Pages

  • RSS

28 October, 2010

கண(ள்)வரே..

நேற்று வீட்டுக்கு அவருடைய இரண்டு நண்பர்கள் வெவ்வேறு நேரத்தில் வந்தாங்க. வந்தவங்களுக்கு வீடெல்லாம் சுற்றிக் காட்டினார். இதிலென்ன அதிசயம் என்று நினைப்பவர்கள் (நினைக்காதவர்கள் அடுத்த பத்திக்கு எஸ்ஸாகாமல்) தொடர்ந்து படிக்கவும். இந்த வீடு ஒதுங்க வைப்பதென்பது எனக்கு மட்டும்.. ம்ஹூம்.. முடியவில்லை. ’ஒரு ஃப்ரெண்டு வந்தா கூட வாசலோட அனுப்ப வேண்டியது இருக்கு’ ‘நான் மட்டும் அசையாம இருந்தேன்னா என் தலை மேலவும் எதையாவது வச்சிட்டு போயிடுவேடி நீ’ இப்படியான வசனங்கள் அடிக்கடி கேட்கும் எங்கள் வீட்டில். பொறுத்துப் பார்த்துப் பொங்கி விட்டார் கண்ணாளன். திடீரென்று வீடு பெரியதாகிவிட்டது போன்ற உணர்வு. நடக்கும் போது எதுவும் காலை இடறவைல்லை. இருக்கும்போது இல்லை.. இருக்க இடம் தேட வேண்டியதில்லை சோஃபாவில். தேவையில்லாததென்று தான் கருதிய அத்தனை பொருட்களையும், (கவனிக்க.. பொருட்கள்) கடாசிவிட்டார். ஒவொரு நாளும் நான் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போதும் வீடு எம்ப்ட்டியாகும் வேகத்தை கண்டு திகைத்துப்போவேன். எடுத்தது எடுத்த இடத்தில் வைக்கப்பட வேண்டும் என்பதில் தொடங்கி ஏகப்பட்ட ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ். ’இப்போ பாத்தியா வீட்டை’ பெருமையோடு சொன்னவரிடம் ‘இதெல்லாம் முன்னாடி நான் செஞ்சப்போ கவலையே இல்லாம கிளறி வச்ச ஆள், இப்போ தான் அடுக்கி வைக்க ஆரம்பிச்சதும் அலப்பரைய பாரு’ என்றேன். ஒத்துக் கொள்வதற்கும் கொள்ளாததற்கும் இடைப்பட்டதாய் ஒரு ரீயாக்‌ஷன் கணவனால் மட்டுமே முகத்தில் காட்ட முடியும் போல.

ஒரு பர்த்டே பார்ட்டிக்குப் போயிருந்தோம். கை தவறி டீயைக் கொட்டி விட்டேன். சாரி (இது அந்த சாரி இல்லைங்க) ரொம்ப பிடிச்ச சாரி. ஆவ்வ்வ்வ்.. பாழாகிய கவலையில் அருகில் இருந்தவர்களின் ஆடைகளையும் அது நனைத்து வைத்ததை கவனிக்கவில்லை. அவர்கள் பலகாரங்கள் (உங்க ஊர்ல பட்ஷணமானா ஸ்வீட் காரம்னா சொல்விங்க?) எடுக்க போய்விட்டதால் தர்ம அடியிலிருந்து தப்பிவிட்டேன். விடுவாரா என்னவர். சாரிக்கு முதலுதவி செய்துவிட்டு சோகத்தோடு வந்தவளைக் கை காட்டி ‘பாலன்.. இதோ வரா உங்க  லெதர் ஜாக்கெட்ட நாசம் பண்ணவ’ என்று போட்டுக்கொடுத்துவிட்டு ஜூன் போனால் ஜூலை காற்றே என்று பாடிக் கொண்டிருந்தவரை ரசிக்க ஆரம்பித்தார். அதாவது அவர் பாடிய பாடலை.

ஒரு தடவை தங்கா அக்கா வீட்டில் பேசிக் கொண்டிருந்த பொழுது விஜய் அண்ணா சொன்னார்.

’நான் எப்போதும் தங்கா கிட்ட சொல்லி ஆச்சரியப்படுவேன். குணா கிட்ட எத கேட்டாலும் இருங்கண்ணா.. அவ கிட்ட கேட்டுட்டு சொல்றேன்னுதான் சொல்வார். நான் தங்கா கிட்ட கேட்டு சொல்றேன்னு சொன்னதில்லை’

’எப்டி என்கிட்ட சொல்விங்க. சொன்னாலும் நான் ஒத்துக்கணுமே. சுசி அப்டி இல்லை. அவர் என்ன சொன்னாலும் சரிம்பா. அந்த நம்பிக்கைல அவர் கேக்கறார்’

என்று தங்கா அக்கா பதில் சொன்னபோது மறுபடியும் முதல் பத்தியில் நான் சொன்ன ரீயாக்‌ஷன் அவர் முகத்தில். எதுவாக இருந்தாலும் என்னிடம் கேட்பார். இதை செய்யலாமா, இங்கே போகலாமா, அதை வாங்கலாமா என்று அவர் கேட்கும்போதே எனக்கு புரிந்துவிடும். அவருக்கு அதில் எவளவு விருப்பம் இருக்கிறதென்று. அதற்கேற்ப பதில் சொல்வேன். பிடிக்காவிட்டால் இன்ன காரணம் என்று சொல்லி அதன் பின் உங்கள் இஷ்டம் என்று முடித்துவிடுவேன். நான் மறுத்த,  தடுத்த  சந்தர்ப்பங்களை எண்ணித்தான் பார்க்க வேண்டும்.

கடையில் நின்று கொண்டு கால் பண்ணுவேன். ‘என்னப்பா கார்ட்ல காசே இல்லை’ என்று. இன்னொரு கார்ட் பேரை சொல்லி அதில இருக்கும் எடுத்துக்கோ என்பார். மறுபடி கால் பண்ணி அதோட கோட் சொல்லுங்க என்பேன். ’இவ கிட்ட கொஞ்சம் பொறுப்பா இருக்க சொல்லுங்களேன். செல்லப் பிள்ளை. குடுத்து வைச்சவ. மாசம் மாசம் பில்ஸ் செட்டில் பண்ண நான் படும்பாடு எதுவும் இவளுக்குத் தெரியாது. கடைல நின்னுட்டு கால் பண்றா. அவ கார்டோட கோட் கூட என் கிட்ட கேக்கறா’ தங்கா அக்காவிடமோ அக்காச்சியிடமோ குறைப்பட்டுக் கொள்வார். அவ்வப்போது எங்களின் நிதிப்பிரிவு பற்றி புரிய வைப்பார். கேட்டுவிட்டு மறந்துவிடுவேன். எப்படி அப்பாவின் பிள்ளையாய் வளர்ந்தேனோ அப்படி என்னவரின் முதல் பிள்ளையாய் வளர்ந்து கொண்டிருக்கிறேன். இப்படி இருப்பது தப்பென்று அதிலும் என்ன லோன், எங்கே, எவளவு போன்ற வீட்டின் நிதி நிலைமை கூடத் தெரியாத அளவுக்கு இருப்பது மிகவும் தப்பென்று தெரிந்தாலும் எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை பெரிதாக இருக்கிறது.

எங்கள் வீட்டிலிருந்து நாங்கள் செல்லும் அதிகபட்சமான தூரம் தங்கா அக்கா வீடு. அரைமணி நேர ட்ரைவிங். வரும்போது அவர் வண்டி ஓட்டும் நிலைமையில் இருந்தால் (!) இப்போதெல்லாம்  தூங்கிப்போகிறேன்.  ’என்னடி அங்க இருந்து வரும்போது தூங்கிடறே பரவால்லை. தூரம். உனக்கும் வயசாயிடுச்சு. அதுக்குன்னு பத்தே நிமிஷத்தில இருக்கிற ரஞ்சன் வீட்டுக்கு போயிட்டு வரும்போது கூடவா தூங்குவே’ தட்டி எழுப்பிக் கேட்டார். முன்பெல்லாம் தூங்கும்போது நான் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பேன். ம் கொட்டியபடி தூங்கிப் போவார். இப்போதெல்லாம் அவர் பேச ம் கொட்டுவது நானாகிப் போயிற்று. கேக்கரியான்னு கொஞ்சம் சத்தமாய் கேட்கும்போதுதான் உறங்கிவிட்டேன் என்று தெரிகிறது.

‘என்னடி நீ. எனக்கு முன்னாடி தூங்கிப் போறே. எனக்கு தூக்கமே இல்லை நைட் பூரா தெரியுமா’

‘இல்லப்பா நீங்க பேசினத கேட்டுட்டு தானே இருந்தேன். தூங்கலை நானு’

அவர் பின் தான் தூங்கினேன் என்பதில் உறுதியாக இருந்தேன். பிறிதொரு நாள் தட்டி எழுப்பி ‘இதோ பாரு.. தலைய கோது, முதுகை வருடு.. எதுனா செய்து என்ன தூங்க வச்சிட்டு நீ தூங்கு. இப்டி நீ முன்னாடியே தூங்கிப் போனா எனக்கு தூக்கமே வர்லடி’ என்று குழந்தையாய் சிணுங்கிய போது இனிமேல் முதலில் தூங்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். இதனால்தான் முன்னோர்கள் முன் தூங்கி பின் எழச் சொன்னார்கள் போல. பாவம் என் கண்ணாளன். 

இன்று முதல் முதலாக அவர் என் அருகில் இல்லாத அவரின் பிறந்தநாள். லண்டனில் இருக்கும் மச்சினர் ஊருக்குப் போகப் போவதால் அவரை வழி அனுப்பப் போக வேண்டிய கட்டாயம். அதிகாலை ஃப்ளைட்டுக்குக் கிளம்புகையில், வாசலில் கிடைத்த அணைப்பில் ’தம்பிக்காகத்தான் போறேன் குஞ்சு (உங்க ஊர்ல செல்லம்) கவலைப்படாம இரு’ என்பதாய் அவர் மனம் தெரிந்தது. எனக்கு நேர் எதிர். உணர்வுகளை அதிகம் வெளிக்காட்ட மாட்டார்.

