்போதெல்லாம் பத்திரமாக இருக்கச் சொல்லிக்கொள்வதை விட எங்களைப்போன்ற புலம் பெயர் வாழ் தமிழர்களால் வேறென்ன செய்ய முடியும்??

பிள்ளையாரப்பா!!

24 August, 2011

மாமி வந்தாச்சு.

ஊரிலிருந்து மாமியார் வந்திருக்கிறார்கள். மூன்று மாத விசா. விசா 20,000/-இன்ஷூரன்ஸ் 38,,000/-, டிக்கட் 190,000ரூபா. வந்ததும் ’வேற ஒண்ணுமில்லை பாசத்துக்கு விலை ஏறிப்போச்சு. இவ்ளோ செலவு செஞ்சுதான் என்ன கூப்டணும்னா இனிமேல நான் வரமாட்டேன்’ன்னு சொன்னார்கள். மாமியாரிடம் குண்டாயிட்டேன்னு கொஞ்சம் அதிகமாக சொல்லிவிட்டேன் என்பது அவங்க வாங்கி வந்த XL சைஸ் சுடிதாரைப் பார்த்ததும் புரிந்தது. போட்டுக்கொண்டு சதுரிடம் எப்படி என்று கேட்டேன். ‘இதான் அப்பம்மா உங்களுக்கு வாங்கிட்டு வந்த nattkjole (நைட்டி) வா??’ என்றார். பத்திரமாக மடித்து வைத்துவிட்டேன். இங்கே இருக்கும் தையல் அக்காவிடம் கொடுத்து டிங்கரிங் செய்தால் சுண்டக்கா காற்பணம் கதையாகிவிடும். அவ்ளோதான். சொக்கா.. அது உனக்கு இல்லை!!

மாம்ஸ்க்கு அழகாக எம்ப்ராய்டரி செய்த ஒரு சட்டை வாங்கியிருக்கிறார்கள். கொஞ்சம் லூசாக இருந்தது. டைட்டாக ஷர்ட்/டீஷர்ட் போட்டுப் பழகியவர் ‘என்னம்மா இது கொஞ்சம் பெருசா இருக்கே’ என்றார். ‘பரவால்ல.. நீ கொஞ்சம் குண்டாயிடு அப்போ சைஸ் சரியாய்டும்’ என்று மாமியார் சொன்னார். மொக்கைசாமி s/o மொக்கை மம்மி என்று நான் சொன்னேன்.

மாமியார் வந்த அன்று இடியப்பம் செய்தேன். மாம்ஸுக்கு புட்டு பிடிக்கும் என்பதால் இடியப்பம் எப்போதாவது அவருக்கு காய்ச்சல், சளிப்பிடிக்கும் சமயம் அவிப்பதோடு சரி. மாம்ஸ் இன்றுவரை அம்மா வந்ததுனாலதான் எனக்கு இடியப்பம் கிடைச்சுதென்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

011 எனக்கு நினைவு  தெரிந்த நாளிலிருந்து அம்மா இடியப்பம் அவிக்கும் போதெல்லாம் நானும் கொஞ்சம் மாவை வாங்கி அதில் உருண்டைகளில் ஆரம்பித்து பின் படிப்படியாக பூ, குருவி, மீன் என விதவிதமாக செய்து கொடுப்பேன். அம்மா அதை இடியப்பத்தின் அருகில் வைத்து அவித்துக்கொடுப்பார். கையில் சுடாமல் ஊதியும், நேரமின்மைக்கு ஏற்ப ஒரு தட்டில் ஆவி பறக்கவுமென என் கைவண்ணம் கிடைக்கும். நசுங்காமல் இருக்கவென முதல் தட்டில் வைப்பதால் மூடியிலிருந்து நீர் சொட்டி மெல்லிய ஈரப்பதத்தோடு அவளவு சுவையாக இருக்கும். இன்று என்னவோ ஆசை வந்தாலும் குருவியோ மீனோ செய்ய வராததால் உருண்டைகளே செய்தேன். சுவை பார்த்த சது அடுத்த தடவை இடியப்பம் செய்யும்போது சொல்லச் சொல்லி இருக்கிறார்.

ஊரில் எங்கள் வீட்டின் எதிரில் அம்மாவின் அத்தான் வீடு. அவரும் மனைவியும் அம்மாவுக்குப் போலவே எங்களுக்கும் பெரியத்தான், சின்னாச்சி அக்காதான். யாரோ அவரை சின்னாச்சன் என்று சொல்லப்போய் எங்களுக்குள் இப்போதும் சின்னாச்சன் என்றே சொல்லிக்கொள்வோம். சின்னாச்சி அக்கா வீட்டில் மூன்று வேளை சாப்பாடும் சமைத்துக்கொடுப்பார். நாங்கள் மதிய, இரவுச் சாப்பாடு வாங்கியதாய் நினைவில்லை. ஆனால் காலைச்சாப்பாடு அதிகம் வாங்கி இருக்கிறோம். ஆரம்பத்தில் எவளவென்று சரியாக நினைவில்லை ஆனால் கடைசியாக 1990 இடப்பெயர்வின் முன் ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்கிய நினைவு. காலை மெனுவில் இடியப்பம், புட்டு இருந்தாலும் இடியப்பமே எங்கள் தேர்வு.

இடியப்பம் வாங்க ’குட்டிக்காலால போய்ட்டுவாம்மாச்சி’ என்ற ஐஸோடு நானே காலையில் அனுப்பி வைக்கப்படுவேன். குட்டிக்கால் வளர்ந்து விட்டதாய் சொன்னபோது கடைக்குட்டி சின்னப்பொண்ணு நீதான் போகணும் என்று விரட்டப்பட்டேன். ஓலைக்குசினி. இருட்டாக இருக்கும். உள்ளே போய் சிறிது நேரத்திலேயே கண்ணுக்கு எதுவும் தெரியும். ஆனால் எப்போதும் எல்லாம் அதனதன் இடத்தில் இருப்பதால் நேராகப் போய் வழக்கமாக இருக்கும் பலகைமீது அமர்ந்துவிடுவேன். அடுப்பின் வெளிச்சம் விளக்கின் தேவையை இல்லாது ஆக்கினாலும் அடுப்பின் ஓரத்தில் ஒரு மண்ணெண்ணெய் விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருக்கும். சின்னாச்சி அக்காவின் தங்கை மகள் பிரேமாக்கா உதவியோடு வேலை மும்முரமாக நடந்துகொண்டிருக்கும். சும்மாவே இருட்டு மழைநாட்களில் கும்மிருட்டாகிப் போக ஈர விறகோடு அவர்கள் போராடுவதும்,  மழைக்குளிருக்கு இதமாய் குசினியின் கதகதப்பும் இப்போதும் நினைவிருக்கிறது.

ஒரு பெரிய ஓலைப் பெட்டிக்குள் மாவைக்கொட்டி முழுவதும் குழைத்தால் காய்ந்துவிடுமென்று ஒரு ஓரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பதமாகக் குழைப்பார்கள். மர உரலால் இடியப்பத்தட்டில் பிழிந்துவிடும் வேகத்தை விட அவிந்த இடியப்பத்தை உலைப்பானையிலிருந்து இறக்கி ஒரு பெரிய சுளகில் அடுக்கி வைக்கும் வேகம் அதிகம். அதிசயமாய் பார்த்தபடி இருக்கும் என்னோடு பேசியபடியே பிரேமாக்கா வேலை செய்வார். இன்னொரு  மூலையில்  அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பேப்பர் கிழித்து, லாவகமாக டிஷ்யூவை வாழை இலைக்குப் பதிலாக வைத்து சம்பலும் சேர்த்து பார்சலாகக் கொடுப்பார். சொதிக்கு ஏற்ற ஒரு பாத்திரமோ ஹார்லிக்ஸ் போத்தலோ நான் கொண்டு போவேன்.

