Pages

  • RSS

27 December, 2010

யார் சித்தி விஷால்??

’என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டாஆஆஆ’

செம ஜாலியாக ஆனந்தக் கூச்சல் போட்டுட்டு இருக்கார் என்னவர். வீட்டில் தனியாக இல்லை.. நண்பர்கள் கூட. ஒரு வார விடுமுறை. அம்மாவுக்கு இணையான என் சித்தி வீட்டுக்கு வந்திருக்கிறோம். சின்னம்மம்மா வீடு என்றதுமே குஷியாகி விட்டார்கள் குட்டீஸ். நான்கு வருடங்களின் முன்னர் நான்கு நாட்கள் சித்தி வீட்டுக்குத் தனியாக வந்ததற்கு அப்புறமாக இப்பொழுது தான் கண்ணாளனை விட்டுத் தனியாக வருகிறேன் என்பதாலோ என்னவோ பிரிவு கொஞ்சம் கசந்தது. மனம் எக்கச்சக்கமாகக் குழம்பிப் போயிருந்தது. அவரிடம் ஏர்போர்ட்டில் வைத்து ‘விண்டர் சமயம் ஃப்ளைட்ல போக கூடாதுப்பா` என்றேன்.‘அப்போ நில்லு. உன்னை யார் போக சொன்னா’ என்றார்.  நாங்கள் கிளம்பிய அன்று நார்வேயில் பயங்கர பனி வீழ்ச்சி. அவருக்கும் ஒரு இதுவாக(?) இருந்ததோ என்னவோ டென்மார்க் ஃப்ளைட் போர்டிங் என்று வரும்வரை பேசிக் கொண்டிருந்தார்.

ஒரு வழியாக குறித்த நேரத்தில் ஃப்ளைட் கிளம்பியது. அப்பா  வராததால் விமானப் பயணத்தின் சேஃப்டி குறித்து அத்தனை சந்தேகம் சதுருக்கு. அவருக்குத் தைரியமாகப் பதிலினாலும் எனக்குள் இருந்த கிலி இன்னும் கூடியது. கூப்பிட்டேன் கில்லியை. காவலனாய் உடன் வந்தார்.

077

சிக்கன் சான்விச்சை சாப்பிட்டு முடித்ததும் ஃப்ளைட் லேண்டாகப் போது பெல்ட்டை மாட்டுங்கள் என்றார் பைலட். இரண்டு ஹாட் சாக்லேட், பாதி கோக்கை பிடுங்கிக் கொண்டு போனார் ஏர்ஹோஸ்டஸ். கரியானது காசு என்று இப்போது போல் அப்போது தோன்றவில்லை. அத்தனை பனி மூட்டம், ஃப்ளைட்டின் ஆட்டம். போச்சுடா. இன்னைக்கு தரை இறங்கின மாதிரித்தான் என்று வேண்டுதலோடு ஆஃப் செய்த ஐபாடை பார்த்துக் கொண்டே ஸ்டெப் ஸ்டெப் என்று மனதுக்குள் பாட ஆரம்பித்தேன். உடன் தரை தட்டியது விமானம்.

கொடுமை கொடுமை என்ற கதையானது நம் நிலைமை. அங்கிருந்த பனிக்கு சற்றும் சளைக்காமல் இங்கும் அதி பனி வீழ்ச்சி இந்த வருடம். சித்தி ஏர்போர்ட் வரை காரில் வருவது பயம் என்பதால் தம்பி ட்ரெய்னில் வந்து எங்களை கூட்டிப் போவதாக பிளான் மாற்றப்பட்டது. மேட்ரோவும், ட்ரெயினுமாய் பயணம். அனுபவம் புதியதாக இருந்தது. இலவச நெட் வசதி செய்திருக்கிறார்கள் இரண்டுக்குள்ளும். சட்டென்று பிளாக் படிக்கலாமா என்று எழுந்த ஆசையை அடக்கிக்கொண்டு தம்பியோடு பேசியபடி வெளிப்புறத்தை ரசிக்க ஆரம்பித்தேன்.

ஸ்டேஷனில் சித்தி காரோடு காத்திருந்தார். வீட்டில் தங்கச்சியின் வரவேற்பு. அன்றிலிருந்து அவ்வப்போது பஸ்ஸில் எட்டிப் பார்க்க மட்டுமே நேரம். சித்தி கவனிப்பில் ‘என்னடி ரெண்டு நாள்லவே இப்டி குண்டாயிட்டே’ என்கிறார் ஸ்கைப்பில் கண்ணாளன். இரவு இரண்டு மணிக்குத் தூங்கி பகல் பனிரண்டு மணிக்கு எழுந்து செம பிஸியாக இருக்கிறேன். உங்கள் பதிவுகள் ஒழுங்காகப் படிக்கக் கூட முடியவில்லை. மன்னியுங்கள்.

டென்மார்க்குக்கு முதல் முதலாய் விண்டர் சமயம் வந்தாலும் சித்தி ஃப்ரெண்ட்ஸ் திட்டித் தீர்க்கிறார்கள். நார்வே ஸ்னோவை இங்கே கொண்டு வந்துவிட்டேனாம். வந்த அன்று இரவு பனிப்புயல் வேறு. இந்த ஊர் பனி ரொம்ப மோசம். எனக்கு ஒத்து வராமல் காய்ச்சல். தொண்டை வேறு கட்டிக்கொண்டு பேசவும் முடியவில்லை. சித்தி வீட்டைச் சுற்றி எப்படிக் குவிந்திருக்கிறது பாருங்கள்.

098 099

100 

102 103

தங்கச்சி எல்லார் கிட்டவும் என்னோட அக்கா வந்திருக்காங்க என்று சொல்லும்போது மருந்தில்லாமலே நடமாட முடிகிறது. அத்தனை மகிழ்வு அவருக்கு. சித்தப்பாவின் பேச்சு ஏதாவது ஒரு விஷயத்தில் எப்போதும் வந்து போகிறது. அவரில்லாத உணர்வை அழித்தும் போகிறது. முன்பு வரும் சமயம் பேசிய பழைய கதைகளெல்லாம் மறுபடி பேசுகிறோம். இம் முறை அம்மு, சதுரும் கேட்க ஆசைப்படுவதால். சித்தியின் டனிஷ் நண்பி வீட்டில்தான் கிறிஸ்துமஸ் விருந்து. எங்கள் உயிரையும் சேர்த்துக் கையில் பிடித்தபடி சித்தி காரில் அவர்கள் வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். அவர்களை முன்னரே சந்தித்திருந்தாலும் அதிகம் பேசியதில்லை. அந்நிய வீடு என்ற எண்ணமே இல்லாமல் பழகினார்கள். அவர்களுக்கும் அந்த உணர்வு வராதபடி நாங்களும் பழகியதாகச் சொல்லி சந்தோஷப்பட்டார்கள்.

ஒவொன்றிலும் நார்வே முறை என்ன என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். டனிஷ் மக்கள் தொண்டைக்குள் உருளைக்கிழங்கை வைத்துக் கொண்டு பேசுவதாக நார்வே மக்களால் கிண்டல் செய்யப்படுவார்கள். அப்படி இருக்கும் அவர்கள் உச்சரிப்பு. அவர்கள் பேசியதில் எங்காவது ஓரிரு சொல்லைப் பொருத்திப் புரிந்து கொண்டேன். எதுவும் புரியாத இடத்தில் சும்மா சிரித்து வைத்தேன். இல்லை நீ புரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் அடம்பிடித்து பதிலை எதிர்பார்த்த சமயங்களில் சித்தி உதவிக்கு வந்தார். அன்பானவர்கள். சித்தி வழி நிறையவே அவர்கள் பற்றி அறிந்திருந்தாலும் நேரில் பழகியபோது அன்பு அதிகமானது.

117 சித்தியிடம் என்னைப் பற்றி அறிந்து வைத்திருந்ததால் கான்(Karen என்பதை இப்படித்தான் உச்சரிக்கிறார்கள்) எனக்குக் கொடுத்த க்ளாஸ். அம்முவுக்கு ப்ரின்சஸ், சதுருக்கு பென்குவின்.