எல்லாரும் அவரை என்றும் இதுபோல் இன்பமாய் வாழ மனமார வாழ்த்துங்கள். அவருக்கு பிடிச்ச Manchester United சாங் ஒண்ணு பாத்திடலாம்.

அப்படியே இங்க போய் எனக்கு பிடிச்ச, இப்போ நான் கேட்டுட்டு இருக்கிற பாட்டையும் பாருங்க.

வர்ட்டா..

26 October, 2010

என் குட்டித் தேவதை!!

’அம்மாச்சி.. இத வந்து இப்போ எடுத்து வைச்சிட்டு போறிங்களா இல்லையா.. எத்தனை தடவை சொல்றது கிச்சன்ல ஸ்கூல் பாக் வைக்காதிங்கன்னு’ என் சத்தம் வீடதிர ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு தடவையாவது கேக்கும். என் வாழ்க்கையில் நான் அதிகமா சண்டை போடும் ஒரே ஆள்.. என் அம்மாச்சி(உங்க ஊர்ல அம்மு). எங்களுக்கே சமயத்தில் சண்டை போடாதபோது சாப்பிட்டது செரிக்காதது போல் இருக்கும். கண்ணாளன் அடிக்கடி சொல்வது ’இதுங்க ரெண்டும் ஒரே நம்பர்ல இருக்கிறதும் போதும், போடற சண்டையும் போதும்’ ஆனால் என்னதான் சண்டையென்றாலும் அம்மா வேண்டும். எல்லாவற்றுக்கும்.

நவராத்ரி சமயம் கோயில் போனபோது வழக்கம் போல் என் முன்னே நின்றவரை வயிற்றை சுற்றி அணைத்தபடி சாமி கும்பிட்டேன். சாமி தெரியவில்லை. தன்னிச்சையாய் தலை உயர்த்தியும், பக்கவாட்டிலும் பார்த்து வணங்கினேன். எல்லோரும் அதையே சொன்னபோது தான் புரிந்தது. வளர்ந்துட்டாங்க. என் மூக்கு உயரம் வந்திட்டாங்க.

அப்படியே உருவத்தில் மட்டுமல்ல குணத்திலும் கண்ணாளன். பிடிவாதம், முன்கோபம், பொறுமையின்மை, எதையும் இலகுவாக எடுத்துக் கொள்வது. மீதிக்கு என் அக்காச்சி. நகைகள் பொன்னோ, பொய்யோ. பிடிக்காது. பொட்டு பிடிக்காது. அம்மா வாங்கும் உடைகள் பிடிக்கும், சொல்வதை போட பிடிக்காது. இருந்தாலும் தனியாக விளையாடும்போதோ, பாடும்போதோ, அம்மாவை சுற்றிச் சுற்றி வரும்போதோ அவரில் எங்காவது என்னையும் பார்த்துக் கொள்கிறேன்.

’அம்மா.. நீங்க போட்டிருக்கிற இந்த ட்ரஸ் ரொம்ப அழகா இருக்கு. இந்த தோடு, வளையல் எல்லாம். நான் வளந்ததும் அப்டியே எனக்கு குடுக்கறிங்களா??’

‘ஏம்மா.. இது பழசில்லை. அம்மா உங்களுக்கு புதுசா வாங்கி குடுக்கறேன்’

‘புதுசும் வாங்கி குடுங்க. பழசுன்னாலும் இதுவும் எனக்கு வேணும்’

கேட்டு வாங்கி வைப்பாரே தவிர எதுவும் போட்டுக்கமாட்டார். இந்த சம்மர் சமயம் என் டீஷர்ட்ஸ் நான் போடாமலே சலவைக்கு வந்தது. எப்படின்னு கேட்டால் ‘சும்மா போட்டுப் பாத்தேம்மா. சரியா இருந்திச்சு’ன்னு தன் அலமாரில எடுத்து அடுக்கி வைத்திருந்தா. என் காலணிகளும் தப்பவில்லை.

இப்போவே அக்காச்சி சொற்படி தம்பி நடக்க ஆரம்பித்தாயிற்று. அவருக்கு சாப்பாடு எடுத்து குடுப்பது, சாக்லேட் மில்க் செய்து கொடுப்பது போன்ற சின்ன சின்ன உதவிகள் செய்து கொடுப்பாங்க. அப்பாவிடம் ஐஸ் வைத்து காரியம் சாதிப்பதிலும் சமத்தோ சமத்து.

ஒரு நண்பி பொறுப்பே இல்லாம இருக்கா உங்க பொண்ணு என்பதாய் எதுவோ சொல்ல, பொறுப்பை வளர்ப்பதாய் நினைத்துக்கொண்டு நான் சிலபல அட்வைஸ்களை வாரி வழங்கியபோது சரியென்று நல்ல விதமாகத் தலையாட்டினார். என் பொண்ணுக்குப் பொறுப்பு வந்ததாய் எனக்கும் நிம்மதி. அடுத்த அரை மணியில் அதை சுக்கு நூறாக்கிவிட்டு ஓடியவரைப் பார்த்துக் கேட்டேன்.. இப்போதானே இவ்ளோ சொன்னேன்.. இப்டி பண்ணி வச்சிருக்கிங்க.. பொண்ணா நீங்க?? கேட்ட வாய் மூட முன்னர் பதில் வந்தது.. ஆமாம்.

குழந்தையாய் இருந்தபோது எடுத்த படங்கள், வீடியோக்கள் பார்ப்பதென்றால் கொள்ளைப் பிரியம். ஊர்க் கதைகள், என் சின்ன வயதுக் கதைகள் எல்லாம் கேட்டுக்கொண்டே இருப்பார். தோழிகளுக்குக் கூட அதை சொல்லச் சொல்லுவார். வகுப்பில் சமத்து. ஆசிரியர்களின் செல்லப் பெண். எதையும் முதலே செய்து முடித்துக் கொடுத்துவிடுவார். அது சரியா என்று திருப்பி பார்ப்பது கிடையாது. இந்த வகையிலாவது கொஞ்சம் பொறுமையை கற்றுக் கொடுக்கவென்று இன்னமும் முயன்று கொண்டு இருக்கிறேன்.

என் வீட்டுத் தேவதைக்கு இன்று பிறந்தாள். மனதார வாழ்த்துங்க.  என் அம்மாச்சி என்றும் இனிமையாய் வாழட்டும்.

தமிழில் இந்தப் பாட்டுத்தான் இப்போ அவங்க விருப்பம். ஐஷின் டான்சும் ஒரு காரணம்.

24 October, 2010

முன்னே ஒரு U பின்னே ஒரு A..

wings

விரிந்து கொண்ட சிறகுகளுக்குத்

தெரியவில்லை

இது எட்டா வானம் நோக்கிய

முடிவில்லாப் பயணம் என்று

போகட்டும் விட்டுவிடு..

முடிந்த வரை பறந்து சாகட்டும்!!

புரிந்து கொண்ட மனதின்

கெஞ்சுதலை மீறி

ஒடித்துப் போடத் தோன்றவில்லை

பரிதாபமான என் சிறகுகளை.

#####               #####                #####                #####                #####                #####

kyss t

எதுவோ சொன்னேன்

mm என்றான்

முன்னே ஒரு u

பின்னே ஒரு a

சேர்த்து சொல்லு என்றேன்

சொன்னதை செய்யும்

வழக்கம் தெரியாத என் கண்ணன்

சொல்லவில்லை..

கொடுத்தான்..

umma..

#####               #####                #####                #####                #####                #####

rein kyss முத்து முத்தாய் மழைத் துளிகள்

கூடவே கண்ணீர்த் துளிகள்

என் மடியில் பட்டுத் தெறித்தன

உன்னோடு நனையாத

ஒவ்வொரு மழைக்கும்

சொல்லி அனுப்புகிறேன்

நாளை என் கண்ணன்

என்னுடன் இருப்பான்..

மறக்காமல் வந்துவிடு!!

#####               #####                #####                #####                #####                #####

21 October, 2010

அடுத்த மாட்டருக்குப் போகலாம்!!

ஒரு குட்டிக் கதை. ரொம்ப பிடிச்சுது கேட்ட பொழுது.

ஒரு குருவும் சிஷ்யனும் போய்க் கொண்டு இருக்கிறார்கள். வழியில் ஒரு ஆறு. கடக்க நினைக்கும்போது வந்து சேர்கிறாள் ஒரு இளம்பெண். அவளால் அதைக்  கடக்க முடியாத நிலை. குரு அவளைத் தோளில் தூக்கியபடி கடக்கத் தொடங்குகிறார். சிஷ்யனுக்கு ஒரே யோசனை, குழப்பம். குருவிடம் கேட்கத் தைரியம் இருந்தும் கேட்க விடவில்லை அவரின் பிடிவாதக் குணம். கூடவே அவராகவே சொல்லுவார் என்ற நம்பிக்கையும். குரு சிஷ்யனின் மனம் அறிவார். குழப்பத்தை அவரே கேட்கட்டும் என்று வாளாவிருந்தார். அக்கரை சேர்ந்து இரவு ஒய்வு எடுத்துக் கொள்ளும்போது குருவே கேட்டார் ’உன் மனக் குழப்பம் என்ன? சொல் சிஷ்யா’ . அதற்கு சிஷ்யன்  ’நீங்கள் எப்படி ஒரு இளம் பெண்ணை தொட்டுத் தூக்கலாம். உங்களுக்கே இது நியாயமாகப்பட்டதா’ என்று பொங்கிவிட்டார். அதற்கு குரு ஒன்றே ஒன்றுதான் சொன்னார். ’நான் அவளை அப்போதே, அங்கேயே இறக்கிவிட்டுவிட்டேன். நீ இன்னமும் சுமந்து கொண்டு இருக்கிறாய்’

சமயத்தில் நாமும் இந்த சிஷ்யனைப் போலத்தான். அவரவர் தாம் செய்வதை செய்து முடித்துவிட்டு சந்தோஷமாகப் போய்க் கொண்டே இருப்பார்கள். நாம் தான் அதை நினைத்து நினைத்தே.. சரி விடுங்கள். அடுத்த மாட்டருக்குப் போகலாம் நாம்.
[ [ [ [ [

