Pages

  • RSS

22 November, 2009

(பாவ) மன்னிப்பு...

வணக்க்....கம் மக்களே.... நலமா?
போன பதிவு போட்டதிலேர்ந்து கொஞ்சம் ஓவராத்தான் அழுதிட்டேன் போல இருக்கு. என்கூட சேர்ந்து கிட்டு இயற்கையும் மழையா அழுது தீர்த்திடிச்சா... தெருவெங்கும் வெள்ளம்... போக்குவரத்து சிக்கல்... மழை ரெஸ்ட்ல போய்ட்டாலும் என் அழுகை நிக்கல. கண்ணன் கூட இன்னமும்... அவ்வ்வ்வ்.... அது ஒரு புறம்னா இன்னைக்கு நான் எழுதப் போற விஷயம் மறு புறம். என் பதிவுகள படிக்க வச்சு உங்கள கொடுமைப்படுத்தி, உங்க பொன்னான நேரத்தையும் மண்ணாக்கறேன் இல்ல... ரெம்ப உறுத்துதுங்க. ஏற்கனவே மனசு சோர்ந்து போயிருக்கிற நேரத்தில அழுகை பொங்குது... நான் பதிவு எழுத வந்த கதைய சொல்லி உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிட்டு உறுத்தலே இல்லாம கொடுமைய கண்டினியூ பண்றத்துக்கு அருமையான சர்ந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்த என் அன்புத் தம்பி கோபிநாத் உங்களுக்கு கோடி நன்றிகள். நல்லாருங்க தம்பி. ஏய் அடங்குடி... எதுக்கு இப்டி தலைய சுத்தி மூக்க தொடறே பாருங்க... ஒரு வித்யாசமான பில்டப்போட ஆரம்பிக்கலாம்னா .சா முறைக்குது. சரி வாங்க நாம கதைக்குள்ள குதிக்கலாம்.

எல்லாரையும் போலவே எனக்கும் ஃபார்வாட் மெயில் பண்ற ஒரு ஃப்ரெண்டு. அதில சிலபல பதிவுகளுக்கான லிங்கும் இருக்கும். பதிவுலகம் ரொம்ப பயங்கரமானதுங்கிற ஒரு தப்பான எண்ணத்தில நான் இருந்ததால டிலீட்ட அமுக்கிவிட்டுடுவேன். ஒரு நாள் ஃப்ரெண்டோட டார்ச்சர் ஒரு லிங்க போய் பாக்க வச்சிடுச்சு. அதுல பாருங்க கதவு வழியா ரைட் லெக்க வச்சு முறையா பதிவுலகத்துக்க போவேன்னு பாத்தா சாளரம் வழியா தொபுக்கடீர்னு உள்ள விழுந்துட்டேன். அதுதான் பதிவுலகம்னு மறுபடி தப்பா நினைச்சு அங்கனவே சுத்திகிட்டு இருந்தேன். கிட்டத்தட்ட எல்லா இடுகைகளும் படிச்சுட்டேன். அவ்வ்வ்வ்.... திடீர்னு ஒரு நாள் இவரெல்லாம் எழுதும்போது நாமளும் ஏன் எழுதக் கூடாதுன்னு (கார்க்கி நோ கோவம், பேசிக் கிட்டத விட இன்னும் போட்டுக் குடுத்திடுறேன். பீ கூல்... ஓகே..) தோணிச்சு. கம்பியூட்டர் கண்ணாம்பா + டெக்னிக்கல் தேனாம்பாவான நான் என்னதான் ரைமிங்கா இருந்தாலும் இப்டி ஒரு பேர் ரெம்ப ஓவருடி அதே ஃப்ரெண்டு துணையோட கொடுமைய ஆரம்பிச்சுட்டேன்.

என்ன எழுதலாம்னு ரொம்பல்லாம் யோசிக்கல. என்னப் பத்தி மட்டுமே எழுதுறதுன்னு உறுதியான முடிவோட இருந்தேன், இருக்கேன். அது தவிர விருதுகளுக்கு, வாழ்த்துக்களுக்குன்னு சிலது. அதையும் தவிர ஏகலைவியா என் குருநாதர் கார்க்கிக்கு குருதட்சணையா சில (டேமேஜ்) பதிவுகள். அம்புட்டுதேன். விவாதங்கள், அறிவுரைகள், ஆராய்ச்சிகள்னு என் அறிவுக்கு சம்பந்தமில்லாத எதையும் எழுத மாட்டேங்க. நானே என் இடுகைகள மறுபடி படிக்கிரதில்லேங்கிரப்போ உங்கள எக் காரணம் கொண்டும் என்னோட பழைய பதிவுகள படிச்சிடாதீங்கன்னு கெஞ்சி கேட்டுக்கிறேன்.

தமிழ்ல எழுதுறத்துக்கு google.com/transliterate/indic/Tamil பாவிக்கிறேன். இப்போ இன்னொரு ஃப்ரெண்டு கிட்ட ஈகலப்பைய வாங்கி வச்சிருக்கேன். இன்னும் சரியா அதில உழவு ஆரம்பிக்கல.

பதிவுலகத்துக்குள்ள வரு முன்னர் நான் இருந்த மனநிலை.... என்ன யார்னே தெரியாத ஒரு இடத்தில போய் ஒளிஞ்சுக்க மாட்டோமான்னு நான் நினைச்சது மனசளவில கை கூடியிருக்கு. உன்னைய ஒரு கிரிமினல் ரேஞ்சுக்கு அவங்க நினைக்கப் போறது உறுதி என் மனதுக்கு இதமாய், என்னை திசை திருப்பி ஒரு புது உலகுக்குள்ள கொண்டு போய் விட்ட பதிவுகள் எத்தனை.... என்னை பார்த்திராத, என் கூட பேசியிராத எத்தனை நண்பர்கள் என் கூட இப்போ... என்னமோ ரொம்ப நாளா பழகின மாதிரி ஒரு உணர்வு. இத்தனை நாளா இப்டியான உறவுகள இழந்திட்டு இருந்திருக்கேனேன்னு நிஜமான கவலை. ஒவொருத்தர் பதிவ படிக்கும்போதும் அவங்க திறமைய பார்த்து அப்டி வியந்து போவேன். பதிவர்களுக்குள்ள இந்த நட்பும் ஒற்றுமையும் என்னைக்கும் நிலைச்சு இருக்கணும்னு என்னை அறியாமலே வேண்டிக்கிற அளவுக்கு பதிவுலகம் என்னை மாத்திடிச்சு. என்றாவது ஒருநாள் உங்களில் யாரையாவது நான் நேரில் சந்திப்பேன் என்கிற நம்பிக்கையும் எனக்கு இருக்கு. அவங்களுக்கு இந்தக் கொடுமை வேறயா???