சின்னாச்சி அக்கா நெற்றியில் ஒரு ரூபா அளவில் எப்போதும் குங்குமம் இருக்கும். கவுன் அழுக்காகாமல், வேலைக்கு இடைஞ்சலில்லாமல் இருக்கவென பிரேமாக்கா இடுப்பில் சறம் கட்டி இருப்பா. தாய், தங்கைகள் குடும்பமாக வந்து அங்கேயே இருந்து அவர்களும் சமையல் செய்து கொடுக்க ஆரம்பித்த போது கூட பிரேமாக்கா சின்னாச்சி அக்காவுக்கே உதவியாக இருந்தார்.

உள்ளங்கை அளவில் குட்டிக்குட்டியாய் இடியப்பம். ஒரு தடவை பிழிந்து பாலெடுத்த தேங்காய்ப்பூவில் சம்பல், மூன்றாவது பாலில் நீரோட்டமாய் இருக்கும் சொதி. ஆனால் எங்கிருந்து அந்தச் சுவையைச் சேர்த்தார்கள் என்று இன்றுவரை தெரியவில்லை.

சின்னாச்சி அக்காவின் ஒரே மகனுக்கு என் வயது. அவன் முழுப் பெயர் தெரியாது. வீட்டில் லகு என்று கூப்பிடுவார்கள். அம்மாவுக்கு அந்த அத்தானைக் கட்டி வைக்கக் கேட்டார்களாம். அம்மா தப்பியதால் என்னை லகுவுக்கு கொடுத்து அவரின் கவலையை போக்கிவிடலாமென்று கேலி பண்ணுவார்கள். என் தலை தெரிந்தாலே வீட்டுக்கோடியில் போய் ஒளிந்து கொள்ளும் லகு என்னிடமிருந்து தப்பிவிட்டான் பாவம். இப்போது சின்னாச்சி அக்கா சமைத்துக்கொடுப்பதில்லையாம். 2002 ஊருக்குப் போன சமயம் பார்த்துவிட்டு வந்தேன். அம்முவைத் தூக்கி அப்படியே என்னைப் பார்த்த நினைவு வருவதாகச் சொல்லிக் கொஞ்சினார். பெரியத்தான் அதே சிரிப்போடு தள்ளி இருந்து பார்த்துக்கொண்டிருந்தார். பிரேமாக்கா நர்ஸிங் கோர்ஸ் முடித்து அண்ணாவின் ஹாஸ்பிடலில் நர்ஸாக இருந்தார்.

idiyappam இணையத்தில் எடுத்த படம் இது. தனியாக இடியப்ப உரலென்றும், அதிலேயே முறுக்கு அச்சு போடக்கூடியது போலவும் கிடைக்கும். பூவரச மரத்தில் செய்த உரலும், பனை ஈர்க்கில் செய்த தட்டும் வெகுகாலம் இருக்கும். மாமி ஒரு முறை வரும்போது மர உரல் வாங்கிக்கொண்டு வந்தார். அதில் இடியப்பம் பிழிவதென்பது அவளவு இலகுவானதல்ல. கையில் நல்ல பலம் இருக்கவேண்டும். என்னால் இரண்டுக்கு மேல் அழுத்திப் பிழிய முடியவில்லை. இலகுவாக இருக்கவென்று மாவுக்கு நீரை அதிகம் சேர்த்தால் இடியப்பம் சாஃப்ட்டாக வரவில்லை.

278

அப்படியே பத்திரமாக அதை மாமியிடம் கொடுத்து அனுப்பிவிட்டு கன் டைப் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உரலும், பிளாஸ்டிக் தட்டும் வாங்கிவிட்டேன்.

 

 

இப்போது இதற்கென்று மெஷினே வந்துவிட்டதாம். முன்பென்றால் சின்னாச்சி அக்காவுக்கு வாங்கிக் கொடுத்திருக்கலாம்.

23 March, 2011

வேண்டும்போது வராத மழை..

ஊரில் எல்லாத் தொல்லையும் ஓய்ந்தாலும் மழை விட்டபாடாய் இல்லை. ஊரே வெள்ளக்காடாய். கடல் மட்டமும் உயர்ந்து உள்ளதால் ஆற்று நீர் கடலுக்குள் கலக்க முடியாமல் ஊருக்குள்ளேயே நிறைந்துவிட்டது. கொடும் குளிர். ரஜி வீடு கொஞ்சம் உயரமான இடத்தில் இருப்பதால் வீட்டுக்குள் தண்ணீர் வரவில்லை. அண்ணா முன் பக்கத்துக்கு சுற்று மதில் கட்டிவிட்டதால் வயற் பிரதேசமான இடத்தில் இருக்கும் அவர் வீட்டுக்குள் தண்ணீர் குறைவாகவே புகுந்துள்ளது. பலர் பாடசாலைகளில் தஞ்சம். சொந்த நாடு மட்டுமல்ல, சொந்த வீடு கூட தமிழனுக்கு..

DSC05448 DSC05449

அண்ணா ஐந்து மாடுகள் வாங்கினார். சீமைப்பசுக்கள். எங்கள் ஊரில் கேப்பை மாடு என்பார்கள். அத்தனை அன்பாகப் பார்த்துக்கொண்டார்கள். போன வாரம் அண்ணா ‘வெள்ளை மாடு படுத்திட்டுது அப்பா’ என்று ஸ்கைப்பில் சொன்னபோது கூட இருந்து கேட்டுக்கொண்டு இருந்த அம்மு கேட்டார் ‘மாடு படுத்தா தப்பாம்மா.. தூங்கிறதுன்னா அது படுத்து தானே ஆகணும்’ கவலை மீறி அண்ணா சிரித்தார். மாடுகள் சீக்காகிப் போவதை அப்படிச் சொல்வது எங்கள் வழக்கம் என்று அவளுக்குப் புரிய வைத்தேன். இரண்டு நாள் முன்னர் எந்த வைத்தியமும் சேராமல் செத்துவிட்டது. டவுன் கவுன்சிலில் சொல்லி, ட்ராக்டரில் வந்து, புதைந்து, மதில் சுவரையும் சற்றே இடித்து, ஏற்றிக் கொண்டு போனார்களாம். இப்போது அடுத்த மாடுகளும் வரிசையாய் நோயில்..

பொங்கல் சமயமே பெருவெள்ளம். அண்ணா, ரஜி, மச்சினர், மாமியார் உட்பட பலர் வீட்டுக்குள்ளேயே பொங்கி வராத சூரியனுக்கு சம்பிரதாயமாகப் படைத்தார்கள். வெடி கூட வீட்டுக்குள்தான். அதிலும் எங்களுக்காக, ஒற்றை மத்தாப்பு கூட சுட்டுப் போடாத துர்ப்பாக்கியசாலிகளுக்காக முதல் நாள் இரவே சக்கரவாணம் வெடித்துக் காட்டினார் அண்ணா. எத்தனையோ வருடங்களின் பின் பட்டாசுச் சத்தத்தோடு பொங்கல். இந்த மழை மட்டும் அன்று நின்றிருந்தால்..