 

 

என்னில் சித்தியின் சாயல் இருப்பதாக எல்லோரும் சொன்னார்கள். தம்பியின் சாயலில் அம்மாவின் அத்தனை சகோதரங்களதும் ஒரு ஆண்பிள்ளை இருப்பதை சித்தி சொன்னார். தங்கச்சியில் அக்காச்சியின் சாயல். உடனேயே ’அப்போ விஷால் யார் மாதிரிம்மா’ என்றார் தங்கச்சி. ‘அது யார் சித்தி விஷால்’ என்றேன் நான். முன்னரே உங்களுக்குச் சொன்னதாக நினைவு. ரஜியை விஷால் மாதிரி என்று சொல்லி வந்த தங்கச்சி இப்பொழுதெல்லாம் அவனை விஷால் என்றே சொல்கிறாராம். அவனும் கால் செய்யும்போது நான் விஷால் பேசறேன் என்றே சொல்கிறானாம். இதில் சிரிப்பு என்னவென்றால் தங்கச்சி மூலம் கான் குடும்பத்துக்கு விஜய், விஷால், சிம்பு, அசினைத் தெரிந்திருக்கிறது.

128 அவர்கள் வீட்டின் டனிஷ் பேசும் குருவி. பெயர் நினைவில்லை. துணையின்றி இருந்தது வருத்தமாக இருந்ததால் நான் படம் எடுக்கவில்லை. அம்மு எடுத்தார்.

 

 

 

127 gingerbread house பக்கத்தில் கான் வைத்திருந்த மெழுகுவத்திகளை நான் எடுத்த இந்தப் படம் தம்பிக்குப் பிடித்திருந்ததால் இதையும் சேர்த்திருக்கின்றேன்.

எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் நன்றாக அமைந்திருக்கும்.  அந்த மகிழ்வோடு இருக்கும் உங்களை அதிகம் தொல்லை செய்யாமல் மீதியை அடுத்த இடுகையாக எழுதலாமென்று நினைக்கிறேன். சரிதானே?

வர்ட்டா..

13 December, 2010

ரத்தத்துள் காதல்!! டம்டடடம்!!

ப்ரதாப்.. அந்த பாத்திரமாகவே அவர் மாறிவிட்டதால் எனக்கு அங்கே விவேக் ஓப்ராய் தெரியவில்லை.. பிரதாப் என்பதை விட ப்ரதாப் அவருக்கு பொருத்தமாக இருப்பதாகத் தோன்றியது.. அப்படி எழுதுவது தவறாகத் தெரிந்தாலும் ப்ரதாப் என்றே சொல்லிக் கொள்வோம். ப்ரதாப் ஜெயிலுக்கு வெளியே.. உள்ளே சூர்யா.. கண்கள் கூண்டுக்குள் அடைபட்ட புலியை நினைவுபடுத்தின.

’கனவு கண்டுக்கிட்டே இரு..’ 

’முடிஞ்சா நீ தூங்கு..’

இது ப்ரதாப்பும் சூர்யாவும் பேசிக் கொள்ளும் வசனம். ரசித்தேன். ஏன் ரசித்தேன் என்று நினைப்பீர்கள். ஆதலால் சொல்கிறேன். கொலைவெறியில் அவர்கள் பேசிக் கொண்டது இது. இதையே ஒரு ஆணும் பெண்ணும் பேசினால் காதல்வெறி ஆகிவிடும் இல்லையா?? உஸ்ஸ்ஸ்ஸ் சொல்லிக் கொள்ளுங்கள் உங்களுக்கு கொலைவெறி குறையும்.

’சூர்யா எனக்கு தெரியும் சூர்யா.. உனக்கு நான் முக்கியம் இல்லைல்ல.. இதோ.. இந்த சிமெண்டு, செங்கல்லு, மண்ணு.. இதானே முக்கியம்’ என்னைப் போலவே ஆதங்கத்தோடு கேட்கிறார் பிரியா மணி.

‘நான் அப்டி சொல்லையே’ சமாளிக்கிறார் சூர்யா என் கண்ணனைப் போலவே.

‘என்னைக்காவது என்னை பத்தி பேசி இருக்கியா.. என்னையும் கொஞ்சம் யோசிப்பா’ கெஞ்சலோடான கோவம்.

தெரிந்து கொண்டே கேட்பவளிடம் என்ன சொல்வது என்பதாய் சிரிப்போடு தன் மனதிருக்கும் இடம் பார்த்து சூர்யா சொல்வார்..

’இங்க.. எவ்ளோ இருக்கு தெரியுமா?’

’ம்ஹூம்..’ பிரியா மணி உதட்டை சுளிக்கிறார் என்னைப் போலவே.   பின் கேட்கிறார். ‘சொல்லு’ கண்களில்  ஆர்வத்தோடு.  அதை விட ஆர்வம் என் கண்களிலும் இருக்கும்.

’மை கண்மணி..’ (இப்படித்தான் எனக்கு கேட்டது) சூர்யா ஆரம்பிக்க ஃபோன் ஒலிக்கிறது. என் கண்ணனுக்குப் போலவே. இப்படித்தான் எங்களுக்குள்ளும் ஆகிப் போகும். அவன் சொல்ல ஆரம்பிக்கும்போது ஏதாவது ஒரு தடை வந்துவிடும். கல்லும், மண்ணும், சிமெண்டும் வேண்டுமானால் வேறாக இருக்கலாம். ஆனால் நான் கேட்பதும் அவன் மழுப்புவதும் என்னமோ அப்படியே காட்சியாகி இருந்தது. ரத்த சரித்திரத்துக்குள் என் காதலை பார்த்து சொக்கிப் போய் இருந்துவிட்டேன். மறுபடி உஸ்ஸ்ஸ்ஸ் சொல்லிக் கொள்ளுங்கள்.  உங்களுக்கு மறுபடி கொலைவெறி குறையும்.

k

ஜெயிலுக்குள் வரும் சண்டைக்காட்சி.. சூர்யாவின் சிக்ஸ் பேக் உடலுக்கு பொருத்தமாக இருந்தது. தைரியமாக சட்டை பற்றி சட்டை செய்யாமல் சண்டை போடலாம் சூர்யா.

நினைத்ததை முடித்து வண்டியை ஓட்டியபடி ஜெயிலுக்குத் திரும்பி வரும் சூர்யா.. முதலில் ப்ரதாப்பை தப்ப விட்டுவிட்டு வரும் சூர்யாவுக்கு நேர் எதிர். கோபம், சந்தோஷம், வருத்தம், ஆற்றாமை என கலவையாய் ஒரு அபார நடிப்பு.. ஹாட்ஸ் ஆஃப் டூ யூ சூர்யா..

அதே ஜெயிலுக்குள் கட்சி ஆள் சூர்யாவை சந்திக்க வருகிறார்.. ஃபேன் சுற்றும் சத்தம் மட்டும் கேட்கிறது அந்த நிசப்தத்தில்.. இப்படியாகச் சில காட்சிகளும் பின்னணியும் பிடித்திருந்தது.

ஒன்றிரண்டு தவிர்த்து மீதி காட்சிகள் ஸ்லோமோஷனில் போகும்போதெல்லாம் சீக்கிரம் போங்களேன் என்று பிடித்துத் தள்ளிவிட வேண்டும்போல் இருந்தது.

இசையிலேயே ரத்தம் தெறிக்கிறது. ஒரு Hardrock concert கேட்டதுபோல், சண்டைக்காட்சிகளில் பார்த்ததுபோல் இருந்தது. பின்னணியும் மிரட்டுகிறது. பாடல்கள்.. பயந்துவிட்டேன் கேட்டு.. ஆனால் இந்த ’துணிஞ்சு வெட்டுவேன்..’ மட்டும் எனக்கு பிடித்து விட்டது.

’மரணம் துரத்துது.. மரணம் துரத்துது..