அப்புறம் என்னங்க.. என்னையும் மதிச்சு தொடர் பதிவுகளுக்கு கூப்ட, விருதுகள் வழங்கிய, என்னை பின் தொடர்கின்ற அத்தனை நல்ல இதயங்களுக்கும் நன்றிகள். உங்க யாரையாவது என் பதிவுகள் மூலமா, என் பின்னூட்டங்கள் மூலமா நான் காயப்படுத்தி இருந்தா மன்னிச்சுக்குங்க. இப்போ மாதிரியே எப்பவும் என் கொடுமைய பொறுத்துக் கிட்டு என் கூட நண்பர்களா இருங்க. என்னோட பதிவ படிக்கிற அத்தனை நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். இப்போ நான் இத தொடர்ந்து கொண்டு போறத்துக்கு கூப்பிட போறவங்க இவங்கதான்.

தியாவின் பேனா பேசுகிறது...
பார்த்ததும் படித்ததும் சங்கர்.
பிரியமுடன்......வசந்த்
பித்தனின் வாக்கு சுதாண்ணா.
எடக்கு மடக்கு R.கோபி.
வடலூரான் கலை.
இது என்னோட இடம். தமிழ்பிரியன்.
சொல்லரசன்
சந்ருவின் பக்கம்

பத்து பேருக்குமான சிறு குறிப்பு :- நீங்க முன்னாடியே உங்க கதைய எழுதி நான் அத படிக்காம மிஸ் பண்ணி இருந்தேன்னா கமன்ட்ல கும்மிடுங்க... வரட்டுங்களா...

15 November, 2009

வரலேன்னா குறிச்சிடு...

எல்லாரும் எப்டி இருக்கீங்க? நலம்தானே? நாங்களும் நலம்.

எனக்கும் கவிதை எழுதணும்னு ஆசை வந்திடுச்சுங்க... ஹிஹிஹி... சும்மா... லுல்லுல்லாயிக்கு.... எழுதல. வந்தாதானே... ஆனா நான் படிச்சதில பிடிச்ச சில பல கவிதைகள உடனவே குறிச்சு வச்சுக்குவேன். அதில சிலத இன்னைக்கு எழுதுறேன். படிச்சு அத எழுதினவங்களுக்கு ஒரு சபாஷ போட்டிடுங்க. (சட்டப் பிரச்சனைகளுக்கு முகம் குடுக்க பயந்ததால எழுதினவங்க பெயர்கள் உரு மறைப்பு செய்யப்பட்டுள்ளன) உங்கள படிக்க வச்ச எனக்கு??? வேற என்ன? கமன்ட்தான்.

சொல்ல நினைத்தபோதெல்லாம்
பேச
வாய்த்ததில்லை.
பேசக்
கிடைத்த சில நொடிக்குள்
சொல்லாமல் விட்டதே அதிகம்.
பேசாத சொற்களின் அடுக்கில்
மலையென வளர்கிறது
அன்பு!

வேகக்காற்று
கண்கள் மூடி
முகம் பொத்தி
வெட்கம் கொள்கிறேன்
ஒட்டிக் கொண்ட மணற்துகளாக
நீயனுப்பிய
முத்தங்கள்!

உன்னால் அடைந்த
சந்தோஷங்களுக்கு பதிலாக
எதையுமே தர முடியாத ஏக்கங்களில்
ஆழ வேரூன்றிப் படர்கிறது
அன்பு!

எனக்குள் அடைபடாமல்
வானம் அளக்கும் சுதந்திரம் தந்து
மிகச்சிறிய இதயத்தில்
நெருக்கடிகளுக்கு மத்தியிலும்
சிறு ஒளியாக
மிதந்தலைகிறது
அன்பு!

இந்தக் கவிதை படிச்சதும் எனக்கு பிடிச்சிருந்தாலும் ஒரு விஷயம் உடன்பாடில்லை. அன்பான ஒருவர் கொடுக்கும் முத்தம் எப்டி முகத்தில ஒட்டிக்கிற மணற்துகளா ஆகும்? பூவிதழ் பட்டாப்புல, மயிலிறகால வருடினாப்ல இப்டி எதுனா இருந்திருக்கலாமோ???

உன் நினைவுகளில் இருந்து
விடுதலை என்பது
கிடைக்காதா எனக்கென்று
அப்போதும் உன்னையே
நினைக்கிறது என் மனம்.

உன்னால் என் மனதில்
மொட்டவிழ்ந்த பூக்களையெல்லாம்
வாடாமல் வைத்திருக்க
வழியொன்று கண்டு கொண்டேன்

நீ என்னை தவிர்த்து விலகி
தவிக்க விடும் தருணமெல்லாம்
தவறாமல்
தனிமையில்
அழுகின்றேன் கண்ணா..

கண்ணீர்ப் பூக்களாம் தாம்
அவை
பெருமையாய்
சொல்லிக் கொள்கின்றன.

அவங்க கண்ணன் அவங்கள தவிக்க விடக் கூடாதுன்னு வேண்டிக்கிட்டேன்.சரிதானுங்களே?

'நீயும் நானும்
ஒண்ணுன்னு சொன்னேன்'
சொன்னவன் நீதானே?
இல்லாத ஒன்றை
உறுத்தலின்றி சொல்ல
எப்படி முடிந்தது உன்னால்??

ஒதுங்கி நீ போக நினைக்கும் வரை
ஒப்பவில்லை என் மனது
ஒன்று என்பதற்கு அர்த்தங்கள் பல என்று!

வேடிக்கையாய் நீயும்
வேதனையில் நானும்
புரிந்து கொள்ளாத நீயும்
புரிதலுக்காய் ஏங்கும் நானும்
தவிர்ப்பதிலே நீயும்
தவித்தபடி நானும்
ஒன்றென்பது இதில்
எங்கிருந்து வந்தது?

நீயும் நானும் ஒன்றுதான்
ஒன்றில் மட்டும்
என்னை ஏமாற்றுவதில் நீயும்
என்னையே ஏமாற்றுவதில் நானும்.

அவ்வ்வ்வ்... அழுகாச்சியா வருது. ஒதுங்கறாங்கன்னு தெரிஞ்சா பிடிக்கலேன்னா போய்கிட்டே இருன்னு போக வேண்டியதுதானே??? ஆனா இந்த மனசு மனசுன்னு ஒண்ணு இருக்கே... அது சிலத அப்டீல்லாம் சுலபமா விட சம்மதிக்காதுங்க. ரெம்ப அடம்புடிக்கும்.சமயத்தில சண்டித்தனம் கூட பண்ணும். அனுபவிக்கிறவங்களுக்குதான் தெரியும், புரியும் அதோட வலி!!!

