இப்படியான பயணம் புறப்படும் போது எதையாவது மறந்துட்டு போகணும் என்ற வழக்கத்துக்கு ஏற்ப திடீர்னு அம்மு சொன்னா ”அம்மா.. பல்லுக்கு போடற க்ளிப் மறந்துட்டேம்மா” அவங்க பல்வரிசை சீரா இல்லைன்னு தூங்கும்போது க்ளிப் போடணும். பல் வைத்தியர் ஆணை. ”என்னம்மா.. பாத்ரூம்ல நீங்க வச்சுட்டு வந்தத கொண்டு வந்து கைல குடுத்தேன் இல்லை” இது நான். ”பறவால்லம்மா.. பல்லுக்கும் லீவு விட்டிடலாம். வீட்டுக்கு போய் போட்டுக்கலாம்” என்ற கண்ணாளன் சமாதானத்தோட தூக்கத்த தொடர்ந்தாங்க. பாஸ்போர்ட் எல்லாம் எடுத்துட்டேனான்னு நான் ஒரு தடவை சரி பார்த்துக்கிட்டேன். விசா தேவை இல்லைன்னாலும் போலிஸ் எங்காவது நிறுத்தி கேக்கும்போது காட்டணும்.
எங்க ஊர் எல்லை தாண்டினதும் இயற்கை விளையாட்டுக்கள். மலையும், நீரும், காடும், வானமும்.. அத்தனை அழகையும் கொஞ்சமும் இழக்காமல். இலவச வைத்தியம் கண் வழியே மனதுக்கு. என்னதான் ஊருக்குள்ளேயும் எல்லாமும் இருந்தும் ரசித்துப் பார்க்க எப்போதாவது தான் தோன்றும். இது அப்படியல்ல. விடுமுறை என்று வந்தாலே காணும் அத்தனையும் ரசிப்பதாய் இல்லை ரசிக்க வைப்பதாய். வருஷம் ஒரு தடவை வரும் வழிதான் என்றாலும் இந்த மலை அப்படியே இருக்கு, இங்க இருந்த அருவிய காணமேன்னு உறவு விட்டுப் போகாமல் ஒரு விசாரிப்பு.
இதில் இரண்டாவதாய் இருக்கும் மலை மட்டும் எல்லாவற்றையும் விட வேறு மாதிரியாய் தனித்து இருக்கும்.
அடி வாரத்தில பாத்தா மண் சரிவு வந்த மாதிரி இருக்கும். ஆனா எப்போதும் இப்படித்தான்.
குட்டிக் குட்டியாய் குதித்து விழும் நீர் வீழ்ச்சிகள்.
இந்த தடவை என்னமோ எனக்கு பயணம் போறதுக்கான மனநிலை அவ்வளவா இருக்கலை. வழக்கமா தடல் புடலா நடக்கிற பயண ஆயத்தங்கள் எதுவும் செய்யத் தோணலை. உலக கோப்பை ஃபைனல் காரணம் வச்சு கண்ணாளன் பயணத்தை பின் போட்டதும் ஒரு காரணமா இருக்கலாம். கிளம்புவதற்கு முதல் நாள் இரவு தூக்கம் இல்லாமல் வெற்று யோசனையில் இருந்த மூளைக்குள்ளும் ரசனை உணர்வுகள் உயிர் பெற ஆரம்பிச்சு மனதோடு உடலும் இலகுவாக ஆனப்போ ஓட்டுனர் பதவி எனக்கு கொடுக்கப்பட்டது.
கார் போகவே அகலம் குறைவா இருக்கிற மலைப் பாதை வளைவுகள். இதில் பல கண்டெய்னர் லாரிகள், டாங்கர்கள் வேகமா பேய் மாதிரி வரும். பாதையோட திருப்பங்கள், வேக அளவு எல்லாம் அவங்களுக்கு பழக்கமான வழக்கம். எப்பவாவது போற எங்களுக்கு?? அதிலும் எனக்கு?? அதிகாலையில புறப்படுறதால பெரும்பாலும் இவ் வகையான வாகனங்கள பார்க்க நேரிடாது. சொந்தச் சாலையில போற மாதிரி ஒரு அனுபவம் இருக்கும். மற்றைய வாகனங்கள் எப்பவாவது ஒன்றை கடக்கும்போது பார்க்கலாம். ஆனால் இந்த மலையை குடைந்த குகைகள் இருக்கே.. ஓரளவுக்கு மட்டுமே வெளிச்சம் இருக்கும். முக்கால் குடும்பமும் தூங்கும்போது ஒற்றை ஆளா விழிச்சிருந்து வண்டி ஓட்டுவது கொஞ்சம் இல்லை நல்லாவே பயமா இருக்கும்.
இம் முறை சது விழிச்சிருந்து பேசிட்டு இருந்ததோட படமும் எடுத்தார்.
இது 25 கி.மீ நீளமான குகை. இதே மாதிரி மூணு இடத்தில கலர் லைட் போட்டு அழகுபடுத்தி இருக்காங்க. இத பாக்க அம்முவும் எந்திரிச்சாச்சு. அவங்க எடுத்த ஃபோட்டோ இது.
மலைச்சரிவு வந்த இடம். திருத்த வேலைகள் நடந்துகொண்டு இருக்கிறதால ஒரு வழிப் பாதை மட்டும்.
இந்தப் பகுதி கொஞ்சம் வேறு மாதிரியான அமைப்பில இருக்கும். உயரமான மரங்கள் இல்லாத, செடிகள் நிறைந்த மலைப்பகுதி. இங்க மட்டும் 100 கி.மீ வேகத்துல ஓடலாம். கண்ணாளன் குட்டித் தூக்கம் கடந்தும் தூங்கிட்டு இருந்ததால எனக்கு இந்த வருஷம் முதல் முதலா கிடைத்தது வாய்ப்பு. படங்கள் அம்மு.
இப்போ மெதுவா என்னவரோட சேர்ந்து வானமும் தூக்கம் கலைந்து எழுந்திருக்க ஆரம்பிச்சுது.
ரொம்ப தூரம் வந்திட்டதால இங்க ஒரு சின்ன இடைவேளை. அந்த நேரத்தில நீங்களும் சான்விச்சும், டீயும் எடுத்துக்கோங்க. மிச்சம் இருக்குப்பா.. நான் தான் வண்டி ஓட்டிட்டு இருந்தேன்ல. மீதி அடுத்த பதிவில.
வர்ட்டா..