நேற்று தேதி 20.10.2010. நேற்றுத்தான் இந்த வருடத்துக்கான முதல் பனி வீழ்ச்சி என்பதில் இந்த ஊருக்கு அதிகப்படி சந்தோஷம். எல்லோரையும் போல் என்னால் கொண்டாட முடியவில்லை. வெள்ளைப் பனி பார்த்து வெள்ளந்தியாய் ஆனந்தக் கூக்குரலிட்ட பிள்ளைகளுடன் ஒப்புக்கு ஆர்ப்பரித்தேன். மனதுக்குள் ஒரு பக்கம் எரிமலை வெடித்துச் சிதற, மறுபக்கம் பொங்கி வந்த கண்ணீர் நதி அதை அணைத்துக் குளிர்வித்துக் கொண்டிருந்தது. அந்த மனநிலையில், அக் கணம் பேசிக் கொண்டிருந்த உயிர் நட்பிடம் கூட இதைப் பகிர்ந்து கொள்ளவில்லை. 'ஏன் டல்லா இருக்கே?' என்று கேட்கப்பட்ட  கேள்விக்கு பதில் சொல்லாதது போலவே இதை பகிர்ந்து கொள்ளவும் தோன்றவில்லை. இன்று வழக்கத்துக்கு மாறாக அதிகாலையிலேயே விழித்தும் வெளிநடப்பு மறந்து, கட்டில் விட்டு இறங்கி வர மனமில்லாமல் கண் மூடிப் படுத்திருந்தேன். லேட்டானதில் விரைவாக ரெடியாகி, கார்க்கீயோடு அதை விட வேகமாக வெளி வந்தால்.. என்ன சொல்ல.. நீங்களே பாருங்கள். வண்டி இப்படி இருக்கிறது. அதிலிருந்த பனியை தட்டிக் கொட்டி வேலைக்கு வர அரைமணி லேட். ட்ராஃபிக் வேறு நெரித்தது. என்னைப்போலவே நிறையப் பேர் இருக்கிறார்கள் போல.

026 027 முதல் நாளே காலை 7:17 க்கு இந்தக் கொடுமை. ரோடைப் பாருங்கள்.

இரண்டு வாரம் முன்னாடியே இங்கு குளிர் தொடங்கி விட்டது. எனக்கு சுவீடனில் ஒரு நண்பி இருக்கிறார். அவருடன் பேசும்போது 'இனிமேல shawl, gloves, woolen hat, rubber boots, down jacket எல்லாம் போட்டுக்கிட்டு fancy dress contest போக ஆரம்பிக்க வேண்டியதுதான். அதுக்காகவே அரை மணி நேரத் தூக்கத்தை தியாகம் பண்றதுதான் பெரிய கொடுமைங்க' என்று சொன்னார். அவங்க ஒல்லியா இருப்பாங்க. நான் down jacket ல போனாஆஆவ்வ்வ்.. சரி விடுங்கள். அடுத்த மாட்டருக்குப் போகலாம் நாம். 
[ [ [ [ [ 

பனிகாலத்தில் காலையில் வண்டிக்குள் ஏறும்பொழுது ஒரு குளிர் வரும் பாருங்கள்.. எலும்பை உறைய வைக்கும். முன்னாடியே காரை ஸ்டார்ட் செய்து ஹீட்டர் போட்டு வைக்காவிட்டாலோ அல்லது காரிலிருக்கும் நவீன முறை தானியங்கி ஹீட்டர்களை முன்னாடியே டைம் செட் செய்து வைக்காவிட்டாலோ செத்தோம். நான் ஸ்னோவை வழித்து, சுரண்டி சுத்தம் செய்யும் நேரம் கண்டிப்பாக காரை ஸ்டார்ட் செய்து விடுவேன். உறுத்தலுடன். அரை மணி நேரம் முன்னாடி வண்டியை ஸ்டார்ட் செய்து வைப்போர் பலர். உறுத்தலின்றி. ஒவொரு வின்டரின் போதும் சூழல் எவளவு மாசுபடும் என்று நினைத்துப் பாருங்கள். . போன வாரமே அவதானிகள் சொல்லிவிட்டார்கள் இன்று பனி விழும் என்று. ஞாயிறன்றே கண்ணாளன் எங்கள் வண்டிக்கு விண்டர் டயர் மாத்திவிட்டார். இன்னும் பலர் சம்மர் டயரோடு ஓட்டுகிறார்கள். பின்னர் எங்கிருந்து விபத்துக்களைத் தவிர்ப்பது. போன வருடம் டிசம்பரில் ஆரம்பித்த பனி வீழ்ச்சி, இந்த வருடம் ஐப்பசியிலேயே ஆரம்பித்துவிட்டதில் கடுப்பில் இருக்கும் இந்த ஊர்க்காரர்களுக்கு இதுக்கு மேலும் புத்தி சொல்வது எனக்கு நல்லதல்ல. பரவாயில்லை சொல்லு என்கிறீர்கள்தானே? சரி விடுங்கள். அடுத்த மாட்டருக்குப் போகலாம் நாம்.
[ [ [ [ [

மதியம் ஒரு மணி வரை நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. பின்னர் பாருங்கள் கூத்தை. நாங்களும் ஆணிகளை வைத்து விட்டு யன்னல் வழியாக புதினம் பார்க்க ஆரம்பித்தோம். சம்மர் டயர் மாற்றாததால் வந்த வினை. என் பேச்சை யார் கேட்கிறார்கள்.

037 சிவப்பு பஸ்சின் பின் நிற்கும் வெள்ளை வண்டி பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்தது போக்குவரத்துச் சிக்கலை.

036 இந்த சிவப்பு வண்டி வழுக்கிப் போய் முன்னால் நிற்கும் வெள்ளை வண்டி மீது டமார்.. மரம் மறைக்கின்றது. ரோடுக்கு அந்தப்புரம் ஒரு சிவப்பு வண்டி தெரிகிறதா? அரைமணிக்கும் மேலாக முயற்சி செய்தார். வண்டி நேராகுவதாய் காணோம். பின்னர் அப்படியே பார்க் செய்துவிட்டுப் போய்விட்டார்.

038 இந்த அம்மணியும் சம்மர் டயர் மாற்றவில்லை. பாதசாரியிடம் உதவி கேட்கிறார். பாருங்க.. பஸ் கஷ்டப்பட்டு ஓவர் டேக்கிங்.

039 041 என் இருக்கையில் இருந்தபடியே யன்னல் வழி காட்சிகள்.

042 043 என் மீது எந்த வண்டியும் இடித்துவிடாமல் தப்பிவந்து பசங்களை பள்ளியில் இருந்து கூட்டிப் போகக் காத்திருந்தபோது. இடப்பக்கம் லச்சு பள்ளி. வலப்பக்கம் சதுர் பள்ளி.

047 048 இது நேற்று வீட்டு பால்கனியில் இருந்து எடுத்தது. எதிரே மைதானத்தில் சதுர் காற்பந்துப் பயிற்சியில். சரியாக இப்போதுதான் ஓரிரு வெண்பனித் துளிகள் விழத் தொடங்கின. உற்றுப் பார்த்தால் வெள்ளைப் புள்ளிகளாய் தெரியும். தெரியவில்லையா? சரி விடுங்கள். அடுத்த மாட்டருக்குப் போகலாம் நாம் என்று சொல்லப் போவதில்லை நான். இத்துடன் முற்றும். இப்போதைக்கு!!

வர்ட்டா..

17 October, 2010

தேதி என்ன??

j 030

அக்டோபர் பதினேழு என்று சொல்பவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். இதையும் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டுமோ??இன்றுதான் நான் இந்தப் பூமியில் அவதரித்த பொல்லாத நாள்.

மறக்காமல் நினைவு வைத்து வாழ்த்திய குருவுக்கும், சுவரொட்டியில் வாழ்த்திய சங்கத்துக்கும், பஸ்ஸில் முதலில் வாழ்த்தி, பின் தனியாக வாழ்த்திய வசந்துக்கும், பஸ்ஸில் அவரின் வாழ்த்தைத் தொடர்ந்து டவுட்டாகவும், தெளிவாகவும் வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். (எங்கே என் டவல்.. ஆவ்வ்) எல்லோருக்கும் தனித் தனியாக நன்றி சொல்லாததன் காரணம் அறிய அடுத்த பத்திக்கு உங்களை பண்போடு அழைக்கிறேன்.

இதை நான் எழுதத் தொடங்கும்போது மணி 00:32. நேற்று ஒரு நண்பியின் குழந்தைக்கு தொட்டில் இடும் விழா. எங்கள் ஊரில் 31 என்று சொல்வோம். அது முடித்து அப்படியே ஒருவருக்குப் பிறந்தநாள் விழா. ஒரே நாளில் இரு விழாக்கள் என்பது ஒரே கல்லில் இரு மாங்காய் போல் அவ்வளவு உவப்பாக இல்லை. இங்கு பாதி, அங்கு மீதியென முழுதாகக் கலந்து கொள்ள முடியாது. இன்னும் கொஞ்சம் இருந்துவிட்டுப் போகலாமே என்று இவர்களும், என்ன இவ்வளவு தாமதம் என்று அவர்களும் கேட்கும்போது சிரித்துத்தான் வைக்க முடிகிறது. மிகவும் களைப்பாக இருக்கிறது. ஒரு விருந்தல்ல, இரு விருந்தில் சாப்பிட்டேன். தூக்கம் ஆளைச் சுற்றுகிறது. தூங்கி எழுந்து எல்லோருக்கும் நன்றி சொல்கிறேன். தயை கூர்ந்து மன்னித்து அருளுங்கள்.

எப்போதும் எனக்கு ஒரு கவலை. என்ன?? நான் ஏன் பிறந்தேன் என்று நினைப்பேன் என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள்?? அது அல்ல.

நான் ஏன் வளர்ந்தேன்??

இதுதான் அந்தக் கேள்வி. இப்போதும் என் மனம் கேட்கும் கேள்வி. ஒரு மூன்று வயதோடு என் வளர்ச்சி நின்றிருக்க வேண்டும். அந்த வயதில்தான் என்ன ஒரு சுகம். அனைவரையும் பேச்சாலும், சிரிப்பாலும், குறும்புகளாலும், வசியம் செய்து வாழ்ந்த அந்தக் குட்டி இளவரசி வாழ்க்கை.. மீண்டும் வருவதில்லை.. கனவில் கூட.