கனவில் கூட பயத்தைக் கொடுக்கும் மரணம் துரத்துது..

வேட்டை நடக்குது.. வேட்டை நடக்குது..

உயிரைப் பறிக்கும் உயிரைப் பறிக்கும் வேட்டை நடக்குது..

டம்டடடம் டம்டடடம் டம்டடடம் வெறியாட்டம்

டம்டடடம் டம்டடடம் டம்டடடம்  டடம்டம்’

கண்முன்னே ரத்தசரித்திரத்தைப் பார்த்த ஒரு உணர்வை இந்தப் பாடல் தருகிறதென்னவோ உண்மைதான்.

குழந்தையில் கொண்டு வந்து முடித்த விதம்.. எல்லாவற்றையும் எங்கள் ஊகத்துக்கே விட்டு விட்டது. இல்லை இதை யாராவது தொடர்ந்து பார்ட் டூவாக எடுக்க ஏதுவாய் அப்படி முடித்தார்களா தெரியவைல்லை. ஆனால் தைரியமாக பார்ட் டூ எடுக்கலாம். நான் பார்ப்பேன். ஏனென்றால் எனக்கு பொறுமை ஜாஸ்தியாம். ஊரில் சொல்லிக் கொல்கிறார்கள். உங்கள் கொலைவெறியை மனதில் வைத்து ‘ல்’ சரியாகத்தான் டைப்பியுள்ளேன்.

வர்ட்டா..

09 December, 2010

பனியில கண்டம்!!

ஒரே நாளில் எத்த்த்தனை கொலை முயற்சி.. உஸ்ஸ்ஸ்.. ஒரு தடவை வீட்டை விட்டு வெளியே சென்றால் திரும்பி மீண்டும் வீட்டுக்குள் வருவேன் என்பதற்கு எந்த காரண்டியும் கிடையாது. தினமும் காலையில் ஆஃபீஸ் போகலாம்னு வண்டிய ஸ்டார்ட் செய்து ரிவர்ஸ் பண்ணா சர்ரென்று வழுக்கிக் கொண்டுபோகிறது. கம்பி வேலி மட்டும் இல்லாவிட்டால் நான் காலி. தப்பிச்சேண்டா சாமியென்று நினைப்பதற்குள் தண்ணி போட்ட ஆசாமியாட்டம் வண்டி சாமியாடும் நேர் ரோட்டிலேயே. அடிக்கடி வண்டி s எழுதியபடி போய்க்கொண்டிருக்கும்.

ரவுண்ட் அபவுட், சாலை வளைவுகள், திருப்பங்களில் எனக்காகக் காத்திருக்கும் அடுத்த கண்டம். பின்னாடி வரும் வண்டிகள் மட்டும் கவனமாக வராவிட்டால் நான் திருப்பும் வழி போகாது தன் வழியில் திரும்பிச் சுழன்று ஒரு c போட்டுத் திரும்பி நிற்கும் என் வண்டி அங்கேயே டமால்.

அதிலும் தப்பி இதயம் ஒரு சீராக இயங்க ஆரம்பிக்கும்போதுதான் கவனிப்பேன். எவண்டா இங்க இருந்த ரோட்டை ஆட்டைய போட்டதுன்னு. மேகம் அப்படியே தரை இறங்கி தேவலோக எஃபெக்டில் இருக்கும். புகை மூட்டத்தின் இடையே வாகனங்களின் லைட் வெளிச்சம் மிக அருகில் வந்ததும் தான் தெரியும். இல்லையென்றால் திடீர் கடும் பனிப் பொழிவால் முன்னே வெள்ளைத் திரை போட்டதுபோல் இருக்கும். இதில் சில பிரகஸ்பதிகள் வண்டியில் பல்ப் எரியாதது தெரியாமலே போய்க்கொண்டிருப்பார்கள். ஹெட்லைட்டை போட்டுவிட்டு எதிரே வரும் வாகனங்களில் இருந்தும், அடிக்கடி லைட்டாக பிரேக் அழுத்தி பின்னே வரும் வாகனங்களில் இருந்தும் இங்க ஒரு வாகனம் போய்க்கொண்டு இருக்கிறது பாத்து வாங்க சாமிகளா என்று சிக்னல் கொடுத்தபடி தப்பித்துக் கொள்ள வேண்டும். இதுவும் ஒரு கண்டம் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும்.

ஒரு வழியாய் ஃபர்ஸ்ட் கியரில் உருட்டியபடியே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஆஃபீஸ் வந்து சேர்வதற்குள்.. அதற்கு முன் இங்கே இந்த இடுகையின் முதல் வரியை காப்பி பேஸ்டிக்கறேன்.. ஒரே நாளில் எத்த்த்தனை கொலை முயற்சி.. உஸ்ஸ்ஸ்.. இயற்கைக்கு என் மேல் ஏன்தான் இத்த்த்தனை கோவமோ.. என் கண்ணாளன் பொண்டாட்டி பாக்கியம் ஸ்ட்ராங்கா இருக்கக்கொண்டு நான் தப்பித்தேன்.. இல்லையென்றால் ஏதோ ஒரு வின்டர் சீசனில் எனக்கான சங்கு எப்போதோ முழங்கி இருக்கும்.

இந்த ஸ்னோ மீது டயர் போகும்போது ஒரு சத்தம் வரும் பாருங்கள். ஆங்கிலப் படங்களில் ஆழ்கடலில் போகும் கப்பலின் அடித்தளத்திலோ, இல்லை நீர்மூழ்கிக் கப்பலிலோ போவதுபோல் சீன் வந்தால் அங்கே ஒரு பின்னணி இசை குடுப்பார்களே.. இனிமேல் கவனித்துக் கேளுங்கள்.. அப்படி இருக்கும் அந்தச் சத்தம். உறை பனியில் டயர்கள் வழுக்கிச் செல்லும்போது அடி வயிற்றுக் கிலியோடு கேட்கும் கரகரவென்று ஒரு சத்தம். அம்முவே சொல்வார்.. ’அம்மா இந்த சத்தம் எனக்குப் பிடிக்கிறதே இல்லம்மா’ன்னு.

பசங்க ஸ்விம்மிங், கராத்தே, ஐஸ் ஸ்கேட்டிங் போன்றவற்றுக்கு விடுமுறை விட்டுவிடுவதால் கடவுளுக்கு, குறிப்பாக என் பிள்ளையாரப்பாவுக்கு நிம்மதி. இல்லையென்றால் வீட்டிலிருந்து கிளம்பி, மீண்டும் திரும்பி வருவதற்குள் என் வேண்டுதல் கேட்டு என்னைப் பாதுகாப்பதிலேயே அவர்கள் உஸ்ஸ்ஸ்ஸ் என்பார்கள்.

ஐஸ் ஸ்கேட்டிங்கில் விண்டர் ஷோ.. என்ன ஷோ வைத்தென்ன.. எங்கும் அனுமதி இலவசம் இல்லை. ஒவொரு பிரிவாக அவர்கள் பழகியதை செய்து காட்டினார்கள். இசையோடு உறை பனியை சர்ரென்று கிழித்துக் கொண்டு போகும் கால்களும், அவர்களின் பாலன்ஸ் செய்யும் லாவகமும், நிரை மாறி சற்று முன்னேயும் பின்னேயுமாய் சென்று விட்டு, பழக்குனர்களின் உதவியுடன் மீண்டும் நிரையாக வழுக்கிச் செல்லும் வாண்டுகளைப் பார்க்கும்போது மனம் உறை குளிரிலும் குளிர்ந்துதான் போனது. தொப்பென்று ஆங்காங்கே சிலர் விழுந்தபோது.. திட்டாதிங்க சித்ரா.. உங்க நினைவு வந்து போனது.