அவ்வ்வ்.... மறுபடி அழுகாச்சியா வருது... கமன்டிட்டு வாங்களேன் கொஞ்சம் அழுரத்துக்கு கம்பேனி கிடைச்சாப்ல இருக்கும்... அவ்வ்வ்வ்வ்.... ஆவ்வ்வ்வ்வ்...

08 November, 2009

எனக்கும் புடிச்சிடுச்சு.

இந்த வாரம் எதப் பத்திடி மொக்கை போடப்போறே? கூடப் பொறந்தது அக்கறையா இப்டி கேட்டதுமே சட்னு உஷாராகி அதிசயம்னு சொல்லு இல்லேன்னா வ.போ உன்ன டியூப்லைட்னு குட்டியிருப்பா இல்லக்கா சின்ன அம்மிணி என்ன ஒரு தொடர் பதிவுக்கு கூப்டுருக்காங்க, அத எழுதப் போறேன்னேன். உன்னப் போயின்னு ஆரம்பிச்சவ நிறுத்தி எதப் பத்தின்னா. பிடிச்ச பிடிக்காத பத்து எழுதணும். நிறையப் பேர் ரொம்ப சூப்பரா எழுதி இருக்காங்க. நானும் எதுனா வித்யாசமா யோசிக்கிறேன்னேன் . சாப்பாடுன்னா தான் உனக்கு பிடிக்காத ஒண்ண கண்டுபிடிக்கிறது கஷ்டம். அதோட நீ எப்டி எழுதினாலும் அத எழுத்துன்னே சொல்ல முடியாது. மூடிக்கிட்டு போயி முடிஞ்சத எழுதுன்னா. தன் அழகு மேல கண்ணு வைக்காதன்னு என் கிட்ட (கொஞ்சம் கூட உறுத்தலே இல்லாம) சொன்ன என் நண்பன மாதிரியே என் எழுத்து மேல கண்ணு வைக்காத, இப்போ ஃபோன வைன்னு சொல்லிட்டு எழுத டிவி முன்னாடி உக்காந்துட்டேன் வித் மடிக் கணினி.. எனக்கு சரியா எழுத வராததுக்கு டிவியும் ஒரு காரணமோ??? வாஸ்து சரியில்ல. இடத்த மாத்தணும்

பதிவ தொடர என்ன கூப்டதுக்கு நன்றி அம்மிணி. இன்னொரு நன்றி ரூல்ஸ் எதுவும் போடாததுக்கு.

1. அரசியல் தலைவர்
அரசியலே பிடிக்காது. அப்புறம் தலைவர்கள எங்கிருந்து பிடிக் க/காத.


2. எழுத்தாளர்
பிடித்தவர்
:- ரமணிச்சந்திரன் தொடங்கி அப்டியே என் பதிவ படிக்கிற நீங்க ஒரு பதிவுக்கு சொந்தக்காரர்னா உங்க வரைக்கும் லிஸ்டு நீளும்..
பிடிக்காதவர் :- வேற யாரு இத எழுதினவங்கதான்.

3. கவிஞர்:
எனக்கு கவுஜ கூட எழுத வராதுங்கிரதால எல்லா கவிஞருமே பிடிச்சவங்கதான்.


4. இயக்குனர்:
பிடித்தவர் :- மணிரத்னம்.
பிடிக்காதவர் :- இருங்க யோசிக்கிறேன்.....


5. நடிகர்:
பிடித்தவர் :- எப்போதும்
விஜய்.
பிடிக்காதவர் :- லிஸ்டு கொஞ்சம் பெருசு.


6. நடிகை:
பிடித்தவர் :- ஜோதிகா.
பிடிக்காதவர் :- குணாவுக்கு யார் யார பிடிக்குமோ அவங்க எல்லாம்.


7.இசையமைப்பாளர்:
பிடித்தவர் :- இசைஞானி. இசைப்புயல், ஹாரிஸ், யுவன்.....
பிடிக்காதவர் :- இதுவும் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. எனக்கு பிடிச்சா மாதிரி ஒரு பாட்டையாவது இசை அமைச்சிடுரதால பிடிக்காதவர் கிடையாது.அம்புட்டுதேன்.

8. பாடகர்:
பிடித்தவர் :- டிம்மி.

பிடிக்காதவர் :- குணா பாடல்லாம் மாட்டார். என்னங்க இது கேள்வி.

9. பாடகி:
என்ன விட நல்லா பாடுரதால எல்லாரையும் பிடிக்குமே...


10. விளையாட்டு வீரர்:
விளையாட்டா? அப்டீன்னா???

இனி அப்டியே அம்மிணி மாதிரியே மூணு பேர கூப்டு விட்டுடுறேன்.

கோபிநாத் என்னதான் நீங்க மாமாங்கத்துக்கு ஒரு பதிவு போட்டாலும் நாங்க அழைப்போமில்ல.

பிரியமுடன்......வசந்த் நீங்க தொடர் பதிவல்லன்னு தானே போட்டீங்க.

பித்தனின் வாக்கு சுதாண்ணா தொடர் கதைக்கு சின்னதா ஒரு பிரேக் குடுங்க.

இது நம்ம ஆளு மறுபடி வெளியூரா? வந்ததும் கண்டினியூ..

அப்பாடா... கரீட்டா மூணு பேர கூப்டாச்சுப்பா. வரட்டா மக்களே? நலமா இருங்க.

மு.கு. :- என் கண்ணாளன் செஞ்ச சதியால நேத்து என்னால பதிவு போட முடியலீங்க. ஃபோன்ல எதோ ப்ராப்ளம்னு நோண்டிக்கிட்டு அடிக்கடி நெட் கனேக்சனையும் கட் பண்ணி ரொம்ப கடுப்பேத்திட்டார். அதனால திங்க கிழமை எப்படா விடியும்னு காத்திருந்து என் பதிவ படிக்க ஆவலா வந்த உங்கள ஏமாத்த வேண்டியதாயிடுச்சு. ஜாரி...

பார்ரா...இப்போ எதுக்கு இவ்ளோ உர்ர்ர்ர்.....நல்ல வேளடி சுசி புத்தியா முன்குறிப்ப கடசீல போட்டே. இல்லேன்னா உன் நிலம... அவ்வ்வ்வ்வ்.....

01 November, 2009

கேக் சாப்டு கொண்டாடுங்க....