அதை விட்டு விடுவோம். இதோ.. உங்களுக்கு நானே செய்த கேக்குகள் இரண்டு. பார்த்து மகிழுங்கள். வேலைக்கு விடுப்பு வேண்டுமென்பவர்கள் சாப்பிடலாம்.

IMG_0802 இது என் நண்பி மகள் பிறந்தநாளுக்கு செய்தது. பார்த்ததுமே Hello Kitty என்று கண்டுபிடித்துவிட்டார் துளசிக் குட்டி. அவர் கேட்டதும் அதுதான். அதன் பின் கேக்கை விட்டு நகராமல் ’மின் கிற்றி’ (எனது கிற்றி) என்று சொல்லி, ஒரு கையால் தொட்டபடி கேக் வெட்டும் வரையும் அவர் நின்றபோது ஏன் முன்னாடியே காட்டினோம் என்று ஆகிவிட்டது.

IMG_0732 இது பட்டர் கேக். சதுர்ஜன் பிறந்த நாள் அன்று செய்தது.

வாழ்த்துக்களோடு கண்டிப்பாக பரிசுகளும் வேண்டும் எனக்கு. ஆவன செய்யுங்கள்..

வர்ட்டா..

10 October, 2010

வேண்டவே வேண்டாம்!!

என்னை நீ முழுவதுமாக

புரிந்து கொள்ளும்போது

என் உயிர் கண்டிப்பாக

என்னிடம் இருக்காது

எனக்காக உன் கண்ணிலிருந்து

ஓர் ஒற்றைத் துளி கூட

வேண்டவே வேண்டாம்

உன் மீதான என் அன்பை

அது கேவலப்படுத்தி விடும்

பதிலாக யாரிடமாவது சொல்லி

பெருமைப் பட்டுக்கொள்

உனக்காகவே ஒரு பைத்தியம்

வாழ்ந்து இறந்ததென்று!!

;;;     ;;;     ;;;     ;;;     ;;;

girl with book

;;;     ;;;     ;;;     ;;;     ;;;

மறு ஜென்மம் எனக்கு

உண்டா தெரியவில்லை

ஆம் என்பது பதிலானால்

உன் அன்புக்குரியவளாய்

அதிலாவது பிறக்க வேண்டும்

இன்னொரு பிறவி

உன் அன்புக்காக ஏங்கும்

பாவப்பட்ட ஜீவனாக

இறைவா எனக்கு

வேண்டவே வேண்டாம்!!

04 October, 2010

என் மன்னன் எங்கே!!

இலங்கையின் வன்னி மண்ணை ஆட்சி செய்த மன்னர்களில் கயிலைவன்னியனின் ஆட்சிக்காலத்தை வன்னி வரலாற்றின் பொற்காலமென்று சொல்லலாம். இவன் கயிலாயவன்னியன் என்றும் அழைக்கப்பட்டான். வன்னியர் என்றால் வலிமை மிக்கவர் என்று பொருள். வன்னியின் பனங்காமம் என்ற இடத்திலிருந்து 1644 ஆம் ஆண்டு முதல் 34 ஆண்டுகள் வலிமையான ஆட்சியை இம் மன்னன் நடத்தி வந்தான்.

இவன் ஆட்சிக்கு வந்ததில் இருந்து யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கேயரது ஆட்சியின் இறுதிக்காலம் வரை, 14 ஆண்டுகள் அவர்களுக்குப் பணியாது, திறை செலுத்தாது இருந்தான். அதேபோல் ஒல்லாந்தரது ஆட்சியிலும் தன் வாழ்வின் இறுதி வரை அவர்களுக்குத் தலை வணங்காது, திறை செலுத்தாது, யாழ்ப்பாணம் வருமாறு அவர்கள் விடுத்த கட்டளையை ஏற்காது உறுதியாக இருந்தான். இதனை ஒல்லாந்து ஆளுநர் Thomas Wantry தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

வன்னிப்பகுதி ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட போதும் மாற்றாரினால் அச்சுறுத்தல் வந்த போதெல்லாம் இவன் தலைமையின் கீழ் அனைவரும் ஒன்று சேர்ந்து போரிட்டனர். ஏழு அரசுக்குள்ளும் இவன் அரசு பேரரசாக போற்றப்பட்டது. Robert Knox என்ற ஆங்கிலேயர் தமது இலங்கையின் வரைபடத்தில் இவனது ஆட்சிப்பகுதி தென்கிழக்கே கொட்டியாரம் என்ற இடத்தையும் உள்ளடக்கிப் பரந்து இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

கயிலைவன்னியன் தம் ஆட்சிப்பகுதியான யாழ்ப்பாணத்தின் மீது படையெடுக்கக் கூடுமென்று அஞ்சிய போர்த்துக்கேயர், வெற்றிலைக்கேணி என்ற இடத்தில் ‘பெங்சூற்றர்’ என்றும், ஆனையிறவு என்ற இடத்தில் ‘பைல்’ என்றும் இரண்டு கோட்டைகளைக் கட்டியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவன் கி.பி 1678 ஆம் ஆண்டு இயற்கைச் சாவு எய்தினான்.

hjemland k

O O O O O O O O O O O O O O O O O O O O

என்ன மக்கள்ஸ்?? அப்டி எல்லாம் நினைக்கக் கூடாது. நான் நல்லாத்தான் இருக்கேன். இது எப்பவோ ஒரு காலத்தில மரியாதைக்குரிய வெறும்பய அவர்கள் என்னை தொடர்ந்து எழுதச் சொல்லி கை கா(மா)ட்டி விட்ட ஒரு தொடர் பதிவு. அவர் அவரப் பத்தியே ”யோசிச்சு தான் சொல்லணும்... சீக்கிரமே சொல்றேன்..” அப்டின்றார். ஆனாலும் மன்னாதி மன்னன் என்று ஒரு தொடர் பதிவில பாபர் மன்னன் பத்தி நிறைய எழுதி இருக்கார். அப்படியே மன்னர்கள் வரலாறு மீண்டும் நினைவுபடுத்தப்படணும்னு இதை ஒரு தொடரா எழுதலாம்னு என்னையும் தொடரச் சொன்னார். அதுக்கு அவருக்கு மீண்டும் நன்றிகள். ஆவ்வ்வ்.. இனி நான் சிலரை தொடர வைக்கணும். அட.. அதுக்குள்ள அம்புட்டுப் பேரும் ஓடியே போய்ட்டாங்களே.. இருந்தாலும் ஓலை அனுப்புவோம்ல..

அதுக்கு முன்னாடி ஒரு விஷயம். என்ன செய்ய.. டிவின்னா யாரக் கூப்பிடப் போறேன்னு சொல்ல முன்னம் ஒரு ஆர்வத்தைக் குடுக்க ப்ரேக் விடலாம். பிளாக்ல.. இப்டித்தான். கொசுவத்தி சுத்தணும். இந்த மன்னன் ஆட்சி செய்ததா சொல்லப்பட்ட இடமான பனங்காமத்தில என் அத்தை ஒருத்தங்க கல்யாணம் செஞ்சு போயிருக்காங்க. வளர்ந்ததுக்கு அப்புறம் போர்ச் சூழ்நிலைகளால அதிகம் போக முடியலைன்னாலும் சின்ன வயசில அங்க போறப்போல்லாம் அரண்மனை சிதைவுகள் உள்ள ஒரு கோயிலுக்கு போவோம். பெரிய பெரிய தூண்கள், சுவர்கள் எல்லாம் காடு மூடி இருக்கும். அதுக்குள்ள ஒளிஞ்சு விளையாடுவோம். அதே போல மாபெரும் மன்னனான பண்டாரவன்னியனுக்கு அவனைக் கொன்ற ஆங்கிலேயத் தளபதியே அவன் வீரத்தைப் பாராட்டி வைத்த நடுகல் சின்னத்தை கற்சிலைமடு என்ற இடத்தில போய் பாத்திருக்கேன். இதை விட வன்னிப் பிரதேசத்தில ஆங்காங்கு குறு நில மன்னர்கள் ஆண்ட கோட்டைகளின் சிதைவாக கருதப்படுற இடங்களையும் பாத்திருக்கேன். சில இடங்கள் யாருமே போக முடியாத அளவுக்குப் பயங்கரக் காடா மாறிப் போச்சு. காடையே வீடாக்கி வாழ்ந்து வந்த விடுதலைப் புலி வீரர்கள் சில இடங்கள் பத்தி சொல்லி இருக்காங்க. இப்போ இதை எழுதும்போது அவ்வளவு பெருமையா இருக்கிறது அப்போ.. அங்க இருந்தப்போ தெரியலை எனக்கு. இனிமே போகும்போது படம் எடுத்துட்டு வரணும்.

சரி.. இப்போ நான் கை கா(மா)ட்டுறவங்க தொடர்ந்து எழுதுங்க.

சாளரம் கார்க்கி – குரு.. நின்று போன மொக்கை வர்மன் தொடர் நினைவிருக்காங்க??

பிரியமுடன் வசந்த் – ஸ்டார்ட் மீஜிக்.. கிளப்புங்கள் பட்டையை..

யாவரும் கேளிர் நர்சிம் – இலக்கியத்துக்கும் மன்னர்களுக்கும் நிறையத் தொடர்பு இருக்கு இல்லையா நர்சிம்.. அதான்..

வீட்டுப் புறா சக்தி – புறா விடு தூது.. தொடருங்க சக்தி.

கூர்வாள் கயல் – ஆவ்வ்வ்.. வாள்.. அதுவும் கூரா.. வீசுங்க பார்ப்போம்.

விஜி – சும்மா இல்லைங்க.. இவங்க இப்போ ’கிரேட்’ விஜியாம். வெல்கம் பேக் விஜி.. அசத்துங்க..

கண்டிப்பா எழுதுங்கப்பா.. ரொம்ப சுவாரசியமா இருக்கும். அனுபவம் சொல்லுது. சரியா..

வர்ட்டா..

29 September, 2010

நான் வளர்கிறேனே அம்மா!!