IMG_8700 IMG_8713

Taekwondo என்ற ஒரு வகையான martial art கத்துக்கறாங்க பசங்க. அதைப் பற்றிய மேலதிக விபரம் தெரியணும்னா இங்கே கிளிக்குங்கள். அநேகமாக இந்த வருஷத்தோடு முழுக்குப் போடப்படும் நிலையில் உள்ளது. இந்த தடவை மஞ்சல் பெல்ட்டில் பச்சை கோடு கிடைத்துள்ளது. அடுத்து பச்சை பெல்ட். சதுருக்கு இரண்டு நாளும் ஃபுட்பால் பிராக்டிஸ் இருப்பதாலும், அம்மணி தனியாக போவதை விரும்பாததாலும் இந்த முடிவு, அவர்கள் முடிவு. Grading முடிந்து பெல்ட் வழங்கும் நிகழ்வுக்கு போன பொழுது அவர்களின் கட்டுப்பாடு மலைப்பைத் தந்தது இம் முறையும். ஒற்றைச் சொல்லில் தட் தட் என்று குதிக்கும் கால்கள் அடுத்த கட்டளை வந்ததும் குண்டூசி விழுந்தால் கேட்கும் அளவில் ஒரே நேரத்தில் அமைதி காத்தன. அத்தனை குரல்களும் ஒரு சேர பயிற்சி முடிவில் ‘ஹே’ என்று சொல்லும்போது எங்கோ ஒரு கீச்சுக் குரல் மட்டும் சற்றுத் தாமதமாக கேட்டபோது சிரிப்பில் அரங்கம் அதிர்ந்தது. ஆனால் அவர்கள் அடுத்த நொடி அடுத்த மான்ஸ்டர் செய்யத் தயாராயிருந்தார்கள்.

IMG_8622 IMG_8623

--

//சில நாட்களாக என் உயிர்த் தோழி ஒருத்திக்கு வாழ்க்கை சோதனையாகவே உள்ளது. மனது எப்போதும் அவளையே நினைத்துத் தவித்து, துடித்துக் கொண்டிருப்பதால் அதிகமாக பதிவுலகுக்குள் வர முடியவைல்லை. குழந்தைகளுக்காக எவளவோ பொறுத்துப் போய்க் கொண்டிருக்கும் அவளுக்கு எல்லா வகையிலும் என் ஆறுதலை, உறுதுணையை கொடுத்துக் கொண்டிருக்கிறேன்/றோம். என்னவருக்கும் அவளை நன்கு தெரியுமென்பதால் சிரித்துக் கொண்டிருக்கும் அவள் முகத்தின் பின்னே இத்தனை சோக ரேகைகளா என்று ஆடிப்போய்விட்டார். எத்துணை அற்புதமான ஒரு ஜீவன் அவள். எல்லோருக்குமாகவும் பொறுத்துப் போகிறாள். அம்மாவோடு அப்பாவும் பிள்ளைகளுக்கு வேண்டும் என்பதற்காக தைரியத்தை அடக்கி வைத்து, கோழையாக அல்ல.. அம்மாவாக வாழ்கிறாள். உன் கண்ணீருக்கு தகுதியான ஒருத்தர் இல்லை அவர் என்று சொல்லி இருக்கிறேன். அவளுக்கும் சேர்த்து நான் அழுது கொண்டிருக்கிறேன். அவளின் பொறுமையை பொசுக்கும்படியான ஒரு நிலை அவளுக்கு உருவாகாமல் இருக்கட்டும். பிள்ளையார் துணையிருப்பார்..//

01 December, 2010

என்ன செய்வேன் நான்??

என்னை அழ வைக்கவென்றே எல்லோரும் என்னோடு பழகுவது போதாதென்று திரைப்படங்களை வேறு என்னை அழ வைக்கவென்றே எடுக்கிறாங்க போல. என்ன செய்வேன் நான்??

மைனா.. என்ன சொல்ல.. நினைவில் சிறகடித்துக் கொண்டே இருக்கிறது.. அந்த எளிமை, யதார்த்தமான நடிப்பு, நம்ப முடியாத ஆனால் சாத்தியமானதோ என்று நினைக்க வைக்கும் கதை.. சுருளி, மைனா, ஏட்டு, இன்ஸ்பெக்டர் என மனதில் நின்ற பாத்திரங்கள்.. பஸ் விழும் காட்சியும், கடைசி நேர காட்சிகளும் கொஞ்சம் அதிகமென்று நினைக்கத் தோன்றினாலும், இன்ஸ்பெக்டர் எடுத்த முடிவினால் எங்கோ ஒரு ஆறுதல் வரத்தான் செய்கிறது.

இத்தோடு விட்டிருக்கலாம் நான். தெரிந்தே பார்த்தேன் நந்தலாலா..

சிறுவனை அடிக்க முடியாமல் அழுதபடி போய்ப் போய்த் திரும்பி வரும் மிஷ்கினைப் போல கண்ணீரும் கண்ணை நிறைத்து நிறைத்து காய்ந்து கொண்டிருந்தது. தொண்டை அடைத்து, மனதைப் பிசைந்த வலி தலைவலியாய் மாறியும் தொடர்ந்து படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அல்லது பார்க்காமல் இருக்க முடியாமல் கட்டுப்பட்டிருந்தேன். அம்மாவை மிஷ்கின் பார்த்த கணம்.. இருந்த அமைதியை குலைத்தபடி கேட்டதே ஒரு குரல்..

’தாலாட்டுக் கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்..’

அதன் பின் பொல பொலவென்று நில்லாது ஓடியது கண்களில் அருவி.. இங்கே என் வழக்கம் போல் ஆவ்வ்வ் என்று என்னால் இப்போது சொல்ல முடியவில்லை.. அத்தனை பாரம் மனதில்.. அப்படியே உணர்வைக் குழைத்து குரலில் கொடுக்கும்படி இசை தெய்வத்தை படைத்த தெய்வத்துக்குக் கோடி நன்றி.. இப்போதும் தென்பாண்டி சீமையிலே அவர் குரலில் கேட்கும்போது என்னை அறியாது தொண்டைக்குள் எதுவோ சிக்கிக் கொள்ளும் ஒரு உணர்வு எனக்கு வரும். அதன் பின் இன்று இந்த வரியின் தாக்கம்.. இனி மனதை விட்டுப் போகுமா தெரியவில்லை..  மிஷ்கின் அம்மாவைத் தூக்கிக் கொண்டு போகத் தொடங்கியபோது பாடல் தொடர்ந்தாலும் இன்னமும் அந்த ஒற்றை வரி மட்டும் காதுக்குள் கேட்பதாய் ஒரு உணர்வு..

என் அம்மாவோட தூரத்து உறவில் ஒருத்தர் புத்திசுவாதீனம் இல்லாதவர். அவருடைய அம்மாதான் அத்தனையும் செய்து பார்த்துக் கொள்வார்.  எங்கள் ஊர் கோயில் திருவிழாவுக்கு தவறாமல் கூட்டி வருவார். நாங்கள் போய்ப் பார்க்கும்போது ஒரு தடவை பக்கத்தில் இருக்கச் சொல்லி என் கையைப் பிடித்துக் காட்டி எதுவோ கேட்டார் அவர் அம்மாவிடம்.  சட்டென்று பறித்துக் கொண்டு என் அம்மா பின்னே சென்று ஒளிந்து கொண்டேன். பின்னர் என்னை சமாதானம் செய்து கையை பிடிக்க விடும்வரை அவர் முகத்தில் அத்தனை கவலை, அப்படியே அங்கங்கே மிஷ்கின் முகத்தில் தெரிந்தது போல. டீ, காஃபி பொடி கண்டால் எடுத்து அப்படியே சாப்பிட்டு விடுவார். ஒரு குழந்தையை அதட்டுவது போல அவர் அம்மா அதட்டி பறித்து வைத்தது இப்போதும் நினைவிருக்கு. ஒரு தடவை திருவிழாவுக்கு அவர்கள் வராத காரணம் கேட்டபோது அம்மா சொன்னார்.. ‘அவருக்கு தண்ணி எடுத்து குடிக்க தெரியாதில்லையா.. வீட்ல அம்மா இல்லையாம்.. தாகமா இருந்திருக்கு போல.. வழக்கம் போல கிணத்தை எட்டிப் பாத்துட்டு இருந்திருக்கார்.. அப்டியே உள்ள விழுந்திட்டாராம்’ அவர் அம்மா இப்போது இருக்கிறாரா என்று தெரியவில்லை.