DSC05400 DSC05422

பயிர்கள் எல்லாம் அழிந்துபோய், அழுகிப்போய், குளம்போல் தோன்றும் வயல்கள், எப்போதும் உடைப்பெடுக்கும் என மிரட்டும் குளங்கள், பாடசாலைகளுக்கு மூடுவிழா. பள்ளிப் பருவத்தில் அவ்வளவு ஆனந்தம் தந்த மழைக்கால விடுமுறை. இன்னமும் ஊரோடு அதே பள்ளிப் பிள்ளையாய் இருந்திருந்தால்..

90ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து கிராமம் ஒன்றில் இருந்தோம். வீட்டின் பின் பக்கம் குளம். பெரிய குளம். ஊரில் எப்போதாவது குளங்கள் வான் பாய்வதை வேடிக்கை பார்த்தபோது இருந்த சந்தோஷம் அப்போது இருக்கவில்லை. சில இடங்களில் உடைந்துவிடத் தயாராய் இருந்த குளக்கட்டு ரொம்பவே மிரட்டியது. அரிசி மூட்டைகளை உயரமாக அடுக்கி வைத்து அதன் மேல் ஏறி விழிப்போடு கழித்த இரவு. வீட்டுப் படி மேவி நில்லாது ஓடிய வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படும் பாம்புகள், தேள்கள். நீர் வடிந்து போக வழியில்லாத களிமண் பூமி. இருந்த அரிசியையும், ஈர விறகையும் வைத்து பசி போக்கியதோடு இரவில் குளிரும் விரட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்த அகதிகளிடம் குளிர்ச்சட்டை ஏது. அம்மம்மாவின் காட்டன் சேலையால் சுற்றிக் கொண்டு சுருண்டு போய் இருப்போம்.

அப்போது எங்களிடம் மாமாவின் மாடுகள் இரண்டும், முன் வீட்டுப் பாட்டி தந்த மாடு ஒன்றும் இருந்தது. மழையில் அவை பட்ட அவஸ்தை. அந்த மழையிலும் விறகு தறித்து வந்து இரவில் இரண்டு விறகை அவற்றுக்கும் எரித்துவிட்டுக் கூதல் விரட்டுவான் ரஜி. மாடு மீட்கப் போய் புதைகுழியில் மாளப் பார்த்த அக்காச்சி நேற்று ஸ்கைப்பில் சொன்னாள் ’உடம்பெல்லாம் மூழ்க ஆரம்பிச்சு கடைசில கண் வரைக்கும் சேறு மூடினப்போ சிவப்பியோட கண்ல தெரிஞ்சுதே ஒரு மரண பயம்.. என் வாழ்க்கேல மறக்கமாட்டேன்பா’

hund 94இல் இருந்த வீட்டின் பின்பக்க ஒழுங்கை மழை பெய்யும் நாட்களில் ஆறு. இல்லாத நாட்களில் மறுபடி ஒழுங்கை. எங்கிருந்துதான் அவளவு வெள்ளம் வருமோ. மாரிகாலம், தொடர் மழை தவிர மீதி நாளில் வந்த வேகத்திலேயே வடிந்து விடும் மணல் பூமி. அப்போது நாங்கள் வளர்த்த செல்லம் லஸி. Alsatian நாய். ஆனந்தமாய் குளியல் போடும். வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படும் தடிகளையும், நாங்கள் தூக்கிப் போடும் பந்துகளையும் நீந்தியபடியே தேடி எடுத்து வரும். உபரியாய் தேங்காய்களும் கவ்வி வரும். நாங்களும் சேர்ந்து நனைந்தபடி வெள்ளத்தில் விளையாடிய நாட்கள் இன்னமும் ஏங்க வைப்பவை.

சின்ன மச்சினர் புகுந்த ஊரில் அவளவு சேறாக இருக்கும். நிலத்தில் கால் வைத்தால் சர்ர்ர்ர். ஸ்கேட்டிங் தான். நடை கிடையாது. அப்பாவின் கிராமத்துக்கு மழைக்காலத்தில் போவதென்றால் எங்களுக்கு அவளவு கொண்டாட்டம். காடும், மழையும், புதுவிதமான பூச்சிகளின் ஒலியும், மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சமும் இரவில் ஒரு பயம் கலந்த தூக்கத்தைத் தரும். போர்க் காரணத்தால் தார் ரோடே இல்லாத காலத்தில் மண் ரோடுகளும், வண்டிகளும், நாங்களும் போக்குவரத்தில் பட்ட அவஸ்தைகள்.. அப்பப்பா..

வேண்டுமென்றே மறந்த குடை, மழை வெள்ளத்தில் ஆட்டம், பல் கிட்டும் குளிர்,  போர்வைக்குள் ஒளிந்தபடி கால் மடித்து அமர்ந்து, அம்மாவின் திட்டோடு ஈரத் தலை உலர, கை சுடும் தேநீர் இதமாய் குளிர் விரட்ட.. ஹூம்.. இங்கேயும் எல்லாம் உண்டு. என்ன இருந்து அனுபவிக்க நேரம்தான் இல்லை. அப்படியே இருந்தாலும் இங்கே பெய்யும் மழை மட்டும் ஏன் தான் அநியாயத்துக்குக் குளிர்ர்ர்ர்ந்து தொலைக்கிறதோ தெரியவில்லை. மழைக் காதலனான என் நண்பனுக்கு அடிக்கடி சொல்வேன் ‘இங்க வந்து இந்த மழையில நனைஞ்சிட்டு அப்புறமும் சின்ன சின்ன மழைத் துளிகள்னு பாடு.. அப்போ ஒத்துக்கறேன் உன் மழைக் காதலை’ என்று.

13 March, 2011

சுனாமியும் உண்டா??

ஜப்பானில் சுனாமி, நிலநடுக்கத்தில் உயிரை பறிகொடுத்த அத்தனை பேருக்கும் எல்லோரும் செலுத்திய அஞ்சலிகளோடு என்னதையும் சேர்த்துக் கொள்கிறேன். காட்சிகள் தந்த மலைப்பும், வேதனையும் போக நாள் பல ஆகும்.

japan-tsunami

ஆஃபீஸில் இருந்து அடிக்கடி நிலமையை அறிந்து கொண்டும், கடவுளை வேண்டிக் கொண்டும் இருந்தபோது இன்னும் கொஞ்சம் காலம் போனதும் மழையை, ஸ்னோவைப் போல சுனாமியும் பூகம்பமும் கூட எமக்கு ஆச்சரியம் தராத ஒன்றாய் போய்விடும் என்று சொன்னேன். கேட்கவே பயமாக இருந்தாலும் நாம் இயற்கையை அழித்துக் கொண்டிருக்கும் வேகத்தில் இப்படி ஆனாலும் ஆகலாம் என்று கலீக்ஸ் ஆமோதித்தார்கள். ஜப்பான்காரர்கள் எமக்கு செய்த கொடுமைக்குத்தான் இப்படி ஆகி இருக்கு அங்கே என்று ஒரு நண்பர் சொன்னார். எனக்கும் எங்கேயோ மெலிதாக அந்த எண்ணம் ஒரே ஒரு தரம் தலை தூக்கி இருந்தது. அரசாங்கம் செய்யும் அட்டூழியத்துக்கு அப்பாவி மக்களை ஏன் பலி ஆக்க வேண்டும்?? கடவுளிடம் என் நினைப்புக்கு மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

இரண்டு வாரம் முன்னர் அம்மாவின் பிறந்தநாளுக்கு சின்னதாக ஒரு பார்ட்டி வைத்தோம். அப்பா உடன் இல்லாத கவலையை ஒரு நண்பர் கிளறிவிட சின்னதாய் ஒரு அழுகையோடு சந்தோஷமாகவே கேக் கட் செய்தார் அம்மா. சாப்பாடு முடிந்ததும் சுனாமியும் உண்டா என்று தங்கா அக்கா கேட்டார். என்னதான் சிரித்தாலும் பிள்ளையாரே என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டேன்.