என்னங்க திடீர்னு காணாம போய்ட்டேன்னு பாத்தீங்களா?  என்னாச்சு இவளுக்குன்னு  நினச்சு பாத்தீங்க இல்ல?  நினைக்காதவங்களுக்கு கேக் கிடையாது.உங்க கமன்ட்சுக்கு இன்னும் பதில் எழுதல. சாரி...

தலைக்கு மேல இல்ல அதுக்கும் மேல சரியான, செமையான, பயங்கரமான, கடுமையான, இன்னும் பல னவான வேலைங்க. அதான் பொட்டிக்கு + வலையுலகத்துக்கு  விடுமுறை விட்டுட்டேன். குடும்பத்துக்கே பர்த்டேஸ் வந்ததால சனிக்கிழமை சின்னதா ஒரு பார்ட்டி வீட்ல. ஒரே கல்லுல நாலு மாங்கா... அதான் ஒரு வாரம் லீவ் போட்டு வேலையில குதிச்சிட்டேன். சாப்பாடு ஆர்டர் பண்ணி எடுத்தோம். வந்தவங்க நலம் கருதி மத்ததெல்லாம் என் தலைமேல.

ரெண்டு கலாச்சாரங்களையும் கலவையா பின்பற்றுறா மாதிரி பட்ஷனங்களையும் நம்மூரு பேசிக் ரெசிப்பிய வச்சு இந்த ஊர்ல கிடைக்கிற சாமான்களை கொண்டு தயார் பண்ணணும். சிலது வெளிநாடு வாழ் பெண்மணிகளோட சுய கண்டுபிடிப்பாவும் இருக்கும். ஆனா தைரியமா சாப்பிடலாம்க. ஸ்வீட்டும் காரமுமா ஏழு அயிட்டம் செஞ்சேன். அதோட ஐசிங் கேக் மூணு.

இதில யார் கண்ணு பட்டுதோ என் லீவுக்கும் ஆப்பு. எங்க டிப்பார்ட்மென்ட்ல புதுசா சேர்ந்த ஒருத்தர தவிர மத்த எல்லாரையும் வைரஸ் காய்ச்சல் தாக்கிட்டதில நான் ரெண்டு நாள் வேலைக்கு போக வேண்டியதாயிடிச்சு. அதுவரை நீதானே ஜாலியா லீவ்ல இருக்கே செய்துமுடின்னு எந்த ஹெல்ப்புமே செய்யாம விட்டேந்தியா இருந்த மத்த மெம்பர்சுக்கு சனி காலை சரியாவே விடியல. அப்பப்போ என்னை தொல்லை பண்ணிக்கிட்டே ஜாலியா சுத்திக்கிட்டு இருந்த மொக்கை சாமிக்கு இனிமே வீட்ல பார்ட்டியே வேணாம்டின்னு சொல்ற அளவுக்கு வேலை. வீட்ட பூரா ஒதுங்க வச்சு மாப் பண்ணினது அவர்தான். பையனுக்கும் பொண்ணுக்கும் கான்டி பாக் ரெடி பண்றது, வெளிய குப்பை போட்டுட்டு வர்றது, ஸ்டோர் ரூம்ல எதுனா எடுத்து குடுக்கிரதுன்னு அவங்களுக்கு ஏத்த வேலை. அம்மா போதும் நாங்க இனிமே கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்கிற லெவலுக்கு போய்ட்டாங்க.

மூணு மணிக்கு ஆரம்பிச்ச பார்ட்டி முடிய நைட்டு ஒரு மணியாச்சு. எங்களையும் சேர்த்து மொத்தம் எட்டு குடும்பங்கள். ஒரு ஃபாமிலி நைட் தங்கிரதுன்னும், சிலர நான் டிராப் பண்றதுன்னும் முடிவாச்சு. அதெல்லாம் முடிச்சு நான் தூங்க நாலு மணியாச்சு. ரொம்ப நாளைக்கு அப்புறம் எல்லாரும் ஒண்ணா சந்திச்சோம். என்னதான் அலுப்பா இருந்தாலும் கலகலன்னு வீட்ல சத்தம் கேக்கிறா மாதிரியே இருந்திச்சா தூக்கம் வரல.... உடனையே நிறைய வேலை இருக்கு ஹெல்ப் பண்றியான்னு கேட்டப்போ செஞ்சு வை வந்து சாப்டுறேன்னு சொன்ன என் ஃப்ரெண்டோட ஞாபகம் வந்திச்சா... அதுக்கொரு மெயில போட்டுட்டு, ரெண்டு பதிவும் படிச்சேனா தூக்கம் தன்னால வந்திடுச்சு.இனி நான் செஞ்ச கேக் பாருங்க. சாப்பாடு நான் செய்யாததால ஃ போட்டோ எடுக்கல. ஸ்வீட்ஸ் காரம் சாப்ட எடுத்து  வைச்சிட்டு டீ செய்றதில நான் பிசி ஆய்ட்டதால ஃபோட்டோ எடுக்க மறந்துட்டேன்.

இது Sonic னு கண்ணனுக்கு ரொம்ப பிடிச்ச nintendo DS game. வந்து பாத்தவர் ஒரு பெரிய ஹக் மூலமா தன்னோட சந்தோஷத்த சொன்னார். உங்களுக்கு கஷ்டம்னா பரவால்லம்மா சோனிக்குக்கு மூக்கு இருக்கு. நீங்களும் வச்சு குடுக்குரீங்களான்னார். உடனையே செஞ்சு குடுத்ததும் உலகத்திலேயே நல்ல அம்மான்னு விருது குடுத்துட்டு போனார். என்னவோ மிஸ்ஸாகுதேன்னு எவ்ளோ யோசிச்சும் மூக்கு எனக்கு தெரியவே இல்ல. அதுக்கு மூளை முதல்ல இருக்கணுமோ???


இது H2O ன்னு கண்ணம்மாவுக்கு பிடிச்ச ஒரு கடல் கன்னிகள் பத்தின சீரியல். வேலை வாங்கறேன்னு கடுப்பில இருந்தவங்க இத காமிச்சதும் கூலாகி ஹெல்ப்போ ஹெல்ப்புன்னு ஹெல்ப்பிட்டாங்க. பிரிண்ட் க்ளியரா வராததால உங்களுக்கு ரொம்ப பிடிச்ச Emma ங்கிற கடல்கன்னி படம் சேர்க்க முடியலம்மான்னேன். இதுவே போதும்மான்னு ஹக்கோட ரெண்டு கிஸ்ஸும் சேத்து குடுத்தாங்க.