சிறுவன் ஸ்னிக்தாவை அம்மாவாக்கி முத்தமாய் கொடுக்கும்போது.. எப்படி சொல்வதென்று தெரியவில்லை.. சந்தோஷம் வருவதற்குப் பதிலாக மீண்டும் அழத்தான் முடிந்தது என்னால்..

காமரா இஷ்டத்துக்குக் கவிதை வடித்திருக்கிறது. ஒற்றைத் தெரு.. பச்சை வயல்.. சோவென்ற மழை.. எல்லாம் பழசுதான்.. அத்தனை அழகாய், புதுமையாய் எடுத்த விதம்.. படம் பாருங்கள்.. புரியும்.

மனநிலை சரி இல்லாதவர் போடப் போகும் சண்டை எப்படி இருக்குமோ என்று ஒரு பயத்தோடு இருக்கும்போது, அப்படியே எங்கள் மனதில் இருக்கும் பதட்டம், எதிர்பார்ப்பு புரிந்து இசைஞானி ஒரு பின்னணி கொடுத்திருப்பார்.. கேளுங்கள்.. தெய்வம்டா.. படத்தோடு முழு நேரமும் புலனைப் பிணைத்துப் போட்டு வைத்ததில் பெரும்பங்கு இளையராஜா என்ற இசை தேவனுடையது.

குளிர்க் கண்ணாடியை சிறுவனிடம் வாங்கிப் போட்டு விட்டு ’அய்யோ ராத்ரி ஆய்டிச்சு’ என்று மிஷ்கின் சொல்லும்போதும், குடிசையில் இருந்து இளநீரோடு எட்டிப் பார்க்கும்போது தப்பி ஓடி விட்டானோ சிறுவன் என்று நான் நினைக்க தள்ளி நின்று பார்க்கும் சிறுவனைக் காட்டி அப்படியே சைக்கிளோடு தோட்டக்காரன் காமராவுக்குள் வரும்போதும், சட்டென்று பியர் பாட்டிலால் இளைஞன் தலையில் மிஷ்கின் அடிக்கும்போதும் இயல்பாய் சிரிப்பு வருகின்றது இதம்.

உங்கள் எல்லாருக்கும் மிஷ்கின் வழியில் நானும் கொடுக்கிறேன். பத்திரமாய் வைத்துக் கொள்ளுங்கள்.

stein

இன்னைக்கும் வர்ட்டா சொல்ல மனசு வர்லை..

27 November, 2010

என்ன சொல்லி உமை போற்ற!!

நவம்பர் இருபத்தோராம் திகதியே தொடங்கிவிடும். ஊரெல்லாம் மஞ்சளும் சிவப்புமாய் தோரணம். வீதியின் முக்கிய இடங்களில் அலங்கார வளைவுகள். அத்தனை பூ மரங்களுக்கும் சுமை குறையும். ஒற்றைப் பூ விட்டு மீதி பறித்து அழகான மாலைகள்.

சாவை கழுத்திலே சுமந்தபடி, எந்த நொடியும் அதனை எதிர் நோக்கியபடி, அதன் சாயலே இல்லாமல் சிரித்தபடி சுழன்று வரும் புலி வீரர்கள் ஒருபுறம். உண்ண உணவில்லையென்றாலும் என்னால் முடிந்தது செய்வேன் என்ற எண்ணத்தில் பொதுமக்கள் மறுபுறம். எந்தளவு முடியுமோ அந்தளவுக்கு ஊரையே அலங்காரத்தால் திருவிழாக் காண வைப்பார்கள். யார் எந்தப் பகுதி அலங்காரப் பொறுப்பு, உணவு, தேநீர் பொறுப்பு, தங்குமிடப் பொறுப்பு என்று பிரித்துக்கொடுக்கப்படும். துயிலும் இல்லங்களில் உறங்கும் கண்மணிகளின் தூக்கம் கலைக்காமல் அத்தனை வேலைகளும் கச்சிதமாய் முடிக்கப்படும். தூர இடங்களில் இருக்கும் மாவீரர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு எங்காவது தங்க வைக்கப்படுவர்.

நவம்பர் 27. மாவீரர் நாள். எப்படியும் அன்று பகைவனின் ஷெல் வீச்சு, விமானக் குண்டு வீச்சு இருக்கும் என்பதால் எங்கள் வீட்டில் தைரியசாலிகள் மட்டுமே போக அனுமதிக்கப்படுவர். ரஜியும் அக்காச்சியும் நான் கட்டிக் கொடுக்கும் மாலைகளை அலுங்காமல் எடுத்துக்கொண்டு போவார்கள். கல்லறைகளின் முன்னே ஊரே அமைதியாய், ஒன்றாகக் கூடி இருக்கும். அத்தனை முகங்களிலும் வலியின் சாயல். வேதனைகளின் விம்மல். வீரர்கள் அழுவதில்லை. வலியை மறைத்து கன்ணீரை விழுங்கும் மனத்திடக்காரர் அவர்கள். சரியாக மாலை ஆறு மணி ஐந்து நிமிடத்துக்கு பிரதான சுடர் ஏற்றப்பட, தொடர்ந்து அத்தனை சுடர்களும் ஏற்றப்படும். 1989இன் பின்னர் இது தான் எங்கள் கார்த்திகை விளக்கீடு. சரியாக அதே நேரம் ஒலிக்கத் தொடங்கும் மாவீரர் பாடல். கலங்காத அத்தனை கண்களும் கண்ணீர் மழையில். நெஞ்சு வெடிக்கும் வலி. உயிரைப் பிசையும் சோகம்.  சோவெனப் பெய்யும் மழை, சமயத்தில் கூடவே குண்டு மழை எதுவாயினும் அஞ்சலி அமைதியாய் நடந்து முடியும். நாங்கள் கோயிலாய் போற்றிப் பாதுகாத்த துயிலும் இல்லங்கள் இன்று..

இங்கு வந்த பின்னர் சரியாக ஆறு மணி ஐந்து நிமிடத்துக்கு எல்லோரும் ஒன்றுகூடி மெழுகுவர்த்தி ஏற்றுவோம். கலந்துகொள்ள முடியாதவர்கள் வீடுகளிலும். பாடல் ஒலிக்க எல்லோரும் சேர்ந்து உரக்கப் பாடுவோம். எம் மண்ணின் மைந்தருக்கு மலர்கள், தீபங்களோடு கண்ணீராலும் அஞ்சலி. பிறிதொரு நாளில் கலைநிகழ்வுகள்.

போன வருடத்தை விட இந்த வருடம் மனம் இன்னமும் கலக்கமாக.  ஆற்றாமை, ஆதங்கம், கோவம், வேதனையோடு சேர்ந்து இம் முறையும் அஞ்சலிக்குப் போகத் தோன்றவில்லை. வீட்டிலேயே ஏற்றி வைப்பேன் எல்லோருக்குமாய் ஒரு மெழுகுவர்த்தி.

என்னதான் ஆகட்டும். எங்கள் மண்ணுக்காய் இன்னுயிர் ஈந்து வித்தாகிப் போன எம் மாவீரர்களதும், மக்களதும் நினைவுகளை எம்மிடம் இருந்து பிரித்தெடுக்க எவராலும் முடியாது. உண்மைகளைப் புதைத்துவிட்டாலும் வித்தாக மனதில் நாம் புதைத்த தமிழுணர்வு என்றும் விழுதோடு மரமாக வியாபித்து இருக்கும்.

இந்த மாவீரர் நாள் பாடல் மாவீரர் தினத்தன்றும், மரணித்த வீரர்களை புதைகுழியில் புதைக்குமுன் அஞ்சலி செய்யும்போதும் மட்டுமே ஒலிக்கப்படும். புதுவை இரத்தினதுரையால் இயற்றப்பட்டு, வர்ணராமேஸ்வரனால் பாடப்பட்டது. எங்கே எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள் எனும் வரிகள் வரும்போது கல்லும் கரைந்துதான் போகும்.