2004 அக்டோபரில் இலங்கைக்குப் போய் வந்தோம். டிசம்பரில் சுனாமி. காலையில் குண்டு வெடித்தது போல் ஏதோ சத்தம் கேட்டு எல்லோரும் வெளியே வந்து பார்த்தார்களாம். வீட்டில் அம்மா, அப்பா, ரஜி, சின்னண்ணி, இரண்டு மாதக் குழந்தையாக சாத்வி, அத்தை பையன் ஒருவன் என எல்லோரும் இருந்தார்கள். ஓரிரு நிமிடங்களில் ‘ஓடுங்கோ தண்ணி வருது, தண்ணி வருது’ என்று ஓலமிட்டபடி தெருவால் ஆட்கள் ஓடுவதும், இரைச்சலாய் ஒரு சத்தம் கேட்பதுமாய் என்னவென்று தெரியாமல் இவர்களும் கூட்டத்தோடு ஓடி இருக்கிறார்கள். ஊரின் மத்தியில் எங்கள் வீடு. வீட்டிலிருந்து அரை கி.மீ தூரத்தில் கடல். ஆனாலும் எங்கிருந்து தண்ணீர், என்ன ஏது என அறியாமல் பயமும், பதட்டமுமாய் ஓடியவர்களை பத்தடி போவதற்குள் விரட்டிப் பிடித்தது வெள்ளம்.

எங்கள் வீடு உயரமாகக் கட்டப்பட்டிருக்கிறது. பக்கத்தில் இரண்டு மாடிக் கட்டடத்தில் ஒரு கடை. அதன் அருகில் உயரமான சந்தைக் கட்டடங்கள், கடைகள். என்னவென்று தெரியாததால் தூர ஓடினால் தப்பிக்கலாம் என்று நினைத்து வயற் பிரதேசம் நோக்கி ஓடி இருக்கிறார்கள்.  அங்கே  அவர்களுக்கு முன்னராகவே வெள்ளம் நிறைந்து நீர்மட்டம் உயர அங்கே இருந்த ஒரு பழைய வீட்டின் மேல் ஏறி இருக்கிறார்கள். கடைசியாக கையில் குழந்தையோடு ரஜி ஏற முயன்ற சமயம் தண்ணீரின் வேகமும் கூட, ஒரு குட்டிப் பனை மரத்தின் கருக்கை எட்டிப் பிடித்துக்கொண்டு அவன் போராடிய கணங்கள். கை கிழிந்து இரத்தம் வழிய கைக்குழந்தையையாவது காப்பற்ற வேண்டுமே என்று அவன் பட்டபாடு இன்று சொன்ன போதும் அம்மாவின் கண்களில் தெரிந்தது.

பழைய கட்டடம் பத்துப் பதினைந்து பேர் பாரமும், தண்ணீரின் வேகமும் தாங்காது இடிந்து விழ ஆரம்பித்ததும்தான் மீண்டும் கடைத்தெருப் பக்கம் போகலாம் என்று நினைத்து இன்னொரு பக்கத்தால் கீழே இறங்கி நீரோட்டத்துக்கு எதிராக ஒருவர் கை ஒருவர் கோர்த்தபடி போயிருக்கிறார்கள். அம்மா ஒரு கட்டத்தில் முடியாது போகவே அப்பாவை கெஞ்சினாராம் தன்னை விட்டு அவர்கள் உயிரைக் காத்துக் கொள்ளச் சொல்லி. சின்னண்ணியின் தம்பி விஷயம் கேட்டு பக்கத்து ஊரிலிருந்து வந்தவர் கயிறொன்றை மரத்தில் கட்டித் தூக்கிப் போட அதன் உதவியோடு எல்லோருமாக உயரமான ஒரு கடையின் மொட்டை மாடியில் ஏறி நின்றிருக்கிறார்கள். இவர்கள் போராட்டத்தோடு வந்து கொண்டிருக்கும்போதே முடியாமல் போய் தண்ணீரோடு அடித்துச் செல்லப்பட்டவர்கள் பலர். மூன்றாவது அலையின் வேகமும் குறைந்த பின்தான் கீழே இறங்கி வந்திருக்கிறார்கள். உயிர்ப் பயம், உடை கிழிந்து எல்லோர் முன்னும் இருந்த நிலை என எல்லாம் தந்த அதிர்வு போக அம்மாவுக்கு நெடுநாட்கள் ஆயிற்று.

அண்ணா அப்போது பக்கத்து ஊரில் இருந்தார். அம்மா வீட்டுக்கு வந்து இது நடப்பதற்கு சற்று முன்னர்தான் கிளம்பி பைக்கில் தன் வீடு போய்க் கொண்டிருந்தவர் விஷயம் அறிந்து திரும்பி வந்திருக்கிறார். அம்மா வீட்டுப் பக்கம் போகமுடியாது என்று தெரிந்ததும் தன்னால் இயன்ற அளவு வெள்ளத்தில் போராடிக் கொண்டிருந்த மக்களை காப்பாற்றி இருக்கிறார். கால் முழுவதும் பனை மட்டைகளும், இன்னும் தண்ணீரோடு வந்த என்னவெல்லாமோ உடல் முழுவதும் கிழித்துப் போட்ட காயங்கள். அண்ணா போலவே இன்னும் நிறைய இளைஞர்களும், ஆண்களும் எத்தனையோ பேரைக் காப்பாற்றினாலும் இழப்பு அதிகம்தான். ரஜியும், அண்ணியின் தம்பியும் கூட எல்லோரையும் பாதுகாப்பாக விட்டுவிட்டு மற்றவர்கள் உதவிக்குப் போயிருக்கிறார்கள். போனதில் கடைசி மாமா குடும்பத்தை மீட்க முடிந்தது. அண்ணா தண்ணீருக்குள் எட்டிப் பிடித்த சிறுவர்களும், பெரியவர்களும் மீண்டும் தண்ணீரால் இழுத்துச் செல்லப்பட்டபோது எப்படி இருந்திருக்கும் அண்ணாவுக்கு. 

எங்கள் வீட்டுக்குள் அரைச் சுவர் உயரத்துக்கு நீர்மட்டம் வந்து போயிருக்கிறது. அழிவென்று எதுவும் இல்லாவிட்டாலும் எங்களின் பழைய ஃபோட்டோ ஆல்பங்கள், ஆவணங்கள் உட்பட எல்லாம் நீரோடு போய்விட்டன. உயிர் இழப்பின் முன் இதெல்லாம் ஒன்றும் இல்லை என்றாலும் கவலை இருக்கத்தான் செய்கிறது. மாமியார் வீடு பக்கத்து ஊரில். கடலில் இருந்து மூன்று மைல் உள்ளே இருந்ததோடு இயற்கையாகவே அரண் போல சேர்ந்திருந்த பெரிய மண் திட்டு ஊருக்குள் வெள்ளம் அதிகளவில் வராமல் காத்துக் கொண்டது.