கண்ணாளனுக்குத்தான் பெரிய சர்ப்ரைஸ். என் புருஷன் குழந்தை மாதிரின்னு சொல்லாம செஞ்சுட்டீங்கன்னு எல்லாரும் சொன்னப்போ லைட்டா வெக்கப்பட்டார். நீங்க வேற என் பர்த்டே கிஃப்டா நான் கேட்டத இன்னும் வாங்கி குடுக்கலேங்கிற கடுப்பிலதான் இந்த கரடி குட்டிய செஞ்சேன்னு நான் சொல்ல.. ஏன் அத டெடி பொம்மைன்னு கொஞ்சம் டீசண்டா சொல்லக் கூடாதான்னு அவர் முறைக்க.. வந்தவங்க ரொம்ப சிரிச்சது இதுக்குத்தான்.



அப்புறம் என்னங்க. எல்லாரும் கேக் சாப்டுங்க. அடுத்த தடவை ரொம்ப வித்யாசமான ஒரு பதிவோட சந்திக்கிறேன். வரட்டுங்களா....

28 October, 2009

என் அன்புக் கணவருக்கு...


தவிர்க்க முடியாத காரணத்தால என்னோட வழக்கத்தையும் மீறி அடுத்த இடுகைய ரெண்டு நாள் காப்ல போட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயிட்டேன் மக்கள்ஸ். நலமா இருக்கீங்கதானே? தலைப்பை பாத்ததும் புரிஞ்சு கிட்டவங்க முதுக சொறிஞ்சு விட்டுக்கலாம். அதேதான் இன்னைக்கு என் கண்ணாளன் பிறந்தநாள். அவர பத்தி எழுத ஆரம்பிச்சா என்னால நிறுத்த முடியாதுங்கிற பாயிண்ட மைண்ட்ல வச்சுக்கிட்டு படிக்கிறத தொடருங்க. ஏன்னா எங்க  ரெண்டு குடும்பமும் நான் பிறக்கிறத்துக்கு முன்னாடி இருந்தே நட்பானவங்க. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில இருந்து கண்ணாளன எனக்கு தெரியும். அண்ணன்களோட மட்டுமில்லாம இவர் அப்பாவோட ஃப்ரென்ட் கூட.

ம்.. பிறக்கும்போது மூணரை கிலோ, அப்பவே உன்ன விட வெயிட்டு கம்மி 51 cm ல இருந்தாராம்.ரெண்டாவது பையன். அடுத்ததாவது பொண்ணா பிறக்காதான்னு ஏங்கி பஞ்ச பாண்டவர்கள பெத்து போட்டதுதான் மிச்சம்னு அத்தையம்மா இப்பவும் சொல்லி கவலைப்படுவாங்க. இவர் ரெண்டாவது. பெரியண்ணா சின்ன வயசிலேயே வெளிநாடு போக வேண்டிய நிர்ப்பந்தம். மாமாவ காலன் பறிச்சுக்கிட்டான். பதினேழாவது வயசில அம்மா தம்பீங்க இவர் பொறுப்பில. அத்தையம்மா இழப்பில இருந்து மீண்டு வரும் வரைக்கும் முழுப் பொறுப்பும் இவர்தான். தம்பீங்க மூணு பேரும்  இன்னைக்கும் சின்னண்ணன் கிட்ட கலந்து பேசித்தான் எதையும் செய்வாங்க. மாமியார் கிட்ட இவர் பேச்சுத்தான் எப்பவுமே எடுபடும். எப்பிடியாவது அவங்கள சமாளிச்சு தன் காரியத்த சாதிச்சுக்குவார்.

கிரிக்கட், ஃபுட்பால், வாலிபால் விளையாடுறதில புலி சிங்கம் ரேஞ்சு.  இப்போ கூட யாராவது ஒண்ணு ஃபோன்ல டேய் மச்சான் நீ அந்த மாச்ல அடிச்சியே ஒரு சிக்சர்னு மலரும் நினைவுகள் பேசும். இங்க கிரிக்கட் கிடையாதுங்கிரதால மத்தது ரெண்டும் தொடருது. அதிலேம் ஃபுட்பால் முதல் பொண்டாட்டி லெவலுக்கு போய்டிச்சு.

வேட்டைப் பிரியர். ஒரு தடவை வேட்டைக்கு போன இடத்தில பாம்பு கூட கடிச்சிருக்கு. தான் நினைச்சத செய்து முடிச்சிட்டு தான் அடுத்த வேலை. மனசுல பட்டத மறைக்காம பேசுறதால கொஞ்சம் தலைக்கனம்னு சொல்வாங்க.

நல்ல வேளை சிக்ஸ் பாக் அளவுக்கு போகலேன்னாலும் வெயிட் கிலோ இல்ல கிராம் அளவுக்கு கூட ஏற விடமாட்டார். அண்ணனும் தம்பீங்களும் கொஞ்சம் புஷ்டியா இருப்பாங்களா போட்டு கடிச்சு குதறிடுவார். இந்த சம்மர்ல லண்டன் போறத்துக்கு ஒரு மாதம் முன்னாடியே கடைசி தம்பி சொன்னார் அண்ணி என்னவாவது பண்ணி வரும்போது சின்னண்ணா வெயிட்ட கொஞ்சம் ஏத்திடுங்கன்னு.

சரியான மொக்கைசாமி. இவர் இருக்கிற இடத்தில மொக்கையும் சிரிப்பும் கொடி கட்டிப் பறக்கும். பேச்சால சட்னு அடுத்தவங்கள இம்ப்ரெஸ் பண்ணிடுவார். குறிப்பா எதிர்ப்பாலார.. கடலை மன்னன். அதனால மத்தவங்க மட்டுமில்ல  நானும் பொறுக்கீன்னு சொல்லி இருக்கேன். பின்ன என்னங்க. சும்மாவே ஊருக்குள்ள சேத்து வச்சு பேசி கிண்டல் பண்ணுவாங்க. இவர் வேற ரோட்ல எதிர்ல பைக்ல வந்தா சைக்கிள்ள போற எனக்கு ஹாரன் அடிக்கிறது, எங்க வீட்டுக்காங்கிறது, ஊருக்கே கேக்கிறா மாதிரி சத்தமா அண்ணன ரெடியா இருக்க சொல்லுங்க இதோ அஞ்சு நிமிஷத்தில வந்திடறேன் ஊர் சுத்தப் போணும்னு ஏய் அவர் விளையாட போணும்னு சொல்வார்டி...  யார் இல்லேன்னா ஆறு மணி விளையாட்டுக்கு நாலு மணிக்கே கிளம்பி மூணு பேர கூட்டு சேத்துக்கிட்டு ரெண்டு பேரும் என்ன பண்ணுவாங்களாம்? ஊரோட இந்த கோடீலேர்ந்து அந்த கோடி வரைக்கும் ஒரு ரவுண்டு வருவாங்கல்ல. மனச்சாட்சியே மனச்சாட்சி  இல்லாம பேச கூடாது சொல்லிட்டேன்  முட்டு சந்தில உக்காந்து கிட்டே சவுண்டு குடுக்கிறதுன்னு கொலைவெறி ஆக்கிட்டார். ஒருநாள் வந்த கோவத்தில நேரா அம்மா கிட்ட வந்து ஏம்மா இந்த மாமனார் பேர சொல்லி அங்கிளோட பொறுக்கி அடங்கவே மாட்டுதான்னு ஒரே கத்தல். இப்போ கூட எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க. நீ கொட்ற குப்பைய 'பொறுக்கி' எடுக்கப் போறாருன்னு சரியா சொல்லி இருக்கேன்னு. 