முடிந்தால்.. விழி மூடி ஒரு நிமிடம் மனதார அஞ்சலி செய்யுங்கள். கல்லறைக் காவியங்கள் அமைதியாய் உறங்கட்டும்!!

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே – இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா
குழியினுள் வாழ்பவரே
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் – அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.


வல்லமை தாருமென்றுங்களின் வாசலில்
வந்துமே வணங்குகின்றோம் –  உங்கள்
கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது – எங்கள்
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது.


உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் – அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனி அரசென்றிடுவோம் – எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்

24 November, 2010

உங்கள யாரு காப்பாத்த போறாங்க..

உங்கள யாரு காப்பாத்தப் போறாங்களோ தெரியலையே பிள்ளையாரப்பா.. இப்படி வந்திருக்கணும் தலைப்பு.. என் டீம் லீடர் இருக்காங்களே. இன்னைக்கு எனக்கு இல்லை உங்களுக்கு ஒரு கொடும் செய்தியை சொல்லிட்டாங்க. அவங்க ஃப்ரெண்டி அம்மாவுக்கு  95 வயசாம் இந்த வாரம். இதிலெந்த கொடுமையும் இல்லைங்க. இவளவு காலம் அவங்க உயிரோட இருந்தது சாதனை. அவங்க வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் எல்லாம் சொல்லிட்டு வந்தாங்க. போன வருஷம்தான் முதல்முதலா சொன்னாங்களாம் ’நான் நினைக்கிறேன் எனக்கு கண்ணு கொஞ்சம் மங்கலா தெரியுது போல’ ன்னு. நானும் கலீக் ப்ரெட்டும்.. (அட அந்த ப்ரெட் இல்லைங்க.. இது Brett..) ம் கொட்டி தேவையான இடங்களில் மானே தேனே சொல்லி கேட்டுக் கொண்டிருந்தோம். இருங்க.. எதுக்கும் மறுபடி நினைவுபடுத்தி சரி பார்க்கறேன் அவங்க அதத்தான் சொன்னாங்களான்னு.

‘ஏய் அவங்க உன்னை மாதிரியேதான்.. ரொம்ம்ம்ம்ப அமைதி.. அதனாலதான் அவங்க இத்தனை வருஷம் உயிரோட இருக்காங்க.. நான் எங்க சொன்னேன்னு பாரு.. நீயும் நிறைய வருஷம் இருக்கப்போறே’ 

இதை கேட்டதும் நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன். நீங்க கூட பரவால்லைங்க. தூர இருக்கிங்க. என் கண்ணாளனை நினைச்சுப் பாருங்க.. ஆவ்வ்வ்..

:(  :(

பசங்க பர்த்டேக்கு நான் செய்த ஐசிங். சது கேட்ட ஷாடோ என்ற கார்ட்டூன் ஃபிகர் சரியாக வந்தது. அம்முவோடது.. ஆவ்வ்வ்.. வெள்ளை நிறத்தில ஐபாட் கேட்டாங்க.. அது ஐ bad ஆகிவிட்டது. அம்மா மனம் நோகாமல் ‘இல்லைம்மா அது நல்லாருக்கு’ன்னு அவங்க ஆறுதல் சொல்லிட்டாங்க. நீங்களும்.. புரியுதில்லை?? அதையும் மீறினா கமண்ட் பப்ளிஷ் பண்ணமாட்டேன் சொல்லிட்டேன். இது எச்சரிக்கை இல்லை.. கட்டளை!!

DSCN0210 DSCN0211

:( :(

எல்லாரும் இன்னும் ஒரு தடவை தலைப்பை சொல்லிப்பாருங்கள். அதேதான். எனது அடுத்த தாக்குதல். பதிவுலக வரலாற்றில்.. அட என்னுடையதுங்க.. இரண்டாவது சமையல் குறிப்பு. பட்டர் கேக்.

முதலில் தேவையான பொருட்கள்.

IMG_0729 மா 500g

சீனி 500g

பட்டர்/மாஜரின் 500g

முட்டை 8 (படம் எடுக்கும்போது கோழி இடலை)

பேக்கிங் பவுடர் 4 தேக

வனிலா பவுடர் 4 தேக

 

முதலில் சீனி, மாஜரின் சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ளுங்கள். அடுத்து ஒவொரு முட்டையாக சேர்த்து பீட் செய்து கொள்ளுங்கள். முட்டையை மொத்தமாக சேர்ப்பதைவிட ஒவொன்றாக சேர்த்தால் மெதுமெதுவென்று வருமாம் (வருகிறது) கேக். அது தடிப்பான கிரீம் மாதிரி ஆனதும் மாவை சிறிது சிறிதாக சேர்த்துக் கொண்டு பீட் செய்யுங்கள். கடைசியாக பேக்கிங்/வனிலா பவுடர்கள் சேர்த்து அதிகம் பீட் செய்ய வேண்டாம். செய்தால் கேக் கல்லாகிவிடும் (ஆகியது) அபாயம் நிறையவே இருக்கிறது. இனி கலவையை கேக் ட்ரேயில் பேக்கிங் பேப்பரோ இல்லை பட்டர் தடவியோ ஊற்றி 180c இல், அவனின்(அவனா ஓவனா?) நடுத் தட்டில் வைத்து 25 நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால்.. இப்படி வரும்.

IMG_0732

கத்தி லிஸ்ட்ல இல்லையே.. இப்போ எப்படி வந்தது என்று கேட்பவர்களுக்கு நான் செய்யும் கேக் செலவைப் பாராமல் பார்சலில் அனுப்பிவைக்கப்படும்.

முக்கிய அறிவிப்பு. மாஜரின் அல்லது பட்டர் அல்லது இரண்டும் கலந்து பாவிக்கலாம். ஆனால் பட்டர் சுவை தனி. அத்தோடு விருப்பமாயின் அன்னாசி எஸன்ஸ் ஒரு தேக சேர்த்துக் கொண்டால் அதன் மணமே தனி. விருப்பமான கலர் சேர்த்து இரண்டு லேயராக ஊற்றி பேக் செய்தால் அதன் அழகே தனி. படத்தில் கரையை மட்டும் கரெக்டா வெட்டி வச்சிருக்கேனே.. அந்தக் கரையோட சுவையே.. அதே தாங்க..

வர்ட்டா..

22 November, 2010

திருக் கார்த்திகை விளக்கீடு.

திருக்கார்த்திகை தினத்தன்று இங்கே வீட்டின் ’பால்கனிகள் பூரா மெழுகுவர்த்தி (tealight) ஏற்றி வைக்கலாம்பா’ என்ற என் ஆசை ’பக்கத்திலேயே உக்காந்து பாத்துக்கோ.. வீடு மட்டும் பத்திக்கிச்சு இன்ஷூரன்ஸ் கம்பெனி பைசா காசு குடுக்காது’ என்ற நடைமுறை சாத்தியமான என்னவரின் பதிலோடு இன்றுவரை நிராசையாகவே. இருந்தாலும் வீட்டிற்கு உள்ளே எங்கெல்லாம் முடியுதோ அங்கெல்லாம் மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பேன்.