அப்போதுதான் போய் பார்த்து வந்த ஊரவர்கள், உறவினர்கள், நண்பர்கள் எத்தனை பேரை இழந்துவிடப் போகிறோம் என்று தெரியாத நாங்கள், அந்த வருடம் கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் எங்கள் வீட்டில் என்பதால் கொண்டாட்டமாக இருந்தோம். அன்று நான் செய்த டெசர்ட் ஃப்ரூட் சலட். அளவு சொன்ன நண்பி ’என்னங்க இவ்வ்வ்வ்வ்வ்ளோ வந்திடிச்சு’ன்னு ஒரு பெரிய்ய்ய பாத்திரம் நிறைந்திருந்த சாலட்டை பார்த்து மிரண்டு போய் நான் கேட்டபோது தான் சொன்னார் ’அய்யோ.. அது 100 பேருக்கான அளவுங்க’ என்று. தங்கா அக்கா, அவரின் அக்கா, நாங்கள் என மூன்று குடும்பங்கள்தான் என்றாலும் பேச்சும், கும்மாளம் அவ்வப்போது சாலட்டுமாய் முழுவதும் காலி பண்ணிவிட்டோம். 26 பகல் ஒரு நண்பரின் ஃபோனில் கண் விழித்து விஷயம் அறிந்து.. அப்பா.. அன்று பட்ட வேதனை. அண்ணா எல்லாம் முடிந்து மூன்று ஊர் தள்ளி வந்து இயங்கிக் கொண்டிருந்த ஒரே கமியூனிகேஷன் செண்டரில் வரிசையில் காத்து நின்று கால் செய்த போதுதான் உயிர் வந்தது.

அன்றிலிருந்து நண்பர்கள் வீட்டு விசேஷங்களுக்குச் செய்து கொடுத்தாலும் எங்கள் வீட்டில் எதுவும் விருந்தென்றால் நான் ஃப்ரூட் சாலட் செய்வதே இல்லை. எதுவும் கடந்து போகும் என்பது போல் நாங்கள் ஃப்ரூட் சாலட்டுக்கு வைத்த பெயர்தான் சுனாமி. ஊரில் இருந்த சமயம் தினமும் மாலையில் ரஜி சகிதம் நண்பர்கள் புடைசூழ, அம்மா செய்து கொடுக்கும் சைட் டிஷ்ஷோடு கண்ஸ் கடற்கரை சென்றுவிடுவார். பாட்டில் எல்லாம் காலி செய்து, சிரிதுப் பேசி(?) அப்படியே என்னையும் பிக்கப் பண்ணிக்கொண்டு ஒரு ஒன்பது மணி அளவில் மாமியார் வீட்டுக்குப் போவோம். சது என்னோடு வருவார். லச்சு இந்த யாகசாந்தியில் கலந்து கொள்ளும் வழக்கம் இல்லாத மச்சினரோடு முன்னாடியே போய்விடுவார். ’அண்ணா நீங்க கடல்ல போய் போட்ட ஆட்டம் தாங்க முடியாம தான் சுனாமி வந்திருக்கு’ என்று அக்காச்சி இப்போதும் சொல்வாள்.

என்னதான் இயற்கையை வெல்ல முடியாது என்றாலும் அழிப்பதையாவது மனிதன் நிறுத்தும்வரை சுனாமிகளும், பூகம்பங்களும் தொடரும். இனிமேல் ஜப்பானியர்களின் அணுக்கதிர்களின் பாதிப்பு என்னென்ன கொடுமைகளை கொண்டுவரப் போகிறதோ என்று இப்போதே மனம் பதைக்கிறது. பேரப் பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகளோடு வாழாவிட்டாலும், எம் பிள்ளைகளோடாவது வாழ்ந்து விட்டு சாக பிள்ளையாரப்பா வழி விடட்டும்.

30 January, 2011

கொலைஞர்!!

’இண்டைக்கு சந்தேல மீன் குறைவு. கன்போட் நங்கூரம் போட்டிருக்காம்’

சந்தைக்குப் போய் வரும் அப்பாவோ, அப்புச்சியோ அம்மாவிடம் சொல்வார்கள். பின் எப்படி மீன் வந்தது? அவர்கள் வீட்டில் அடுப்பெரிய வேண்டுமே. உயிரை மறந்து படகோடு போவார்கள். பல சமயம் வள்ளம் மட்டும் எங்காவது கரை ஒதுங்கும். ’அப்பாவை நேவி சுட்டிட்டான் டீச்சர். அதான் கொப்பி வாங்கக் காசில்லை எண்டு அம்மா சொன்னவ’ என்று என் தோழி சொன்னதையே  ’சோதினைக்காசு அம்மா அடுத்த கிழமை தாறாவாம். அப்பாவை நேவி சுட்டதாலை வீட்டிலை காசில்லை டீச்சர்’ என்று என் மாணவியும் சொன்னாள்.

நெய்தல் நிலம் எங்கள் ஊர். அலை ஓசையோடு அவ்வப்போது நேவியின் போர்க்கப்பல் ஓசையும் சேரும்போது உயிர் பதைக்கும். அடிக்கடலில் ஒரு புள்ளியாய் தெரியும் நங்கூரம் பாய்ச்சிய கப்பல். எக்கணமும் குண்டு பொழியும். தம் உயிர் சிதறடித்து எம் உயிர் காத்த கடற்கரும்புலிகள் இல்லாது போயிருந்தால் இன்று மிச்சமிருக்கும் தமிழர்கள் எண்ணிக்கையில் இன்னமும் குறைவாய் இருந்திருப்போம்.

கத்தினோம், கதறினோம், போராடினோம்.. எத்தனை முடியுமோ அத்தனையும் செய்தோம். காதில் போட்டானா காதகன்?? பெண்ணென்றால் பேயும் இரங்குமாம். பேயாய் ஒரு பெண் தன் பங்குக்கு அழித்தாள். தன் இனமே தன்னைக் காட்டிக் கொடுத்தும், கூட்டுச் சேர்ந்தும் அழிக்கும்போது என்னதான் செய்ய முடியும் எம்மால்??

அழிந்தோம்.. அழிகிறோம்.. அழிவோம்..

கடைசித் தமிழன் இருக்கும் வரை இதுதான் எம் நிலை. தமிழனாய் இரு போதும். நீ இந்தியனா இலங்கையனா என்பதை சிங்களவன் குண்டுகள் பார்ப்பதில்லை.

ஊரில் இப்போது எப்படி இருக்காங்க எல்லாரும்?? எவர் கேட்டாலும் என் பதில் ரொம்ப நல்லா இருக்காங்க. நிம்மதியா இருக்காங்க. அதற்கு மேல் சொல்லத் தோன்றுவதில்லை. முடிவதில்லை. உள்ளே உறுத்தும் உணர்வு வேறு சொல்கிறதே. எத்தனை நாளைக்கு என்ற கேள்வி முட்டி மோதுகிறதே. என் அண்ணன் குடும்பங்களின் உயிருக்கு உத்தரவாதம் அடுத்த நொடி கூட இல்லை. இந்த நொடி வரைதான். எந்த நொடியும் நிலமை தலைகீழாகலாம். எதிர்காலம் பற்றிய பயத்தையும் தன்மானத்தோடு சேர்த்துப் புதைத்து விட்டு நாளையை மறந்துவிட்டு, இன்றை வாழ்கிறார்கள் என் அண்ணன்கள் போலவே தமிழராம் எம் இனத்தவர்.