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு மழை நாள் காலையில் விழிப்பதற்கு மனமில்லாமல் தாமதமாக எழுந்ததால் வேகமாக வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். ஸ்டோர் ரூமுக்குள் சென்று கார் கீயில் கை வைக்கும் போது படாரென்று பக்கத்து அறைக் கதவு திறந்து கூடவே “அம்மா” என்றொரு குரல். “என்ன கண்ணா” என்றேன். “ஆஃபீஸுக்கு கிளம்பிட்டிங்களா?? நீங்க ரொம்ப அழகா இருக்கிங்கம்மா. உங்களுக்கு இந்த ட்ரஸ் ரொம்ப அழகா இருக்கு. ரொம்ப சூடா இருக்கிங்கம்மா. எனக்கு குளிருது. ஏன் இன்னைக்கு லேட்டா போறிங்க??” இடுப்பை கட்டி, வயிற்றோடு முகம் சேர்த்து காலைக் குளிருக்கு இதமாய் என் கதகதப்பை அனுபவித்த படி தொடரும் கேள்விகளுக்கு, இரு கைகளால் நானும் இறுக்கி அணைத்தபடி பதில் சொன்னேன். இடையிடையே தலை கோதலும், உச்சி முகர்தலும் என் செல்லக் குட்டிக் கண்ணனுக்கு மிகவும் பிடித்தமானது.

நான் வேலைக்குப் போகத் தொடங்கிய வருடத்தில் ஒரு நாள் மாலை மடி மீது இருந்த படி சொன்னார். ”நீங்க முன்ன மாதிரி இல்லம்மா” என்ன இது என்று கண நேரத் திகைப்போடு கேட்டேன் “ஏண்டா கண்ணா இப்டி சொல்றிங்க. அம்மா எப்போதும் போல தானே இருக்கேன்” சிணுங்கியது பிஞ்சு  முகம். “இல்லை.. இப்பல்லாம் நான் ஸ்கூல் முடிஞ்சு வந்தா நீங்க வீட்ல இருக்கிறதில்லை.. காலேலவும் எந்திரிச்சா உங்கள காணோம்” “என்ன கண்ணா செய்யட்டும். அம்மாவும் வேலைக்கு போனா தானே..” காரணங்கள் சொல்லியும் சமாதானம் ஆகவில்லை. ”இப்டி செய்லாமா? நீங்க எங்ங்ங்கேயும் போகாம வீட்ல இருக்கும் போது உங்களுக்கு சம்பளம் கிடைக்கிறா மாதிரி ஒரு வேலை தேடிக்கோங்களேன்” அப்படி ஒரு வேலை கிடைக்காதென்று சொன்ன பின் புரிந்து கொண்டு வெக்கத்தோடு சிரித்தார். என்னைப் போலவே அவருக்கும் பகல் நேரப் பிரிவு இயல்பாய் இருக்கவில்லை.

கொசுவத்திகள் எப்போதும் இனிமை தான் இல்லையா. இப்பொழுது முதல் பத்தியை தொடரலாம். அன்று காலை எதேச்சையாக ஆரம்பித்தது இப்போதும் தொடர்கின்றது. என்ன தான் என் மனதுக்கு மகிழ்வாய் இருந்தாலும் சமயத்தில் என்னை வழி அனுப்பவென்றே சீக்கிரம் எழுந்து வருவது ஏற்பாய் இல்லை. வழக்கத்தை விடவும் சீக்கிரமாக கிளம்பி போனால் கதவை திறந்தோ, ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தோ குளிருக்கு உடலை குறுக்கியபடி கை ஆட்டி டாடா சொல்லும்போது.. முடியவில்லை. போகட்டும் சில நாட்கள் இப்படியே. கட்டி முத்தத்தோடு வேலைக்கு போவதும் புது உற்சாகம்தான்.

அம்மாவின் அணைப்பும், முத்தமும், மடி இருத்தலும் இன்னமும் வேண்டுமென்பதைத் தவிர இப்போதெல்லாம் ஏதோ ஒரு வகையில் தான் வளர்ந்து விட்டதை காட்டிக் கொண்டே இருக்கிறார். சென்ற வியாழன் வேலையால் வரும்போது இருவரையும் கடைக்குக் கூட்டிப் போவதாக சொல்லி இருந்தேன். இவர் ஃபோன் பேசினார்

“அம்மா.. நான் யூனாஸ் கூட வீட்டுக்கு போறேம்மா. ஓக்கே”

“அப்போ நீங்க கடைக்கு வர்லையா? அக்காச்சி எங்க?”

“அவங்க உங்களுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. நான் போறேன்”

“சரிப்பா.. ஆனா அப்பா வர லேட்டாகும். நீங்க நாங்க வர வரைக்கும் தனியா இருப்பிங்களா? அஞ்சு மணி கூட ஆகலாம்” 

“அம்ம்ம்மா.. நான் ஒண்ணும் சின்ன பையன் இல்லம்மா.. நான் இருப்பேன். பை”

“இருங்க.. கீ இருக்கா?”

“இருக்கு.. பை”

அவர்கள் ஆடிப் பாடி வீடு போய்ச் சேரும் நேரம் கணக்கு வைத்து அழைத்தேன்.

“என்னாம்மா”

“என்ன செய்றிங்க? யூனாஸ் என்ன செய்றார்?”

“யூனாஸ் இங்க வரல”

“அப்போ?”

“அவர் அவங்க வீடு வரைதான் வந்தார்”

“ஓ.. அம்மா அவரும் எங்க வீட்டுக்கு வரதா நினைச்சிட்டேன். அடுத்த தடவை சரியா சொல்லணும் ஓக்கேவா.. நீங்க என்ன செய்றிங்க இப்போ? என்ன வண்டி சத்தம் கேக்குது?”

” நான் இன்னும் வீட்டுக்குள்ள போலம்மா. வாசல்ல வரும் போது கால் பண்ணிங்க. அதான் வெளிய நின்னே பேசிட்டு இருக்கேன்”

“முதல்ல வீட்டுக்குள்ள போங்க. உள்ள போய்ட்டு கதவை சரியா லாக் பண்ணிட்டு மறுபடி கால் பண்ணி சொல்லுங்க”

“அம்மா.. நீங்க நினைக்கிரிங்க இல்லை நான் குட்டிப் பையன் மாதிரி பயப்படுவேன்னு. உங்களுக்காக வேணும்னா கால் பண்றேன். எனக்கு பயம் கிடையாது”

இதற்கு மேலும் அவர் தைரியத்தை குறைக்க முயலாமல் சரி என்று வைத்தேன். நாங்கள் வீட்டுக்கு வரும்போது டிவி முன் இருந்தார். கூடவே பெருமிதமாய் ஒரு பார்வை.

”அம்மா.. செப்பானியா வீட்டுக்கு போய்ட்டு வரேன். எத்தனை மணிக்கு வரணும்?” மொபைலில் அலாரம் செட் செய்து கொள்வார். ஸ்கேட் போர்ட், மைக்ரோ ஸ்கூட்டர் இல்லையென்றால் சைக்கிள் சகிதம் பாடல் ஒன்றை முணுமுணுத்தபடி போகும் அவரை மறையும் வரை பார்த்துக் கொண்டிருப்பேன். இதை எழுதும் இந்த நேரத்துக்கு இடையில் முத்தங்களும் அணைப்புமாக அடிக்கடி கொடுத்துப் பெற்றுக் கொண்டிருக்கிறேன். இன்று விடிந்ததில் இருந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார். “நான் குழந்தையா இருந்தது நினைவிருக்காம்மா உங்களுக்கு?” நானும் அதே நினைவுகளுடனேயே சுற்றிக் கொண்டிருக்கிறேன். வயிற்றுக்குள் இன்னமும் அவர் உதைப்பது போல சில்லென்ற ஒரு உணர்வு வந்து போக, தானாகவே ஒரு இனம் புரியாத பெருமூச்சும் வருகிறது.

நேற்றுத் தான் கவனித்தேன். தூங்குவதற்கு முன் இரண்டு கிளாஸ் பால் எடுத்துக் குடிக்கின்றார். “ஏன் கண்ணா ரெண்டு கிளாஸ் பால்? சாப்பாடு பத்தலையா?” “அம்மா.. தெரியாதா உங்களுக்கு? ரெண்டு கிளாஸ் பால் குடிச்சிட்டு தூங்கலைன்னா எனக்கு தூக்கமே வராது. அப்புறம் நைட்டு பூரா முழிச்சிட்டே இருப்பேன்” அவ்வளவு சீரியசாக சொல்லி விட்டுப் போனவர் இன்று பாலே குடிக்காமல் பன்னிரண்டு மணிக்கு எழுவதற்கு தயாராய் தூங்கப் போயிருக்கிறார்.

சும்மாவே அதிகம் எழுதுவேன். இதில் அம்மாவாய் எழுத ஆரம்பித்தால்? இப்போதைக்கு முடித்துக் கொள்ளலாம்.

என் செல்லக் கண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

sathu அவருக்கு அழகான ஒரு வாழ்த்தை நினைவாக அனுப்பி வைத்த கோப்ஸ்.. உங்களுக்கு ரொம்ப நன்றிப்பா. இன்றுதான் காட்ட வேண்டும் என்பதையும் மீறி நேற்று இரவே காட்டி விட்டேன். அவ்வளவு சந்தோஷப்பட்டார். பிரிண்ட் எடுத்து கொடுக்கும்படியும் கேட்டிருக்கின்றார். அவர் அறைக்குள் வைக்க வேண்டுமாம். மீண்டும் நன்றி.

அப்படியே அவர் கேட்ட பாடலையும் கொடுத்து விடுகிறேன்.

27 September, 2010

இரண்டில் ஒன்று!!

100. சொல்லிப் பார்க்கவே சந்தோஷத்தில் மனம் நிறைகிறது. இது என்னோட நூறாவது இடுகை. என்னை இது வரை எழுத வைத்த உங்களுக்கும் எழுதிய எனக்கும் எவ் வகையில் நன்றி சொல்வதென்று தெரியவில்லை. உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும், நட்புக்கும் என்றும் என் வணக்கங்கள். நன்றி சொல்லி தள்ளி வைக்க விருப்பம் இல்லை. இருந்தாலும் சொல்லிக் கொள்கிறேன்..