அன்றைய தினம் ஊரில் அத்தனை வீடுகளும் ஜெகஜ்ஜோதியாய் இருக்கும். மின்விளக்குகளை அணைத்துவிட்டு சுட்டி விளக்கு (அகல் விளக்கு) வீட்டின் அத்தனை இடங்களிலும் வைப்போம். தடியில் துணி சுற்றி செய்த பந்தம் வீட்டைச் சுற்றி வைக்கப்படும். கேட்டுக்கு வெளியில் வாழை மரத்தை நட்டு வைத்து அதன் மேல் தேங்காய் மூடிக்குள் கற்பூரம் வைத்து ஏற்றினால் அது தான் மெயின் தீபம். எல்லாம் ஏற்றி ஆனதும் அப்படியே கோயிலுக்கு ஒரு விசிட். வீட்டுக்கு வரும்போது ஒரு முறை தீபங்களை மண் போட்டு அணைத்து வைத்திருந்தார்கள் வால் பசங்கள். அன்றிலிருந்து நாங்கள் கோயில் போகும் சமயம் அப்புச்சி காவற்காரன் பணியை மேற்கொள்ள, அவரிடம் சிக்கி கொட்டு வாங்கியவர்கள் அதிகம். கோயிலில் வாழை நட்டு அதைச் சுற்றி தென்னோலை கட்டி சொக்கப்பானை என்று எரிப்பார்கள். குளிருக்கு இதமாக நல்லா இருக்கும். படங்கள் கூகிளாண்டவர் உபயம். பாருங்கள்.

IMG_1240 

சர்வாலய தீபம், குமராலய தீபம் என்று வீடுகளிலும், ஆலயங்களிலும் ஏற்றப்படுவதை சொல்வார்கள் என்பதாய் ஞாபகம். அம்மாவுக்கு இப்போது கால் பண்ணி இதில் எது வீடு, எது கோயில் என்று கேட்டபோதுதான் ’ஐய்யோம்மா.. இண்டைக்கே அது.. அதுதான் நான் இண்டைக்கு மச்சம் சாப்பிடேக்க பல்லி சொன்னது`ன்னாங்க. ‘உங்க பல்லியெல்லாம் இருக்குதேம்மா?’ என்றேன். ‘இல்லையம்மா.. என்ர மனசுக்க சொல்லினது’ன்னாங்க. ரைட்டும்மா!! அம்மா குழம்பிவிட்டதால் அக்காச்சியிடம் ஃபோன் கொடுக்கப்பட்டு விஷயம் சொல்லப்பட்டது. ‘எனக்கு உதொண்டும் தெரியாது கண்டியோ.. இஞ்ச இவங்கள் சண்டை பிடிக்கிறாங்கள். இந்தா கருணோட கதை’ என்று ஃபோன் கருண் கைக்கு மாற்றப்பட்டது. ‘சித்தி.. அண்ணா அடிச்சுப்போட்டார்’ என்ற கருணின் கம்ப்ளெயிண்டுக்கு நான் நாட்டாமை ஆனதில் என் டவுட் அப்படியே டவுட்டாகவே இருக்கிறது.

ஊரில் விளக்கீட்டுக்கு முதல் நாளே அரிசிமா, உழுத்தம் மா, சீனி கலந்து தேங்காய்ப்பால் விட்டுப் பிசைந்து, அதை குட்டிக் குட்டி உருண்டைகளாக்கி, ஆவியில் அவித்து, சீனி சேர்த்துக் கொதிக்க வைத்த கெட்டித் தேங்காய்பாலில் கொட்டி பால் புட்டு என்று ஒன்று அம்மா செய்வார். அடுத்த நாள் காலையில் (அண்ணா எனும் இரண்டு கால் பூனையால் இரவே சுவை பார்க்கப்பட்டு) அப்படியே கெட்டியாகி இருக்கும். அதை பாளம் பாளமாக வெட்டிக் கொடுப்பார். ஹூம். அதன் சுவையின் நினைவு தந்த பெருமூச்சு இது. அன்று அம்மா கொழுக்கட்டையும் செய்வார். விளக்கீடு அன்று நாள் முழுவதும் அசைவம் கிடையாது.

இனி என் வீட்டு விளக்கீட்டைப் பாருங்கள். எனக்குத் தெரியாததால் நோ கொழுக்கட்டை, நோ பால் புட்டு.

IMG_0032 IMG_0034 IMG_0035

IMG_0036 IMG_0038 IMG_0042

IMG_0043 IMG_0044 IMG_0045

IMG_0046 IMG_0047 IMG_0048

IMG_0049 IMG_0050 IMG_0053

IMG_9985 IMG_9986 IMG_9987

IMG_0051 IMG_9990IMG_0055 

முழு நிலவு எதிரே மலை உச்சியில் எட்டிப் பார்த்தது. அதையும் கிளிக்.

IMG_0031IMG_0028 IMG_0030 

இன்னமும் இருட்டானதும் அழகா(?) எடுக்கணும்னு நினைத்துக் கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துவிட்டு வந்து பார்த்தால் பயபுள்ளை எங்கள் வீட்டுக்கு பின் பக்கமாய் மறைந்துவிட்டது. மலையில் எங்கள் வீட்டுக்கு மேலே இருக்கும் வீடுகளை இடித்துவிட்டு ஒளிந்திருக்கும் நிலவை படம் எடுக்க முடியாதென்பதால் இன்னொரு முழு நிலா நாளில் எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். சரிதானே என் முடிவு??

வர்ட்டா..

14 November, 2010

ஆரம்பிச்சிட்டாய்ங்கப்பா!!

அப்பாவோடு பேச வேண்டுமென்று நினைத்துக் கொண்டு கால் பண்ணினால் அப்பாவே ஹலோவினார்.
'ஆரம்பிச்சிட்டாய்ங்கப்பா' என்றேன்.
'என்ன மோனை (செல்லம், குட்டிம்மா, கண்ணு,தங்கம்னு அர்த்தம் இந்த மோனைக்கு) ஆர் என்ன ஆரம்பிச்சது??'
என்றவரிடம் தொடர்ந்து சொன்னதை டைப்புறேன் படிங்க. அம்மாச்சி ஆஃபீசுக்கு கால் பண்ணி சொன்னாங்க.
'அம்மா அப்பாவுக்கு டீ போட்டு குடுத்தேம்மா. நல்லா இருக்குன்னு சொன்னார். வீட்டுக்கு வந்ததும் உங்களுக்கும் போட்டுத் தரேன். சரியா?'
சொன்னது போல் வீட்டுக்குள் நுழைந்ததும் டீ தரப்பட்டது. பாவம் இந்த அப்பாக்கள். மகள் என்ன செய்து கொடுத்தாலும் அமிர்தம் ரேஞ்சுக்கு சுவைப்பாங்க. அம்முவின் மனம் நோகாம நானும் அமிர்தமே என்று சொல்லி விட்டு எந்த அளவில் பால், தண்ணீர், எத்தனை டீ பாக்கெட் சேர்த்து ஒரு கப் டீ செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தேன். அந்த சந்தோஷம்.. அப்பா வாயால் 'பாரு என் பொண்ணை.. என்ன டேஸ்ட்டா செஞ்சிருக்கான்னு' என்ற பாராட்டோடு, முதுகில் ஒரு வருடலும் கிடைக்கும் அந்த சந்தோஷம்.. அனுபவித்த பெண்களுக்குப் புரியும்.