போன வாரம் நெகிழ்வான ஒரு பேச்சின்போது அண்ணா சொன்னார்.

“எல்லாம் பாத்தாச்சுடி. மத்தவங்களை விடு. நானே பசி, தாகம், வறுமை, நோய், பிரிவு, சாவு எல்லாம் அனுபவிச்சாச்சு. செத்துட்டேன்னு நினைச்சு, ஏண்டா இன்னும் சாகாம இருக்கேன்னு நினைச்சு அத்தனை அவமானமும் பட்டாச்சு. இனிமே மிச்சமா இருக்கிற இந்த வெத்து உயிரை வச்சுட்டு  என்ன செய்யப் போறேன் தெரியுமா? என்னாலை எவளவு முடியுமோ.. அவளவு.. என் குடும்பம் மட்டுமில்லாம எல்லாரையும் சந்தோஷமா வச்சுக்கப் போறேன். நீங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்டி. நான் இனிமே அத மட்டும்தான் கேக்கணும். பாக்கணும்”

வார்த்தை வரவில்லை எனக்கு. அண்ணா எப்போதும் இப்படி பேசமாட்டார். என்றாவது தான் தன் மனம் திறப்பார். இன்னமும் மனதில் அண்ணாவின் வார்த்தைகள். வேண்டிக்கொண்டே இருக்கிறேன். அண்ணாவோடு அத்தனை பேருக்குமாக.

ரஜி முதல் முதல் சண்டைப் பகுதியில் இருந்து முகாமுக்குள் வந்ததும் பேசியபோது சொன்னான்

“நான் என்ன வேணா செய்வேண்டி.. குண்டுச் சத்தம் கேக்கிற ஒரு இடத்துக்குள்ளை என் வாழ்க்கேல இனிமே போகமாட்டேன்”

இதன் அர்த்தம் புரிகிறதா உங்களுக்கு?? அப்பா பிள்ளையாக இருந்தபோதும் உயிர்ப் பயம் இருந்தது. ஆனால் இப்போது போலில்லை. என் பிள்ளையாவது ஒரு வாய்க் கஞ்சி உயிர்ப் பயம் இல்லாமல் குடிக்க வேண்டுமே என்பதே அத்தனை பேரதும் தேவையாக ஆகிவிட்டது.

வந்தது வயிற்றுப் பிழைப்புக்கென அப்பாவித் தமிழக மீனவன் என்று சிங்களவனுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் அவனுக்கு இன்னமும் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. எங்கேயோ தப்பிப் போன விடுதலைப்புலி வந்தான். அதான் சுட்டோம். உலகமும் அதை நம்பும். அவனை மன்னிக்கும். நாளையே மறந்தும் போகும். புதிதாய் எந்த நாட்டில் சண்டை மூட்டி ஆயுத ஏற்றுமதி செய்யலாம் என்று ஆதாயம் தேட யோசிக்கும். என் இந்தக் கருத்துத் தவறாக இருக்கலாம். எனக்கு அரசியல் புரிவதில்லை. ஈடுபாடும் இல்லை. ஆனால் மனம் கொதிக்கிறது. இது்ரை கண்ட, கேட்ட, அனுபவித்த கண்ணீர்க் கணங்கள் மீண்டும் மனதை நிறைக்கிறது. இதுவரை இழப்பைச் சந்தித்த மீனவக் குடும்பங்களின் கண்ணீருக்கும், எங்கள் கண்ணீருக்கும் வேறுபாடு இல்லாதது போலவே தீர்வும் இல்லை. தமிழ் வளர்க்கத் தெரிந்தவருக்குத்  தமிழன் உயிர் காக்கத் துப்பில்லாது போனது தமிழரின் சாபக்கேடு.

அழிப்பான். கடைசி இலங்கைத் தமிழன் அழியும் வரை சிங்களவன் அழிப்பான். விடுதலைப்புலி என்ற பட்டத்தோடு அவன் குண்டுக்குத் தேவை ஒரு தமிழன்.

ஒருநாள். அவன் தனிப்பட்ட வாழ்வில் என்றாவது ஒருநாள். எல்லார் கண்ணீருக்கும் அனுபவிப்பான். ஏதோ ஒரு வகையில் வலி அவனாலும் உணரப்படும். யார் என்ன சொன்னாலும் எனக்கு அதில் நிறையவே நம்பிக்கை இருக்கிறது. என் தெய்வம் நின்று கொல்லும்!!

stop nå

27 November, 2010

என்ன சொல்லி உமை போற்ற!!

நவம்பர் இருபத்தோராம் திகதியே தொடங்கிவிடும். ஊரெல்லாம் மஞ்சளும் சிவப்புமாய் தோரணம். வீதியின் முக்கிய இடங்களில் அலங்கார வளைவுகள். அத்தனை பூ மரங்களுக்கும் சுமை குறையும். ஒற்றைப் பூ விட்டு மீதி பறித்து அழகான மாலைகள்.

சாவை கழுத்திலே சுமந்தபடி, எந்த நொடியும் அதனை எதிர் நோக்கியபடி, அதன் சாயலே இல்லாமல் சிரித்தபடி சுழன்று வரும் புலி வீரர்கள் ஒருபுறம். உண்ண உணவில்லையென்றாலும் என்னால் முடிந்தது செய்வேன் என்ற எண்ணத்தில் பொதுமக்கள் மறுபுறம். எந்தளவு முடியுமோ அந்தளவுக்கு ஊரையே அலங்காரத்தால் திருவிழாக் காண வைப்பார்கள். யார் எந்தப் பகுதி அலங்காரப் பொறுப்பு, உணவு, தேநீர் பொறுப்பு, தங்குமிடப் பொறுப்பு என்று பிரித்துக்கொடுக்கப்படும். துயிலும் இல்லங்களில் உறங்கும் கண்மணிகளின் தூக்கம் கலைக்காமல் அத்தனை வேலைகளும் கச்சிதமாய் முடிக்கப்படும். தூர இடங்களில் இருக்கும் மாவீரர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு எங்காவது தங்க வைக்கப்படுவர்.

நவம்பர் 27. மாவீரர் நாள். எப்படியும் அன்று பகைவனின் ஷெல் வீச்சு, விமானக் குண்டு வீச்சு இருக்கும் என்பதால் எங்கள் வீட்டில் தைரியசாலிகள் மட்டுமே போக அனுமதிக்கப்படுவர். ரஜியும் அக்காச்சியும் நான் கட்டிக் கொடுக்கும் மாலைகளை அலுங்காமல் எடுத்துக்கொண்டு போவார்கள். கல்லறைகளின் முன்னே ஊரே அமைதியாய், ஒன்றாகக் கூடி இருக்கும். அத்தனை முகங்களிலும் வலியின் சாயல். வேதனைகளின் விம்மல். வீரர்கள் அழுவதில்லை. வலியை மறைத்து கன்ணீரை விழுங்கும் மனத்திடக்காரர் அவர்கள். சரியாக மாலை ஆறு மணி ஐந்து நிமிடத்துக்கு பிரதான சுடர் ஏற்றப்பட, தொடர்ந்து அத்தனை சுடர்களும் ஏற்றப்படும். 1989இன் பின்னர் இது தான் எங்கள் கார்த்திகை விளக்கீடு. சரியாக அதே நேரம் ஒலிக்கத் தொடங்கும் மாவீரர் பாடல். கலங்காத அத்தனை கண்களும் கண்ணீர் மழையில். நெஞ்சு வெடிக்கும் வலி. உயிரைப் பிசையும் சோகம்.  சோவெனப் பெய்யும் மழை, சமயத்தில் கூடவே குண்டு மழை எதுவாயினும் அஞ்சலி அமைதியாய் நடந்து முடியும். நாங்கள் கோயிலாய் போற்றிப் பாதுகாத்த துயிலும் இல்லங்கள் இன்று..