நன்றி மக்கள்ஸ்..

இன்னைக்கு ஸ்பெஷலா, வித்தியாசமா எதாவது எழுதணும்னு ரொம்ம்ம்ம்ப யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். எப்போதும் என் இஷ்டத்துக்கே எழுதிட்டு இருக்கேனேன்னு ரொம்ப நாளா ஒரு உறுத்தல். இன்னைக்கு ஒரு நாள் (கேட்டுக்குங்க மக்கள்ஸ்.. இன்னைக்கு ஒரு நாள் தானாம்) ஒரு சின்ன மாற்றம். உங்களுக்கு ரெண்டு ஆப்ஷன் குடுத்திருக்கேன். உங்களுக்கு இருக்கிற நேர அளவுகளுக்கேற்ப ரெண்டில ஒண்ண படிச்சிட்டு போங்க. கண்டிப்பா படிச்சிடணும் சொல்ட்டேன். நூறாவது இடுகைன்னு நெகிழ்ந்து போய் இருக்கிற சந்தர்ப்பத்தில ரெம்ப கஷ்டப்பட்டு உங்கள டவல் எடுக்க வைக்காத மாதிரி எழுதிட்டு இருக்கேன்.

எல்லாரும் நலமா இருக்க என் பிள்ளையார வேண்டிக்கிறேன்.

 \ \ \ \ \ \ \ \ \ \

நான் உன்னிடம்

’லவ் யூ’ சொன்னதை விடவும்

’சாரி’ சொன்னது அதிகம்

’உம்மா’ கேட்டதை விடவும்

’திட்டாதே’ கேட்டது அதிகம்

’கிட்ட வா’ என்றதை விடவும்

’கோச்சுக்காதே’ என்றது அதிகம்

’கொஞ்சிய’ கணங்களை விடவும்

’கெஞ்சிய’ கணங்கள் மிக மிக அதிகம்!!

 \ \ \ \ \ \ \ \ \ \

லவ் யூ

சாரி

உம்மா

திட்டாதே

கிட்ட வா

கெஞ்சி கேட்டுக்கறேன்

கோச்சுக்காதே!!

\ \ \ \ \ \ \ \ \ \

22 September, 2010

தோழி(கள்) அப்டேட்ஸ்!!

nathiya

shalini

malavika 1

bavana 2

kajal-agarwal 1

sunaina 1

nayantara

எல்லாம் ஒரு கடிதம் செஞ்ச வேலை. நடிச்சா இணைய தளபதி கூடத்தான் நடிப்போம்னு ஆளாளுக்கு கால்ஷீட்டும் பொக்கேயுமா சாளரம் வாசல்லவே நிக்கறாங்க. மத்தவங்கள ஏதோ சமாளிச்சிட்டேன். இந்த மாளவிகாவதான் ஒழுங்கா ஒரு போட்டா பிடிக்கிறத்துக்குள்ள.. உஸ்ஸ்ஸ்ஸ்.. ஹீரோ ஃபோட்டோவ வேற பாத்திடுச்சா.. தானும் செக்ஸியாதான் வருவேன்னு ஒரே அட்ட்ட்டம்.

பரிசுகள், பண முடிப்புகள் என்னைச் சேரும். வாழ்த்துக்கள், பாமாலைகள் ’இன்ன பிற’.. ஹிஹிஹி.. அடுத்த லைன் படிக்காமலே உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும் யாரைச் சேரும்னு. மனதார வாழ்த்தி பரிசு/பண முடிப்புகள அள்ளி வழங்கிட்டு போங்க மக்கள்ஸ்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்க்கி!!

குறிப்ஸ் :- படங்கள் தந்துதவிய ஃபேஸ்புக்காண்டவருக்கும், கூகிளாண்டவருக்கும் நன்றிகள்.

20 September, 2010

நிலா(வீட்டு)க்கு போய்ட்டேன் - 5

ஊர் சுத்தல் ஒண்ணு.     ரெண்டு.     மூணு.     நாலு.

IMG_0189 IMG_0193 திடீர்னு சைட்ல பாக்ஸ் மேல கால்கள் இளைப்பாறும். என்ன இப்டி திடீர்னு ஆரம்பிச்சேன் இந்த வாரம்னு பாக்கறிங்களா?? இதே மாதிரித்தான் திடீர்னு எங்க கைய தள்ளி விட்டுட்டு காலை வச்சுக்குவாங்க. அதிலயும் சண்டை வந்திட்டதால மணிக்கு ஒருத்தர் என்று முடிவாகி டைம் அவுட் சொல்ல வேண்டிய பொறுப்பு என் கிட்ட கொடுக்கப்பட்டது.

IMG_0201 இப்போ ஒரு வழியா சுவீடன் நாட்டுக்குள்ள வலது டயர் உருண்டு போயாச்சு. முன்னல்லாம் பார்டர்ல செக் பாயிண்ட் மாதிரி வச்சிருந்தாங்க. இப்போ எதையும் காணோம். அந்த இடம் வெறிச்னு இருந்திச்சு. இனிமே இப்படியே நேராஆஆஆ போயிட்டே இருக்கும் பாதை. ஸ்கண்டினேவியன் நாடுகளான நோர்வே, சுவீடன், டென்மார்க்கில பெரும்பாலும் ஹை வேல ரெண்டு லேன் இருக்கும். சில இடங்கள்ல மூணாவும், ஒண்ணாவும் மாறி மாறி வரும்.

 

IMG_0205 கண்ணாளன் முகத்தில இப்போ அவ்ளோ மலர்ச்சி. ஸ்பீட் குறைஞ்சது 110km என்ற சைன் பாத்துட்டார்ல. அதான் குஷி. இனி ரெக்கை கட்டிக்கும் டயர்களுக்கு. அவர் பாட்டுக்கு ஓவர் டேக் பண்ணிட்டு போயிட்டே இருப்பார். சில கார்கள் அடிக்கடி எங்களை ஓவர் டெக் செய்யும். அப்புறம் நாங்க அவங்களை. அப்படி அடிக்கடி சந்திக்கும்போது குட்டியா ஒரு சிரிப்பு பரிமாறிக்குவோம். சிலர் கடுப்ஸ். இந்த கருப்புங்க எங்கள முந்தவான்னு. அதிலயும் பசங்க இருந்தாங்கன்னா கை ஆட்டி சிரிச்சுட்டு போவாங்க.

IMG_0199 IMG_0204 பச்சையும் மஞ்சளுமாய் கம்பளம் விரித்து வைத்த வயல் வெளிகள். இந்த வருஷ காலநிலை சரியா இல்லாததால நிறைய இடங்கள் வரட்சியா இருந்துது.

IMG_0200 நோர்வே மண் கன்னங்கரேர்னு இருக்கும். சுவீடன்ல பழுப்பு நிறமா மண் மட்டுமில்லாம மலைகளும் பழுப்பாவே இருந்திச்சு. குட்டியா இருந்தா குன்றுன்னு சொல்லணுமோ??

IMG_0211 இது என்ன செடினு தெரியலை. ஆனா எங்க பாத்தாலும் சோளப் பொரி தூவி வச்ச மாதிரி இருந்துது.

IMG_0197 இது சுவீடன்ல தரை இறங்குற  ஏரோப்ளேன். நல்லா பாத்துக்கோங்க. பாத்திட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. அடுத்த ஸ்டாப்பிங்ல மதிய சாப்பாடு.

வர்ட்டா..

15 September, 2010

குழந்தைக் கதைகள்..

பூச்சி காட்டினான் என் குழந்தை

ஒன்றல்ல இரண்டு முறை

பாம்போ பல்லியோ இருக்குமென்று பார்த்தவளுக்கு

பூச்சி சிரிப்பைத் தான் தந்தது

காரணம் அறியாக் குழந்தை முழித்தது

சொல்லக் கேட்ட பின் செல்லமாய் முறைத்தது

பறந்து போய் விட்ட பூச்சியை

இப்போதும் தேடிக் கொண்டிருக்கிறான்

சிரிப்புக்கான கோவத்தை என் மேல் காட்ட முடியாத

என் போக்கிரிக் குழந்தை

7 7 7 7 7

woman looking

7 7 7 7 7

என் குழந்தை மெச்சிய

கதைகாரி நான்

அவ்வளவு அழகாய் கதை சொல்வேனாம்

அவன் தான் சொன்னான்

கதைக்கான கருவை கொடுத்துவிடுவான்

சொல்லும்போது விட்டுப் போகும் அத்தனையும்

கேள்விகளாய் குறிப்புக்களாய்

அவனால் எடுத்துக் கொடுக்கப்படும்

கதை நாயகனும் அவனே ஆகும்போது

நிஜத்தில் நடந்தது

என் நினைவில் உணரப்படும்

அழகாய் கதை சொல்வேனாம்

அவன் தான் சொல்கிறான்

நடந்ததையெல்லாம் கதையென்னும்

என் தங்கக் குழந்தையை

என்னவென்று நான் சொல்வேன்..

12 September, 2010

நிலா(வீட்டு)க்கு போய்ட்டேன் – 4

ஊர் சுத்தல் ஒண்ணு.

ஊர் சுத்தல் ரெண்டு.

ஊர் சுத்தல் மூணு.

பயணங்கள் போகும்போது பொதுவாகவே வெயில் குறைவாக இருந்தா நல்லதுன்னு உங்க எல்லாருக்குமே தெரியும். அதுவும் வண்டியில போகும்போது ஏசி போட்டோம்னா குளிரும், தூக்கம் சொக்கும். வெயிலுக்கும் வயித்துக்கும் இதமா பழங்கள் கொண்டு போறது என் வழக்கம். அதிலேயும் என் சித்தப்பா ஒரு தடவை அவங்க வீட்ல இருந்து கிளம்பும்போது அன்னாசி பழத்த குட்டி குட்டியா கட் பண்ணி, சர்க்கரை, உப்பு, கொஞ்சூண்டு தூள் (அதாவது உங்க ஊர்ல காஞ்ச மிளகாய், தனியா, சோம்பு, மற்றும் இதர பொடி எல்லாம் தனி தனியா சேர்த்துப்பிங்க இல்லையா.. அதையே நாங்க மொத்தமா உரல்ல இடிச்சோ, மில்லுல குடுத்து அரைச்சோ வச்சுக்குவோம். அது தான் எங்க ஊர்ல மிளகாய்த் தூள் என்கிற தூள். யாருக்காச்சும் ரெசிபி வேணும்னா கேளுங்க) சேர்த்து ஒரு பாக்ஸ்ல போட்டு முதல் நாள் இரவு ஃப்ரிஜ்ல வச்சிட்டார். அடுத்த நாள் நாங்க ஒரு பத்து மணி வாக்குல சூரியன் சுட ஆரம்பிச்சதும் எடுத்து சாப்டோம்னா.. அமிர்தம். அப்டி ஒரு ஜூஸியா காரம், இனிப்பு, உப்பு சுவைக் கலவையோட தாகத்துக்கும் பசிக்கும் சேர்த்து சாப்பிடலாம். பசங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.