கோவம் வந்துதுன்னு வச்சுக்குங்க.. அது யாரா இருந்தாலும் நோ எக்ஸ்கியூஸ்... ஊர்ல எனக்கு தெரிஞ்சு ஒரு எட்டு பத்து பேர், இங்க ஒரு நாலஞ்சு பேர்னு இன மத நிற வேறுபாடில்லாம 'கவனிக்கப்பட்டிருக்காங்க'. அதனால மத்தவங்க லைட்டா ரவுடியாட்டம்  பாப்பாங்க. 

ஒரு இடத்தில சும்மா உக்காந்து இருக்கிறது மட்டும் இவரால முடியாது. லீவ் நாள்ல கூட டான்னு ஆறு மணிக்கு எழுந்து நின்னு எங்க கிட்ட திட்டு வாங்குவார். அதிலையும் பேசாம இருக்கிறது முடியவே முடியாது.

என்னதான் கோவம் வந்தாலும் அத சாப்பாடு மேல காட்றது மட்டும் பிடிக்கவே பிடிக்காது. சாப்பாடு இன்னதுதான் வேணும்னு இல்ல. எண்ணை கம்மியா, தேங்காய் சேர்க்காததுன்னா சரி. ஸ்வீட் பிடிக்காது. white chocolate கொஞ்சம் பிடிக்கும். பிடிக்காத ஒண்ண யாருக்காகவும் செய்ய மாட்டார்.

எப்பவும் கலகலன்னு இருக்கிறவர் சோகமா இருக்கார்னா ஒண்ணு Manchester  United இல்ல Brann ங்கிற லோகல் டீம் மாச்ல தோத்திடுச்சுனு அர்த்தம். இசை ஈடுபாடு அவருக்கு இல்லைங்கிரதால பாட்டெல்லாம் போடல.

என் கண்ணாளன் இன்னைக்கு போலவே என்னைக்கும் சந்தோஷமா வாழணும்னு என் அப்பன் விநாயகன வேண்டிக்கிறேன்.

அப்டியே அவருக்காக ரெண்டு க்ளப் படம்ஸ்.... இப்போ ஓக்கேவாப்பா ??? அப்பா.. பாருங்க இப்போதான் சிரிக்கிறார்.



26 October, 2009

என் செல்லக் கண்ணம்மாவுக்கு...

நலமா மக்கள்ஸ்?

என் பதிவில புது இடுகைன்னதுமே வாயில வாழ்த்தும் கையில கிஃப்ட்டுமா வந்தவங்க ரெண்டு ஸ்வீட் எடுத்துக்கோங்க. இன்னைக்கு என் கண்ணம்மாவுக்கு பிறந்த நாளுங்க. தம்பி பர்த்டேக்கு லீவ்ல நின்னீங்க எனக்கு என்ன பண்ண போறீங்கன்னு கேப்பாங்கன்னு தெரிஞ்சு நான் முன்னாடியே ஒரு வார லீவ் எடுத்திருக்கேன். ஏங்க... எங்க ஓடறீங்க? அதுக்குன்னு நான் தினமும் ஒரு பதிவெல்லாம் போட மாட்டேங்க. ப்ராமிஸ்.. நம்புங்கப்பா... தைரியமா இருங்க.

இவங்க பிறக்கும்போது எங்கள மட்டுமில்ல டாக்டருங்களையும் பதற வச்சிட்டாங்க. 25 ஆம் தேதி மாலை மூணு மணி சொச்சத்துக்கு நான் வரப் போறேனே மம்மீன்னு சிக்னல் குடுத்தவங்க, 26 காலை பத்து மணியோட சைலண்டாயிட்டாங்க. எத்தன டாக்டர்ஸ், எத்தன செக் அப், அப்பப்போ மெடிக்கல் ஸ்டூடண்ட்ஸ் வேற... கடைசியா வெயிட் பண்ணலாம்னு முடிவாகி ஒரு மிட்வைஃப் அப்பப்போ செக் பண்ணிட்டு என் கூடவே  பேசிட்டு இருந்தாங்க. கிடைச்ச காப்ல குணா ஃபோன் பேச வெளிய போய்ட்டார். திடீர்னு வெளிய போன மிட்வைஃப் ஒரு படையோட வந்து என்ன ஸ்ட்ரெச்சருக்கு ஷிஃப்ட்  பண்ணி நேரா ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு போய்ட்டாங்க. என்ன ஏதுன்னு நான் முழிக்க  எங்கள நம்பு, கடவுளை வேண்டிக்கோ, நல்லதே நடக்கும்னாங்க. பிள்ளையாரே.. மாரியம்மா.. என் குழந்தைக்கு.. அப்புறம் எதுவும் தெரியல...

நினைவு வந்தப்போ வலிக்குது இனிமே குழந்தை பிறக்க போதுன்னு நினைக்குறேன்னு  அதே மிட்வைஃப் கிட்ட சொன்னேன். சிரிச்சுக்கிட்டே உனக்கு 4450g + 49cm ல 12:35 க்கே பெண் குழந்தை பிறந்தாச்சு  நீ இப்போ ICU ல இருக்கேன்னாங்க. எங்க என் குழந்தைன்னப்போ ரெண்டு ஃபோட்டோவ காமிச்சா. ஒண்ணுல மலைப்போட குணா. பின்ன வெளிய போனவர் திரும்பி வந்தப்போ இந்தா உன் பொண்ணுன்னு குட்டிம்மாவ குடுத்தாங்களாம். அவர் மயக்கம் போடாத குறை.

