
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா.
என்னோட வழக்கமான ஸ்பெஷல் கிரீடிங் இந்த தடவை பதிவு வடிவில. உங்களோட வழக்கமான முறுவலோட படிக்கிறீங்களா? படிங்க...
முன்னல்லாம் எங்களுக்குள்ள பெரிய போட்டியே நடக்கும். யார் உங்களை முறைக்க வைக்கிறதுன்னு. நீங்க எங்களை அடிச்சதில்ல. (நான் மட்டும் ஒரே ஒரு வாட்டி மழைல நனைஞ்சுட்டு ரொம்ப லேட்டா தனியா வீட்டுக்கு வந்ததுக்கு ஒரு அடி வாங்கி இருக்கேன். அந்த பாக்யம் மத்தவங்களுக்கு கிடைக்கல) அடி குடுக்காத வலிய உங்க பார்வை குடுத்திடும்பா. எப்பவும் அன்பும் சிரிப்புமான உங்க முகத்தில கோபத்தை நாங்க அதிகம் பார்த்ததில்லை.
உங்களை தெரிஞ்சவங்க அப்டியே உன் அப்பாவோட குணம் உன்கிட்ட வந்திருக்குன்னு சொல்லும்போது உடனேயே குட்டிப் பொண்ணா ஆயிடறேன்பா. ஏன்னா அப்போ ஆரம்பிச்சது இந்த பெருமிதம்.
சமயத்தில எங்களுக்கே டவுட்டாருக்கும் இவங்க எங்க ஃபிரண்ட்சான்னு, உங்ககிட்ட அவ்ளோ உரிமை அவங்களுக்கு. அதிலேயும் ஒருத்தர் மருமகன்னு ஆனதும் நீங்க வெட்கத்தோட திடீர்னு மரியாதை குடுக்க ஆரம்பிச்சதும் நாங்க இப்பவும் கிண்டல் பண்ற ஒரு விஷயமாச்சே.
எங்களுக்கு நீங்க குடுத்த சுதந்திரமே வேலியாய் எங்களை காப்பாத்திச்சு. இது என்னால முடியலப்பான்னு உங்க கிட்ட சொல்லும் வரை தான் அது முடியாத காரியம்.
அம்மாவை சில சமயம் நீங்க புரிஞ்சுக்காம நடந்துக்கிறதா சொல்லப்படும் குற்றச்சாட்டு அவங்க தலைவலீன்னு படுத்த அடுத்த நிமிஷமே சூடா ஒரு கப் டீயும், டாப்லட்டுமா அவங்க பக்கத்தில உங்கள பாக்கிறப்போ மன்னிக்கப்படும்.
பெரியண்ணன் தோளை மிஞ்சுமுன்னரே உங்க தோழன் ஆன பெருமைக்குரியவன். இன்றும் உங்க மந்திரி அவன்தானே.
அக்கா பேச்சுக்கு எப்பவுமே மதிப்பு குடுப்பீங்க. ஆனா இப்போ ரெண்டு நாள் பேசலைன்னா கூட எங்க என் குட்டிப் பொண்ணோட குரலைக் காணோம்னு நீங்க கேக்கறப்போ புரிஞ்சுக்கிட்டேன்பா.. உங்கள பொறுத்த வரைக்கும் நான் இன்னும் குழந்தைதான்னு. சின்னண்ணனுக்கு காதல் தவிர அத்தனைக்கும் உங்க வழிகாட்டுதல் தேவைப்பட்டுது.
என்னைய மட்டும் முதல் ஆளா கட்டிக் குடுத்து விரட்ட பாக்கிறீங்களே என்ற கோபம் கணவன் என்ற புது உறவோட அப்பா என்ற அன்பு நண்பனும் எனக்கு கிடைச்சப்போ
காணாமலே போய்டுச்சுப்பா. நீங்களும் அத புரிஞ்சுகிட்டீங்கங்கிறது ஆசீர்வாதம் பண்ணும்போது நீங்க சிரிச்ச சிரிப்புல தெரிஞ்சுதுப்பா.
ஞாபகம் இருக்கா... நிறைமாத கர்ப்பத்தோட ஏர்போட்ல என்னப் பாத்தப்போ கண்கள் பனிக்க என் தலையை வருடிய நொடியிலிருந்து நீங்க எனக்கு தாயுமானவர். அம்மா கூட ரெண்டு பொண்ணுங்களையும் அப்டி பாத்ததில்லையே.
இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் இதே அண்ணன்கள், அக்கா, அம்மா, நீங்க, கணவன், குழந்தைகளோட வாழணும்.. ஆனா இப்டி திக்குக்கு ஒருத்தரா இல்லாம எல்லாரும் ஒண்ணா. உங்களுக்கு நீண்ட ஆயுள், மன நிறைவோட வழக்கம்போல கடவுள் கிட்ட இதையும் கேக்கப் போறேன்..
நீங்க எப்பவும் சொல்றத சொல்லி முடிச்சுக்கிறேன். நீங்க யாருக்கும் தீங்கு செய்யலை.. செய்யவும் போறதில்லை.. உங்களுக்கு கிடைக்க வேண்டியது இன்னைக்கு இல்லேன்னாலும் நாளைக்கு கண்டிப்பா கிடைக்கும். அது வரை பொறுத்திருப்போம்.
ஹாப்பி பர்த்டே அப்பா..
அன்பு முத்தங்களுடன்..
கடைக்குட்டி.