 IMG_0181 இப்போ வெயில பாருங்க. நேரம் காலை 8:48. பாக்க இப்டி இருந்தாலும் கண்ணாடி வழியா ரொம்ப சுடும். அது என்னமோ என் சைடுலவே எப்போதும் சூரியனோட கொடும், கனல் பார்வை இருக்கும். பெயர் சரியில்லை. சூரியனோட பெயர மாத்தணும்.

தலை நகர் ஆஸ்லோ போய் சேரும் வரைக்கும் இடப்புறமும் வலப்புறமுமா கூடவே வரும் ஆறு. அமைதியா, ஆரவாரமா, பொங்கும் நுரையோட குதிச்சோடி கும்மளமா அதுவும் எங்க மனம் போல. இந்த வருஷம் மழை குறைவா இருந்ததால நிறைய இடங்களில வற்றிப் போய் இருந்தது கவலை. கண்ணாளன் கூட பகிர்ந்து கிட்டு ஒரு படமும் எடுத்து வச்சேன். 1280080481535

 

 

 

 

 

அடுத்து வந்த சுப யோக சுப நேரத்தில முதலாவது சண்டைய ஆரம்பிச்சு வச்சாங்க பசங்க. அம்மு தூங்கிட்டு இருக்கும்போது சது அவங்க சோடாவ குடிச்சிட்டாராம். அவங்கள சமாதானம் பண்ணுறத்துக்குள்ள சத்தத்தில கண்ணாளன் எந்திரிச்சாச்சு. அடுத்து நம்மதுக்கு பிள்ளையார் சுழி. எப்டின்னு எழுதறேன் படிங்க.

’அந்த சன்கிளாஸ் கொஞ்சம் எடுத்து குடுங்கப்பா..’   இந்தா..   ’இது இல்லை.. மத்தது..’   இந்தா..

’டீ கொஞ்சம் குடுங்களேம்பா..’    இந்தா..

’அதோ.. அந்த பூவை ஒரு ஃபோட்டோ எடுங்கப்பா..’

(எடுத்ததும்) ’நல்ல அழகா இருக்கில்லை.. சரியா எடுத்திங்களா??’

(நோ பதில்)

’என்னோட ஐபாட் கொஞ்சம் எடுங்களேன்..’

எதுக்கு இப்போ அது உனக்கு?? அதான் சிடி பாடுதுல்ல..

’இல்லைப்பா.. இதில இருக்கிற 6 சிடியும் கேட்டாச்சு.. இனிமே அதில கேக்கலாம்..’

அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.. அதையே கேளு.. எவ்ளோ வேலைதான் நான் உனக்கு செய்றது.. எனக்கு தூக்கம் வருது நான் தூங்கறேன்..

பாத்திங்களா.. என்ன அடாவடித்தனம்னு. விடுவேனா நான். அவர் ட்ரைவ் பண்ணும்போது பழி வாங்கிட்டேன்ல.  இப்போ அவர் ஓட்டுநர். நான் எதுவும் பேசல. அடிக்கடி என் பக்கம் பார்வைய வீசிட்டே ஒரு கள்ளச் சிரிப்போட இருந்தார். இப்டியே ஒரு ஒரு மணி நேரம் போச்சுது. அப்புறமா கேட்டார்.

“என்ன கம்னு இருக்கே”

“அது இப்போதான் தெரிஞ்சுதா உங்களுக்கு..”

“இல்லைடி. அது எனக்கு எப்பவோ புரிஞ்சுது. கேட்டா உனக்கு பிடிக்காது. இருந்தாலும் என் வாய் சும்மா இருக்காதே”

“அப்போ புரிஞ்சுதுன்னா வளைவில எதுக்கு இவ்ளோ ஸ்பீடா திருப்பறிங்க”

“ஆமாப்பா.. ஸ்லோவா போங்க. எனக்கும் ஒரு மாதிரியா இருக்கு” இத சொன்னது அம்மு.

எனக்கும் அம்முவுக்கும் ட்ராவல் சிக். அவ குழந்தையா இருந்தப்போ தூங்காம இருந்தான்னா உடனவே உவ்வே தான். எனக்கு எதுனா சாப்டுட்டே இருக்கணும், இல்லை புக் படிக்கணும், இல்லை ட்ரைவ் பண்ணணும். இல்லேன்னா உவ்வே. டாப்ளெட் போட்டா தூங்கிட்டே இருப்போம். இதில அம்மு அம்மா வாந்தி வருதுன்னு சொன்னதும் சதுர் படற பாடு பாக்கணுமே. எங்க அவர் மேல பட்டுடுமோன்னு பயம். கதவோட ஒண்டிக்குவார். போன வருஷம் அதுக்கும் ஒரு முடிவு வந்திச்சு. அதாவது டாப்ளட்டுக்கு. ஒரு பாண்ட். ஃபார்மசில கேட்டு கண்ணாளன் வாங்கிட்டு வந்தார். அதுல ஒரு குட்டி கோலி. அதை கைல நரம்பு மேல படும்படியா வச்சுக்கணும். அவரு நம்ம பாடியோட பாலன்ஸ பாத்துக்குவாராம். என்ன அதிக நேரம் போட்டிருந்தா அழுத்தும். வலிக்கும். அப்பப்போ அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். காரோ, கப்பலோ, ஃப்ளைட்டோ.. இப்போ கவலை இல்லை.  இது தெரியாம என்ன அம்மாவும் பொண்ணும் ஸ்டைலா ரெண்டு கைலேம் பாண்ட் போட்டிருக்கிங்கன்னு கேக்குறவங்களும் உண்டு. கொஞ்ச நேரம் தூங்கேன்.. நான் ஸ்பீடா ட்ரைவ் பண்ணனும்னு கண்ணாளன் கேக்குற ரேஞ்சுக்கு என் தூக்கம் குறைஞ்சு போச்சு. அம்முவும் விழிச்சிருந்து எல்லாருமா ஜாலியா பேசிட்டு போறது.. என்ன சுகம்.

IMG_0215 IMG_0543

முன்னல்லாம் பெருசா ஒரு மேப் கைல வச்சுட்டு வாயில நுழையாத ஊர் பேரெல்லாம் படிச்சு கண்டுபிடிச்சு போறதும் ஒரு கிக் தான். அப்புறம் navigator வாங்கினோம். அது சமயத்தில பொத்துன்னு கீழ விழுந்துடும். இப்போ GPS வண்டிலவே இருக்கு. தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கேற்ப நாங்களும் மாறிக்கிட்டோம். அடுத்த வருஷம் GPS க்கு புது சிடி வாங்கி போடணும்னு முடிவு எடுத்துக்கிட்டோம். ஏன்னா பாதையில புதுசா செய்த மாற்றங்கள் பிடிபடாம சில பல கீலோ மீட்டர்கள் சுத்த வேண்டியதாச்சு.

“அம்மா.. நான் மூணு பிஸ்கட் தான் சாப்டேன்”

“ஓ.. அப்டியா.. சமத்து.. அவ்வ்வ்ளோ பிஸ்கட் சாப்டிங்களா”

“அம்ம்ம்மா.. மூணு தானே சாப்டேன். அதுக்கு எதுக்கு இப்டி சொல்றிங்க”

“டனல் எப்டி கட்டினாங்க தெரியுமா?? கேளுங்க அப்பா சொல்றேன்”

“மலை இருக்குதில்லை மலை.. அதை குடைஞ்சு குடைஞ்சு குடைஞ்சு குடைஞ்சு.. ”

“அப்பா.. அது எங்களுக்கு தெரியும்பா”

இப்டியா நாங்க பசங்க கூட போட்ட மொக்கைகளோட..

“அம்மா.. நான் உங்க ஜூஸ்ல கொஞ்சம் குடிக்கலாமா.. ஏன்னா நான் எனக்கு ஐஸ் கிறீம் தான் வாங்கினேன்.. ஜூஸ் வாங்கலை”

இப்டியா அவங்க எங்களுக்கு செய்யிற அரசியல்களோட பயணம் தொடருது..

வரட்டா..

 

05 September, 2010

இறைவா கொடுக்காதே..

2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 

மனதை வதம் செய்வதில்

அவன் போல் தான் நீயும்

சில முறையேனும்

காயங்களுக்கு இதமாய்

ஆ(ற்)றுதல் செய்வதால்

நீ மட்டும்

சற்று வேறுபட்டுப் போகிறாய்.

Sleeping_Beauty_by_MarcinT 

2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 

ஒற்றை வார்த்தையால்

உயிர் வரை நனைக்கவும்

உயிர் வதை செய்யவும்

உன்னால் மட்டுமே முடிகிறது

உதாரணத்திற்கு ஒன்று

“செல்லம்”

2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 

gråt

என்னது போல் ஒரு வாழ்வு

யாருக்கும் கொடுக்காதே இறைவா

இருக்கென்று சிரிக்க விடு

இல்லையென்று அழவிடு

இருந்தும் இல்லாமல்

என்ன வலி இது??

2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 

உன்

காலடியில் பரிதவிக்கும்

என் இதயம்

கடந்து வேண்டுமானால் போய்விடு

மிதித்து மட்டும் போகாதே.

2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 

01 September, 2010

வனவாசம்.

 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5

எப்போதாவது உன்னோடு வாழ்வேன்
இல்லை வாழ்ந்து விட்டுப் போகிறேன்
எப்போதும் போல் நினைவுகளில்..