குட்டிம்மா ஹார்ட் பீட் சடனா குறைஞ்சு  போய்ட்டதால  ஆப்பரேஷன் பண்ணினதாவும், அப்போ அவங்க திகைச்சுப் போனதில புரையேறி லங்க்ஸ்ல தண்ணீர் போய்ட்டதால சைல்ட் க்ளினிக்ல ட்ரீட்மென்ட்ல இருக்காங்கன்னும் சொன்னாங்க. பாக்கணுமேன்னேன். உனக்கு நிறைய ப்ளட் லாஸ் ஆயிருக்கு கொஞ்சம் பொறுத்துக்கோன்னு  சொல்லி மூணாவது நாள் தான் ஆம்புலன்ஸ்ல கொண்டு போய் காட்னாங்க. கடவுளே என் கண்மணிய அவ்ளோ வயருக்கும் மத்தியில பாத்தப்போ.... இப்போ நினைச்சா கூட மனசு அடிச்சிக்கும். என் வயர்களோட சிக்கிகிட்ட அவங்க வயர்களை பிரிச்செடுத்தத விட என்கிட்டே இருந்து அவங்கள வாங்கத்தான் நர்சுங்க கஷ்டப்பட்டு போய்ட்டாங்க.

நாலாம்நாள் கையில என் கண்மணிய குடுத்துட்டு மிட்வைஃப் சொன்னாங்க அன்னிக்கு ஒரு நிமிஷம் தாமதிச்சிருந்தா இந்த குட்டி தேவதைய உன் கிட்ட குடுக்கிற பாக்யம் எனக்கு கிடைச்சிருக்காதுன்னு. அன்னிலேர்ந்து தேவதை எங்க வீட்ட சொர்க்கம் ஆக்கிட்டா. அவளோட சின்ன அசைவு கூட கட்டளையாகி உடன் நிறைவேற்றப்பட்டது. அவளே எங்கள் உலகமாய். அவளுக்காகவே விழித்து அவள் தூங்கும் அழகை ரசித்தபடியே தூங்கி... இளவரசியின் அரசாட்சி வீட்டின் ஒவ்வொரு இயக்கத்திலும்... குணா சைட்ல முதல் பெண் பேரக் குழந்தைங்கிற பெருமை. என் சைட்ல முதல் பேரக் குழந்தையே அம்மணிதான். செல்லத்துக்கு கேக்கணுமா.

இவங்க அப்பா செல்லம். உருவம் மட்டுமில்ல பிடிவாதம் கோவம்னு குணமும் அப்பாவைக் கொண்டு. ஆனா அம்மா முகத்த வச்சே மனச கண்டு பிடிச்சுடுவா. தம்பி அம்மா கவலையா இருக்காங்க நாம சமத்தா இருக்கணும்னு சொல்வா. அக்காவா அவருக்கு அட்வைசும் நடக்கும். அம்மாவா இருக்கிறது நல்லதாம்மான்னு அடிக்கடி கேப்பா. அம்மாவாக  என் மனது அடையும் சந்தோஷம் எதோ ஒரு வகையில் அவங்களுக்கு புரியுதுன்னு நினைக்கிறேன். அடிக்கடி உலகத்திலேயே சிறந்த அம்மான்னு எனக்கு விருதும் குடுப்பாங்க.

என்னோட முதல் ரசிகை இவங்கதான். என்னோட சின்ன வயசு கதைகள் கேக்கிரதுன்னா ரொம்ப பிடிக்கும். மாமியார் வந்து நிக்கும்போது அப்பா பத்தி கேப்பாங்க. தான் தப்பு செய்யாதப்போ தைரியமா பேசுவாங்க. தப்பு தன் பேர்லன்னா குடுகுடுன்னு ஓடிப் போய்  ஹீரோயினாட்டம் பெட்ல  தொப்புன்னு விழுந்து அழுவாங்க. கொஞ்சம் அவங்க வழியிலே விட்டு பிடிச்சாதான் பிடிவாதத்த  விடுவாங்க. அவங்க நினைக்கிறது உடனையே நடந்தாகணும். சரியான காரணம் சொல்ற வரைக்கும் எதையும் ஒத்துக்க மாட்டாங்க.

என் செல்லக் கண்ணம்மா நீடூழி வாழணும். அவ வாழ்வில எல்லா சீரும் சிறப்பும் பெறணும். நீங்களும் அவங்கள மனதார வாழ்த்துங்க.

Hannaah Montana ங்கிற Miley Cyrus உடைய பரம விசிறி. வீடியோ போட முடியல. லிங்க்ல போய் பாருங்க. இதுதான் இப்போ அவங்க அதிகம் கேட்டு,பாடுற பாடல்.

http://www.youtube.com/watch?v=bo8tgpk7sOI

17 October, 2009

தீபாவளி ஸ்பெஷல் (அ) ஸ்பெஷல் தீபாவளி!!!

நலமா மக்களே...

நான் நலம். காயம் எல்லாம் ஆறிடிச்சு. உங்கள் ஆறுதல் வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி. இந்த ஆதரவு எனக்கு என்னைக்கும் கிடைக்கணும்னு பிள்ளையார வேண்டிக்கிறேன். எனக்கு ஒரு நட்பு இருக்குங்க. பேருக்குத்தான் நட்பே தவிர என் மேல அக்கறையே கிடையாது. எப்பவும் நான்தான் பேசணும் அதுகூட. ஒரு தடவை எப்டி இருக்கேன்னு அதிசயமா கேட்டிச்சு. நல்லா இருக்கேன் ஆனா ட்ரெஸ் அயன் செய்யும்போது கைலதான் சுட்டுக்கிட்டேன்னு சொன்னதுக்கு வயசானா தோல் சுருங்கத்தானே செய்யும். அதுக்குன்னு அயன் செய்வாங்களான்னு கேட்டுச்சு. இப்போ என் வெடி விளையாட்டுக்கு  என்ன சொல்லி இருக்கும்னு நீங்களே கற்பனை ப்ளீஸ்...

எல்லாரும் தீபாவளி கொண்டாட்டத்துல இருக்கீங்களா? நல்லது நல்லது. நானும் தீபாவளிக்கு ஏதாவது எழுதணுமேன்னு ரொம்ப யோசிச்சேன். உடனவே பல்ப். இதுவரை நான் எந்த கதையுமே எழுதலை. தீபாவளிக்கு ஏன்  ஒரு கதை எழுதக் கூடாதுன்னு நினச்சு இதோ ஆரம்பிச்சுட்டேன். பயப்பிடாதீங்க. பசங்களுக்கு தினமும் ஒரு கதை சொல்றதால நல்லாவே சொல்வேன். குட்டிக் கதைதான். சோ கண்டினியூ...