இங்கு வந்த பின்னர் சரியாக ஆறு மணி ஐந்து நிமிடத்துக்கு எல்லோரும் ஒன்றுகூடி மெழுகுவர்த்தி ஏற்றுவோம். கலந்துகொள்ள முடியாதவர்கள் வீடுகளிலும். பாடல் ஒலிக்க எல்லோரும் சேர்ந்து உரக்கப் பாடுவோம். எம் மண்ணின் மைந்தருக்கு மலர்கள், தீபங்களோடு கண்ணீராலும் அஞ்சலி. பிறிதொரு நாளில் கலைநிகழ்வுகள்.

போன வருடத்தை விட இந்த வருடம் மனம் இன்னமும் கலக்கமாக.  ஆற்றாமை, ஆதங்கம், கோவம், வேதனையோடு சேர்ந்து இம் முறையும் அஞ்சலிக்குப் போகத் தோன்றவில்லை. வீட்டிலேயே ஏற்றி வைப்பேன் எல்லோருக்குமாய் ஒரு மெழுகுவர்த்தி.

என்னதான் ஆகட்டும். எங்கள் மண்ணுக்காய் இன்னுயிர் ஈந்து வித்தாகிப் போன எம் மாவீரர்களதும், மக்களதும் நினைவுகளை எம்மிடம் இருந்து பிரித்தெடுக்க எவராலும் முடியாது. உண்மைகளைப் புதைத்துவிட்டாலும் வித்தாக மனதில் நாம் புதைத்த தமிழுணர்வு என்றும் விழுதோடு மரமாக வியாபித்து இருக்கும்.

இந்த மாவீரர் நாள் பாடல் மாவீரர் தினத்தன்றும், மரணித்த வீரர்களை புதைகுழியில் புதைக்குமுன் அஞ்சலி செய்யும்போதும் மட்டுமே ஒலிக்கப்படும். புதுவை இரத்தினதுரையால் இயற்றப்பட்டு, வர்ணராமேஸ்வரனால் பாடப்பட்டது. எங்கே எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள் எனும் வரிகள் வரும்போது கல்லும் கரைந்துதான் போகும்.

முடிந்தால்.. விழி மூடி ஒரு நிமிடம் மனதார அஞ்சலி செய்யுங்கள். கல்லறைக் காவியங்கள் அமைதியாய் உறங்கட்டும்!!

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே – இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா
குழியினுள் வாழ்பவரே
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் – அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.


வல்லமை தாருமென்றுங்களின் வாசலில்
வந்துமே வணங்குகின்றோம் –  உங்கள்
கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது – எங்கள்
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது.


உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் – அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனி அரசென்றிடுவோம் – எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்

22 November, 2010

திருக் கார்த்திகை விளக்கீடு.

திருக்கார்த்திகை தினத்தன்று இங்கே வீட்டின் ’பால்கனிகள் பூரா மெழுகுவர்த்தி (tealight) ஏற்றி வைக்கலாம்பா’ என்ற என் ஆசை ’பக்கத்திலேயே உக்காந்து பாத்துக்கோ.. வீடு மட்டும் பத்திக்கிச்சு இன்ஷூரன்ஸ் கம்பெனி பைசா காசு குடுக்காது’ என்ற நடைமுறை சாத்தியமான என்னவரின் பதிலோடு இன்றுவரை நிராசையாகவே. இருந்தாலும் வீட்டிற்கு உள்ளே எங்கெல்லாம் முடியுதோ அங்கெல்லாம் மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பேன்.

அன்றைய தினம் ஊரில் அத்தனை வீடுகளும் ஜெகஜ்ஜோதியாய் இருக்கும். மின்விளக்குகளை அணைத்துவிட்டு சுட்டி விளக்கு (அகல் விளக்கு) வீட்டின் அத்தனை இடங்களிலும் வைப்போம். தடியில் துணி சுற்றி செய்த பந்தம் வீட்டைச் சுற்றி வைக்கப்படும். கேட்டுக்கு வெளியில் வாழை மரத்தை நட்டு வைத்து அதன் மேல் தேங்காய் மூடிக்குள் கற்பூரம் வைத்து ஏற்றினால் அது தான் மெயின் தீபம். எல்லாம் ஏற்றி ஆனதும் அப்படியே கோயிலுக்கு ஒரு விசிட். வீட்டுக்கு வரும்போது ஒரு முறை தீபங்களை மண் போட்டு அணைத்து வைத்திருந்தார்கள் வால் பசங்கள். அன்றிலிருந்து நாங்கள் கோயில் போகும் சமயம் அப்புச்சி காவற்காரன் பணியை மேற்கொள்ள, அவரிடம் சிக்கி கொட்டு வாங்கியவர்கள் அதிகம். கோயிலில் வாழை நட்டு அதைச் சுற்றி தென்னோலை கட்டி சொக்கப்பானை என்று எரிப்பார்கள். குளிருக்கு இதமாக நல்லா இருக்கும். படங்கள் கூகிளாண்டவர் உபயம். பாருங்கள்.

IMG_1240 

சர்வாலய தீபம், குமராலய தீபம் என்று வீடுகளிலும், ஆலயங்களிலும் ஏற்றப்படுவதை சொல்வார்கள் என்பதாய் ஞாபகம். அம்மாவுக்கு இப்போது கால் பண்ணி இதில் எது வீடு, எது கோயில் என்று கேட்டபோதுதான் ’ஐய்யோம்மா.. இண்டைக்கே அது.. அதுதான் நான் இண்டைக்கு மச்சம் சாப்பிடேக்க பல்லி சொன்னது`ன்னாங்க. ‘உங்க பல்லியெல்லாம் இருக்குதேம்மா?’ என்றேன். ‘இல்லையம்மா.. என்ர மனசுக்க சொல்லினது’ன்னாங்க. ரைட்டும்மா!! அம்மா குழம்பிவிட்டதால் அக்காச்சியிடம் ஃபோன் கொடுக்கப்பட்டு விஷயம் சொல்லப்பட்டது. ‘எனக்கு உதொண்டும் தெரியாது கண்டியோ.. இஞ்ச இவங்கள் சண்டை பிடிக்கிறாங்கள். இந்தா கருணோட கதை’ என்று ஃபோன் கருண் கைக்கு மாற்றப்பட்டது. ‘சித்தி.. அண்ணா அடிச்சுப்போட்டார்’ என்ற கருணின் கம்ப்ளெயிண்டுக்கு நான் நாட்டாமை ஆனதில் என் டவுட் அப்படியே டவுட்டாகவே இருக்கிறது.