அப்பா இங்கு வந்து நின்ற ஒன்பது மாதங்களில் அப்பா என்று நான் கூப்பிட்டால் என்னடி, என்ன மோனை என்று இரண்டு பதில் வரும். எங்கள் வழக்கத்தில் கணவனை இஞ்சருங்கோ என்பார்கள். அம்மா 'இஞ்சேங்கோ' என்பார். நானும் புதிதில் அப்படித்தான் சொன்னேன். அடுத்தவரிடம் சொல்லும்போது 'இவர்'. நண்பர்கள் கிண்டல் பண்ணுவாங்க. இவர் கிட்ட இதை குடுங்க என்றால் இவர்னா எவர்? இங்க நிறைய இவர் இருக்காங்களே அப்டிம்பாங்க. என் இவர் எவரோ அவர் கிட்ட குடுங்க என்று சொல்வேன். பிள்ளைகளிடம் சொல்வோம் இல்லையா அப்பாவை கூப்பிடுங்க, அப்பா கிட்ட இதை குடுங்க, அப்பா எங்க என்பதாய். அது அப்படியே டைரக்டாக நானே சொல்வதாயும் ஆகி விட்டது. ஒரு வகையில் என் கண்ணாளன் எனக்கு தந்தையுமானவனாய் இருப்பதை இது குறிப்பதாகிறது.


far k இந்த வயதிலும் ஓடி ஓடி உழைக்கும் அப்பா. இரண்டாவது தடவையும் ட்ரைவிங் லைசன்ஸ் ப்ராக்டிக்கல் டெஸ்டில் ஃபெயிலான போது சொன்னார். 'இது எனக்கு சரி வராது மோனை. இனிமே சும்மா காசை கரி ஆக்காம விடப்போறன். என்ன.. அம்மா சந்தோஷப்பட்டிருப்பா பாசாகி இருந்தா' தெரியும். அம்மாவுக்காகவே அப்பா இந்த முயற்சியில் இறங்கினார். மூன்றாவது தடவை எங்களுக்கும் சொல்லாமல் போய் 'மோனை நான் பாசாயிற்றன்' என்று ஆஃபீசுக்கு கால் பண்ணி சொன்னார். தீபாவளியன்று அம்மாவோடு போய் ஒரு வண்டி வாங்கி ஆயிற்று. ஊர் சுத்தி வந்தாச்சா வண்டிக்காரம்மா என்று நான் கேட்டபோது அம்மா முகத்தில் அத்தனை சந்தோஷமும், பெருமிதமும். முன்னெல்லாம் பஸ்ஸில் அலைவதற்குப் பயந்து வெளியே கிளம்பாதவர் இப்போது நினைத்த இடத்துக்கு அப்பாவோடு காரில் போய் வருகின்றார்.


அம்மாவுக்கு அவர் இப்படி செய்தது தவறு என்று எங்களால் சில விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டதால் வந்த அக்கறை இல்லை இது. அப்பா எப்போதும் இப்படித்தான். அக்காச்சி குட்டீசோடு கம்பியூட்டருக்கு சிக்கலாகி விடுகிறதென்று அம்மா ஊருக்கு போய் வந்த போது லாப் டாப் ஒன்று பரிசாகக் கொடுத்தார். செக்கியூரிட்டி கார்டாக வேலை. இரவு பகலென்று ஓட்டம். முதலில் அவருக்கு கிடைத்த யூனிஃபார்ம் கனேடிய போலீஸ் உடை மாதிரியாக இருந்ததால் கருண் என் அப்புச்சி ஒரு போலீசாக்கும் என்று வகுப்பில் தம்பட்டம் அடிப்பார். இப்போது Private Security and Investigative Services பரீட்சையில் பாஸாகி, லைசன்ஸ் உள்ள செக்கியூரிட்டி கார்ட் ஆகி விட்டார். அதற்கு புதிதாக ஒரு யூனிஃபார்ம் கிடைத்திருக்கிறதென்று ஸ்கைப்பில் காட்டினார். இப்படியான தருணங்களில் அப்பாவும் குழந்தைதான்.


ஸ்கைப்பில் பேசிக்கொண்டிருக்கும்போது 'சரியப்பா.. இனி நான் கட் பண்றன். சமைக்க வேணும், படுக்கப் போறன் நல்லா நேரம் போச்சு' என்று உரிய காரணம் சொல்வேன். 'இரு மோனை அம்மா கதைக்க வேணுமெண்டவ.. இந்தா உடன கூப்பிடுறன்' என்றுவிட்டு 'இஞ்சரப்பா.. எங்க நிக்கிறாய்.. சின்னது ஸ்கைப்பில.. கதைக்கோணுமெண்டாய்.. ஓடியா.. அவள் படுக்கப் போறாளாம்.. பன்ரெண்டு மணி ஆகுது அங்கை.. கெதியா வா' என்றபடி லாப் டாப்போடு ஓடுவார் அம்மா இருக்கும் இடத்துக்கு.

இது தான் என் அப்பா. அப்பாவுக்கு கத்திப் பேசத் தெரியாது. அப்பா சண்டை போட்டு நான் இது வரை பார்த்ததில்லை. இது வரை அம்மாவை ’டீ’ என்று சொல்லி நான் கேட்டதில்லை. அம்மாவோடு பேசும்போது எப்போதும் 'ப்பா' சேர்த்துக் கொள்வார். 'மோனை.. என்ன பிள்ளை நீ' என்பாரே தவிர கோவத்தில் ஒரு தடவை கூட வாடா இங்க, வாடி இங்கன்னு எங்களை சொன்னதில்லை. அப்பாவுக்கும் கோவம் வரும். இமை சுருக்கிய பார்வையோடான ஒரு தலையசைப்பில் ஓரிரு நிமிடங்களுக்குள் அது அடக்கி ஆளப்படும். இல்லையென்றால் அப்படி சொல்லப் போறேன், இப்படி செய்யப் போறேன்னு எங்களிடம் சொல்லுவார். அடுத்த நாள் 'இல்லை மோனை.. இரவிரவா யோசிச்சன். இப்படி சொல்லி செய்து என்ன வரப்போது இப்ப.. பேசாம விடுவம்.. என்ன சொல்லுறாய் நீ..' என்று சிரிக்கும் அப்பாவா நேற்று அத்தனை சொன்னார் என்றிருக்கும். என் அப்பாவுக்கு பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுக்காத கடவுள் பொறுமையை போதும் போதுமென்று கொடுத்திருக்கிறார்.

far அப்பா.. லவ்யூ அப்பா..

என்றும் எப்போதும்

உங்கள் மனநிம்மதி வேண்டி

வேண்டுகிறேன் என் அப்பனை

பிள்ளையாரப்பா

அப்பாவோடு இரு!!

எதுக்கு இப்போ திடீரென்று அப்பா புகழ் என்று கேட்காதீர்கள். இந்த பத்தி அதற்குத்தான். நார்வேயில், நவம்பர் மாதத்தின் இரண்டாவது ஞாயிறு, தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து இந்த வழக்கம் இங்கு கொண்டு வரப்பட்டதாம். இன்றைய நாளில் கட்டிலுக்கே ப்ரேக்ஃபாஸ்டை கொண்டுபோய் கொடுத்தல், பரிசு, வாழ்த்து என அப்பாவை சந்தோஷப்படுத்தலாமாம். என் பிள்ளைகளின் அப்பாவான என் அன்புக் கண்ணாளனுக்கு நாங்கள் மூன்றாவது சந்தோஷத்தையே கொடுக்கவுள்ளோம்.

உலகத்தில் உள்ள எல்லா அப்பாக்களுக்கும் என் வாழ்த்துக்கள்!!

வர்ட்டா..

08 November, 2010

வாழ்ந்துவிட்டுப் போகிறேன்!!

✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿    

என்னை விட்டு                                                                                       vindu

ரொம்பத் தூரம் சென்று விட்டான்

என் கண்ணன்

மனதுக்குள் கதவுகளை

ஒவ்வொன்றாய்

மறக்காமல் மூடிச் செல்கின்றான்

ஒற்றை ஜன்னல் மட்டும் 

எப்போதும் மூடத் தாயாராய்

இறுகப் பிடித்தபடி நான்..

✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿    

jente klemmer gutt 

நீ எப்படியாவது இருந்துவிட்டுப் போ

என் கண்ணனாயும் இரு

நான் வாழ்ந்துவிட்டுப் போகிறேன்.

 

✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿    

                                                             greek-statue-1

சிலையாய் செதுக்கினாய்

சிதைந்து கொண்டிருக்கிறேன்

செதுக்கியதோடு

உன் கடமை முடிந்துவிட்டதால்.

 

 

✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿    

Picture0554 

ஈரக் கையில் ஒட்டிய முடியாய்

உதறியும் விழாமல் உன் நினைவுகள்

உலரும் வரை காத்திருக்கிறேன்

தானாக விழுந்திடுமென்ற தவிப்புடன்!!

 

 

 

 

✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿    

drøm

 

இப்போதெல்லாம் முன் போல்

கனவுகள் வருவதேயில்லை

முன்போல் உன்னோடான கனவுகள்..

 

 

 

✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