 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5

par r உன் மூச்சு சத்தம்

கேட்காத எந்த இடமும்

ஏற்பாய் இல்லை

வைத்துக் கொள் என்னை

உன் கைகளின் வட்டத்துக்குள்

 

  5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5

நெகிழச் செய்யாதே..

நீ சொல்வதெல்லாம் சரியாகவும்

கூடவே கேட்பதெல்லாம் செய்யவும்

எனை மீறித் தோன்றுகிறது.

  5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5

sjø 1 என்னோடு நீயும்

உன்னோடு நானும்

நம்மோடு யாரோவுமாய்

வாழ்க்கை..

விதி..

படைப்பு..

 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5

இந்த உன் சிரிப்பு

இப்போதும் நினைவில்..

எப்போதும் இல்லை

எப்போதாவது சிரிக்கிறாய்

என்னை சிலிர்க்க வைத்த

அந்த முதல் சிரிப்பை..

 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5

உன் ஒற்றை நொடி உதட்டு முத்தம்
மனதோடு தலை வலிக்கும் மருந்தாக
நிம்மதியாய் ஒரு தூக்கம்
நன்றிக்கடன் தீர்க்க வேண்டும்
கிட்ட வா கண்ணா..

 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5

29 August, 2010

என்னைப் புரிந்துகொள்..

எனக்கான ஒரு சூரியன்

  உதிப்பது முடியுமா

    காயும் நிலவு

      எனக்காக மட்டுமா

        தென்றலின் சுகத்தை

          யாரெல்லாம் அறியவில்லை

            கொட்டும் மழையில் குதிப்பது

              நான் மட்டும் இல்லையே

                ஒற்றைப் பூமியிடம்

              எத்தனை உயிர்கள்

            எவ்வளவு உரிமையாய்

          இயற்கை புரிகிறது..

        நீ மனிதனாய் போனதால்

      விட்டுக்கொடுக்க முடியாத

    சுயநலக்காரி ஆகி விட்டேன் போல..

  புரிந்து கொள்ள வேண்டியவன்

நீதான் என் பொதுநலக்காரா!!!!

hands

6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6

இதனால் சகல மக்களுக்கும் சொல்வது என்னவென்றால்..

நூறுன்னா கூட பரவால்ல.. கூட ஒண்ணு சேர்த்துக்கோங்க.. இப்போ நூத்தி ஒண்ணு ஆச்சா.. அத்தனை ஃபாலோயர்ஸ்.. யாவரும் நலமா இருக்காங்களாம்.

உங்க எல்லார் அன்புக்கும் ஆதரவுக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள். நீங்க தான் பணம் பொருளுக்கெல்லாம் ஆசைப்படாதவங்களாச்சே. அதுக்காக நான் செய் நன்றி மறக்க கூடாதில்லையா. இந்த நன்றிக் கடன எழுதியே தீர்த்துடலாம்னு முடிவு செஞ்சாச்சு.

இதனால் சகல மக்களுக்கும் மறுபடி சொல்வது என்னவென்றால்..

வர்ட்டா..

25 August, 2010

லுக்கு விடாதிங்கப்பா..

குடும்பமா வாக்கிங் போயிட்டு இருந்தோம். எப்போதுமே பாதிக் குடும்பம் முன்னாடி போயிட்டு இருக்கும். பின்னாடி வர பாதிக் குடும்பத்துல எப்ப்ப்ப்போதும் நானிருப்பேன். நம்ம நடையோட ஸ்பீடு அப்டி. என் ஸ்பீடுக்கு ஈடு கொடுத்து அப்பப்போ யாராவது கூட வருவாங்க. என்னவர் சொல்வார் ஒரு ஸ்டெப் வச்சிட்டு அடுத்தது வைக்க நீ தேட வேண்டியதில்ல.. தரை அங்கதான் இருக்கும்.. தைரியமா கால வைனு. இப்போ என் கூட அவர்தான் வந்திட்டு இருந்தார்.

“எனக்கு புது ஜாக்கிங் ஷூஸ் வாங்கணும்பா”

“இதுவே நல்ல புதுசா தானே இருக்கு”

“என்ன சொல்றிங்க நீங்க.. இது நான் இங்க வந்த வருஷம் வாங்கினது. இதோட பனெண்டாவது வருஷமா பாவிச்சுட்டு இருக்கேன். அதான் என்னால ஸ்பீடா நடக்க முடியலை தெரியுமா..”

இதுக்கு அவர் பதில் சொல்லைன்னாலும் பரவால்ல. இல்லைன்னா ஒரு ஜாக்கிங் ஷூவ பனெண்டு வருஷமா பாவிச்ச ஒரே ஆள் நீதாண்டின்னு சொல்லி இருந்தாலும் கூட பரவால்ல. ஒரு லுக்கு விட்டார் பாருங்க.. அதான்..

joggesko

<<<<<     >>>>>

இந்தியால இருந்து ஒரு பார்சல் வந்திருக்கிறதாவும், சைஸ் கொஞ்சம் பெருசா இருக்கிறதால் போஸ்ட் ஆஃபீஸ்ல வந்து தகுந்த ஆதாரம் காட்டி கலெக்ட் பண்ண சொல்லியும், ரெண்டு வாரத்துக்குள்ள எடுக்கலேன்னா உடமைக்கு நாங்க பொறுப்பு கிடையாது.. அப்டி ஒண்ணு இங்க வரவே இல்லைன்னு சொல்லிடுவோம்னும் ஒரு கார்ட் வந்திருந்துது எங்க ஊர் போஸ்ட் ஆஃபீஸ்ல இருந்து. அட நம்ம பதிவுலகவாசிங்க யாரோ தான் நமக்கு பார்ஸேல் அனுப்பி வைச்சிருக்காங்களோனு சட்னு குதிச்ச மனச அடக்கிட்டேன். நமக்கு யாரு.. வேணாம் விட்டுடலாம். ஒரு வேளை மாமா?? சான்ஸே இல்லை. கேக்காம அனுப்ப மாட்டார். அப்போ.. அதானா.. கண்ணாளனோட சர்ப்ரைஸாஆஆ.. திருவிழா வருது, ரெண்டு மூணு பார்ட்டிக்கும் போணும்.. நல்லதா சாரி இல்லை.. எல்லாம் அநேகமா ஒரு தடவை கட்டினதாதான் இருக்கு.. இல்லேன்னா பிளவுஸ் தைக்கலன்னு கொஞ்சம் ஓவராதான் புலம்பிட்டோமோ.. சரி.. அதான் வந்திடுச்சே இனிமே குதிச்சுக்கோன்னு மனச குதிக்க விட்டேன். அப்டியே ஃபோன் பண்ணி அவர் காதில விஷயத்தை விட்டேன். அவர் பேர்லதான் பார்ஸல் வந்திருக்கு. அவர் தான் போய் எடுக்கணும்.

பார்ஸல ஓபன் பண்ணா பெருசா ஒரு பாக்ஸ் முதல்ல எட்டிப் பாத்துச்சு.. புடவைக்கு எதுக்கு பாக்ஸ்லாம்.. ஓஹோ.. பொருத்தமா வளையல் கூடவே இருக்கும்போல.. அதான் உடையாம இருக்க பாக்ஸ்ன்னு நான் நினைக்குறத்துக்குள்ள குட்டியா ஒரு புக் ப்ரீத்தி புளூ லீஃப்னு எழுதினாப்ல.. அதேதாங்க.. டேபிள் டாப் கிறைண்டர்.. என் சோகத்தை அப்புறம் வச்சுக்கலாம்.. இப்போ மேல படிங்க.. இருந்தாலும் சின்னதா ஒரு ஆவ்வ்வ்..

”இது எப்போப்பா ஆர்டர் பண்ணிங்க..”

“போன மாசம் நம்ம விவேகானந்தன் அண்ணா இந்தியா போனார்ல.. அவர் கிட்ட சொல்லிவிட்டேன்”

”ஓ.. நான் கூட என்னமோ புடவைன்னு நினைச்சேன்பா. (காதில புகை தெரிஞ்சுது உங்களுக்கு?? அவர் கிரைண்டர்ல பிஸியா இருந்ததுல என்ன கவனிக்கல.. நான் சொன்னதையும் வ போ கவனிக்கல) இது நல்ல ப்ராண்டாப்பா”

”அப்டின்னுதான் அவர் சொன்னார்டி”

“இல்லப்பா பழசு ஸ்மித் கிரைண்டர்.. நான் இங்க வந்த வருஷம் வாங்கினது.. பனெண்டு வருஷமா பாவிச்சேன்ல. இதுவும் அப்டி இருக்கணுமே”

இதுக்கு அவர் பதில் சொல்லைன்னாலும் பரவால்ல. இல்லை ஒரு கிரைண்டர பனெண்டு வருஷமா பாவிச்ச ஒரே ஆள் நீதாண்டின்னு சொல்லி இருந்தாலும் கூட பரவால்ல. ஒரு லுக்கு விட்டார் பாருங்க.. அதான்..

Preethi_Blue_Leaf_Platinum

<<<<<     >>>>>

இது இங்க டிவில வந்த ஒரு ஆட்.. எனக்கு ரொம்ப பிடிச்சுதுங்க. குழந்தை அவ்ளோ க்யூட்டா இருக்கு.. நீங்களும் பாருங்க. இங்க caviar அவிச்சு.. bacon கூட லைட்டா பொறிச்சு ஒரு சாப்பாடு செய்வாங்க.. ம்ம்ம்ம்ம்.. ஊர்ல அம்மா மிளகாய்த்தூள், உப்பு கலந்து செஞ்சு குடுக்கிற பொறியல அடிச்சிக்க முடியாதுன்னாலும்.. இதுவும் நல்லா இருக்கும். அத விட ப்ரேக்ஃபாஸ்ட், லன்ச்கு சேர்த்துப்பாங்க முழு caviar.. வாயில கடுகாட்டம் கடக் கடக்னு கடிபடும். இப்போ நீங்க பல்லக் கடிக்கிற சத்தம் எனக்கு கேக்குது.. அதனால.. லுக்குகள் தொடரும்..

வர்ட்டா..