ஊரில் விளக்கீட்டுக்கு முதல் நாளே அரிசிமா, உழுத்தம் மா, சீனி கலந்து தேங்காய்ப்பால் விட்டுப் பிசைந்து, அதை குட்டிக் குட்டி உருண்டைகளாக்கி, ஆவியில் அவித்து, சீனி சேர்த்துக் கொதிக்க வைத்த கெட்டித் தேங்காய்பாலில் கொட்டி பால் புட்டு என்று ஒன்று அம்மா செய்வார். அடுத்த நாள் காலையில் (அண்ணா எனும் இரண்டு கால் பூனையால் இரவே சுவை பார்க்கப்பட்டு) அப்படியே கெட்டியாகி இருக்கும். அதை பாளம் பாளமாக வெட்டிக் கொடுப்பார். ஹூம். அதன் சுவையின் நினைவு தந்த பெருமூச்சு இது. அன்று அம்மா கொழுக்கட்டையும் செய்வார். விளக்கீடு அன்று நாள் முழுவதும் அசைவம் கிடையாது.

இனி என் வீட்டு விளக்கீட்டைப் பாருங்கள். எனக்குத் தெரியாததால் நோ கொழுக்கட்டை, நோ பால் புட்டு.

IMG_0032 IMG_0034 IMG_0035

IMG_0036 IMG_0038 IMG_0042

IMG_0043 IMG_0044 IMG_0045

IMG_0046 IMG_0047 IMG_0048

IMG_0049 IMG_0050 IMG_0053

IMG_9985 IMG_9986 IMG_9987

IMG_0051 IMG_9990IMG_0055 

முழு நிலவு எதிரே மலை உச்சியில் எட்டிப் பார்த்தது. அதையும் கிளிக்.

IMG_0031IMG_0028 IMG_0030 

இன்னமும் இருட்டானதும் அழகா(?) எடுக்கணும்னு நினைத்துக் கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துவிட்டு வந்து பார்த்தால் பயபுள்ளை எங்கள் வீட்டுக்கு பின் பக்கமாய் மறைந்துவிட்டது. மலையில் எங்கள் வீட்டுக்கு மேலே இருக்கும் வீடுகளை இடித்துவிட்டு ஒளிந்திருக்கும் நிலவை படம் எடுக்க முடியாதென்பதால் இன்னொரு முழு நிலா நாளில் எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். சரிதானே என் முடிவு??

வர்ட்டா..

25 July, 2010

கிளிக்ஸ்..

ஊர்ல இருந்து அண்ணா ஃபோட்டோஸ் அனுப்பி இருந்தார். உங்க கூடவும் பகிர்ந்துக்கலாமேன்னு நினைச்சதோட விளைவு இந்த பதிவு. சொந்த வீட்ல போய் இருக்கிற சந்தோஷம்.. சுகம்.. ஒவொரு தடவை இடம் பெயர்ந்து மறுபடி எங்க வீட்டுக்கு போகும்போதும் அனுபவிச்சிருக்கோம். ஓடியோடி ஏய் இது பாத்தியா.. அத பாத்தியா.. இந்த மரம் இங்க புதுசா வந்திருக்கேன்னு அவ்ளோ ஆரவாரம். ஒவொரு தடவை வீட்ட விட்டு கிளம்பும்போதும் திரும்பி வரும்போதும் அப்பா கண் கலங்க தவறுவதில்லை. அப்போ அது சிரிப்பா இருக்கும் எங்களுக்கு. இப்போ நாங்களே உழைக்க ஆரம்பிச்சதும் தான் அருமை புரியுது. சாரிப்பா.. ரஜியும் இப்போ ஒரு அப்பாவா, உங்க மனநிலைல தான் இருக்கான். தன் உழைப்பில பாத்து பாத்து கட்டிய வீட்டுல ஒரு மாசம்தான் இருந்தாங்க. இப்போ மறுபடி போய் இருக்கிறதுன்னா.. ”சொர்க்கம்டி”ன்னு சொன்னான். கரண்ட் மட்டும் இல்லையாம். அதுவும் சீக்கிரம் வந்துடும்னான்.

 Raji return to home 002 Raji return to home 011 Raji return to home 112

இது ரஜி வீட்டோட மிச்சம் மீதிகள். கொய்யா,தேசில்லாம் ஆளில்லாத போதும் நிறைய்ய காய்ச்சுப் போய் இருந்துதாம். 

 

 

அண்ணா வீட்டுக்கும் ரஜி வீட்டுக்கும் இடையில கிபிர் விமான குண்டு விழுந்த பெரிய்ய்ய குழி இருந்திச்சாம். நல்ல வேளை வீடு தப்பிச்சு. வீட்டுக்கு பின் பக்க வேலியோரம் இருந்த பதுங்கு குழிக்குள்ள 20 வெடிக்காத ஷெல்குண்டுகள் எடுத்தாங்களாம். என்னடா இதுன்னு நான் பயப்பிட சிரிக்கிறான். ”அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுடி. என்ன லேண்ட் மைண்ட்ஸ் தான் இன்னமும் சரியா கிளியர் பண்ணல. மத்தபடி ஒரு பயமும் இல்லை”ங்கிறான். எனக்கு வயித்தில நெருப்பு.

Raji return to home 026 Raji return to home 079 Raji return to home 102

எங்க ஊர் கண்ணகை அம்மன் கோயில் திருவிழா. சேதமானாலும் வீழாத கோபுரம். தேரிழுக்கிற படத்துல வலது கரையில ஆரஞ்ச் கலர் வஸ்திரத்துல ஆஜானுபாகுவா தெரியிற முதுகுதான் நம்ம சின்னண்ணா ரஜி.

 

DSC03882 DSC03884 DSC03912

இது அக்காச்சி தாய்நாடு போன உடன எடுத்தது. எல்லா சாமானும் எடுத்தாச்சான்னு கடைசி லுக் அண்ட் செக்  விடும் பொறுப்பான அம்மா பரமேஸ்வரி. அங்க போயி சாப்பிடலைன்னாலும் பரவால்லை.  நிறைய்ய குடிக்கணும்னு சித்தி (ஹிஹிஹி.. நான் தான்) சொன்னத சமத்தா கேட்டு கைல கோக் பாட்டில் தூக்கிய  அக்காச்சியோட மூத்த வாரிசு சஜோபன். தாய் மண்ணில் கால் பதித்த அத்தானோட பாதங்கள்.

DSC03978 DSC03979 DSC04012

சித்தி மாதிரியே பெட் பிரியர் அக்காச்சியோட ரெண்டாவது வாரிசு கருண். ”என்ன இவருக்கு பிரியம் கொஞ்சம் ஜாஸ்திடி. பூனைய வால்ல பிடிச்சு சுழட்டி ஒரு எறி”ன்னு அண்ணா சொன்னார். இப்போ சமத்தா விளையாடறாராம். நேத்தும் ஸ்கைப்ல காமிச்சார். ஷிஃபர்னு பேர் வச்சிருக்காராம். அத்தையோட லக்கேஜ்ல கனடா போக ட்ரையல் பார்க்கும் அண்ணாவோட கடைசி வால் கிரண். அண்ணா வளர்க்கிற கோழி.. குஞ்சுகள் உடன்.

அவ்வ்வ்வ்வ்வ்..

DSC03907

ரெம்ம்ம்ப டச்சிங்கான படம். ரஜி, கருண், அக்காச்சியோட கடைசி வால் சேரன். மாமன் மடியில உரிமையா இருந்து பட்டாம்பூச்சி பாக்கறாங்க. பொக்கிஷம் இந்தப் படம். எவ்ளோ நேரம் பாத்துட்டு இருந்தேன்னு தெரில.. வித் ஆவ்வ்வ்வ்..

வர்ட்டா..