அவளுக்கு நினைவு முழுவதும் அந்த ஊரின் அரசினர் வைத்யசாலையில்தான். ஆனால் அவளும் இன்னும் மூன்று பேரும் மட்டும் அரச அலுவலர்களுக்கான விடுதியில தனியா. நேரம் அதிகாலை ஐந்தை நெருங்கி கொண்டிருக்க  அவளால் கலைந்த தூக்கத்தை மீண்டும் தொடர முடியவில்லை. மூவரில் மூத்தவனுக்கு ஐந்து வயது, அடுத்தவளுக்கு நான்கு.  கடைசிக்கு ரெண்டு. என்னதான் அவங்க சத்தமே இல்லாம புறப்பட்டாலும் இவன் எழுந்து போட்ட கூச்சல ஒரு வழியா அடக்கி இப்போதான் மறுபடி தூங்க ஆரம்பிச்சிருக்கான். அதுக்குள்ளே அவங்க வந்திரணுமே. கடவுளே எல்லாம் நல்லபடியா நடக்.. அம்மா...ஆ... அவன்தான். இந்த தடவை கூட மற்ற இருவரும் எழுந்தாச்சு. பெரியவன் கேட்டான் சித்தி அம்மா எங்க? அப்பா காணம் இது நாலு வயசு. ஆஆ... இது ரெண்டு வயசு... அவள் செய்வதறியாமல் மலைக்க வெளியே கார் சத்தம். அப்பா என்றபடி ஓடின பெருசுகள்.

மணி அதிகாலை 5:31. நர்சக்கா ஓடி வந்து சொன்னாங்க உங்களுக்கு பெண் குழந்தைங்க. வெளியே  பதட்டத்துடன், நடப்பதும் இருப்பதுமாக ஒரு அரை மணி நேரத்தை அவஸ்தையுடன் கழித்தவர் காதில் அது தேனாய் பாய்ந்தது. நிம்மதியோடு குலதெய்வத்தை வேண்டிக்கொண்டார். உள்ளே சின்னதா ஒரு தடவை அழுதிட்டு சமத்தா இருந்த குழந்தை 4kg + 49cm ல இருந்தது. பட்டுக் கன்னத்தை வருடியபடி பக்கத்தில் பெருமையுடன் அம்மா. பக்கத்து பெட் பெண்ணோட பாட்டி சொன்னாங்க சமத்துக் குழந்தை எந்த கஷ்டமும் அம்மாவுக்கு குடுக்காம பிறந்திடுச்சேன்னு. எனக்கு மட்டுமில்ல யாருக்குமே என் பட்டுக்குட்டி  கஷ்டம் குடுக்கமாட்ட இல்லப்பா அம்மா சொன்னது அதன் அடி மனதில் அப்போதே பதிந்து விட்டதோ?

சித்தி சாக்லேட்.. கத்திக் கொண்டே ஓடி வந்தவங்க ஒண்ண மூணாவதுக்கு குடுத்தும் அழுகை நிக்கல. என்ன மாமா அக்கா எப்டி இருக்காங்க? இருக்காங்க. ப்ராப்ளம் ஒண்ணும் இல்ல. டேய் உங்களுக்கெல்லாம் தங்கச்சி பாப்பா பொறந்திருக்குடா... ஹைய்யா எனக்கு ரெண்டு தங்கச்சி பாப்பா இது பெரியவன். வாயில் வைத்த சாக்லட் கசப்பானது குட்டிப் பெண்ணுக்கு. ஒரே பெண் என்ற என் செல்லம் கெடுக்க வந்திட்டாளா ஒருத்தின்னு அப்பவே அதுக்கு தோணிச்சுதோ? சின்னது இன்னும் பெருஸ்...ஸா அழுகையோட வால்யூம கூட்டிச்சு. கடைக்குட்டி செல்லம் இனி தானில்லைன்னு அதுக்கு தெரிஞ்சிருக்கலாம். யார் கண்டா.

இப்போ என் கதையோட ஹீரோயின் வளந்தாச்சு. கணவன் ரெண்டு பசங்களோட சந்தோஷமா இருக்கா. அவளுக்கு குடும்பம், உறவுகள்,நண்பர்கள்தான் உலகம். இவ்ளோ ஏங்க நான் மேலே சொன்ன  என் ஃப்ரெண்டு கூட அவள பத்தி சொல்லி இருக்கு. கணவனுக்காக, குழந்தைகளுக்காக, உறவுகளுக்காக ஏன் நண்பர்களுக்காகன்னு பாத்து பாத்து செய்யிற பொண்ணு நிச்சயம் நல்லா இருப்பான்னு.

இப்போ நான் கதைய முடிச்சிட்டேன். நீங்க அவளுக்காக இன்னும் ரெண்டு வெடிய சேத்து வெடிச்சு, ஒரு பத்து ஸ்வீட்ட சாப்டுங்க. சாப்டாச்சா? அப்டியே சந்தோஷமா அவள வாழ்த்துங்க. எப்டீன்னா ஹாப்பி பர்த்டே சுசின்னு. இல்ல இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுசின்னு. ஹிஹிஹி... உங்கள பத்தி அவளுக்கு நல்லாவே தெரியும். அதான் ரெண்டையும் எழுத சொன்னா. தீபாவளியோட சேத்து உலகமே அவ பிறந்தநாள கொண்டாடுறதா ரொம்ப சந்தோஷத்தில இருக்கா. உங்க வாழ்த்து இன்னும் சந்தோஷத்த குடுக்கட்டும்.கிஃப்ட மறக்காம அனுப்பி வச்சிடுங்க.

நண்பர்களே, சகோதர சகோதரிகளே உங்க அனைவருக்கும் என் மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன்.

பி.கு :- கதையோட ஆரம்பத்திலேயே எனக்கு பிறந்தநாள்னு புரிஞ்சுகிட்டவங்க சுத்த மக்கு. இடையில புரிஞ்சுகிட்டவங்க மக்கு. கடைசீ...வர படிச்சும் இன்னைக்கு எனக்கு பிறந்தநாள்னு இப்போ பின் குறிப்ப படிச்சு புரிஞ்சு கிட்டவங்கதான் என்ன மாதிரி அதி புத்திசாலிங்க. வரட்டுங்களா... நமக்கெல்லாம் நள்ளிரவு வாழ்த்து கிடையாதுங்க. நல்லா தூங்கி எந்திரிச்சு ஞாபகம் இருந்தா வாழ்த்துவாங்க. பின் குறிப்பு முடிஞ்சாச்சு.